வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும். 1871 - 1981

இலங்கையின் வன்னிப்பிரதேசம் 7859.3 சதுரக் கிலோமீற்றர் (2924 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப்பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்ற போதிலும் இக்கட்டுரை மேற்படி பிரதேசத்தையே வன்னிப் பிரதேசமெனக் கொள்கிறது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 11 வீதத்தையும் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாக வசதிக்காக பதினைந்து உதவி அரசாங்கஅதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், கிளிநொச்சியில் மூன்றுமாக அமைந்துள்ளது.

குடித்தொகை வளர்ச்சி 1871 முதல் 1981 வரை

இலங்கையின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட நாடு முழுவதற்குமான குடித்தொகைக் கணிப்பு 1871-இல் இடம்பெற்றது. இதன்பின் 1881, 1891, 1901, 1911, 1921, 1931, 1946, 1953, 1963, 1971, 1981 ஆகிய ஆண்டுகளில் குடித்தொகைக் கணிப்புகள் இடம்பெற்றன. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டிய இக்கணிப்புகள் 1941இல் தடைப்பட்டமைக்கு இரண்டாம் உலக மகாயுத்த நெருக்கடி காரணமாக அமைந்தது. எனினும் இக்கணிப்பீடு 1946இல் இடம்பெற்றது. 1951இல் இடம்பெறவேண்டிய கணிப்பு 1953இல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1963இல் அடுத்த கணிப்பு இடம்பெற்றது. இதன்பின் இலங்கை தமது வழக்கமான கணிப்பாண்டிற்கு 1971இல் திரும்பியுள்ளது. 1991, 2001 இல் இடம்பெற வேண்டிய குடித்தொகைக் கணிப்பு வன்னிப் பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெறவில்லை. 2011 ஆம் ஆண்டு தேசியக் குடித்தொகைக் கணிப்பீட்டுடன் கணிப்பிடுவதற்கான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1981 முதல் மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் உள்ளுர் குடிநகர்வுகள், வெளியூர் குடிநகர்வுகள், வெளிநாட்டு குடிப்பெயர்வுகள் என இடம்பெற்று வந்துள்ளன. இவை எவையும் கால ரீதியான முறையான கணிப்பீடுகளுக்குள் வரவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வன்னியின் இறுதி யுத்தத்தின் போது வன்னியின் மொத்தக் குடித்தொகையும் அகதிகளாக வெளியேறி வவுனியா முகாம்களில் முடக்கப்பட்ட நிலை தோன்றிற்று. உலக வரலாற்றில் குறுங்காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து முழுமையாக குடித்தொகை வெளியேற்றப்பட்ட நிகழ்வு இங்கேயே இடம்பெற்றுள்ளதெனலாம்.  அம் மக்கள் இப்பொழுது தான் மீளவும் குடியேறி வருகின்றனர். மீள் குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. 2011 பெறப்படவுள்ள உத்தியோகபூர்வ குடித்தொகை கணிப்பீட்டின் ஊடாகவே இவைபற்றி முறையாக ஆராயமுடியும்.  அதுவரை 1981 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடுகளையே உத்தியோக ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டுமாகையால் அவ் ஆண்டுவரையான தரவுகள் ஊடாகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

வன்னிப் பிரதேசத்திற்குரிய குடித்தொகை விபரங்களை 1871 தொடக்கம் 1981 வரை இலங்கைக் குடித்தொகைக் கணிப்பு அறிக்கைகளிலிருந்து பெற முடிகின்றது. தரவுகளின்படி வன்னிப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1891 இ 46,774 ஆக இருந்து 1971இல் 2,24,735 ஆக அதிகரித்துள்ளதைக் காணலாம். இது 300 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் இலங்கையின் மொத்தக்குடித்தொகை 323 வீதமாக வளர்ச்சி கண்டது. வன்னிப் பிரதேசத்தை பாகுபடுத்தி நோக்கும்போது 1891இல் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 6916ஆக இருந்த குடித்தொகை 1981 இல் 77200 ஆக அதிகரித்துள்ளது. இது 648 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் அதிகரிப்பு 570 வீதமாகவும் மன்னார் மாவட்டத்தின் அதிகரிப்பு 203 வீதமாகவும் அமைந்துள்ளது.

