பெற்றோரைக் கவனிக்காமல் தவிக்கவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.

பெற்ற மக்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்களது சாதாரண வாழ்க்கைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யவும், இவற்றுக்கான செலவுக்கு பொருளாதார உதவி கிடைக்கச் செய்யும் வகையிலும் மத்திய அரசு ‘பெற்றோர் மற்றும் முதியோர் நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009’ என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மட்டுமல்லாது தங்களுக்குப் பின்னர் சொத்துக்களை பராமரிக்கவும், அனுபவிக்கவும் நியமிக்கப்பட்ட வாரிசுகளை உடைய முதியோர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும். 60 வயதைக் கடந்த அனைத்து முதியவர்களுமே இந்த சட்டத்தின் மூலம் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். தனி நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு, மாவட்டந்தோறும் முதியவர்களுக்கு தனியாக செயல்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் ஏற்படுத்துவதையும் இந்தச் சட்டத்தில்                        வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் என்றால் பெற்ற குழந்தைகளை மட்டுமல்லாது பேரக்குழந்தைகளையும் உள்ளடக்கியது. பெற்ற குழந்தைகள், பேரக்குழந்தைகளால் கைவிடப்படும் நபர்கள் தங்களது வாழ்க்கை பொருளாதாரத் தேவைக்கான முறையீடுகளை மேற்கொள்ளலாம்.

இதற்கான மனுக்களை முதியோர் தங்களாகவோ, பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யலாம். தீர்ப்பாயங்கள் தன்னிச்சையாகவும் மனுக்களை எடுத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. பொருளுதவி கோரும் மனுக்களை 90 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணையிட வழிவகுத்துள்ளது. இடைக்கால நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்படும். குழந்தைகள், உறவினர்கள் மீது ஒரே மனுவில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து நிவாரணம் பெறலாம். தீர்ப்பாயத்தில் ஆணையிட்டு வாழ்க்கைப் பொருளுதவியோ, மனு செலவினங்களுக்கோ உரிய தொகை வழங்கவில்லையெனில் தொடர்புடையோருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மாவட்டந்தோறும் இயங்கும் இந்த வாழ்க்கைப் பொருளுதவி மன்ற தீர்ப்பாயத்தில் விசாரனை எளிமையாகவும், விரைந்தும் நடைபெறும். தற்போது, அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்களோ, மாவட்ட வாழ்க்கைப் பொருளுதவி அலுவலராகச் செயல்படுவர். சட்ட விதிமுறைகள் அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வந்து 1 மாத காலமே ஆகிறது. சட்ட விதிமுறைகள் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டு மாவட்டந்தோறும் தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் முதல் வழக்கு

மூத்த குடிமகன் பாதுகாப்புச் சட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் வழக்கு இந்த மாதத் துவக்கத்தில் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு வட்ட்த்துக்குட்பட்ட சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (77). இவருக்கு சொந்தமான 15 தறிகள் இருந்தன. தனது மகன் சுவாமிநாதனுக்கு 10 தறியை கொடுத்துவிட்டு 5 தறியை மாணிக்கம் கவனித்து வந்தார். 15 நாட்களுக்கு முன்பு தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாணிக்கத்தை சுவாமிநாதன் தாக்கினாராம். வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டாராம்.                              இது தொடர்பாக, மூத்தகுடிமகன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும் சுவாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், புகார் வந்தால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சகாயம் எச்சரித்துள்ளார்.

Pin It