தேநீர் இன்று உலக மக்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் செம்புலப்பெயல்நீர்போல இரண்டறக் கலந்துவிட்டது. பண்டையக்காலம் தொட்டே குறிப்பாக சீனர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் தேநீர் ஒன்றிவிட்டது. சீனாவின் தேசிய பானம் தேநீர். சீனர்களின் அன்றாட வாழ்கைக்குத் தேவைப்படுகின்ற ஏழு அடிப்படை பொருட்களில் தேநீரும் ஒன்று. மற்றவை: விறகு, அரிசி, எண்ணெய், உப்பு, சோயா சாஸ், வினிகர். ஆகவே, இவ்வாய்வுக் கட்டுரை தேநீரின் வரலாற்று பின்புலம், தேநீர் வகைகள் மற்றும் தயாரிப்பு முறைகள், சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டில் தேநீர், தேநீர் குவளைகளில் சித்திர வேலைபாடுகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை விரிவாக ஆய்கிறது.

தேநீரின் வரலாற்று பின்புலம்:
 
 சீன மொழியில் சாசுய்(cháshù) என்று அழைக்கப்படும் தேநீர், இந்தியில் சாய் என்றும் மலையாளத்தில் சாயா என்றும் அழைக்கப்படுகிறது. சாய் என்ற சொல் சீன மொழியில் இருந்து வந்த சொல்லாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இலங்கைத் தமிழில் தேத்தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தேநீர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும், ஆங்கிலேயர்களின் பயன்பாட்டிற்கு வந்தபிறகு, பதினேழாம் நூற்றாண்டிலிருந்துதான் தேநீரின் சுவை வெளியுலக மக்களுக்கு தெரியவந்தது எனலாம். இந்தியர் பண்பாட்டிலும் மலைப்பிரதேசங்களிலும் தேச்செடி வேறூன்றியது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயாகும்.

 தேநீர் குறித்த ஆராய்ச்சிகள் சீனாவில் பண்டைய காலத்திலேயே நடைபெற்று இருக்கின்றது. சீனாவின் தேநீர் சித்தர் என்று அழைக்கப்படுபவர் புலவர் லு யு (Lu Yu , 733-804);. இவர் சாஜிங் என்ற ஆய்வு நூலை எழுதியவர். இந்நூல் ஆங்கிலத்தில் “The Classic of Tea’’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் தேநீர் வகைகள், தயாரிக்கும் முறைகள், தேநீரின் மருத்துவக் குணங்கள் பற்றி வரிவாக எடுத்தியம்புகிறது.

தேநீரின் தோற்றம் குறித்து சீன நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. அவை:

 1. கி.மு மூன்றாம் நுற்றாண்டிற்கு முன் சென் நங் (Sen Nung) என்ற மன்னர் ஒரு மரத்தின் அடியில் அடுப்பு மூட்டி வென்னீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்திலிருந்து சில இலைகள் அவரின் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த நீரில் விழுந்தது. அந்நீர் அருந்துவதற்கு சுவையாகவும் நறுமணமாகவும் இருந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதாக நம்பப்படுகிறது.

 2. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தருமா என்ற புத்த பிச்சு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவரின் ஆன்மீக நம்பிக்கையை நிரூபணம் செய்வதற்காக ஏழு ஆண்டுகள் தவம் மேற்கொண்டு வந்தார். தவமிருக்கும்போது அவரின் கண்கள் தூக்கத்தில் சொருகின. தவத்தின்போது தூக்கம் வராமலிருக்க அருகிலிருந்த செடியிலிருந்து இலைகளைப் பறித்து வென்னீரில் போட்டு பருகிவந்தார். அதன்பிறகு அவர் தொடர்ந்து தன்னுடைய தவத்தை மேற்கொண்டார்.