குடித்தொகை மாற்றங்கள்

வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகை சில காலங்களில் குறைவாகவும் இன்றும் சில காலங்களில் அதிகமாகவும் வளர்ச்சி கண்டது. பொதுவாக 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவே இருந்தது. வன்னிப்பிரதேசத்தின் வருடச்சராசரி வளர்ச்சி வீதம் 1931 ஆம் ஆண்டுவரை 0.5 வீதத்திற்கு மேலாக அதிகரிக்கவில்லை. 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் சில குடிமதிப்பீட்டாண்டிடைக் காலங்களில் வன்னிப் பிரதேசம் முழுவதும் குடித்தொகை இழப்பு ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இவ் இழப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. 1881 - 1901 இடையிலும் 1911 – 1921 இடையிலும் குடித்தொகை இழப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற குடித்தொகை இழப்புகளுக்கும், குடித்தொகையின் மெதுவான அதிகரிப்பிற்கும் மலேரியா, கலரா போன்ற தொற்று நோய்கள் இப்பகுதிகளில் அக்காலங்களில் பரவியமையே காரணமாகும். அக்காலங்களில் மருத்துவ, விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றக்குறைவினால் சிசு மரண வீதம், பிரசவத்தாய்மார் மரணவீதம் என்பன அதிகமாக காணப்பட்டன. மேலும் அன்றைய மக்கள், கல்வியறிவுக் குறைவின் காரணமாகச் சுகாதாரமற்ற வாழ்வு வாழ்ந்தனர். ஆரோக்கிய வாழ்வை வழங்கக்கூடிய சுகாதார நிறுவனங்களும் குறைவாகவே காணப்பட்டன. இக்காரணங்களால் 1946 இன் முன்பு இறப்புவீதம் அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக 1906-1923 வரை தேசிய இறப்புவீதம் 1000 பேருக்கு 30 – 38 என்றவாறு உயர்ந்து காணப்பட்டது. 1946இல் இது 20 ஆகவும் 1947 இல்14 ஆகவும் வீழ்ச்சிகண்டது. 1946 இல் சிசு மரண வீதம் 1000 பிறப்புக்கு 141 ஆக இருந்தது. 1947 இல் 82 ஆக வீழ்ந்தது. பிரசவத்தாய்மார் மரணம் 1946 இல் 1000 பேருக்கு 16 ஆக இருந்தது. 1950 இல் 6 ஆக வீழ்ச்சி கண்டது. எனவே 1946 ஆம் ஆண்டு குடித்தொகை வளர்ச்சிப் போக்கில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1946 – 1953 குடிமதிப்பிட்டாண்டிடைக் காலத்திலே 48.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது 7.0 வருடச் சராசரி வளர்ச்சி வீதமாகும். இவ்இடைக்காலத்திலே தேசிய வருடச்சராசரிக் குடித்தொகை வளர்ச்சி வீதம் 3.1 ஆக மாத்திரமே காணப்பட்டது. 1946 – 1953 இடைப்பட்ட கால குடித்தொகை வளர்ச்சியானது வன்னிப் பிரதேசம் முழுவதும் சடுதியானதோர் அதிகரிப்பபைக் காட்டுகின்றது. யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 78.3 வீத அதிகரிப்பும், வவுனியா மாவட்டத்தில் 51 வீதமான வளர்ச்சியும் மன்னார் மாவட்டத்தில் 39 வீத வளர்ச்சியும் 1946 – 1953 குடிமதிப்பீட்டாண்டைக் காலத்தே ஏற்பட்டது. 1931 1946 குடிமதிப்பீட்டாண்டைக் கால வளர்ச்சி ஓரளவு அதிகமாக காணப்படுவதற்கு பத்தாண்டுக்கொருமுறை எடுக்கப்படவேண்டிய குடிமதிப்பு இக்காலத்தே பதினைந்து வருட இடைவெளியில் எடுக்கப்பட்டதே காரணமாகும்.

