குடும்ப கௌரவம் என்ற பெயரில் இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 பேர் கொலை செய்யப்படுவதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

       பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு 900 பேரும், இதர மாநிலங்களில் 100 முதல் 300 பேரும் கொலை செய்யப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

       இதனிடையே, கௌரவக் கொலைகளைத் தடுக்க குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 1872, சிறப்புத் திருமணங்கள் சட்டம் 1954 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்ட நிபுணர்கள் குழுவின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட வரைவு சட்ட திருத்தங்கள் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையில் உள்ளன.

       தில்லி வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரிவு 300, 354-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

       பிரிவு 300-ல் குடும்ப கௌரவக் கொலையை 5-வது பகுதியாகக் சேர்க்கப்பட உள்ளது. கௌரவக் கொலைகளில் ஈடுபடும் நபர் அல்லது நபர்கள், குடும்பம், ஜாதிவாரி அமைப்பு, சமுதாய அமைப்பு, ஜாதி பஞ்சாயத்து என யாராக இருந்தாலும் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக ஜாதி, சமுதாயம் மாறி திருமணம் செய்துக் கொள்பவர்களை கொலை செய்வது, குடும்பம், சமுதாயம், பஞ்சாயத்து அமைப்புகள் ஏற்றுக் கொள்ளாத திருமணத்துக்காக ஒருவரைக் கொலை செய்வது ஆகியவையும் சட்டப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

       புதிய சட்டத் திருத்தத்தின்படி, கௌரவக் கொலைகளில் குற்றம் சாட்டப்படும் ஜாதிவாரி, சமுதாய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் கொலை வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்படுவர்.

       மேலும், சாட்சி சட்டம் பிரிவு 105-ல் புதிய பகுதி சேர்க்கப்பட உள்ளது. இதே போல், சிறப்புத் திருமண சட்டத்தில் நீதிமன்ற நோட்டீஸ்க்கு எதிரிகளுக்கு அளிக்கப்படும் 30 நாள்கள் அவகாசத்தை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

       இந்திய தண்டனைச் சட்டத்தில் கௌரவக் கொலையை சேர்ப்பதில் மத்திய அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

       பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவக் கொலைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வெவ்வேறு விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால் சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)