தேநீர் வகைகள் மற்றும் தயாரிப்பு முறைகள்:

கருப்புத் தேநீர் (Black tea or brown tea)
பச்சைத் தேநீர் (Green tea)
ஊலாங் தேநீர் (Wulong tea)
மல்லிகைத் தேநீர் (Jasmine tea /scented tea)
வெள்ளைத் தேநீர் (White tea)

ஆகியன சீனாவின் முக்கியமான தேநீர் வகைகளாகும். தேநீரின் வகைகள் ஒவ்வொன்றும் இலைகளின் பருவம் மற்றும் பதப்படுத்தும் விதம் ஆகியவற்றிற்கேற்ப வேறுபடுகிறது. சீனர்களின் தேநீர் வாய்ப்பாடு: வென்னீர் 10 பதப்படுத்தப்பட்ட தேயிலை ஆகும். பால் மற்றும் சர்க்கரையைத் தேநீருடன் கலந்து பயன்படுத்தும் வழக்கம் சீனர்களிடம் இல்லை. ஆனால், சிறப்பு தினங்களில் தேநீரின் சுவையைக் கூட்டுவதற்காக பேரிச்சம் பழத்தை தேநீருடன் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. மேலும் மல்லிகை சாமந்தி போன்ற பூக்களையும் தேயிலையுடன் சேர்த்து மல்லிகைத் தேநீர் தயாரிக்கப்படுகிறது. மழைநீர் அல்லது பனி நீர் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் சிறந்த தேநீராகக் சீனர்களால் கருதப்படுகிறது.

 தமிழர் பண்பாடடில் தேநீர் தயாரிப்பு முறை சீன முறையிலிருந்து சற்று வேறுபட்டது. தமிழரின் தேநீர் வாய்ப்பாடு : தேத்தூள் + தண்ணீர் + பால் + சர்க்கரை. இது தேவைக்கேற்ப மாறுபடுகிறது. பால்தேநீர் (milk tea), பாலில்லாத் தேநீர்(tea with out milk ), சர்க்கரையில்லாத் தேநீர் (tea with out sugar ) எழுமிச்சைத் தேநீர்(leamon tea) என தமிழர்களின் தேநீரை வகைப்படுத்தலாம். சர்க்கரையில்லா தேநீர் பெரும்பாலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேநீருடன் எழுமிச்சை சாறு சேர்த்து எழுமிச்சை தேநீர் தயாரிக்கப்படுகிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்காகத் தேநீருடன் இஞ்சியை சேர்ப்பதும் தமிழர் பண்பாட்டில் குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பயன்பாட்டுக்கு தேநீர் வருவதற்கு முன்பிருந்தே தமிழர் பண்பாட்டில் தேநீருக்கு இணையான பானம் கொத்தமல்லி தண்ணீர்(coriander tea) பண்டைய காலம் தொட்டே தமிழர் பண்பாட்டில் இருந்த வருகிறது. கொத்தமல்லி+தண்ணீர் +கருப்பட்டி + இஞ்சி என்பன இதன் வாய்ப்பாடாகும். இது சோர்வு நீக்கியாகவும், வலி நிவாரணியாகவும், ஜீரணியாகவும், செயல் ஊக்கியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேநீரைப் போன்றே காலை மாலை எனத் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.

சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டில் தேநீர்:

 பல்வேறு பண்பாட்டு சூழல்களில் தேநீரைப் பயன்படுத்தும் வழக்கம் சீனர்களிடம் பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது. அதாவது மரியாதையின் குறியீடாகவும், குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக்கொள்ளும்போதும், மன்னிப்பு கோருவதற்காகவும், திருமண நாளில் பெரியவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காகவும் தேநீர் பரிமாறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

• மரியாதையின் குறியீடாக (as a sign of respect)சீனச் சமுதாயத்தில் இளைய தலைமுறையினர் தங்கள் மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் மூத்த தலைமுறையினருக்கு தேநீர் வழங்குகின்றனர். பெரியவர்களை விடுமுறை நாட்களில் தேநீரகத்திற்கு அழைத்துச் சென்று தேநீர் கொடுத்து உபசரிப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இதுவே பண்டைய காலங்களில் உயர் பதவியில் வகிப்பவர்களுக்குக் கீழ்நிலையில் இருப்பவர்கள் மரியாதை நிமித்தமாக தேநீர் வழங்குவது இருந்து வந்தது. இன்று பண்பாட்டு மாற்றங்களின் விளைவாக கீழ் பதவியில் வகிப்பவர்களுக்கு உயர் பதவியில் வகிப்பவர்களும், சிறியவர்களுக்குப் பெரியவர்களும் தேநீர் ஊற்றிக் கொடுப்பதைக் காணமுடிகிறது. 