1946 இன் பின்னர் ஏற்பட்ட சடுதியான குடியதிகரிப்புக்கு பிறப்பு வீதம் நிலையாக இருக்க இறப்புவீதத்திலேற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இவ் இறப்பு வீத வீழ்ச்சிக்கு 1946 இல் மலேரியா நோய்த்தடைக்காக நாடு முழுமைக்கும் டி.டி.ரி மருந்து தெளிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே உடனடிக் காரணமாகும். இதனைத் தவிர நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்ட துரித அபிவிருத்தியும் காரணமாக அமைந்தது. இக்காலத்திலே கிராமங்கள் தோறும் சுகாhதாரவசதிகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுப்புறச் சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச பால், மதிய உணவு விநயோகம் என்பன குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க துணைபுரிந்தன.

பொதுவாக இலங்கை மக்களது ஆரோக்கியம் பேணப்பட்டதற்கு உணவு மானிய முறை இக்காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணமாகும். இம் முறையினால் மக்கள் அரிசியையும் ஏனைய உணவுப்பொருட்களையும் மலிவாகப் பெறமுடிந்தது. இதனால் மக்களது உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கவே ஆயுட்காலம் அதிகரித்ததோடு ஆரோக்கியமான வாழ்வால் இறப்பு வீதத்திலும் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டது. இக் காலத்திலே இலவசக்கல்விமுறை அறிமுகத்தால் கல்வியறிவு வளர்ந்தமையும், தொற்றுநோய்த்தடை மருந்துகள் பழக்கத்திற்கு வந்தமையும் இறப்புவீத வீழ்ச்சிக்குரிய மேலும் சில காரணங்களாகும். வன்னிப் பிரதேசம் குடித்தொகை 1946 இன் பின்னர் வேகமாக அதிகரித்தமைக்கு இயற்கை அதிகரிப்பு மாத்திரம் காரணமன்று, பெருமளவு இடம்பெற்ற குடிநகர்வும் முக்கிய காரணமாக அமைகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1950 ஆம் 1960 ஆம் ஆண்டுகளில் வன்னிப் பிரதேசத்தில் பழைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்து திட்டமிட்ட குடியேற்றங்கள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணக் குடாநாடு அதனைச் சேர்ந்த தீவுகள் என்பவற்றிலிருந்தும் ஏனைய அண்மைய பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேற்றத்திட்டங்களில் குடியேறினர். இதனாலும் குடித்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது. 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே வன்னிப்பிரதேசக் குடித்தொகையின் வளர்ச்சி 72.4 வீதமாக அதிகரித்திமைக்கு இதுவே முக்கிய காரணமாகும். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகளவு குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டமையால் இப்பகுதிகளின் குடிவளர்ச்சி 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே முறையே 117.1 வீதமாகவும் 95.4 வீதமாகவும் காணப்படுகின்றது. 1963-1971 இடைப்பட்ட காலத்திலே குடியதிகரிப்பில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. குடும்பக்கட்டுப்பாட்டுத்திட்டத்தால் இயற்கை அதிகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இக்காலத்திலே அதிகளவு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படாமையும் இதற்கான காரணங்களெனலாம். எனினும் இவ் இடைக்காலத்திலே தேசிய குடித்தொகையின் வருடச் சராசரி வளர்ச்சி வீதம் 2.2 ஆகக் காணப்பட, வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகையின் வருடச்சராசரி வளர்ச்சி 4.7 ஆகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குடியடர்த்தியும் பரம்பலும்

வன்னிப் பிரதேசத்தின் 1971 ஆம் ஆண்டுக்குரிய சராசரிக்குடியடர்த்தி சதுரமைலுக்கு 77 பேராகும். இலங்கையின் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியான 508 பேருடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் குடியடர்த்தியான 1513 பேருடனும் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். வன்னிப்பிரதேசத்தின் பெருமளவு பரப்பில் காடுகள் பரந்திருப்பதே இதற்குரிய முக்கிய காரணமாகும்.

