periyar kamarajar 489

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இன்றையப் போராட்டம், பழமைக்கும் - புதுமைக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் - புதுமை காணும் பகுத்தறிவு உலகுக்கும் தான் நடந்து வருவதாகும்.

தோழர்களே! இந்த நாட்டுக்குக் காங்கிரஸ் ஏற்படுத்தப்பட்டதே ஏன்? எங்கு மக்கள் காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து விழிப்பு ஏற்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சி அந்தக் காரியத்துக்காகவே பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது ஆகும்.

இந்த நாட்டில் வெள்ளையருக்கு ஆபத்து வந்த காலத்தில் வெள்ளையர்கள் பார்ப்பானைப் பிடித்துக் கொண்டனர். பார்ப்பான் வெள்ளைக்காரனைப் பார்த்து நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களைக் காப்பாற்றுகின்றோம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனமே (அமைப்பு) காங்கிரசு ஆகும்.

இந்த காங்கிரஸ் ஏற்பட்ட 40, 45- ஆண்டு வரையிலும் கூட வெள்ளைக்காரனுக்கு அனுகூலமாகத் துதிபாடும்படியான நிலையில் தான் இருந்தது. வெள்ளைக்காரனுக்குத் துதிபாடி பலன் அடைந்தவர்கள் எல்லாரும் இந்தப் பார்ப்பனர்களே ஆவார்கள்.

வெள்ளைக்காரன் இந்நாட்டுக்கு வந்து 150- ஆண்டுகள் ஆண்ட பிற்பாடும்கூட 1901- இல் நம் நாட்டில் படித்தவர்கள் 100- க்கு 7- பேர்களே இருந்தார்கள். 1911- இல் 81/2 பேர்; 1921- இல் 91/2 பேர்; 1931- இல் 101/2 பேர்களே படித்த மக்களாக இருந்தார்கள். அதற்கு அடுத்து ஜஸ்டிஸ் கட்சியும், அட்வைசரி கவர்மெண்டும், ஆட்சி செய்ததன் காரணமாக 1951- இல் நம் நாட்டில் 100- க்கு 16- பேர்கள் படிக்கும்படியான நிலை ஏற்பட்டது.

பிறகு தமிழ்நாட்டில் ஆச்சாரியார் பதவிக்கு வந்து 16- அய், ஆகக் கொண்டுவரப் பாடுபட்டார். 6000- பள்ளிகளை மூடி நாம் படிக்க முடியாமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்தார்.

எங்கள் எதிர்ப்பின் காரணமாக அவர்கள் உடம்புக்குச் சவுக்கியம் (நலம்) இல்லை என்று விட்டுச் செல்லும்படியான நிலை ஏற்பட்டது.

பிறகு, காமராசர் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். இன்று 100- க்கு 32- பேர்கள் படித்து இருக்கும்படியான நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழர்களில் மானம் - ஈனம் இல்லாதவனாக இருந்தால் தான் காமராசர் ஆட்சியின் நன்மைகள் விளங்காது. உண்மையான தமிழனுக்கு விளங்கியே தீரும்.

தோழர்களே! வீரமணி அவர்கள் கூறினார்: நான் காங்கிரஸ் ஒழியாமல் இருக்க முட்டுக் கொடுப்பதாக. நானும் கூறியது உண்டு. காங்கிரசைக் காப்பாற்ற யார் தயவும் தேவையில்லை. அது பலமான அஸ்திவாரத்தினால் (அடிதளத்தில்) சிமெண்டில் கட்டப்பட்டதாகும். ஏன் இப்படி என்றால் பார்ப்பான் காங்கிரஸ் நிரந்தரமாகத் தங்கள் கையிலேயே இருந்துவிடும் என்று கருதியே பலமாக முன்னமேயே கட்டிவிட்டார்கள். இப்படிக் காங்கிரஸ் தங்கள் கையிலிருந்து தமிழர்கள் கைக்குப் போகும் என்று அவர்கள் கருதவே இல்லை. அதனால்தான் காங்கிரசை ஒழிக்க யாராலும் முடியாது என்றேன்.

பிறகு நான் ஏன் முட்டுக் கொடுக்கின்றேன் - உங்களை எல்லாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்கின்றேன் என்றால், காமராசர் ஒழிந்து விடக்கூடாதே என்பதற்காகவே ஆகும்.

தோழர்களே! பார்ப்பான் கையில் இருந்த, காங்கிரசின் ஆதிக்கம் கண்டுதான் நான் வெளியேறி அதை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டேன். இன்று காங்கிரஸ் ஒழியாவிட்டாலும் பார்ப்பான் கையில் உள்ள காங்கிரஸ் ஒழியாவிட்டாலும் பார்ப்பான் கையில் உள்ள காங்கிரஸ் எப்படியோ தமிழன் கைக்கு வந்துவிட்டது. இது மீண்டும் பார்ப்பான் கைக்குப் போகக்கூடாதே என்பதே கவலை.

