பெரியகுளம் வெள்ளைராவுத்தர்-ஷேகம்மாள் தம்பதியினருக்கு 1906 ஆம் ஆண்டு எஸ்.வி.எம்.சாஹிப் பெரியகுளத்தில் பிறந்தார். 6 ஆம் வகுப்பு வரை படித்து அதன் பின் விவசாயத்திற்கு மாறினார். விவசாய பணிகளை முடித்து விட்டு மாலைவேலையில் சேர்மனாக இருந்த ராமசாமி, சி.சங்கையா போன்றோருடன் நட்பு ஏற்பட்டு அவர்களின் பேச்சால் சுதந்திரப் போராட்ட தியாகியாக தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் 20 வயதில் 1926 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து ~டாம் டாம்~ மூலம் கொட்டு அடித்து சுதந்திர தாகத்தை மக்களிடம் எடுத்துக் கூறினார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்குகொள்ள முயன்றபோது ஆங்கிலேய அரசால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

 அதன் பின்னர் காந்தி தேனி மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது பெரியகுளம் நகருக்கு வந்தபோது நகர்மன்ற தலைவர் ராமசாமி வீட்டில் காந்திஜியுடன் நெருங்கிப் பழகி அரிஜன நிதியினை கொடுத்தார்.

 1942ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு வெள்ளையனுக்கு எதிராக பெரியகுளம் தபால் தந்தி அலுவலக கம்பிகளை அடித்து நொறுக்கியும் தந்தி கம்பங்களை சேதப்படுத்தியுள்ளார். அப்போது காவலர்களால் அடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைச்சாலை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய சிறைச்சாலையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார்.

 சிறையில் இருந்தபோது முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், ஆர்.வி.சுவாமிநாதன், முன்னாள் தமிழக முதல்வர் ஏ.எஸ்.பிரகாசம் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் பேருந்து இயக்குவதற்கு அனுமதி வாங்கி பேருந்துகளை இயக்கினார். அவருடைய பெயரில் எஸ்.வி.எம்.ரோடுவேஸ் என்ற பெயரில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் இயக்கினார். அதன் பின்னர் பெரியகுளம் நகர்மன்ற தேர்தலில் போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக இருந்தார். பெரியகுளத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக பாதாளச் சாக்கடை நிறுவ வேண்டும் என்று நகராட்சியில் தீர்மானத்தை இயற்றினார்.

விவசாய கமிட்டி தலைவராக இருந்தமையால் விவசாயிகளின் தேவைகளை அறிந்து 'சோத்துப்பாறை அணை' கட்டவேண்டும் என்று தீர்மானத்தை இடம் பெறச்செய்தார். அதன் பின்னர் 1957 ஆம் ஆண்டு காந்திஜியின் சிலையை நிறுவ வேண்டும் என முயற்சி செய்து மூன்றாந்தலில் காந்தி சிலையை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இறுதியாக 1968 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவருடைய கல்லறை தென்கரை பள்ளிவாசலில் உள்ளது.

- வைகை அனிஷ் (தொலைபேசி-9715-795795)

Pin It