குடித்தொகைத் தரவுகளின்படி 1891 முதல் 1946 வரையான ஜம்பத்தைந்தாண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 6 பேரே அதிகரித்திருந்தனர். 1946 முதல் 1971 வரையான இருபத்தைந்து ஆண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 55 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இயற்கையான குடியதிகரிப்பும், குடிநகர்வால் ஏற்பட்ட குடி அதிகரிப்பும் இவ் இடைக்காலத்தில் அதிகரித்தமையே காரணமாகும். 1946 இன் பின் வன்னிப் பிரதேசக்குடியடர்த்தி வேகமாக அதிகரித்துவரும் போக்கை காட்டுகின்றது. எனினும் 1971 இல் வன்னிப்பிரதேசத்தின் குடியடர்த்தி யாழ்ப்பாணக் குடாநாட்டுக் குடியடர்த்தியை விட இருபதுமடங்கு குறைவாகவும் உள்ளது. இது 1963 இல் முறையே இருபத்தைந்து மடங்கு குறைவாகவும் எட்டு மடங்கு குறைவாகவும் காணப்பட்டது.

வன்னிப்பிரதேசத்தின் புவியியல் ரீதியான குடிப்பரம்பல், பொதுவாக தொட்டம் தொட்டமாகக் குடிச்செறிவு அமைந்திருப்பதையே காட்டுகின்றது. இவை பெரும்பாலும் குளங்களை அண்டிய குடியிருப்புகளாகவே அமைந்துள்ளன. மன்னார் தீவு, கட்டுக்கரை குளத்தையண்டிய பகுதிகள், வவுனியா நகரம், கிளிநொச்சி குடியேற்றத்திட்டப்பகுதிகள், முள்ளியவளைப்பகுதி, முல்லைத்தீவு நகரம், என்பனவே குறிப்பிடத்தக்ககுடிச்செறிவு கொண்ட பகுதிகளாகும். குடிச்செறிவு குறைந்த பகுதிகள் குளங்களற்ற பகுதிகளாகவும், காடுகள் அடர்ந்த பகுதிகளாகவும், பெருமளவு பயன்படுத்தப்படாத நிலத்தையடக்கிய பகுதிகளாகவும் காணப்படுகின்றன.    

1981ஆம் ஆண்டு குடித்தொகைப் பண்புகள்

1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டின்படி இங்கு ஆய்வுக்குட்பட்ட வன்னிப் பிரதேசக் குடித்தொகை 2,78,800 ஆகும். இது இலங்கையின் மொத்தக் குடித்தொகையின் 1.8 வீதமாகவும், வடமாகாணக்குடித்தொகையின் 25.7 வீதமாகவும் உள்ளது வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பாணக்குடாநாடு 12.8 வீதத்தை உள்ளடக்கியுள்ள போதிலும் இங்கேயே அதிகளவு குடித்தொகை காணப்படுகின்றது. இதற்கு மாறாக வன்னிப் பிரதேசம் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தை கொண்டிருந்த போதிலும் இங்கு குறைவான குடித்தொகையே உள்ளது. 1981 இல் வடமாகாணக்குடித்தொகையில் 74 வீதத்தினர் குடாநாட்டிலும் 26 வீதத்தினர் வன்னிப்பிரதேசத்திலும் காணப்பட்டனர். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பீட்டின் போது இத்தொகை முறையே 77 வீதமாகவும் 23 வீதமாகவும் காணப்பட்டது. 1901 முதல் 1953 வரை இடம்பெற்ற குடித்தொகை மதிப்புகளின் தரவுகளின்படிசராசரியாக 86 வீதத்தினர் குடாநாட்டிலும் 14 வீதத்தினர் வன்னிப் பிரதேசத்திலும் காணப்பட்டனர்.

கிராம, நகரக் குடித்தொகை

வன்னிப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக்குரிய நகரக்குடித்தொகை 39427 ஆகவும், கிராமக் குடித்தொகை (பெருந்தோட்டம் உட்பட) 185308 ஆகவும் உள்ளது. இது முறையே 17.5 விதமும் 82.5 வீதமுமாகும். இலங்கையின் நகரக்குடித்தொகை வீதமான 22.4 உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது. இலங்கையில் மாநகரசபை, பட்டிகசபை, நகரசபை, என நகரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந் நிர்வாகப் பிரிவின் எவ்லைக்குள் வாழ்பவர்கள் நகரவாசிகளெனக் கணிக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் 89 கிராமசேவகர் பிரிவுக்குட்படும் கிராமங்களும் நான்கு நகரங்களும் உள்ளன. இவற்றுள் வவுனியா நகரசபை அந்தஸ்தையும் ஏனைய மூன்றும் பட்டின சபை அந்தஸ்தையும் பெற்றுள்ளன. நான்கு நகரங்களுள் மன்னார், முல்லைத்தீவு என்பன கரையோரமாகவும் வவுனியா, கிளிநொச்சி என்பன நடுவேயும் அமைந்துள்ளன. வன்னிப் பிரதேசத்தின் மொத்த நகரக் குடித்தொகையில் 52 வீதத்தை வவுனியா மாவட்டம் அடக்கியுள்ளது. வவுனியா பட்டினம் தனியாக 40 வீத நகரக்குடித்தொகையில் மன்னார் மாவட்டம் 28 வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டம் வன்னிப்பகுதி 20 வீதத்தையும் அடக்கியுள்ளது.