 தமிழர் பண்பாட்டிலும் தேநீர் இன்று மரியாதையின் குறியீடாக மாறிவிட்டது என்பதைக் கண்கூடாக காணமுடிகிறது. விருந்தினர்கள, உறவினர்கள, நண்பர்கள் என யார் வீட்டிற்கு வந்தாலும் தேநீர் அல்லது குழம்பி கொடுத்து உபசரிப்பது தமிழர் சமுதாயத்தில் வழக்கமாக உள்ளது.

• திருமண நாளில் பெரியவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும்(to express thanks to elders on wedding da): சீனர்களின் திருமணச் சடங்குகளில் தேநீர் முக்கிய இடத்தை வகிக்கிறது. மணமகள் திருமண நாளன்று விடியற்காலையில் திருமணத்திற்கு முன்பு தனது பெற்றோருக்கு தேநீர் ஊற்றிக் கொடுத்து தன்னை நன்றாக வளர்த்ததற்காக தன்னுடைய நன்றியைச் செலுத்துவாள்.  
 
 திருமணம் முடிந்த பிறகு திருமண நாளன்றே மணமகன் மற்றும் மணமகள் உறவினர்களை அறிமுகப்படுத்தும் விதமாக மீண்டும் தேநீர் சடங்கு நடைபெறுகிறது. சடங்கின்போது மணமகன், மணமகள் மற்றும் மணமகள் தோழி மூவரும் இணைந்து சிவப்பு பேரிச்சை மற்றும் தாமரை இதழ்களைச் சேர்த்து தேநீர் தயாரிப்பார்கள். சிவப்பு பேரிச்சை மற்றும் தாமரை இதழ்களை தேநீரில் சேர்ப்பதன் மூலம் மணமகள் கூடிய விரைவில் திடகாத்திரமான குழந்தைகளைப் பெறுவாள் என நம்பப்படுகிறது.

மணமக்கள் மண்டியிட்டு மணமகனின் பெற்றோர்களுக்குத் தேனீர் வழங்குவது வழக்கமாக உள்ளது. மணமகள் தன்னுடைய மாமனாரின் இடது புறமும் மணமகன் தன்னுடைய தாயின் வலதுபுறமும் சம்பிரதாயப்படி மண்டியிடவேண்டும். தேநீர் சடங்கின்போது தோழி மங்கல வாழ்த்துப்பாடல்களைப் பாடிக்கொண்டு மணமக்களுக்கு உதவியாக இருப்பாள்; மணமகனின் பெற்றோருக்குத் தேநீர் வழங்கிய பிறகு, மணமகனின் உறவினர்களுக்குத் தேநீர் வழங்கப்படுகிறது. முதலில் தாத்தா பாட்டிக்கும் பிறகு அண்ணா, அக்கா, தங்கை என வயதின் அடிப்படையில் ஒவ்வொருவருக்காக வழங்கி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்பிறகு குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் மணமக்களுக்கு சிவப்பு வண்ணப் பொதியை பரிசாக அளிப்பார்கள். அப்பொதியில் பணமோ நகையோ இருக்கும்.

 கால மாற்றங்களுக்கேற்ப தேநீர் வழங்கும் சடங்கிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று மணமக்கள் இரு வீட்டாருக்கும் தேநீர் வழங்குகின்றனர். இச்சடங்கு பெரிய பெரிய மண்டபங்களிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும், திறந்த வெளிகளிலும் பல ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் ஆடம்பரமாக நடைபெறுகிறது. ஆடம்பரங்கள் இருப்பினும், இச்சடங்கு இரண்டு குடும்பங்களின் ஒருங்கிணைப்பை கவுரவப்படுத்தும் விதமாகவே நடைபெறுகிறது.

