தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழனென்று கூறிக்கொண்டு, நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மை கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான். அப்படி முன் வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ்டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டு திராவிடப் பண்பை ஒப்புக்கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக்கொள்ள மாட்டோம்.

பண்டைத் திராவிட மக்களின் பழக்க வழக்கங்களை ஒட்டி, அதில் ஏதாவது தவறு இருக்குமேயானால் அதையும் களைந்துவிட்டு, ஒரு திராவிடன் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்தால், அவ்வேற்பாட்டுக்கு உட்பட்டு நடக்க ஒப்புக்கொள்பவனைத்தான் திராவிடன் என்று கூறுவோமே அல்லாது, சி.பி. ராமசாமி அய்யரையும், ராசகோபாலாச்சாரியாரையும் கூட அவர்களின் பண்பு திராவிடப் பண்பாக மாறும் வரை, திராவிட இனத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோமே! தமிழர் என்பதில் இவ்வளவு நிபந்தனை உண்டா? இதைத்தவிர திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்?

எங்கள் நடத்தையிலோ, அன்பிலோ உங்களுக்குச் சந்தேகம் எழத்தான் என்ன காரணம் இருக்க முடியும்? தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனைப் பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த – நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா? இழிவுக்கும், தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறாக – இவ்விழிவுக்கே காரணமான உயர்சாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லோரும் ஒன்றாவோம்.

இந்நாட்டுக் கிறித்துவர்களும், முசுலிம்களும் தம்மைத் திராவிடர் அல்லர் என்று கருதுவார்களானால் – தம்மை சூத்திரர் அல்லரென்று கருதுவார்களானால், அதைப்பற்றியும் நமக்குக் கவலையில்லை. ஆனால் உண்மையில், ஆரியம் அவர்களைச் சூத்திரருக்கும் தாழ்ந்தவராக – அதாவது "மிலேச்சர்கள்' என்பதாகத்தான் கருதி வருகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். வைசியன் தன்னை "ஆரிய வைசியன்' என்று கூறிக் கொண்டாலும், ஆசாரி தன்னை "விஸ்வப் பிராமணன்' என்று கூறிக் கொண்டாலும், கவுண்டன் தன்னைத் "தேவேந்திரகுல வேளாளன்' என்று கூறிக்கொண்டாலும், படையாச்சி தன்னை "வன்னியக்குல சத்திரியன்' என்று கூறிக்கொண்டாலும், ஆரியம் இவர்கள் அத்தனைப் பேரையும் – "சூத்திரன்' என்ற பிரிவில் ஒன்றாகத்தான் கருதி வருகிறது என்பதையும், கோயிலில் ஒரு குறிப்பிட்டவரையில்தான் இவர்கள் அத்தனைப்பேரும் போக முடியும் என்பதையும் இவர்கள் உணர வேண்டுகிறேன். 

பிராமணர்கள், பிராமண மகாசபை வைத்துக் கொள்ளுகிறார்கள்; அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் சாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும்; பார்ப்பானின் தாசிமக்கள் என்ற பட்டம்தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால்தான், அப்பெயரால் எவ்விதச் சலுகையோ, உரிமையோ கிடைக்காததால்தான், அப்பெயரிலுள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே இழிதன்மையுள்ள திராவிடராகிய முசுலிம்கள், கிறித்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்களெல்லாம் ஒன்றுசேர மறுத்துவிடுவார்கள்.

ஆதலால்தான், நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்ளுகிறோம். சூத்திரர் என்பவர்களுக்குத் "திராவிடர்' என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே கூறிய அத்தனைப்பேரும் ஒன்றுசேர வசதியிருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக்கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும், "பிறவி காரணமான இழிதன்மை'யும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணமில்லை.

"ஆரியராவது, திராவிடராவது? அதெல்லாம் இன்றில்லை' என்பீர்கள், இங்கே வாருங்கள்; பேசாமல் மேல்துண்டு போட்டுக் கொண்டு நாலு வர்ணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்! பார்ப்பான் உங்களையெல்லாம் ஒரே இடத்தில் விட்டு விட்டு உள்ளே நுழைகிறானா இல்லையா பாருங்களேன்!

நூல் : "மொழியாராய்ச்சி' வள்ளுவர் பதிப்பகம், பவானி 1948

Pin It