குடித்தொகை கூட்டு (1981)

குடித்தொகைக் கட்டினுள் அடங்கும் வயதமைப்பு, ஆண் பெண் விகிதம், இனப்பிரிவு, மதப்பிரிவு, வேலைப்பகுப்பு என்பன பற்றிய ஆய்வுகள் சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

வயதமைப்பு

வன்னிப் பிரதேசக் குடித்தொகையில் வயதமைப்பை நோக்கும் போது இளம்வயதுப் பிரிவினர் அதிகமாகக் காணப்படுவதை முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். 1981 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின்படி இங்கு 42.5 வீதத்தினர் 14 வயதிற்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 52.7 வீதத்தினர் தொழில் புரியக்கூடிய 15 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டோராவர். மகப்பேற்று வளம்மிக்க 15 – 44 வயதுப் பிரிவினர் 43 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டோர் 4.8 வீதத்தினராக உள்ளனர். 15 வயதிற்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சார்ந்திருப்போர் தொகையில் அடங்குவர். தொழில்புரியும் ஒவ்வொரு 100 பேரில் இங்கு 90 பேர் தங்கி வாழ்கின்றார்கள். நாடு முழுவதற்குமான தரவின்படி 100 பேரில் தங்கிவாழ்வோர் 84 பேராகும். தங்கிவாழும் இப்பிரிவினர் பெருமளவு செலவினங்களை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். இலங்கையிலும் ஏனைய வளர்முக நாடுகளிலும் குடித்தொகையில் 40-50 வீதத்தினர் 15 வயதிற்குக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ் வயதுப் பிரிவினர் 20 33 வீதத்தினராகவே உள்ளனர்.

இலங்கையிலன் குடித்தொகையில் இளம்வயதுப் பிரிவினர் அதிகம் காணப்படுவதினால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றிற்காக அரசுக்குப் பெருமளவு செலவினம் ஏற்படுகின்றது. இது இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவமானதொரு காரணமாகவும் அமைகிறது. 1981 ஆம் ஆண்டு இலங்கையின் குடித்தொகையில் 39.3 வீதத்தினர் 15 வயதிற்குட்பட்டவர்களாக காணப்பட்டனர். பொதுவாக வன்னிப் பிரதேசக் குடித்தொகையிலும் இவ் வீதம் தேசிய வீதத்திலும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.

ஆண், பெண் விகிதம்

குடித்தொகையில் ஆண்,பெண் பாகுபாடு பற்றிய ஆய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலுக்கு இவ்விபரங்கள் அவசியம் வேண்டப்படுகின்றன. ஆண், பெண் வயதமைப்பும், விகிதாசாரமும் குடித்தொகை வளர்ச்சிக்கான காரணத்தைத் தேடுவோர்க்கு முக்கியமானதாகும்.

வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில்(1981) 1,23,594 ஆண்களும் 1,01,141 பெண்களும் காணப்படுகின்றனர். இதிலிருந்து 22,453 ஆண்கள் பெண்களைவிடக் கூடதலாக இங்கு உள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 122 ஆண்கள் என்ற விகிதத்தில் பால் விகிதம் இங்கு அமைந்துள்ளது. இலங்கைக்குரிய அவ் விகிதம் 100 பெண்களுக்கு 106 ஆண்கள் என்றவாறு அமைகின்றது. எனவே தேசிய விகிதத்திலும் இங்கு அதிகமாக காணப்படுகின்றது.

