பெரம்பலூர் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை தனது தேவைக்காக உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு நிலக்கரி கொண்டு ரூ. 210 கோடி மதிப்பில், 2x25 50 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் அமைப்பதற்க்கான கருத்துக் கேட்பு கூட்டம், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 20-05-2015 புதன்கிழமை அன்று பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் மதுசூதன ரெட்டி அவர்கள் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. ஆலையில் தினமும் 1100 டன் நிலக்கரியை பயன்படுத்தி 50 மெகாவாட் மின்உற்பத்தியை செய்வது, அதை எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை தனது தேவைக்காக மட்டுமே பயன்படுத்துவது என்பதற்கான மக்களின் கருத்தை அறியும் கருத்துக் கேட்பு கூட்டமாகும்.

perambalur pollution board

முறையாக கூட்டப்படாத கருத்துக்கேட்பு கூட்டம்

* இந்த அனல்மின் நிலையம் அமைப்பது பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி ஆலையை சுற்றி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில் உள்ள நகரம்/ கிராமத்தில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு தெரிவிக்கப்படாததால், யாருக்கும் இந்த கூட்டம் பற்றியே தெரியவில்லை.

* இக் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி 17-04-2015 அன்று தினத்தந்தி, ஆங்கில இந்து பத்திரிக்கையில் செய்தியாக இல்லாமல், டெண்டர் விளம்பரம் போல் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது யாரின் பார்வைக்கும் செல்லவில்லை என்பதுதான் உண்மை நிலை. மேலும் அனல்மின் நிலையம் அமைப்பதற்க்கான சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்க நகல் ஊராட்சி/ பேரூராட்சி/ நகராட்சி மன்ற அலுவலகத்திற்க்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்க்கு எங்குமே மாசுக்கட்டுப்பாட்டு துறையால் அனுப்பி வைக்கப்படவில்லை.

* அரசு அதிகாரிகளால் பத்திரிக்கையாளர்களுக்கு கூட கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பது பற்றி யாருக்கும் முன்கூட்டியே தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.

· மேலும் கூட்டத்திற்க்கு வரும் முன்பே நாங்கள் விசாரித்ததில் ஆலைக்கு அருகில் உள்ள எந்த ஊராட்சி தலைவருக்கும் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் கூட்டம் பற்றிய தகவலும், சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்க அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அறிந்து கொண்டோம்.

· கருத்துக்கேட்பு கூட்டத்தை முறையாக கூட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்

· இதை நாங்கள் அறிந்து கொண்டவுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் செய்தியை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடக்கும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டத்தில் (18.05.2015) அன்று, குறைதீர் மனுவாக கருத்துக் கேட்பு கூட்ட செய்தியே மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் ; எனவே கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்து அரசு விதிப்படி முறையாக அறிவித்து பின்பு அதைக் கூட்ட வேண்டும் எனவும்; இப்பகுதியில் அனல்மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுவாக கொடுப்பது எனவும் முடிவு செய்தோம். இப்பணியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் தோழர்.ரமேஷ் கருப்பையா அவர்கள் ஒருங்கிணைப்பது என முடிவு செய்து, அவர் அனைவருக்கும் தகவல் கொடுத்தும், நேரில் சந்தித்தும் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

· 18.05.2015 திங்கட்கிழமை அன்று பல்வேறு சுற்றுசூழல் ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் , எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதி மக்கள், மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள் என சுமார் 80 க்கும் மேற்பட்டோர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனுவாக கொடுத்தனர்.

· இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இப்படி மனு கொடுத்ததால்தான், பல்வேறு பத்திரிக்கை/காட்சி ஊடக செய்தியாளர்களுக்கு இப்படி ஒரு கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் செய்தியே தெரிய வந்தது.

· இவர்கள் கொடுத்த மனுவால், அதிகாரிகளுக்கு “ திருடனுக்கு தேள் கொட்டியது போல்” ஆகியது. கருத்துக் கேட்பு கூட்டத்தை யாருக்கும் தெரியாமல் நடத்த முயற்சித்தது அம்பலமாகியது. குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தரேசு அகமது விடுப்பில் இருந்ததால் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டு, “எங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என நீங்கள் பாடம் நடத்த தேவையில்லை” என மனு கொடுத்த மக்களிடம் திமிராக, பொறுப்பற்று பேசினார்.