 தமிழர் பண்பாட்டுச் சூழலிலும் தேநீர் இன்று முக்கிய இடத்தை வகிக்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போது மணமகனுக்கு இனிப்பு மற்றும் காரத்துடன் தேநீர் கொடுக்கப்படுகிறது. தேநீரை பெண்பார்க்க வரும் மணமகனுக்கு மணப்பெண் கையால் கொடுப்பது வழக்கமாக உள்ளது. தேநீர் பருகியபிறகு தேநீர் கோப்பையை எடுத்துச்செல்வதற்காக மீண்டும் அப்பெண் அழைக்கப்படுவாள். அப்பெண் மீண்டும் வந்து அத்தேநீர் கோப்பையை எடுத்துச்சென்றால் அப்பெண்ணுக்கு அம்மணமகனைப் பிடித்திருக்கிறது என்று பொருள். அப்பெண்ணின் தாயார் எடுத்துச் சென்றால் அப்பெண்ணுக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது.(மணமகன் தேனீர் பருகிவிட்டு மணப்பெண்ணின் வீட்டிலிருந்து வரும் தருவாயில் இனிப்பை சுவைத்தால் அப்பெண்ணை பிடித்திருக்கிறது என்று பொருள். காரத்தை தொட்டால் பிடிக்கவில்லை என்று பொருள்.) இவ்வழக்கம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. நிச்சயதார்த்தம், திருமணம் என இன்று எல்லா வகையான பண்பாட்டுச் சூழல்களிலும் தேநீர் பயன்படுததுவதைக் காணலாம்

. குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக்கொள்ளும்போதும் (for a family gathering): பொருளின் நிமித்தமாக அல்லது திருமணம் ஆனபிறகு பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். மீணடும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேரும்போது தேநீரகத்திற்கு குடும்பத்துடன் சென்று தேநீர் அருந்தி மகிழ்வது சீனர்களின் வழக்கமாக உள்ளது. சீனாவில் தேநீரகங்கள் சீனக் கட்டக் கலை நுட்பத்துடனும் இயற்கை எழிலோடும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குழு குழுவாக அமர்ந்து தேநீர் அருந்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். தேநீரகத்தில் சீனக் கலைஞர்கள் மீட்டும் இசையை மணிக்கணக்கில் கேட்டு மகிழ்ந்தவாறே தேநீர் அருந்துவது சீனர்களின் கலா ரசனையைக் காட்டுகிறது. தேநீர் அருந்தும்போது கொறிப்பதற்காக வறுத்த பூசணி, தர்பூசணி விதைகள், வேர்க்கடலை ஆகியன கொடுக்கப்படுகிறது.

• மன்னிப்பு கோருவதற்காகவும்(to apologize) : பிள்ளைகள் ஏதாவது தவறுகள் செய்துவிட்டால் தேநீர் ஊற்றிக்கொடுத்து பெற்றோர்களிடம் மன்னிப்புக்கோருவது சீனர்கள் பண்பாட்டில் காணமுடிகிறது.

• பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காகவும் (to pass on the tradition) : குடும்பம்தோறும் உறவினர்கள் கூடி தேநீர் அருந்தும்போது குடும்ப பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசிகொள்வது வழக்கம். இதன் மூலம் சீனர்களின் பண்பாடு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது.

தேநீர் குவளையில் சித்திர வேலைப்பாடுளும் சீனர்களின் நம்பிக்கைகளும்:

 சீனர்கள் பயன்படுத்தும் தேநீர் கூஜாக்களும் குவளைகளும் சித்திர வேலைப்பாடுகளுடன் மிகுந்த கலை நுட்பத்தோடும் அழகியல் உணர்வோடு இதற்கென தனி வகை களிமண் மற்றும் மணல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ட்ராகான், பீனிக்ஸ், குதிரை, குரங்கு, புலி, பூனை, சேவல், மீன், பன்றி, ஆமை, ஆந்தை, பல்லி, தவளை, செர்ரிமலர், தாமரை, சூரியகாந்தி மலர், அண்ணாச்சி, பூசணி, மூங்கில், சிரிக்கும் புத்தர், குழந்தை புத்தர் ஆண், பெண் ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அல்லது ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்ட கூஜாக்களிலிருந்து குவளையில் தேநீர் ஊற்றிக் குடிப்பதன் மூலம் அதற்கேற்ற பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
 