குடித்தொகைத் தரவின்படி யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலேயே ஆண், பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை வவுனியா மாவட்டம் வகிக்கின்றது. இப்பகுதிகளில் அண்மைக்காலங்களில் அதிகளவு விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டமையால் அதிகளவு ஆண்கள் குடிநகர்ந்து வந்தமையே இதற்கு முக்கிய காரணமெனலாம். காடுகளால் சூழப்பட்ட குடியேற்றத்திட்டப்பகுதிகளில் பாதுகாப்பு உறுதியிருப்பதாலும், கல்வி வசதி, சுகாதாரவசதி, போக்குவரத்துவசதி என்பன குறைவாக இருப்பதாலும் குடும்பத்தலைவன் தனது மனைவி பிள்ளைகளை பிறந்த ஊரில் விட்டு வருவதையே விரும்புகின்றான். இதுவே குடியேற்றத்திட்டப் பகுதிகளில் ஆண்கள் குடித்தெகை அதிகமாக இருப்பதற்குரிய முக்கிய காரணமாகும்.

குடியேற்றத்திட்டத்திற்கு மாத்திரமன்றி வர்த்தகம், போக்குவரத்துப் போன்ற தொழிற்றுறைக்காகவும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் ஆண்கள் குடிநகர்வு இங்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதனைச் சேர்ந்த தீவுப்பகுதிகளிலுமிருந்தே அதிகளவு குடிநகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பு அறிக்கை தரும் பிறந்த இடம் பற்றிய தரவுகளிலிருந்து வவுனியா மாவட்ட குடித்தொகையில் 58 வீதத்தினரும் மன்னார் மாவட்டக் குடித்தெகையில் 71 வீதத்தினரும் அம் மாவட்டங்களுக்கு வெளியே பிறந்தவர்களாகவே உள்ளனர். எனவே வன்னிப் பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியில் குடிநகர்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடித்தொகை ஆண் சார்பாக இருப்பதற்கு குடிநகர்வு மாத்திரம் காரணமன்று. பிறப்பில் ஆண்களின் பிறப்பு அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதும் மேலதிக காரணங்களெனத் தேசிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனம்

இலங்கை பல இன மக்கள் வாழும் நாடென்பதை வன்னிப்பிரதேசத்திலும் பிரதிபலிக்கின்றது. எனினும் இங்கு சில இனத்தவர்களே செறிந்து வாழ்கின்றனர். இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் வித்தியாசமான வரலாற்று, சமூக மதப் பின்னனிகள் உண்டு. 1911 ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டிலிருந்தே தற்பொழுது குறிக்கப்படும் இனப்பிரிவுகளின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன. மொழி, மத புவியியற் பின்னணிகள் இனப்பாகுபாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றது.

வன்னிப் பிரதேசம் அதிகளவில் தமிழர் வாழும் பகுதியாகும். தமிழர்களுக்கு வன்னி நிலத்துடன் ஒன்றிய நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளதால் இப்பிரதேசம் தமிழரது பாரம்பரியத் தாயகத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்படுபகின்றது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 62.2 வீதமானவர்கள் இலங்கைத்தமிழர்களாவர். இவ் வீதம் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் 79.8 ஆகவும் வவுனியா மாவட்டத்தில் 51 ஆகவும் உள்ளது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் இந்தியத் தமிழர் 16.1 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். மலையகப்பெருந்தோட்டங்களுக்குக் கூலித்தொழிலாளர்களாகப் பிரித்தானியரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இவர்களாகும்.

இன்று பெருந்தோட்டத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சனை இனப்பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வன்னிப்பிரதேசத்திற்குக் குடிநகர்ந்து வந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவர்கள் வாழ்கின்றனர். இண்மைக்காலங்களில் இவ்வாறு குடிநகர்ந்து வருவோர் தொகை அதிகரித்துள்ளது. இலங்கை, இந்தியச் சோனகர் வன்னிப் பிரதேச மொத்தக்குடித்தொகையில் 12.5 வீதத்தினராவர். இவர்கள் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரிலும், அண்மைய பல கிராமங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மன்னார் மாவட்ட மொத்தக் குடித்தொகையில் இவர்களின் பங்கு 26.8 வீதமாகும். மன்னார் வர்த்தகத்துறைமுகமாக விளங்கிய காரணத்தால் இவர்களது குடியிருப்புகள் இங்கு அதிகம் ஏற்பட்டன.

