பனிக்காலத்தில் குறிப்பாக மார்கழியிலேயே சில நலவாழ்வு சூத்திரங்களை கவனமாக பின்பற்ற வேண்டும்.

 மார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. சூரிய ஒளி குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்றுக் குறைவாகவே இருக்கும்.

 நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக வைரஸ் நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் தடுமாற்றங்கள் ஏற்படும்.

 இந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொண்டையில் டான்சில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. மேலும் இன்புளுயன்ஸô காய்ச்சல், நிமோனியா சுரம், ஒற்றைத் தலைவலி, மூட்டுவலிகள், நரம்பு நோய்கள், தோல் நோய்கள் ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகிவிடுகிறது.

 காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் சுரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களையும், முதியோர்களையும் இவை தாக்கி நிலைகுலையச் செய்கின்றன.

பனிக்காலத்தில் உடலைப் பாதுகாக்க ...

 நல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள். வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிக்கவும். பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, சொட்டர், மப்ளர், பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளவும்.

 தும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், மூக்கிலிருந்து வடியும் நீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். எனவே பிறர் நலன் கருதி, கைக்குட்டையை பயன்படுத்துங்கள்.

 பொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். மூலிகை கொசு விரட்டிகள் பயன்படுத்துங்கள். வீட்டை, சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரித்து கொசுக்களைக் குறையுங்கள்.

 சற்று இறுக்கமான ஆடைகள், கம்பளி கையுறை, காலுறைகள் அணிந்து கொள்ளுங்கள்.

 மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள். பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்கறிகள் தவிர்த்துவிடுங்கள்.

 உதடுகள் வெடிக்காமலிருக்க எண்ணெய், நெய், பாலேடு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.

 பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தப்படுத்திக் கொள்ள பழக்குங்கள். தாகம் குறைவாக இருந்தபோதிலும் ஓரளவேணும் நீர் அருந்தாவிட்டால் உடல் வறட்சியும், தோல் வறட்சியும் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல் காரணமாகவும் தோல் பாதிக்கும். வறண்ட தோல் உள்ளவர்களுக்கு பனிகாலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்படும். மலச்சிக்கலில்லாமல் தவிர்க்க பப்பாளி, ஆப்பிள் சாப்பிடலாம். மார்கழியில் மிளகை மறக்காதீர்கள் - பனிக்காலச் சளிக்கு இது நல்ல மருந்து. குளிரில் தேவைப்படும் வெப்பத்தையும், ‘மிளகு’ தரும். பொங்கலில், ஆம்லேட்டில், அடையில், அவியலில், பாலில் என எதிலும் சற்று கூடுதலாக மிளகைப் பயன்படுத்துங்கள்.  பனைவெல்லம், பனங்கற்கண்டு சேர்ந்த இனிப்புப் பண்டங்கள் நல்லது. வெல்லப் பனியாரம், அதிரசம் தயார்செய்து சாப்பிடுங்கள்.

 காலையில் சுக்கு மல்லி காபி, இரவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்த பால் அருந்தலாம். பகலில் தூதுவளை ரசம், காய்கறி சூப், மாலையில் சுண்டல் சாப்பிடலாம்.

 பனிக்காலத்தில் (முடியும் வரை) முடிந்த வரை ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. காலைப் பனியில் நடைப்பயிற்சி வேண்டாம். மாலையே நல்லது.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)