· ஆனால் சமூக ஆர்வலர்களின்/பொதுமக்களின் மனு கொடுத்தல் நிகழ்வு பல்வேறு நெருக்கடிகளை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியது. மனு கொடுத்த நாளிலேயே அவசர, அவசரமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சுற்றுசூழல் ஆர்வலர்களும், பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டார். பாதிக்கப்படும் பகுதிக்குள் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பத்திரிகையில் வெளிவந்த கருத்துக் கேட்புக் கூட்ட விளம்பரத்தை நகல் எடுத்து ஒட்ட வைத்தனர். கருத்துக் கேட்பு கூட்ட நாளுக்கு முந்தைய நாள் இது பற்றி ஒரு துண்டறிக்கை போட்டு ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒட்ட வைத்தனர்.

· அனைத்து நாளிதழ்களும்/காட்சி ஊடகத்தினரும் சமூக ஆர்வலர்களின்/பொதுமக்களின் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிகழ்வுகளை விரிவான செய்தியாக வெளியிட்டனர்.

· தோழர். ரமேஷ் கருப்பையா உட்பட சுற்றுசூழல் ஆர்வலர்களின்/ சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியில் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினரையும், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க்க அழைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும், பெரம்பலூர் நகர பல்வேறு சங்க (ரோட்டரி/அரிமா போன்ற) பொறுப்பாளர்களுக்கும் அனல்மின் நிலைய பாதிப்பை கூறி கூட்டத்தில் பங்கேற்க அழைத்தனர்.

· 2x25 50 மெகாவாட் திறனுள்ள அனல் மின்நிலையம் அமைப்பதற்க்கான 207 பக்கம் கொண்ட சுற்றுசூழல் அறிக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்படவில்லை. எனவே இதை பெறுவதற்க்கு மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகத்திற்க்கு பலமுறை நேரில் சென்றும் கொடுக்காமல் அலைக்கழித்தனர். விடாப்பிடியாக நின்றுதான் அதைப் பெற முடிந்தது.

கருத்துக்கேட்பு கூட்ட வளாகத்தில் :

· பெரம்பலூர் மாவட்டம் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை அமைந்துள்ள நாரணமங்கல ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. காலை 10.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்ட அரங்கத்திற்கு காலை 9.20 மணிக்கு நானும் தோழர்.ரமேஷ் கருபையாவும் நுழைந்தோம். அதற்குள் அங்கு 1996-இல் ஈழ தமிழினத்திற்க்காக தன்னையே தற்கொடையாக்கி இங்கு தமிழினஎழுச்சியை தூண்டிய முதல் தமிழகப்போராளி பெரம்பலூர் அப்துல்ரவூப் அவர்களின் தந்தையார் மரியாதைக்குரிய தோழர்.அசன் முகமது அவர்கள் முன்னரே வந்து இம்மண் காக்க காத்திருந்தார். அதன் பின் நரிக்குறவர் சமூக தலைவர்கள் தோழர்.சுப்பிரமணி, தோழர்.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள் ஆண்களும், பெண்களுமாக சுமார் 250 பேர் வருகை தந்தனர்.

· பியூசிஎல்(PUCL) அமைப்பின் தமிழக பொருளாளர் தோழர்.சரவணன், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி தோழர். செல்வமணி, இந்திய பொதுவுடமைக் கட்சி மாவட்ட செயலாளர் தோழர். ஞானசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் தோழர்.துரைராஜ் , நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பு தோழர்.தமிழகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் தோழர். செல்லதுரை, இந்திய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி பொறுப்பாளர் ரகுபதி, தமிழ் மாநில காங்கிரசு மாவட்ட தலைவர் பெரம்பலூர் ராஜா, பாஜக மாவட்ட தலைவர் திரு.சந்திரசேகர், கொளத்தூர் ஆவாரை நண்பர்கள் இயக்கம் இளைஞர்கள் உட்பட, மாவட்டம் முழுக்க இருந்து பல்வேறு முற்போக்கு அமைப்பு தோழர்களும், இயற்கை ஆர்வலர்களும்,தகவல் தெரிந்த ஆலையால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராம விவசாயிகளும், பகுதி மக்களும் என சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்க்கு வந்திருந்தனர்.

