அலையின் சுழற்சியிலே,

இலைகள் தோன்றுகின்றன;

மடிகின்றன; இந்தச் சுழற்சி,

விரிவாக, நட்சத்திரங்களிடையே

மெதுவாகவே நிகழ்கிறது.

-    தாகூர்

என் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவம் ஏற்பட்ட நந்நாள் பொதிகையின் சிகரங்களில் ஏற்பட்டதுதான். பூங்குளம் என்னும் ஒரு மொட்டையான பாறையில் படுத்திருந்தபோது என்னைச் சுற்றி மஞ்சு தவழ்ந்து கொண்டிருந்தது. மெலிதாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்களில் வரும் தென்றலுக்கும், பொதிகை தென்றலுக்கும் அன்றுதான் வேறுபாடு தெரிந்தது. இறந்து போன உடலை உயிர்ப்பிப்பதற்கான வலிமை, அத்தென்றலுக்கு இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய இளவயதில் கானகத்தில் அலைந்த நாட்கள் என்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக மாற்றியமைத்தன. ‘பூங்குளத்தில்’ தான் தாமிரபரணி உற்பத்தியாகிறது.

பொதிகை மலையைப் பற்றி விரிவாக பார்க்கும் போது ஹாட்ஸ்பாட் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். ஹாட்ஸ்பாட் என்பதை உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று குறிப்பிடலாம். எங்குமில்லாத பல்லுயிர்ப் பெருக்கம், மிக அருகிப்போன அபாயத்தில் உள்ள மிருகங்கள், தாவரங்கள், வனப்பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய இடமாக ஹாட்ஸ்பாட்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மறைந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கவும், மனிதன் அழித்தது போக மிஞ்சிபோன பல்லுயிர்ப் பெருக்கங்களைப் பாதுகாக்கவே இந்த ஹாட்ஸ்பாட் உருவாக்கப்பட்டது. 1988ல் பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அறிஞர் நார்மன் மையர்ஸ் இக்கருத்தாக்கத்தை உருவாக்கினார். இப்பூவுலகில் ஹாட்ஸ்பாட்கள் நிலப்பரப்பில் 2.3 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளன. ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டும் ஏற்கனவே தன்னுடைய 70% சதவீத இயற்கைப் பல்லுயிர்களை இழந்துவிட்டது. உலகில் இதுவரை ஹாட்ஸ்பாட்டுகளாக 34 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இமயமும், பொதிகை மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளது.

ஹாட்ஸ்பாட்டுகளின் அடிப்படை இழையாக உள்ள கருத்தாக்கம் என்னவெனில் அழிந்து வரும் உயிரினங்கள், அதாவது திரும்பவும் உருவாக்க இயலாத தன்மையை இது கவனப்படுத்துகிறது. எனவே இதை பாதுகாப்பதே நமது தலையாய கடமை Bird life international என்னும் நிறுவனம் ‘218’ இடங்களில் அருகி வரும் பறவையினங்கள் உள்ளதாக குறிக்கிறது. ‘Global 200 Eco regions’ என்று இருநூறு இடங்களைச் சுற்றுச்சூழல் மதிப்புமிக்கதாகக் கூறுகிறது. இந்த ஹாட்ஸ்பாட்கள் சுற்றுச்சூழல் மதிப்புமிக்க இடங்களில் 60 சதவிகிதத்திற்கு மேல் உள்ளடக்கியுள்ளன.

‘ஹாட் ஸ்பாட்’ என்று ஒரு இடத்தை நாம் குறிப்பதற்கு அவ்விடம் 1,500 தாவரங்களைக் கொண்டதாகவும் (அதாவது உலகின் 5 சதவிகிதத்தை), இரண்டாவதாக அந்த இடம் தன்னுடைய சுயமான உயிரினங்களில் 70 சதவிகிதத்தை இழந்திருக்க வேண்டும். இந்த 34 ஹாட் ஸ்பாட்டுகளும் 1,50,000 அருகி வரும் தாவரங்களைக் கொண்டுள்ளன. அதாவது இவ்வுலகின் பாதி தாவரங்களை. இதைத் தவிர பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் அனைத்து பல்லுயிர்ப் பெருக்க நிகழ்வுகளும் அடங்கும்.

