கைது செய்யப்படும் நபர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கைது செய்யப்பட வேண்டும். அவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள நீதித்துறை ஒருவர் முன் நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை எனில் அக்கைதி சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார் என சட்டம் கூறுகிறது.

சட்ட விரோத காவலை குடி மக்கள் எவ்வாறு அணுகுவது?

அ.        ஒரு நபர் சட்ட விரோதமாக‌ காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் உடனடியாக காவல் உயர் அதிகாரிகளுக்கு (காவல் துறைத் தலைவர், காவல் துறை ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர்) ஆகியோர்களுக்கு தந்தி அனுப்பப்படவேண்டும். விரிவான புகார் எழுதி பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

ஆ.        கு.ந.சட்டம் பிரிவு 310 இன் கீழ் எல்லைக்குட்பட்ட நீதித்துறை ஒருவர் முன் புகார் அளித்து அக்காவல் நிலையத்தை சோதனையிட வேண்டலாம். நீதித்துறை நடுவர் அக்காவல் நிலையத்தை சோதனையிட்டு யாரும் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ளார்களா என நேரில் சென்று சோதனையிடலாம்.

இ.        அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 226 இன்படி உயர் நீதிமன்றத்தையோ பிரிவு 32 இன்படி உச்ச நீதிமன்றத்தையோ எந்தக் குடிமகனும் நேரிடையாக அணுகி “ஆட்கொனர் மனு” தாக்கல் செய்யலாம். உயர்நீதி மன்றம் அடைத்து வைக்கப்பட்ட நபரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு வழங்கும்.

ஈ.        சட்ட விரோத காவலில் உள்ளவரின் உறவினரோ நண்பரோ அது பற்றி மாநில மனித உரிமை ஆணையத்திலோ, மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திலோ வழக்குத் தொடரலாம்.

உ.        சட்ட விரோத காவலில் வைக்கப்பட்ட நபர் காவலரால் தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டிருந்தாலோ பொய்வழக்கு போடப்பட்டிருந்தாலோ அதற்கான இழப்பீட்டுத் தொகை கோர அவருக்கு உரிமை உண்டு.

Pin It