வன்னிப் பிரதேச இனம், வன்னிப்பிரதேசக் குடித்தொகையில் தமிழ் பேசும் மக்கள் 90.9 வீதத்தினராவர். இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இலங்கைச்சோனகர், இந்தியச்சோனகர், ஆகியோர் தமிழ் மொழி பேசும் மக்களாகும்.வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவைத்தவிர ஏனைய பகுதிகளில் தமிழ்மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் சிங்கள மொழி பேசும் மக்கள் மொத்தக் குடித்தொகையில் 9 வீதத்தினராகும். வவுனியா மாவட்டத்தில் மொத்தக்குடித்தொகையில் இவர்களது பங்கு 16.3 வீதமாகவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் குடித்தொகையில் 4.6 வீதத்தினர் சிங்கள மக்களாவர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மடுறோட் ஆகிய பகுதிகளில் இவர்களது பரம்பல் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் மாமடுவ, மடுக்கந்தை. ஈரப்பெரியகுளம், உலுக்குளம், ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளாகும். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டை ஒப்பிட்டு நோக்கும் போது வன்னிப் பிரதேசத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் மொத்தக் குடித்தொகையில் சிங்களமக்களின் வீதம் அதிகரித்துள்ளதைக் காணலாம்.

மதம்

வன்னிப் பிரதேசம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பழரதேசமாக இருப்பதால் தமிழரது முக்கிய மதமான இந்துமதத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இந்துக்கள் 58.2 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் இந்துக்கள் 87.4 வீதத்தினராகவும், வவுனியா மாவட்டத்தில் 65.4 வீதத்தினராகவும் உள்ளனர். தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளுள் மன்னார் மாவட்டத்திலேயே இந்துமதத்தினர் குறைவாகக் (30 வீதம்) காணப்படுகின்றனர். மன்னார் சர்வதேச வர்த்தகத்துறையாக விளங்கியதும், போர்த்துக்கேயரது கெல்வாக்கின்கீழ் இது நீண்ட காலமாக இருந்து வந்ததும் இங்கு முஸ்லீம், றோமன்கத்தோலிக்க மதங்கள் அதிகளவு பரவ ஏதுவாயிற்று.

மன்னார் மாவட்டத்தின் மொத்தக்குடித்தொகையில் 37.8 வீதத்தினர் றோமன்கத்தோலிக்கர்களாகக் காணப்படுவதற்கு போர்த்துக்கேயரது செல்வாக்கே காரணமாகும். இவர்கள் மன்னார் தீவுப்பகுதி, முசலிப்பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் மொத்தக் குடித்தொகையில்  றோமன்கத்தோலிக்கரும், ஏனைய கிறீஸ்தவர்களும் 20.6 வீதத்தினராக உள்ளனர். வவுனியாவின் மொத்தக் குடித்தொகையில் 12 வீதத்தினராகவுள்ள றோமன்கத்தோலிக்கர்கள் மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாக மீன்பிடிக் குடியிருப்புகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர்.

இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இந்திய, இலங்கைச்சோனகர்களும் மலாயர்களும் முஸ்லீம்களென அழைக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இவர்கள் 13.2 வீதத்தினராவர். முஸ்லீம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ஒன்றாக மன்னார் மாவட்டமும் கொள்ளப்படுகின்றது. ஒரு மதப்பிரிவினர் தனிப்பெரும்பான்மையினராக இல்லாதமை முக்கி பண்பாகும்.

சிங்களம் பேசும் மக்களிற் பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் 7.9 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் வவுனியா மாவட்டமே அதிகளவு (14.8 வீதம்)பௌத்தர்களைக் கொண்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவே பௌத்த மதத்தினரை அதிகளவிற் கொண்ட பகுதியாகும். வன்னிப்பிரதேசத்தின் நகரப்பகுதிகளில் இவர்கள் ஓரளவு செறிந்துள்ளனர். ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே பரந்து காணப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பு