· உண்மையில் அனல்மின் நிலைய திட்டம் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசும், ஆலை நிர்வாகமும் யாருக்கும் தெரியாமல் நடத்தவே விரும்பினார்கள் என்பது அவர்களது நடவடிக்கையில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஆனால், நம்மால் பலருக்கும் முகநூல் உட்பட பல்வேறு வகையில் கூட்ட செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டதால், ஊடகத்தினர், சுற்றுசூழல் & விவசாய செயல்பாட்டாளர்கள், பல்வேறு முற்போக்கு அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பலரும் வந்து விட்டதால் அரசுக்கும், ஆலை நிர்வாகத்திற்க்கும் கூட்ட தொடக்கத்திலேயே கடும் நெருக்கடி ஏற்பட்டது.

· பொதுவாகவே தமிழகம் முழுக்க பெரும்பாலான கருத்துக் கேட்பு கூட்டங்கள் இப்படித்தான் அதிகாரிகளால் ஆலைக்கு சாதகமாக நடத்துவது என்பது நடைமுறையாக இருக்கிறது.இதன் மூலம் பல அதிகாரிகள் மிகப்பெரும் பணப்பலன் உட்பட பல்வேறு பலன்கள் ஆலை நிர்வாகம் மூலம் அடைக்கின்றனர் என்பதும் அப்பட்டமான உண்மையாகும்.

· மேலும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கும் செய்தி அறிந்து, கூட்ட அரங்குக்கு முன்புறம் நாங்கள் வரும் முன்பே காவல்துறையினரும், உளவுத்துறையினரும் குவித்து வைக்கப்பட்டனர். அவர்கள் நடுவே நீந்தியே ஒவ்வொருவரும் கூட்ட அரங்கிற்கு வர வேண்டியதாகியது. கிராமப் பகுதி மக்கள் இவர்களை மிரட்சியுடன் பார்த்தவாறே கூட்ட அரங்கிற்கு வந்து சேர்ந்தனர்.

· கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வது என முடிவு எடுத்த பின் இணையத்தில் அனல்மின் நிலையத் திட்டம் பற்றி அதன் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு சுருக்க அறிக்கை அச்சு எடுத்து அதில் உள்ள பல்வேறு தவறான விபரங்கள் பற்றி சேகரித்துக் கொண்டேன். கூட்ட அரங்கிற்க்கு நேரில் வந்தவுடன் அங்கு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு விரிவான அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பெற்று அதில் உள்ள தவறுகளையும், ஆலை அமைவதினால் ஏற்படவிருக்கும் பல்வேறு பாதிப்புகள் பற்றியும் தொகுத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

· எங்களுக்கு ஏற்கனவே 2x800 மெகாவாட் திறனுள்ள இராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையம் பற்றி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதன் பாதிப்பை தொகுத்து பேசி அத்திட்டதிற்க்கு நெருக்கடியை உருவாக்கியது; எங்கள் பகுதியில் பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை நிர்வாகம் தனது தேவைக்காக 40 மெகாவாட் மின்உற்பத்தியை 55 மெகாவாட் விரிவாக்க அனல்மின் நிலையம் அமைக்க நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்காக அப்பகுதியில் நேரில் சென்று மக்களிடம் பாதிப்பு விபரங்கள் சேகரித்து கூட்டத்தில் ஆதாரங்களுடன் பேசி முறியடித்தது; நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை சரசுவதி காகிதஆலை அனல்மின் நிலையம் அமைக்க நடத்த இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை எங்களின் பரப்புரையால் மக்களிடம் வலுவான எதிர்ப்பு இருக்கிறது என்பதற்காகவே, கூட்டதிற்க்கு முந்தைய கடைசி நாளில் அனல் மின்நிலையம் அமைக்க கொடுத்த விண்ணப்பத்தையே ஆலை நிர்வாகம் திரும்ப பெற்றது; நாமக்கல் மாவட்ட மாவுரெட்டிபட்டியில் ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்க முயற்சித்ததை அப்பகுதி மக்களுடன் சேர்ந்து முறியடித்தது; மேட்டூர் பகுதியில் அனல்மின் நிலைய பாதிப்புக்களை பலநாட்கள் உடன் இருந்து அனுபவித்தது; செய்யூர் அனல்மின் நிலையத்தை எதிர்த்து சுற்றுசூழல் செயல்பாட்டாளர் தோழர்.நித்யானந்த் ஜெயராம் போன்றோரின் தொடர்ந்த செயல்பாடுகள், அது குறித்த அவரிடம் பெற்ற விபரங்கள்; என அனல்மின் நிலையத்தில் நடக்கும் பெரும்பாலான சட்டமீறல் செயல்பாடுகள் குறித்து தொகுத்த விபரங்கள் எங்களிடம் இருந்தது.