இந்தியாவின் ‘வளர்ச்சித் திட்டங்களால்’ மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், மரங்களை வெட்டுதல், விவசாயத்திற்கு காட்டை அழித்தல் ஆகியவற்றின் மூலமும் மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு அழிவுகளைச் சந்தித்து வருகிறது. வேட்டை, தொழிற்சாலைகள், போக்குவரத்து ஆகியவை நிரந்தரப் பிரச்சனைகளாகவும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மேலைக் கடற்கரையோரத்தில் படிக்கட்டுகளைப் போல காட்சியளிப்பதால் இது (Western Ghats) மேலைப்படி என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் மூலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை பல்வேறு ஆறுகள் இம்மலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இந்த ஆறுகளினாலேயே தமிழகத்தின் விவசாயம், குடிநீர், எரிசக்தி அனைத்தும் உருவாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகளில் தொல் பழங்குடி மக்களான காணிக்காரர்கள், பறியர்க்காடர், இருளர், தொதவர், முதுவர், புலையர் போன்றவர்கள் வசிக்கின்றனர். பொதிகை மலையின் அடிவாரத்திலும் காணிக்காரர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக இலங்கையின் மலைகளும், காடுகளும் ஒரே ஹாட்ஸ்பாட்டாக அமைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த, தொன்மையான புராணங்களும் தொன்மங்களும் நிறைந்த பகுதிதான் ‘பொதிகை’. தமிழகத்தையும் கேரளத்தையும் இரண்டாகப் பிரித்து, ஓங்கி நிற்கிறது இப்பொதிகை. தமிழகத்தின் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், காரை அணைக்கட்டுகளின் மேல்பகுதியே பொதிகை மலை என்று அழைக்கப்படுகிறது. பொதிகை மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 6.125 அடி உயரத்திலுள்ளது. 8.25&9.10 வடக்கு அட்ச மற்றும் 77.89&78.25 கிழக்குத் தீர்க்க ரேகையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அதிஉன்னதச் செழுமையான பகுதிகளைக் கொண்டுள்ளது இப்‘பொதிகை’. முழு மேற்குத் தொடர்ச்சி மலையுமே ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்பட்டாலும், பொதிகை ஹாட் ஸ்பாட்டுகளின் ஹாட் ஸ்பாட்டாக அமைந்துள்ளது எப்படி என்று காணலாம்.

பொதிகையின் தன்மை

உண்மையில் பொதிகை மலையைப் பற்றி ஆய்வுகள் இல்லை. வாய்மொழிக் கதைகளும், புராணங்களும், தொன்மங்களுமே பொதிகை மலையை சிறப்பித்துள்ளன. எனினும் சங்க இலக்கியங்களில் பொதிகை மலை குறிப்பிடப்பட்டுள்ளது. மன்றப் பொதியில், தமிழ் மலை, பொதியப்பட்டு, அகத்தியர் மலை, மன பொதியம், தென்மலை, செம்மலை, குடைமலை, மலையாமலை, பொதியில் என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது பொதிகை மலையேயாகும். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலையில் பொதிகை மலை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.

“பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” (புறம் 2:8) புறநானூற்றுப் பாடல் ஒன்று இரு ஹாட் ஸ்பாட்களை அன்றே அடையாளப்படுத்தியுள்ளது. புராணங்களிலும் வெவ்வேறு இடங்களில் பொதிகை மலை வந்து போவது அதன் தொன்மையைக் காட்டுகிறது. மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ‘பொதியில்’ என்று குறிப்பிடப்படுவது பொதிகை. ‘இரகு வம்சத்தில்’ காளிதாசர் பொதியமலையை குறிப்பிடுகிறார். பொதிகையில் உற்பத்தியாகும் தாமிரபரணியையும், அது சங்கமமாகும் இடத்திலுள்ள முத்துக் குளிக்கும் துறையான கொற்கையையும் குறிப்பிடுகிறார் காளிதாசர். வியாசபாரதம் இம்மலையை தாமிரபரணி என்று குறிப்பிடுகிறது. இது தேவர்கள் தவம் செய்யும் இறையுணர்வுமிக்க இடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.பொதிகை மலையில் ‘மகேந்திரகிரி’ என்ற இடம் உள்ளது. இவ்விடமே வால்மீகி இராமாயணத்தில் வரும் மகேந்திரமலையாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதிகையின் தமிழ் முனி அவலோகிதரா?அகத்தியரா?