வன்னிப் பிரதேச மொத்தக் குடித்தொகையில் 32.1 விதத்தினரே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தொழில்வாய்ப்பு பெற்றவர்களில் ஆண்களின் பங்கு 93.3 வீதமாகவும் பெண்களின் பங்கு 6.7 வீதமாகவும் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புப் பெற்றவர்களில் 65 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டவர்களாகவும் 35 வீதத்தினர் விவசாயமல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் முக்கிய தொழிற்றுறை விவசாயமாக இருந்த பொழுதிலும் மொத்தக்குடித்தொகையில் 20.2 வீதத்தினரே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் ஆண்களின் பங்கு 94 வீதமாக உள்ளது. ஆண் உழைப்பாளர்களில் தங்கிவாழ்வோர் தொகை அதிகமாக இருப்பதை இவை உணர்த்துகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆகியோர் உழைப்பவர்களில் தங்கிவாழ்வோராகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் 45 வீதத்தினராகக் காணப்படும் பெண்கள் வீட்டு வேலைகளுடனும் பகுதி நேர வேலைகளுடனும் திருப்தியடைவதால் குறைந்தளவே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மொத்தப் பெண் குடித்தொகையில் 4.6 வீதத்தினரே தொழில்வாய்ப்பை பெற்றவர்களாவர். இதில் 57.3 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருக்க 42.7 வீதமானோர் விவசாயமல்லாத தொழில்களில் அமர்ந்துள்ளனர்.

 

முடிவுரை

வன்னிப் பிரதேசக் குடித்தொகைக் கணிப்புகள் உத்தியோக பூர்வமாக 1981 இன் பின்னர் இடம்பெறவில்லை. வன்னியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய யுத்த சூழ்நிலைகளே இதற்கான காரணமாகும். இலங்கை அரசு இப் பிரதேசத்தில் தனது நிர்வாகக் கட்டுப்பாடுகளை இழந்திருந்தது. மக்களிற்கான வாழ்வாதார விடயங்களைக் கவனிப்பதற்கான சில கணிப்பீடுகள் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக உணவு விநியோகம், மருத்துவ சேவை போன்றவற்றை மேற்கொள்ள சில கணிப்பீடுகளை செய்து வந்துள்ளது. தேசிய மட்டத்தில் 1991, 2001 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவில்லை. 1981 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்புகளில் இருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உத்தேச மதிப்பீடுகள் பெறப்பட்டு நிர்வாகத் தேவைக்காககப் பயன்படுத்தப்பட்டு வந்தன.

வன்னி யுத்தத்தின் இறுதிக் காலகட்டமான 2009 மே மாதம் வன்னி மக்கள் யாவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ஒதுக்கப்பட்டனர்.  2009 மே 18 இன் பின் இவர்கள் அனைவரும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் இடம்பெயர்ந்த அகதிகளாக தங்கவைக்கப்பட்டனர்.  அகதி முகாம்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி அங்கு 3,17,000 மக்கள் பதிவு செய்யப்பட்டனர்.

வன்னியின் உக்கிர யுத்தம் நடந்த காலமாகிய 2009 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு 4,20,000 மக்கள் காணப்பட்டதாக கிளிநொச்சி முல்லைத்தீவு அரசஅதிபர்களும், ஜ.நா நிறுவனத்தின் அறிக்கைகளும் குறிப்பிட்டதோடு இக் கணிப்பீடுகளையே மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுக்கும் பயன்படுத்தினர்.

வன்னி யுத்தம் முடிவடைந்து இரு வருடங்களாகியும் மீள் குடியேற்றம் முறையாக இடம்பெறவில்லை. பெருந்தொகையான மக்களது வீடுகள், பயன்தரு மரங்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் மீள் குடியேற்றம் மெதுவாகவே இடம்பெற்று வருகின்றது. மீள் குடியேற்றம் முறையாக இடம்பெற்று முற்றுப் பெற்ற பின்னரே 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய குடித்தொகைக் கணிப்பீடுகள் இடம்பெற வேண்டும். இக் கணிப்பீடுகளில் இருந்தே வன்னிக் குடித்தொகையில் 1981 ஆம் ஆண்டின் பின் 30 வருட காலம் நிகழ்ந்த பாரிய மாற்றங்கள், குறிப்பாக குடிமனை அழிவுகள், குடிநகர்வுகள் போன்ற அம்சங்கள் தெரியவரும்.

 

Pin It