தொடங்கியது கருத்துக்கேட்பு கூட்டம்:

· அரசின் அறிவிப்பின்படி காலை 10.00 மணிக்கு அனைவரும் வந்து காத்துக் கொண்டு இருக்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேசு அகமது அவர்கள் கூட்டத்திற்க்கு வரவில்லை. அவர் ஏன் கருத்துக் கேட்புக் கூட்டதிற்க்கு வராமல் இருந்தார் எனத் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருடன் காலை 10.50க்கு கூட்ட மேடைக்கு வந்து அமர்ந்தார்.

· முதலில் கூட்டத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் காலத்தாழ்வாக வந்தது பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் எதுவும் கூறவில்லை. மக்கள் தங்கள் பணிகளை எல்லாம் விட்டுவிட்டு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தாலும், அது பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கினாலும், அதிகாரிகளின் அடிமைகள்தான் மக்கள் எனக் கருதும் மனநிலையே பெரும்பாலான அதிகாரிகளின் நிலையாக இருந்து வருகிறது. இதே போல்தான் நாமக்கல் மாவட்ட சேசசாயி காகித ஆலை விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் நடந்தது.

· கூட்டத்தில் முதலில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மேடையில் ஏறிநின்றவுடன் எத்தனை பேருக்கு இந்த கூட்டம் எதற்க்காக நடக்கிறது எனத் தெரியும்? கையை தூக்குங்கள் என்றவுடன், கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளைத் தூக்காமல் நீங்கள் எங்களுக்கு சொல்லி நாங்கள் வரவில்லை என சத்தம் போட்டனர். உடனே DRO “நீங்கள் விரும்பாவிட்டால் இத்திட்டம் இங்கு வராது” என சொல்லி மக்களுக்கு சார்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டு அமர்ந்து விட்டார்.

· மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அனைவரையும் வரவேற்று அனல்மின் நிலைய திட்டம் பற்றி எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேசுவார் என அறிவித்தார். ஆலையை சார்ந்தோர் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுருக்கத்தை பவர் பாயிண்டு முறையில் காட்டி பேசி அமர்ந்தனர். உடனே பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் வரிசையாக மக்கள் தனது கருத்துக்களை பதிவு செய்யக் கூறினார்.

உடனே நான்(முகிலன்) எழுந்து மேடைக்கு சென்று முதலில் பேசத் தொடங்கினேன்.

· முதலாவதாக, "சட்ட விரோதமான முறையில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்துகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிப்பட்டி எந்த ஊராட்சியிலும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுருக்கம் இன்று வரை அனுப்பப்பபட்டு அது அங்கு வைக்கப்படவில்லை. திட்டம் நிறைவேற்றும் பகுதியில், பாதிப்புக்கு உள்ளாகின்ற ஊராட்சி/பேரூராட்சி/நகராட்சி மன்ற தலைவர்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் பற்றிய தகவல் அரசால் அனுப்பப்படவே இல்லை. இதனால் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி ஆலையை சுற்றி பாதிக்கப்பட இருக்கும் 10 கி.மீ தூரத்தில் உள்ள 2 லட்சம் மக்களில் யாருக்கும் தெரியவில்லை.

நேற்று மாவட்ட ஆட்சியரின் பெயரில் வெளியிட்ட அறிக்கையில் கூட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அறிக்கை வைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவே இல்லை. இது மாசுகட்டுப்பாட்டு விதியை அப்பட்டமாக மீறுவதாகும். கருத்துக் கேட்புக் கூட்டத்திற்க்கு 30 நாட்களுக்கு முன்பே இது விதிப்படி அனைத்து அலுவலகத்திற்க்கும் அனுப்பப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்க வேண்டும். மக்கள் திட்ட அறிக்கை சுருக்கம் பற்றி அறிய பெரம்பலூர் வர முடியுமா? இவ்வாறு முறைப்படி, விதிப்படி எதுவும் செய்யாமல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது என்பது மிகவும் தவறானது ஆகும். இது பொதுமக்களும் , சமூக முன்னணியினரும் ஆலையின் செயல்பாட்டை தெரிந்து அதன் மீது கருத்து தெரிவிக்கும் உரிமையை மக்களிடம் பறிப்பது.