எந்தக் கட்சிக்காரனை எடுத்தாலும் தேர்தலில் காங்கிரஸ் மாதிரி எல்லா இடங்களுக்கும் போட்டிப் போடும்படியான யோக்கியதையில் இல்லை. இந்த எதிர்கட்சிகள் எல்லாம் இருக்கின்ற இடத்தைக் காப்பாற்றிக்கொண்டு குறையாமலாவது இருக்க முடியுமா என்று தான் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே காங்கிரசை ஒழிக்க இத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஒழிக்க முடியாது.

பின் இத்தனைக் கட்சிகளுக்கும் என்ன வேலை என்றால் காமராசரை ஒழிக்க வேண்டும் என்பது தான்.

இராஜாஜி காமராசரை ஒழிக்க வேண்டும் என்று சொல்லத் தைரியம் இல்லாமல் காங்கிரசையே ஒழிக்கின்றேன் என்கின்றார்.

தோழர்களே! காங்கிரஸ் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்து போய்விடுவான் என்பது ஆச்சாரியாருக்குத் தெரியும். இருந்தும் காமராசரை ஒழித்தாக வேண்டுமெ என்ற ஆத்திரத்தில் தான் காங்கிரசை ஒழிக்கின்றேன் என்கிறார்.

தோழர்களே! நான் ஒரு தடவை தமிழ்நாட்டில் காங்கிரசையே ஒழித்துக்கட்டினேன். காங்கிரஸ் மைனாரிட்டியாகவும் காங்கிரஸ் அல்லாதவர்கள் மெஜாரிட்டியாகவும் வரும்படிச் செய்தேன் என்றாலும் தோற்ற காங்கிரஸ் தான் பதவிக்கு வந்தது. ஆச்சாரியார் தான் காங்கிரஸ் பேரால் சென்னை மாகாண முதலமைச்சராக பதவிக்கு வந்தார்.

எனவே காங்கிரசை யாரும் காக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் காமராசரைக் காப்பாற்ற நாம் காங்கிரசைக் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ் மெஜாரிட்டியாக வரும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தோழர்களே! தோற்ற காங்கிரஸ் 1952- ஆம் ஆண்டு முதன் மந்திரியாக வந்த இராஜாஜி 6000- பள்ளிகளை மூடினார் என்றால் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு - காமராசர் தோல்வி அடைந்து இராஜாஜியோ அவரின் அடிமைகளோ முதல் மந்திரியாக வந்தால் எப்படி நடக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இன்று நாம் 100- க்கு 32- பேர்கள் படித்து உள்ளோம். காமராசர் மேலும் 5- ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் 100- க்கு 50- பேர்கள் படித்துவிடுவோம். மேலும் 5- ஆண்டு இருந்தால் 100- க்கு 100- படித்துவிடுவோம். எல்லா உத்தியோகங்களிலும் - பதவிகளிலும் நமக்கு தக்க விகித அளவு கிடைக்கும் படியான நிலை ஏற்படும். இத்தகைய மாறுதல் கண்டிப்பாகக் காமராசரால் தான் ஏற்படுத்த முடியும்.

தோழர்களே! நாம் 100- க்கு 97- பேர் உத்தியோகம் பதவி முதலியன பெறவேண்டும். இது எவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் முடியும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நமது மக்களுக்கு 1000, 2000- ஆண்டுகளாக இருந்துவரும் கல்வி இல்லாத குறையைப் போக்க 30000- பள்ளிகள் 1,500- க்கு மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் எல்லாம் இவர் ஆட்சியில் தான் பெருகி உள்ளன. மேற்கொண்டு இலவசக் கல்வி, இலவச உணவு, உடை முதலியவைகளையும் வழங்கி வருகின்றார். இதன் காரணமாகக் கல்வியானது மளமளவென்று பெருகிய வண்ணமாகவே உள்ளது. இராஜாஜி காலத்தில் நம் மக்கள் கல்வி கற்க ஒட்டாமல் தடுக்க என்னென்ன தடைகள் செய்யக்கூடுமோ அவற்றை எல்லாம் செய்தார்.

ஆச்சாரியார் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகள் ஏற்படமால் இருக்க என்ன தடைகள் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்தார். இன்று காமராசர் ஆட்சியில் 5- மைலுக்கு ஓர் உயர் நிலைப்பள்ளி வீதம் பெருகி உள்ளது. சில இடங்களில் ஒரு மைலுக்கு ஓர் உயர்நிலைப்பள்ளி வீதம் வளர்ந்து உள்ளது.

