periyar 431மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக்கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தேசித்து சென்னை சட்டசபையில், “பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம்” என்று ஒரு தீர்மானம் நிறை வேற்றியதும் ஞாபகமிருக்கலாம். அத்தீர்மானம் அமுலுக்கு வருவதற்கில் லாமல் “வேலையிருந்தால்தான் போகலாம்” என்று சட்ட மெம்பர் வியாக் யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களும் பலர் செல்ல முயற்சித்தும் அவர்களுக்கு 144 உத்திரவு போடச் செய்ததும் ஞாபகமிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டு களில் விசார ணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம். மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்பனர்கள் பேரில் நடவ டிக்கை நடத்தப் பட்டு தண்டிக்கப்பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது.

அங்குள்ள ஒரு பார்ப்பன மாஜிஸ்ட்ரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. “பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும்” என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் “திருட னைத் தேள் கொட்டியது போல்” மௌனம் சாதிக்கிறார்கள். பார்ப்பனரல் லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச் சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிறபோதும், சட்டங்களும் அநுகூலமாயிருக்கிற போதும், தேர் தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமை கூட இல்லாமல் நம்மைக் கொடுமைப்படுத்தத் தயாராயிருப்பார்களேயானால், இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்து விட்டால் நம்மை என்ன செய்ய மாட்டார் கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர் களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம்.

குடி அரசு - கட்டுரை - 31.10.1926

கலியாண சந்தடியில்   தாலி கட்டுவதை மறந்து விடாதீர்கள்

சட்டசபைத் தேர்தல்களில் மக்கள் அபரிமிதமான ஊக்கத்தில் இருப்பதால் தீபாவளிக்குக் கதரை மறந்து விடுவார்களோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களைப் பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதார் கட்சியினால் ஏற்படும் நன்மைகளைவிட, பதின் மடங்கு நிரந்தர மான நன்மைகள், கதரினால் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத சமூகமாகிய ஏழைச் சகோதரி சகோதரர்களுக்கு ஏற்படும் என்பதை மறவாதீர்கள். ஏழைகளுக்கு கஞ்சி வார்க்காமல் என்ன சுதந்திரமோ, சுயராஜ்யமோ பெற்றா லும் அது உண்மையான சுயராஜ்யமாகாது. பார்ப்பனரல்லாத சகோதரர்கள் ஒவ்வொருவரும் சுயநலத்தை உத்தேசித்து அல்லாமல் உண்மையாய்ப் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்களாயிருந்தால், கதரின் மூலமாகத்தான் வெளியாகும். கதரை மதிக்காத பார்ப்பனரல்லாதார் கட்சி ஜெயிப்பதும், பார்ப்பனரல்லாதாரை அழுத்தப் புறப்பட்ட காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி ஜெயிப்பதும் ஒன்றுதான். ஆதலால் கலியாண சந்தடியில் தாலி கட்டுவதை மறந்தது போல் தேர்தல் தடபுடலில் கதரை மறந்து விடாதீர்கள்.

குடி அரசு - சிறு குறிப்பு - 31.10.1926

Pin It