என்னுடைய முதல் பொதிகைப் பயணத்தில் பூங்குளத்தை விட்டு இறங்கியபோது பதினைந்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் புத்தரை தரிசிக்க வந்ததாகக் கூறினர். எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பின்பு வெகு நாட்களுக்குப் பிறகு முனைவர் ஜி.ஜான்சாமுவேலின் ‘பண்பாட்டுப் பயணங்கள்’ என்னும் நூலைப் படித்ததில் அவர் பொதிகை மலைக்கும், பௌத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவாக விளக்கியிருந்தார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தம் தமிழகத்திற்கு வந்தது. பௌத்த இலக்கியங்களில் இம்மலை ‘போதலகிரி’ என்று குறிப்பிடப்படுகிறது.

தாராசூக்கம் என்னும் நூலில் அவலோகிதர் தன் மனைவி தாராதேவியுடன் வீற்றிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமிழ் வரலாறு’ எழுதிய இரா.இராகவையங்கார் அவலோகிதரைப் போதலகிரி நிவாஸிநி என்று குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகாயான நூலான கந்தங்வவூவ்யூக சூத்திரம் தென்திசையிலுள்ள ‘பொத்தலகா’ என்ற மாலையில் ‘அவலோகிதர்’ வசித்ததாகக் குறிப்பிடுகிறது.

இந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டு பொதிகை மலையோடு அவலோகிதருக்கு இருந்த அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. காலப்போக்கில் அவலோகிதர் வீற்றிருந்த இடத்தில் அகத்தியர் இடந்தரப்பட்டார் என்றும் ஆனால் அகத்தியரை ஏற்றுக்கொள்ளாத பௌத்தர்கள், அகத்தியர் பொதிய மலைக்குச் சென்று அங்கு வீற்றிருந்த அவலோகிதரிடம் தமிழ் கற்றார் என்று கதையினை பௌத்தர்கள் ஏற்படுத்தினர் என்று ஜான் சாமுவேல் குறிப்பிடுகிறார்.

பௌத்த இலக்கண நூலான வீரசோழியத்தில்

“ஆயும் குணத்து அவயோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு

ஏயும் புவனிக்கு இயம்பின தண்டமிழ்”

என்று அகத்தியர் அவயோகிதரின் மாணவனாக வீற்றிருந்து தமிழ் கற்றார் என்பது குறிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு இலக்கியங்களின் மூலம் நாம் அறிவதென்பது ‘அகத்தியர்’ வட மாநிலத்திலிருந்து வந்தார் என்பதுதான். அவர் வந்தபோது பொதிகையில் அவலோகிதர் பொதிகை மாமுனியாக வீற்றிருந்தார் என்றும் நமக்குத் தெரிகிறது. எனினும் இவையாவும் விரிவான ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட வேண்டியவை. எனினும், பொதிகை மலையில் மாமுனி ஒருவர் தமிழை வளர்த்தார், உலகிற்கு தமிழ்க் கவிதையாக அளித்தார் என்று சொல்வது மிகையாகாது.

பொதிகையின் மகள் தாமிரபரணி

பொதிகையின் தொன்மையை தமிழர்கள் மட்டுமன்றி சீன யாத்ரிகர் யுவான் சுவாங் பொதிகையில் சந்தன மரங்களை சிலாகித்து எழுதி உள்ளார். தாலமி பொதிகைத் தென்றலை பதிவு செய்து எழுதியுள்ளார். பெரிபுளுஸ் ஆப் எரிதீரியன் சீ என்றும் கடற்பயண நூலை எழுதிய கிரேக்க மாலுமி பொதிய மலையைச் செம்ம என்று குறிப்பிடுகிறார். குமரிக்கண்ட கொள்கையின்படி எல்லாத் தொடர்ச்சிகளும் இருந்த காலத்தில் இவையனைத்துமே தாமிரபரணி என்று அழைக்கப்பட்டது. இன்று எல்லாவற்றின் நினைவாக பொதிகையிலிருந்து புறப்பட்டு புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமிரபரணி என்பதற்கு சிவப்பு சந்தன மரக்காடுகளின் ஊடே பாய்ந்து ஓடுகிறது என்றும், தாமிரத்தின் நிறம் பெற்ற இலைகளிலிருந்து வரும் ஆறு என்றும் கூறுவன. எனினும் தமிழகத்தில் மூலிகைகளின் மருத்துவக் குணம் கொண்டு எப்பொழுதும் தண்ணீரோடு, வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி ஒன்றுதான்.