இது போல ஏற்கனவே முறையாக அறிவிப்பு செய்யாமல் கூட்டப்பட்ட திருவாரூர் 20 பெட்ரோலிய எரிகிணறு தோண்டுவதற்கான ஓ.என்.ஜி.சி. கருத்துக் கேட்புக் கூட்டம் (27-06-2014) மக்களின் எதிர்ப்பால் ஆட்சியர் மதிவாணன் அவர்களால் ரத்து செய்யப்பட்டது. உங்களுக்கு முன்மாதிரி இருப்பதால் முறையின்றி கூட்டப்பட்ட இக்கூட்டத்தையும் ரத்து செய்து, விதிப்படி மீண்டும் முறையாக அறிவித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறினேன். உடனே மக்கள் “ கூட்டத்தை நடத்தாதே, ரத்துசெய்! என அனைவரும் முழக்கமிட்டனர். சிறிது நேரம் அங்கு மக்கள் மிகுந்த உணர்வுமயப்பட்டு சத்தம் போட்டனர். உடனே DRO எழுந்து “நான்தான் ஏற்கனவே நீங்கள் விரும்பாவிட்டால் இத்திட்டம் இங்கு வராது என சொல்லியுள்ளேன். அமைதியாக உங்கள் கருத்தை கூறுங்கள்” என கூட்டத்தை பல்வேறு வகையில் கூறி அமைதிப்படுத்தினார்.

இந்த கருத்துக் கேட்பு கூட்டமே அரசு விதிப்படி தெரிவிக்காமல், பல்வேறு சமூக ஆர்வலர்களின் முயற்சியால் வெளியே கொண்டு வரப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏன் அதிகாரிகளின் செயல்பாடு மக்களுக்காக இல்லாமல் ஆலை நிர்வாகத்திற்க்கு சாதகமாக இப்படி தவறாக உள்ளது. தொடக்கமே இவ்வாறு இருந்தால் நாளை செல்ல செல்ல எவ்வாறு இருக்கும். சுற்றுசூழல் தாக்க அறிக்கை பற்றி எதுவும் தெரியாமல், நாளை ஆலை இயங்க தொடங்கினால் என்னஎன்ன பாதிப்புகள் இங்கே வரும், ஆலை நிர்வாகம் இதை எவ்வாறு சரி செய்யும், உண்மையில் இவ்வாறு செய்ய சாத்தியமா? என எதுவும் தெரியாமல்தான் மக்கள் கூடியுள்ளனர். எங்களைப் போன்றவர்களின் முயற்சியால் இங்கே கூடியுள்ள மக்கள் பொதுவாக ஆலை வேண்டாம் அல்லது வேண்டும் எனக் கூறுவார்களே ஒழிய பிரச்சினைகளை உணர்ந்து எதுவும் கூறப் போவதில்லை. மாவட்ட நிர்வாகம் அதற்கான வாய்ப்பை மக்களுக்கு உருவாக்கி தரவில்லை. இது ஒரு மாபெரும் அநீதி?. மக்களின் ரத்தத்தை வேர்வையாகி சிந்தி கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பின்றி இருப்பது எவ்வாறு சரியாகும், நியாயமாகும்?

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக சகாயம் அவர்கள் இருந்த போது, நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 2010களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பது பற்றி, ஆலையால் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் பிளக்ஸ் தட்டி, சுவரொட்டி, துண்டறிக்கை ஆகியவை மூலம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது பற்றி அரசு பரப்புரை செய்வது போல் பரப்புரை செய்யப்பட்டது.இராமநாதபுரம் அனல்மின் நிலையக் கூட்டம் அவ்வாறு நடந்தது. இங்கு கூட அரசு ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்திருக்க முடியும். பல மாவட்டத்தில் இப்படி கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்ட முன்மாதிரி இருக்கிறது.

கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கான செலவுக்கு, ஆலை நிர்வாகம் அரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுகிறது. அப்படியிருக்க அதிகாரிகள் ஏன் மக்களுக்கு கூட்டம் பற்றி தெரியப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை? எடுப்பதில்லை? வெறும் 2 பத்திரிக்கையில் ஒரு மாதம் முன்பு டெண்டர் நோட்டீஸ் போல் விளம்பரமாக கொடுக்கப்பட்டதை மட்டும் கூறி அதிகாரிகள் நியாப்படுத்துவது சரியா?. அன்றாடம் செய்திதாள் படிக்கிற, இம்மாவட்ட அதிகாரிகள் எத்தனை பேர் அந்த விளம்பரத்தை பார்த்து இருக்க முடியும்? வரும் காலத்தில் அதிகாரிகள் மக்களுக்கு விரோதமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

10 பக்கம் மட்டும் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு சுருக்க அறிக்கை மட்டுமே தமிழில் & ஆங்கிலத்தில் உள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 207 பக்கம் உள்ளது. இது முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இது எத்தனை பேருக்கு புரியும். இங்கு வந்துள்ளவர்கள் பெரும்பாலான பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். அதிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. ஆலை நிர்வாகம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த பணம் கொடுக்கிறது. ஆலை நிர்வாகம் இந்த அறிக்கையை தமிழிலும் கொடுக்க வேண்டும் என ஏன் மாசு கட்டுபாடு வாரியம் கேட்பதில்லை. தமிழக அரசு மட்டும் அல்ல, இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து இந்திய அரசு நிறுவனங்களும் தமிழில்தான் அனைத்தையும் கையாள வேண்டும் என இந்திய அரசு ஆணை(1986) பிறப்பித்து உள்ளது. அரசு ஊழியர்களான நீங்களே இதை பின்பற்றாமல் இருப்பது எப்படி சரி?.உண்மை மக்களுக்கு போய் விடக் கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக உள்ளீர்கள் என நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்.

· இரண்டாவதாக, “திட்டதிற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் ஆலை நிர்வாகம் எந்த ஒரு நிலையிலாவது ஒரு பகுதி தகவல்கள் பொய்யானதாகவோ, தவறான புள்ளிவிபரங்களோகொடுத்து இருந்தால் ஆலையின் திட்டம் நிராகரிக்கப்படும்” என மாசுகட்டுப்பாடு வாரியம் தனது விதியில் தெளிவாக கூறி உள்ளது.

ஆலையின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எண்ணற்ற தவறான தகவல்களும், புள்ளிவிபரங்களும் உள்ளது.

ஆலை வளாகத்தின் சுற்றுசூழல் நிலவரம் என்பதில் காகித ஆலையின் 10 கி.மீ தூர சுற்றளவு பகுதியில், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சமய முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம்; மலைகள் ஆகிய எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் தொல்பொருள் முக்கியத்துவமும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சாத்தனூர் கல்மரம் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. சமய முக்கியத்துவம் வாய்ந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் 2 கி.மீ தூரத்திலும் உள்ளது. ஆலையை சுற்றி 5 கி.மீ தூரத்தில் ரிசர்வ் ஃபாரஸ்ட் உள்ளது.

மேலும் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அபாயகரமான சிகப்பு வகை ஆலை அமைக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டு ஆலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது.

மேலும் ஆலையை சுற்றியுள்ள பல ஊர்கள் காட்டப்படவே இல்லை. குறிப்பாக ஆலையை ஒட்டி உள்ள மலையப்ப நகர், நாரணமங்கலம் உட்பட பல ஊர்கள் இருப்பதும் அங்கு மக்கள் வசிப்பதும் காட்டப்படவில்லை. நாளை இந்த ஊர்கள் இல்லாமல் அழிந்து போய் விடும் என்பதற்க்காகவே குறிப்பிடப்படவில்லையா? ஆலையை சுற்றி எண்ணற்ற கல்லூரிகள் உள்ளன. அதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர், அது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

ஆலை நிர்வாகம் இந்த அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்களை கொடுத்தும், தகவல்களை மறைத்தும் உள்ளது. எனவே அமைவிடம் பற்றி கொடுத்துள்ள தவறான தகவல்கள் அடிப்படையிலேயே ஆலையின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.

· மூன்றாவதாக, எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையின் அனல் மின் நிலையம் தனது நீர் தேவையான நாளொன்றுக்கு கிட்டத்தட்ட சுமார் 4,00,000 லிட்டர் (நான்கு லட்சம் லிட்டர்- 383 KLD) நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெற்றுக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.

எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை ஏற்கனவே தனது தேவைக்கு தினமும் பத்து லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க காவிரி - கொள்ளிடம் ஆற்றில் போர் போட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் எடுத்து வருகிறது.

perambalur pollution board 1

ஏற்கனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கர்நாடகத்தால் மதிக்கப்படாமல்தமிழகம் பல்வேறு நெருக்கடியில் உள்ளது. தற்போது கூட காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் என இரு இடங்களின் குறுக்கே கர்நாடகம் சட்ட விரோதமாக அணை கட்ட முயற்சிக்கிறது. இந்த அனல்மின் நிலைய திட்டத்துக்கான நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரியில் இருந்து பெற்றுதான் பயன்படுத்த வேண்டியது இருக்கும். காவிரியில் விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. காவிரியில் தண்ணீர் இல்லையென்றால் ஆலைக்கு அருகிலேயே ஆலை தரப்பினர் ராட்சச போர் போட்டு எடுப்பார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தில் எங்கும் எடுப்பார்கள். யார் இதை கண்காணிக்க முடியும். பெரம்பலூரில் ஏற்கனவே வாரம் ஒருமுறை குடிநீர் கிடைப்பது இரு வாரத்திற்கு இருமுறையாக மாறும். ஒரு நாள் கூட அனல் மின்நிலையம் தண்ணீர் இன்றி இயங்காமல் இருக்காது. எப்படியானாலும் இந்த ஆலைக்கு அரசும், அதிகாரிகளும் ஆலைக்கு தண்ணீர் கொடுப்பதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இப்பகுதியில் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும். ஆலையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த திட்டத்தை இங்கு தொடங்க அரசு அனுமதிக்கக் கூடாது.

· நான்காவதாக அனல்மின் நிலையம் தினமும் 2,80,000 கிலோ லிட்டர் ஆலைக்கழிவு நீரையும், பாய்லர் வீழ்படிவு 1,20,000 கிலோ லிட்டரும் வெளியிடும். ஆலையின் கழிவு நீரை ஆலை நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பது பற்றி எதுவும் சுற்றுசூழல் தாக்க அறிக்கையில் கூறப்படவில்லை. எனவே தினமும் லட்சக்கணக்கில் செலவு செய்து சுத்திகரிக்க வேண்டிய, இக் கழிவு நீரை எல்லா ஆலைகளையும் போல நிலத்திற்கு அடியிலேயோ, அல்லது ஆலையை சுற்றியுள்ள பகுதியில் ஏதாவது பொய்யை சொல்லி வெளியேற்றும்.

ஆலையின் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம்,ஆர்.ஓ. பிளாண்ட் மூலமும் சுத்தப்படுத்தி ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் மட்டுமே செய்வதாக சொல்லியிருப்பதால், ஆலை தனது கழிவு நீரை மீண்டும் ஆலையின் மறுபயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவு நீரை இயந்திர ஆவியாக்கல், சூரிய ஆவியாக்கல் மூலம் ஆவியாக்கும் என குறிப்பிட்டு இருப்பதால் தினமும் ஆவியாகும் அளவுக்கு மட்டுமே மீண்டும் ஆலை தண்ணீர் பெற அனுமதிக்க வேண்டும்.

கடந்த ஜனவரி’18-ஆம் தேதி தமிழக சுற்றுசூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் ஈரோட்டில் பேசும் போது காவேரி ஆற்றில் இருந்து இனிமேல் பெருந்துறை சிப்காட்டிற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம். சிப்காட்டில் ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் அளவிற்கு தண்ணீர் சுத்திகரிப்பு நடப்பதால் இனிமேல் காவேரி ஆற்றில் ஆவியாகும் 10 சதவிகித தண்ணீர் மட்டுமே எடுக்கப்படும். சிப்காட் ஆலைகளுக்கு தனது கழிவுநீரை மட்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். எனவே சொந்தமாக சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ள அனல்மின் நிலையமும், ஆவியாகும் நீரை மட்டும்தான் தினமும் பெற அரசு அனுமதிக்க வேண்டும்.