திருச்சி ஜில்லாவில் தொழுதூரில் ஓர் உயர்நிலைப்பள்ளி. அதற்கு ஒரு மைலில் இலப்பைக்குடிக்காடு என்ற ஊர் உள்ளது. அதில் ஓர் உயர்நிலைப்பள்ளி. அதற்கு ஒரு மைல் தொலைவில் உகளுர் என்ற ஊரில் ஓர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. எல்லாம் பட்டிக்காட்டிவேயே உள்ளன.

காமராசர் பதவிக்கு வந்த பிறகு 20, 22- காலேஜீகள் (கல்லூரிகள்) ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகக் சாதாரணமாகப் பிற்பட்ட வகுப்புப் படிக்கும்படியான நிலை ஏற்பட்டு உள்ளது.

இன்று வண்ணார், நாவிதர், குயவர், போலீஸ்காரர், பியூன்கள் முதலியவர்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லோரும் படித்து மேல் நிலைக்கு வரும்படியான நிலை ஏற்படுத்தி உள்ளார். இன்று கான்ஸ்டபிள் மகன் டி.எஸ்.பி. யாக (காவல்துறை துணை கண்காணிப்பாளர்) வரும்படியான நிலை ஏற்பட்டு உள்ளது. வண்ணார் நாவிதர் முதலியவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் படித்து கலெக்டராக முனிசீப்பாகப் பெரிய பெரிய பதவிகளுக்கு எல்லாம் வரும்படியான நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் பார்ப்பனர்கள் போச்சுப்போச்சு - கல்வியின் தரமே கெட்டுப்போச்சு - என்று கூப்பாடு போடுகிறார்கள்.

தோழர்களே! நான் காங்கிரசில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடம் அளிக்காததனால் வெளியேறி கம்யூனல் ஜி.ஓ.வுக்காகப் (வகுப்புவாரி விகித இடஒதுக்கீடு ஆணை) பாடுபட்டேன். சுப்பராயன் மந்திரி சபையில் பார்ப்பனர் அல்லதாருக்கு 48; பார்ப்பானுக்கு 16; கிறிஸ்தவருக்கு 8; முஸ்லிமுக்கு 8; தாழ்த்தப்பட்டவருக்கு 8; இதரருக்கு 12; என்று சட்டம் செய்து அமுலுக்குக் கொண்டுவரச் செய்தேன்.

ஆனால் அடுத்து வந்த ஆட்சியில் இவை நிலைக்காத இருக்கச் சட்டம் செய்து கொண்டார்கள். எந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அரசியல் நிருணய சபையில் சட்டம் செய்தாரோ, அந்தச் சட்டத்தைக் காட்டி அய்க்கோர்ட்டில் வழக்குப்போட்டு ஒழித்துக் கட்டிவிட்டார்.

இன்று காமராசர் ஆட்சியில் தான் நமக்குப் பெருவாரியாகப் படிக்கவும், உத்தியோகம், பதவி முதலியன பெறும்படியான நிலையும் ஏற்பட்டு உள்ளன.

இன்றைய அரசமைப்பச் சட்டத்தில் ஜாதி ஒழிக்க இடம் இல்லை. ஜாதியைக் காப்பதாகவே உள்ளது. அதன் காரணமாகவோ ஜாதியைப் பாதுகாக்கும் சட்டத்தினைக் கொளுத்தி, 3000 - 4000 பேர்கள் சிறை சென்றோம்.

சிறை சென்று மீண்ட உடனேயே நமது மந்திரிகளுக்கும் புத்தி வந்தது. காமராசர் தான் முதன் முதலில் சாதியை வைத்துக் கொண்டு ஆள்வது என்றால் அது என்ன சுயராஜ்ஜியம்? என்று கூவத்தலைப்பட்டார். அடுத்துப் பிரதமர் நேருவும் அம்மா திரியே கூற ஆரம்பித்தார்.

இராஜாஜி, நான் காங்கிரசில் இருந்துவிட்டு வந்த உடனேயே காங்கிரசில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை மாளவியா ஆமோதித்தார். அந்தத் தீர்மானமாவது:

"சுயராஜ்ஜிய (தனி ஆட்சி) அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும், அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை (மொழி) கல்வி, தொழில், பழக்க வழக்கங்கள், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் (நிறுவனங்கள்) முதலியவைகளைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி கூறி உத்தரவாதம் அளிக்கப்படும்" என்று தீர்மானம் போட்டார்.

