தன்னுடைய மூதாதையர்களைவிட இன்றைய மனிதனே வலிமையானவன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஸ்டீபன் ரோ தன்னுடைய குழுவினருடன் நடத்திய ஆராய்ச்சியில் தற்கால மண்டை ஓடுகளும், நமது மூதாதையரின் மண்டை ஓடுகளும் இயந்திரவியல் அடிப்படையில் ஆராயப்பட்டன. மிகவும் வலிமையாக கடிக்கும் ஆற்றல் பெற்றவன் இக்கால மனிதனே என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. Proceedings of the Royal Society B என்னும் இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்கால மனிதர்கள் வலிமையாக கடிக்கும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் என்றும் தாடைகளும், தாடை தசைகளும் பலவீனமடைந்துவிட்டன என்றும் இதுவரை கருதப்பட்டுவந்தது. பல்வேறு சாதனைங்களைக் கொண்டு உணவை சமைத்து உண்பதும், மென்மையான உணவுப்பொருட்களை உண்ணுவதும் காரணமாக கூறப்பட்டுவந்தது. ஆனால் இதுபோன்ற கருத்துகள் எல்லாம் ஆதாரமற்றவை என்கிறார் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ரோ. மனிதர்களின் பல்லில் இருக்கும் எனாமல் தடிமனானது என்றும் கடினமான உணவை வலிமையுடன் கடிப்பதற்குத் தேவையான உறுதியை இந்த எனாமல் பூச்சு பெற்றிருப்பதாகவும் ரோ கூறுகிறார். ரோ தன்னுடைய ஆய்வில் மனிதனின் கபாலத்துடன் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிம்பன்ஸி, கொரில்லா, ஒராங்குட்டான், கிப்பன் ஆகிய நான்கு விலங்குகளின் கபாலங்களை ஆராய்ந்தார். மேலும் புதை படிமங்களில் இருந்து பெறப்பட்ட Australopithecus africanus and Paranthropus boisei  என்னும் ஆதிமனிதர்களின் மண்டை ஓடுகளின் அமைப்பையும் ஆய்விற்கு எடுத்துக்கொண்டார். இந்த இரண்டு ஆதிமனித இனமும் கொட்டைகளைத் தின்று வாழ்ந்த மனிதர்களாக கருதப்படுபவர்கள்.

man_bite_340

ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மண்டை ஓடுகளின் டிஜிட்டல் மாதிரிகள் முப்பரிமாண பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. Computerized axial tomography தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த மண்டை ஓடுகள் ஒரு கற்பனையான கடின பொருளை பற்களின் பின்பகுதியில் கடிப்பதுபோன்ற காட்சி உருவாக்கப்பட்டது. தாடையில் கொடுக்கப்படும் விசை பரவும் இடங்கள் குறிக்கப்பட்டன. தாடைகளின் எந்திரலாபத்தை ஆராய்ந்தபோது இன்றைய மனிதனின் கடிக்கும்திறன் மனிதக்குரங்குகளைக் காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் வலிமையானது என்று கணக்கிடப்பட்டது. கடிக்கும் ஒவ்வொரு முறையும் இன்றைய மனிதன் ஒரு கொரில்லாவை விடவோ, சிம்பன்ஸியை விடவோ வலிமையாக கடிக்கிறான். கொட்டைகளைக் கொறித்துக் கொண்டிருந்த Australopithecus africanus and Paranthropus boisei முதலிய ஆதிமனிதர்களின் கடிக்கும் ஆற்றலுக்கும் இன்றைய மனிதனின் கடிக்கும் ஆற்றலுக்கும் உடல் அளவில் வேறுபாடு இருந்தாலும், கடிக்கும் ஆற்றலில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை..

நெம்புகோல் தத்துவம்தான் இதன் விளக்கம் என்கிறார் விஞ்ஞானி ரோ. தாடை எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதையும், ஆதாரதானமாக இருக்கும் மூட்டு அமையும் இடம் இவற்றைப் பொருத்தும் கடிக்கும் வலிமை கணக்கிடப்படுகிறது. இத்துடன் தசைநாண்களின் அமைவிடம், அவை அமைக்கப்பட்டிருக்கும் முறை இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் ரோ. கொட்டைகளை உடைப்பதிலும், மாமிசத்தை மெல்லுவதிலும் மனித தாடை வலிமையாக இருந்தாலும், நீண்ட நேரத்திற்கு இலைகளையும், மூங்கில் குருத்துக்களையும் மெல்லுவதற்கு ஏற்றதாக நம்முடைய தாடை இல்லையாம். இந்த வகையில் நாம் நம்முடைய மூதாதையரைவிட வலிமை குறைந்தவர்களே!

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/06/100622095116.htm

Pin It