Ambedkar

தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளை முகமதியர்கள் எவ்விதத்தில் அணுகினார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. முகமதியர்கள் துவக்கத்தில் இருந்தே தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆர்வத்துடனேயே அணுகியுள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள், சாதி இந்துக்களிடமிருந்து விலகி வாழ வேண்டும் எனவும், அவர்கள் சாதி இந்துக்களோடு இணைந்து வாழ நேரிட்டால், அது சாதி இந்துக்களின் புள்ளிவிவரத்தை மிகைப்படுத்திக் காட்டும் எனவும் முகமதியர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களை ‘தங்களவர்களாக' மாற்றிக் கொள்வார்கள்; இதன் மூலம் சாதி இந்துக்களின் மக்கள் தொகை கூடியது போலக் காட்டப்படும்; இது, இஸ்லாமியர்கள் மிகச்சிறுபான்மையினராக அடையாளப்படுத்த வழிவகுக்கும் என்ற அச்சமும் முகமதியர்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 1909ம் ஆண்டு, முகமதியர்கள் "தாழ்த்தப்பட்டவர்களை, சாதி இந்துக்களுடன் இணைத்து மக்கள் தொகையை கணக்கிடக் கூடாது' என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தனர். 1923ம் ஆண்டு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, இந்தக் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார்.

இந்துக்கள் முகமதியர்களை, பல்வேறு தளத்தில் தங்களுக்குப் போட்டியாளராகவே கருதுகின்றனர். இந்தப் போட்டி என்பது, இருவேறு இனத்தினருக்கிடையில் நடக்கும் யுதப் போர் போலவே காணப்படுகிறது.

இந்துக்கள் தங்களுக்கென, ‘பனாரஸ் பல்கலைக் கழகம்' அமைத்துக் கொண்டால், அதை எதிர்க்கும் வகையில் முகமதியர்கள் ‘அலிகர் பல்கலைக் கழகம்' நிறுவுகின்றனர். இந்துக்கள் ‘சுதி இயக்கம்' ஏற்படுத்தினால், முகமதியர்கள் அதை ‘தாப்லிக்' அமைப்பால் சந்திக்கின்றனர். இந்துக்கள் ‘சங்கதன்' அமைத்தால் முகமதியர்கள் அதை "தன்ஜிம்' கொண்டு முறியடிக்கின்றனர். இந்துக்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கினால், அதை வீழ்த்த "காத்சர்' அமைப்பை முஸ்லிம்கள் கையில் எடுக்கின்றனர்.

இவ்வாறு இரு வேறு இன மக்கள் போல, ஒரு போர்ப் பாதையிலேயே இந்துக்களும், முகமதியர்களும் பயணிக்கின்றனர். ‘இந்துக்கள் தங்களை ஒடுக்குகிறார்கள்' என இஸ்லாமியர்கள் மிகுந்த விழிப்போடு இருக்கின்றனர். ‘இஸ்லாமியர்கள் இந்த மண்ணை தங்கள் வசப்படுத்தவே விழைகிறார்கள்' என்று இந்துக்கள் அஞ்சுகிறார்கள். இவ்வாறு இந்துக்களும், முகமதியர்களும் போர் முகாமில் இருக்கும் எதிர் எதிர்ப்படையினர் போல் ஆயத்தமாதல், கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்துக்களின் வலிமை முகமதியர்களை அச்சுறுத்தவே பயன்படுகிறது. இதனால் இஸ்லாமியர்கள் தற்காப்புக்காகத் தங்களைத் தயார்செய்து கொள்வார்கள் என்ற சந்தேகம் இந்துக்களிடையே பலமாக எழுகிறது. இந்துக்களின் எழுச்சி, இந்துக்களுக்கே இடையறாத அய்யத்தை உருவாக்குகிறது. இந்த சந்தேகம், இரு சமூகத்தினரிடையே அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. முகமதியர்களின் மக்கள் தொகை விகிதாச்சார அளவை குறைப்பதும் அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியைத் தடைசெய்வதும்தான் இந்துக்களின் வெளிப்படையான சிந்தனையாக இருக்கிறது.

இஸ்லாமியர்களின் சமூக, அரசியல், பொருளாதார வீழ்ச்சி என்பது, ஒட்டுமொத்த சமூகத்தின் வீழ்ச்சியையே உருவாக்கும். ஓர் அமைப்பின் நிர்மாணிக்கப்பட்ட கருத்துகள், பிற அமைப்பினருக்கு எதிராக இருக்கும் வரையில், அவ்விரு அமைப்பினர்களுக்கிடையே சமாதானம் என்பது சாத்தியமாகாது. இந்துக்களும், முகமதியர்களும் அரசியல் அதிகாரப் பகிர்வில் இணைந்து செயல்பட்டால் கூட, அந்த இணைப்பு நிலையற்றதாகவே இருக்கும். இல்லை எனில், இந்துக்கள் தொடர்ந்து தரும் இடர்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கும்.

இரு பிரிவினர்களும், வாழ்வதற்காக ஒருவருக்கொருவர் போராடுகின்றனர். இங்கு வாழ்வியல் போராட்டம் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதால், தரமான இணக்கமான வாழ்க்கை என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. இந்த விரும்பத்தகாத சூழலை நேர் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதக் கருத்தியல் என்பது, பிற மதத்தினரின் கருத்துகளைத் தூக்கி எறிவதாகவும், பிற மனிதர்களின் வளர்ச்சியை மகிழ்ச்சியை காணச் சகியாத ஒன்றாகவும் நடைமுறையில் அமைந்துள்ளது. மற்றவர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில், அடிப்படைக் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது இந்து மதம். இந்தக் கருத்துகளை ஆதரிக்கும் அமைப்புகள், அரசுகள் இருக்கும் வரை அமைதி என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.

(‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 8 பக்கம் : 247)

Pin It