அதன்படித்தான் காமராசர் தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன் வரையில் ஆட்சியில் நடைபெற்று வந்தது. சட்டமாகவும் ஆக்கப்பட்டது.

இன்று காமராசர் ஆட்சியில் தான் இவை குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன. இன்று பார்ப்பானுக்கு இந்தத் தமிழ் நாட்டில் காமராசர் ஆட்சியில் தங்கள் ஏகபோக ஆதிக்கத்துக்கு இடம் இல்லை என்ற காரணத்தினாலும், நாம் வளருகின்றோமே என்ற காரணத்தாலும் (இராஜாஜி) காங்கிரசை ஒழிக்கின்றேன் என்கிறார்.

இன்றைய ஆட்சில் என்ன ஓட்டை? எவனுக்கு என்ன குறைவு? எவனை எடுத்தாலும் ஒவ்வொருவனும் 2- அடி, 4- அடி வாழ்க்கையில் உயர்ந்துதானே இருக்கின்றார்கள்.

இந்தக் கண்ணீர்த்துளிகளளை (தி.மு.க) எடுத்துக் கொண்டாலும் முக்கியத் தலைவர்கள் எல்லோரும் வயிற்றுப் பிழைப்புக்காகப் பொதுத்தொண்டு செய்தவர்கள். அவர்களுக்கு இன்று 2- பங்களா, 3- பங்களா, இரண்டு கார் - மூன்று கார், இலட்சம் லட்சமாகச் சொத்து எல்லாம் உள்ளனவே.

இந்த இராஜாஜிக்குத்தான் என்ன கேடு! இவர் காங்கிரசுற்கு வரும் போது வீட்டை விற்றுக் கடன் கட்டியவர். காந்தி நிதியில் இருந்து மாதம் 250- பணம் வாங்கிக் கொண்டு குடும்பம் நடத்தினார். இப்படிப்பட்டவர் இரண்டு தடவை இங்கு முதல் மந்திரி; ஒரு தடவை கவர்னர்; ஒரு தடவை கவர்னர் ஜெனரல் ஆகப் பெரிய பெரிய பதவிகள் எல்லாம் அனுபவித்தார். இன்று 10- லட்சம் சொத்து சேர்த்துக் கொண்டு இருக்கின்றார். 3- நாளைக்குக் கவர்னர் ஜெனரலாக இருந்தமைக்கு இன்றைக்கும் பென்ஷன் பெறுகின்றார். அதற்கு வரி கொடுக்க கூடாது என்று கோர்ட்டுக்குப் போகின்றார்.

எனவே தமிழர் முன்னேறுவத கண்டு ஒரே ஆத்திரம்தான் அவருக்கு.

எனவே, என்றும் இல்லாத நிலை இன்று நமக்குச் சாதகமாக வந்துள்ளது. இதனை மீண்டும் ஒழிய விட்டு விடக்கூடாது.

இந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைமை மட்டும் அல்ல. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் (முழு) தலைமையே சஞ்சீவிரெட்டி என்ற தென்னாட்டுப் பார்ப்பனரல்லாத ஒருவர் கைக்கு வந்து உள்ளது.

ஒரு குறைபாடும் குற்றமும் கூறமுடியாத காமராசரை ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றார் என்றால் நம் ஆட்களும் இதற்கு உதவி செய்வதா? எவ்வளவு நன்றி இல்லாத மான - ஈனம் அற்றவர்கள் ஆவோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஆச்சாரியார் பதவிக்கு வந்தபோது எல்லாம், அசல் மனுதரும ஆட்சிதான் செய்தார். மனுதர்மத்தில் அவன் அவன் தங்கள் சாதித் தொழில்தான் செய்ய வேண்டும் என்று உள்ளது. அந்த வருணாசிரமத் தருமம்தான் அழிந்து விடாமல் காக்க வேண்டும் என்கின்றார்.

ஆச்சாரியார் திருவடிகளே சரணம்! என்று இந்தக் கண்ணீர்த்துளிகள் அவர் பின் செல்லுகின்றார்களே - இது மானக்கேடு அல்லவா? ஆச்சாரியார் கூறும் "தருமம்" அமலுக்கு வந்தால், அண்ணாதுரையின் கழுத்தில் தவுல் அல்லவோ தொங்கும்? கருணாநீதியார் கையில் நாதசுரமோ அல்லது தாளமோ தானே இருக்க வேண்டும்?

இது இவர்களுக்குத் தெரியாதது அல்ல. எப்படியாவது யார் காலில் விழுந்தாவது பதவிக்குப் போனால் போதும் என்பது தானே? இதுவா நன்றி உள்ள தமிழர்கள் செயல்!

-------------------------------

30.10.1961- அன்று சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 31.10.1961
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It