பொருநை, தன் பொருநை, கண் பொருள் பொன்நிறத்துப்புனல் பெருகும் பொருநை தன் பொருத்தம், மகாநதி, தட்சிண கங்கை பொருநல் என்ற பெயர்களும் உண்டு. இவ்வாற்றின் மூலம் 2460 ஏரிகள், குளங்கள், 515 மைல் நீளமுள்ள 394 கால்வாய்கள், 3 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி (நீளம் 225 கி.மீ), 149 புனித குளியல் கட்டிடங்கள், 3 மாவட்டங்களில் நாளன்றுக்கு 60 லட்சம் மக்கள் தங்கள் தாகத்தைத் தணித்து கொள்கின்றனர். இதன் கிளை, துணை நதிகளாக காரையாறு, பேயாறு உள்ளன. சேர்வலாறு, பாம்பாறு, மணி முத்தாறு, வராக நதி, ராம நதி, கடனா நதி, கள்ளாறு, கருணையாறு, பேச்சியாறு, சிற்றாறு, குண்டாறு, ஐந்தருவியாறு, ஹனுமா நதி, கருப்பா நதி, அமுத கன்னியாறு ஆகியன தொடர்ச்சியாக அமைந்துள்ளன. எட்டு அணைக்கட்டுக்கள் இதன் வழியே அமைந்துள்ளன. ஜூன் தொடக்கத்தில் மேலைக்காற்றும், தென் மேற்குப் பருவக்காற்றும் ஆரம்பிக்கிறது. ஜூன் 15க்குப் பிறகு முதல் வெள்ளம், இருமுறை தண்ணீர் கரைபுரண்டோடி முழு வெள்ளத்துடன் செழிப்பு வண்டல் மண் சமவெளியில் பாய்ந்தோட வேண்டும். ஆனால் இன்று இதில் நிறைய மாற்றங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், அதிபயங்கரமான மணல் கொள்ளை ஆகியவற்றால் இன்று தாமிரபரணி ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என விரைகிறது.

தாமிரபரணி தண்ணீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் பிசானம், கார், அட்வான்ஸ் கார் என மூன்று போகத்திற்கு தண்ணீர் வரத்து இருந்தது என சொல்லுகிறார்கள். ஆனல் இன்று சிப்காட், ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளின் தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் நீர் பாய்ச்சப்படுகிறது. பிசானம் பருவ விவசாயத்திற்கு மட்டும் தாமிரபரணி நீர் கிடைக்கிறது. ஆலைகளுக்கே முதலிடம். விவசாயத்திற்கு அல்ல. தாமிரபரணி கடலில் கலக்கும் மன்னார் வளைகுடாவை யுனெஸ்கோ கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தாரங்கதாரா கெமிக்கல்ஸ் பல ஆண்டுகளாக பாதரசம் உள்ளிட்ட மாசுக்களை தாமிரபரணி முகத்துவாரத்தில் கலக்க விடுகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் இரு உலக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் எச்சங்கள் உள்ளன. ஒன்று ஆதிச்சநல்லூர். மற்றொன்று கொற்கை. ஆதிச்சநல்லூர் மூதமிழர்களின் வாழ்விடமாக (Proto Tamil) அறியப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்துக்கு இணையான நகரங்களும் தொன்மையும் நிறைந்த இடமாக ஆதிச்சநல்லூர் கருதப்படுகிறது. எனினும் இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது இந்திய வரலாறே மாற்றம் பெறும் வகையில் ஆதிச்சநல்லூர் செயல்படும்.

கொற்கை தமிழர்களின் மிகத்தொன்மையான துறைமுகம். இது சங்ககால துறைமுகப் பட்டினமாகவும், பாண்டியர்களின் தலைநகராக இருந்துள்ளது. சங்கு குளித்தல், சங்¢கு அறுத்தல், முத்துக் குளித்தல் ஆகிய தொழில்களால் உலகப் புகழ் பெற்றிருந்தது. கோநகர் கொற்கை முத்து சிந்துவெளி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி என்பது வெறும் நதியல்ல, அது உலகப் பாரம்பரிய சின்னம். தாமிரபரணி தண்ணீரை குடித்து, கூடு கட்டி, குஞ்சுகள் பொரித்து, உயிர் வாழ்வதற்காக உலகெங்கிலுமிருந்து பறவைகள் கூந்தன்குளத்திற்கு வருகின்றன. பத்தமடை பாய்கள், திருநெல்வேலி அல்வா போன்ற அனைத்து பண்பாட்டு அடையாளங்களாகவும் விளங்குகிறது தாமிரபரணி. அத்தகைய அற்புத நீரை உருவாக்கி வழங்குகிறது பொதிகை மலை. காடுகள் என்பது கற்பனையான நிலப்பரப்பல்ல, அது நேரடியாக ஒவ்வொரு நிமிடமும் நம்மை பாதிக்கிற பொதிகை என்றும் அற்புதம்.