 ட்ராகான்-பீனிக்ஸ், ஆண்-பெண் ஆகியவற்றின் இணைப்பில் தயாரிக்கப்படும் கூஜாக்கள் அதிகாரம் மற்றும் அழகு ஆகிய இரண்டும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. குதிரை: ஆளுமைப் பண்பு, நுண்ணறிவு மற்றம் நன்றியுணர்வு. புலி:வீரம் மற்றும் தீய சக்திகளுக்கு எதிராகச் சண்டையிடும் குணம். பூனை:நல்லது நடக்கும். சேவல்:விடியற்காலையில் நல்ல செய்தியைக் கொண்டு வருதல். மீன் மற்றும் பன்றி:செழுமை மற்றும் வளம். குரங்கு: ஆற்றல். ஆமை மற்றும் பல்லி: நீண்ட ஆயில். தவளை: எதிர்வரும் ஆபத்தை அறியச்செய்வது. வண்ணத்துப்பூச்சி: மாறாத காதல் மற்றும் முருகியல். செர்ரிமலர்:அழகு மற்றும் செல்வம். தாமரை:எதிர்பார்ப்பு இல்லாத நட்பு மற்றும் காதல். சூரியகாந்தி மலர்:நம்பிக்கை. அண்ணாச்சி:அர்பணிப்பு மற்றும் நற்குணம். பூசணி: நல்ல பலன். மூங்கில்:உயர் பண்பு மற்றும் உயர்வு. குழந்தை மறறும் சிரிக்கும் புத்தர்: மகிழ்ச்சி, அமைதி மற்றும் அன்பு. இத்தகைய கலை நுட்பத்துடன் கூடிய கோப்பைகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 தேநீர் பருகுவது சீனர்கள் பண்பாட்டில் உள்ளது போல் வழக்கமாக இல்லாமல் பழக்கமாகத் தமிழர் சமுதாயத்தில் கருதப்படினும், தமிழர் பண்பாட்டில் தேநீர் இரண்டறக் கலந்துவிட்டது என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் தேநீரகங்கள் இன்று கிராமங்களில்கூட தெருக்கள்தோறும் காணப்படுகிண்றன. தேநீரகங்கள் அரசியல் மற்றும் சமூக விவாத களங்களாகவும் உள்ளன. தினமலர் நாளிதழில் 'டீக்கடை பெஞ்சு' என்ற தலைப்பில் தினந்தோறும் அன்றாட அரசியல் மட்டும் சமூக சிக்கல்களை அலசுகின்றது. திரைப்பட பாடல்களில்கூட தேநீர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணப் பரிசு என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய. 'டீ...டீ....டீ... பாட்டாளியாய் இருக்கும் தோழனுக்கு கூட்டாளியாய் இருப்பது டீ....' என்ற பாடல் வரிகள் குறிப்பிடத்தக்கது. பாட்டாளிகளுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட தேநீர் இன்று அனைத்து தரப்பு மக்களின் சிந்தனையைத் தூண்டும் பானமாக உள்ளது. எனவே, தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் தமிழர் பண்பாட்டில் தேநீர் எவ்வாறெல்லாம் இரண்டறக் கலந்துள்ளது என்பது குறித்தும் தேநீரின் தீய மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளலாம்.

அடிக்குறிப்பு

நான் சீனாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியபோது சீன நண்பர்களின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோதும் அவர்களிடம் கலந்துரையாடியபோதும் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும் சில இணைய தளங்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தரவுகளை தந்து உதவிய சீன நண்பர்களுக்கும் இக்கட்டுரையை எழுத ஊக்கமளித்த பேரா.முனைவர் மு.வளர்மதி அவர்களுக்கும் எனது நன்றி.

(இக்கட்டுரை பாரதியர் பல்கலைக்கழகம் டிச-2010-ல் நடத்திய பன்னாட்டு மொழியியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

-முனைவர் கு.சிதம்பரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It