இவ்வளவு தொன்மைகளையும், அதிசயங்களை யும் உடைய பொதிகை இன்று எப்படி உள்ளது. இந்த ஹாட்ஸ்பாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். மற்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதிகளைவிட இது இன்றும் அழியாமல் இருப்பதற்கு இங்கு பாதைகள் போடப்படாததுதான் காரணம். 2003ல் இக்காட்டின் வழியே பாதை போடப்பட வேண்டும் என்ற திட்டம் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஒருபோதும் வரக்கூடாது என்பதே நம் விருப்பம். மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஐந்தலைப் பொதிகையில் உள்ள அகத்தியரை வழிபட 2000க்கும் அதிகமான பக்தர்கள் சென்று வந்தனர். இப்பொழுது அதற்குத் தடை உள்ளது. ஆடி அமாவாசை சொரி முத்தைய்யனார் கோவிலுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து தங்குவது வழக்கம். இவை இரண்டுமே பெரிய சுற்றுச்சூழல் சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. வனத்துறையினரால் சிறப்பாக செயல் திட்டங்கள் தீட்டி இவற்றை நேர் செய்ய முடியும். மக்களும் இவ்வியற்கையை வழிபட்டாலே போதும். சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடாது என்ற மனோபாவத்தையும் வேண்டும்.

இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக மழை, அதாவது 4,300 மில்லி மீட்டர் மழை இங்கு பெய்து வந்தது. காலநிலை மாற்றத்தால் இது குறைந்திருக்கக்கூடும். மத்திய அரசு இதனை அகத்திய தேசியப் பூங்காவாக அறிவித்தது. வன உயிரினப் பாதுகாப்பு சட்டம், 1970 வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, 2005 பல்லுயிர் பாதுகாப்பு மசோதா, 2006 வன உரிமைச் சட்டம். இவ்வளவு சட்டங்களோடு ஹாட் ஸ்பாட் என்னும் தகுதியோடு பொதிகை இருந்து வந்தாலும், வனம் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. முன்பு இஞ்சிக்குழியில் நிறைய காணி மக்களின் குடியிருப்புகள் இருந்து வந்தன. களக்காடு&முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் பேரில் ஆதிவாசி மக்கள் காடுகளில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டனர். காடுகளையும், பழங்குடி மக்களையும் பற்றிய தவறான பார்வைதான் இது. பழங்குடி மக்கள் காடுகளைப் பாதுகாப்பார்கள். அவர்களுடைய பாரம்பரிய மருத்துவ, கானக அறிவை யாரும் நம்பத் தயாரில்லை. இன்னும் சொல்லப்போனால் பொதிகை மலையின் பாதைகளையும், தட்பவெப்ப நிலையையும் அறிந்தவர்கள் காணிக்காரர்கள் மட்டுமே. பொதிகைத் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே.

பொதிகை மலை முழுவதுமே சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்தர்கள் மூலிகைகள் குறித்த மிக ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். இன்றும் பொதிகை மலை அதனுடைய மருத்துவ மூலிகைகளுக்காகவே போற்றப்படுகிறது. பொதிகை மலைக்குள் மட்டுமே 11 விதமான மழைக்காடுகள் இருக்கின்றன. வாழை வகைகளில் மட்டுமே 26 விதங்கள் உள்ளன என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 10 வருடத்திற்கு ஒரு முறை காய்க்கும் கல்வாழை இன்றும் பொதிகையில் உள்ளது. 10 மாதங்களுக்குள் காய்க்கும் வாழைக்கு நாம் வந்துவிட்டோம். குங்கிலியம் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குழவு என்ற மரவகை இங்கு உள்ளது, இதைக் கீறிவிட்டால் ஒரு குடத்திற்கு எண்ணெய் கிடைக்கும், இதைப் பாதுகாப்பது நம் கடமை. அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் கல்தாமரை பொதிகை மலையில் அதிகமாகக் காணக் கிடைக்கிறது. பெட்ரோல் காய் எனப்படும் அகழிக்காய் இங்கு காணப்படுகிறது.

தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய சிகரமாக விளங்கும் பொதிகையில் இன்று எல்லோருடைய கவனத்தைக் கவர்ந்து காடுகளின் தலையாய அடையாளமாக விளங்கும் ‘புலி’ அதிகமாகவே உள்ளது. இந்தியாவின் காரையாறு, 17வது புலிகள் சரணாலயம் இஞ்சிக்குழி பூங்குளம், நாகப்பொதிகை, ஐந்தலைப் பொதிகை வழியாக நாம் பயணிக்கும்போது எண்ணற்ற ஆறுகள் மலையின் வழியாக ஓடுவதையும் நாம் காணலாம். பாம்பாறு, பேயாறு, கல்லாறு, சேர்வலாறு, மயிலாறு இன்னும் எத்தனையோ சிற்றாறுகள். கிழக்கே பாயும் தாமிரபரணியைப் போல கேரளாவில் மேற்கே பாயும் தாமிரபரணியும் இங்கு உண்டு. இது களியக்காவிளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவே ஓடுகிறது. 800 வகையான உயிரினங்கள் இங்கு உள்ளன. புலி, யானை, கரடி ஆகியவற்றை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் காணப்படும் 5,640 அதிகமான தாவரங்களில், 2,254 தாவரங்கள் பொதிகையில் காணப்படுகின்றன. அழிந்து வரும் தாவரங்களில் 533ல், 448 தாவரங்கள் பொதிகை மலையில் காணப்படுகின்றன. அதாவது மாபெரும் அபாயத்தில் உள்ள 230 தாவரங்களில் 58 இங்கு உள்ளன. மருத்துவக் குணம் கொண்ட 1,761 தாவரங்களில் 601 இங்கு உள்ளன. பாலூட்டிகளில் அழிந்து வரும் இனத்தில் 17 வகையும், பறவைகளில் 140, ஊர்வனவற்றில் 39ம், நீர்நிலவாழ்வில் ambibians 27ம் pisces 9 இங்கு காணப்படுகின்றன. அரிதான பறவைகளான பஞ்சவர்ணப் புறா (emerald dove) இருவாச்சி அல்லது மலைமொங்கானை (Horn bill) இங்கே பார்க்க முடியும். தமிழ் தேசிய விலங்கான வரையாடுகளும் இங்கு அதிகமாக உள்ளது. சிறுத்தை, சிறுத்தைப் பூனைகளையும் பொதிகை மலையில் நாம் பார்க்க முடியும். 

பொதிகை மலைப் பயணம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. வாகனங்கள் செல்ல முடியாத பாதை, நடப்பதற்கும் மிகக்கடினமான ஒன்று. கன்னிகட், துலுக்கமொட்டை, தவிலடிச்சாடின் பாறை, பாண்டியன் கோட்டை என்று காணிக்காரர்கள் ஒவ்வொன்றாக விவரிக்கும்போது நாம் இயற்கையின் சங்கமமாக மெல்ல மாறிக் கொண்டிருப்பதை உணர முடியும். நாம் எதைத் தேடிப் பொதிகைக்கு பயணம் செய்கிறோம்? பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்களைப் பார்க்கவா, 100 அடிகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கவா, மிருகங்களைப் பார்க்கவா, தாவரங்களைப் பார்க்கவா, அருவிகளைப் பார்க்கவா, மலையுச்சியிலிருந்து தெரியும் நமது ஊரை பார்க்கவா? காட்டின் ஒவ்வொரு வளைவிலும் நாம் நம்மையே பார்க்கிறோம். நாம் பெரிதாக மதிக்கும் வாழ்வின் தத்துவங்களும், லட்சியங்களும், பேராசைகளும், ஒவ்வொரு சிகரங்களில் ஏறும்போது தகர்த்துவிடுகின்றன. மலையுச்சியில் நாம் பறவையின் காட்சியையும், இறுதியாக பறவை மனதையும் அடைகிறோம். அதுவரை வாழ்ந்த வாழ்வில் ஒவ்வொரு இலையும், மலர்களும் நம்மைக் கேள்வி கேட்கிறன.

இயற்கையின் முன் ஏதுமற்றுப் போகிறோம். கடினமான பளுவோடு சிரமத்தோடு ஏறிச்சென்ற நம் மனது பறவையாகி மாறி, லேசாகி பறந்து, மிதந்து மீண்டும் நிலப்பரப்பிற்கு வருகிறோம். கீழேயிருந்து பொதிகையைப் பார்க்கும்போது, இலைகளாலும், மரங்களாலும் பொதிகை தன் ரகசியங்களை மூடிக்கொள்கிறது. இறுதியில் நாம் கற்றுக்கொண்டது ஏதுமில்லை, இயற்கையின் லயத்தையும், அன்பையும் தவிர.

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)