· அய்ந்தாவதாக ஆலையால் 50 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது. இது அப்பட்டமான மோசடியாகும். அனல்மின் நிலையத்தில் வேலை செய்ய தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை. இப்பகுதி மக்களுக்கு உண்மையில் கழிப்பறை சுத்தம் செய்யும் ஒப்பந்தக்காரரிடம் மட்டுமே வேலை கிடைக்கும். ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் இப்பகுதியை சேர்ந்த தகுதி உள்ள, டயர் தொழிற்சாலைக்காக தனது நிலத்தை ஆயிரக்கணக்கான ஏக்கரை இழந்த குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு கூட ஆலையில் நிரந்தர வேலை கொடுக்கப்படவில்லை. பெரும்பாலும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே இப்பகுதியை சேர்ந்த சிலர் உள்ளனர்.

· ஆறாவதாக, அனல்மின் நிலைய பகுதியை சுற்றி மிகவும் குறைவான அடர்த்தியிலே மக்கள் வசித்து வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது மிகவும் தவறான தகவலாகும்.

· ஏழாவதாக, அனல்மின் நிலையம் தினமும் 1100 டன் நிலக்கரியை எரித்து 88 டன் சாம்பலை மட்டுமே வெளியிடும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது 8% மட்டுமேயாகும்.

உண்மையில் வெளிநாட்டு நிலக்கரியாக இருந்தால் 15%மும், உள்நாட்டு நிலக்கரியாக இருந்தால் 20% - 25%மும் சாம்பலை வெளிபடுத்தும் என்பதுதான் உண்மை நிலை. EIA அறிக்கையில் உள்ளது 8 % சாம்பல் என்பது மிகவும் தவறான தகவலாகும்.

மேலும் தினமும் 1100 டன் நிலக்கரியை எரித்து, அனல்மின் நிலையத்தால் வெளியேற்றும் 88 டன் சாம்பலை (சுமார் 20 லாரி லோடு), திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஓலப்பாலயம் கிராமத்தில் உள்ள பச்சாம்பாளையத்தில்(S.F.No.1468/1) உள்ள ஸ்ரீ ஆண்டாள் அழகர் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஊரில் இப்படி ஒரு தொழிற்சாலையே இல்லை என்பதை அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். எதற்க்காக ஆலை நிர்வாகம் இல்லாத ஒரு தொழிற்சாலையின் பெயரை குறிப்பிட்டு உள்ளது. அனல் மின்நிலைய சாம்பலை இப்பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில், வாய்ப்பிருந்தால் ஏதாவது ஒரு பயன்பாடற்ற பாறைக்குழியில், பயன்பாடற்ற கிணற்றில் அல்லது ஏதாவது ஒரு காலி இடத்தில் கொட்டுவார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை. பல இடங்களில் இப்படி நடந்து உள்ளது. எனவே தொடக்கத்திலேயே இதுபோல் தவறான தகவலைக் கொடுத்து ஏமாற்றும் இந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கவே கூடாது.

· எட்டாவதாக, ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையால், ஆலையை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. விளையும் பொருள்களின் மீது கரி படிந்து வருகிறது.கையில்செடியில் உள்ள தக்காளி உட்பட எதை தொட்டாலும் கை கரியாகி விடுகிறது. ஆலையை சுற்றியுள்ள பகுதியில் 45 அடி ஆழத்தில் தண்ணீர் தற்போது கிடைக்கிறது. கிணற்று பாசனத்தை வைத்தே நெல் உட்பட பல பல பயிர்கள் பயிரிடப்படுகிறது. அனல்மின் நிலையம் இயங்கத் தொடங்கினால் தினமும் வெளிப்படும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீர், அபாயகரமான காற்று, நிலக்கரி எரிப்பதால் வெளியாகும் அபாயகரமான ரசாயனங்கள், ஆலையின் தேவைக்கு ரகசியமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் இவைகள் அனைத்தும் விவசாயத்தை அழிக்கும். பெரம்பலூர் விவசாய மாவட்டம், இந்த நிலை அழிக்கபட்டு பாலைவனமாகும். இங்கு வரக் கூடிய தொழில்கள் விவசாயப் பொருட்களை வைத்து உற்பத்தி செய்யப்படும் தொழிலாக இருந்தால் பரவாயில்லை. நீரையும், காற்றையும், மண்ணையும் விசமாக்கும் எந்த தொழிலும் இங்கு வர வேண்டாம். வளர்ச்சி என்று சொல்லி எங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்கள்.·

· ஒன்பதாவதாக, ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை பாதுகாப்பு சுவரை சுற்றியுள்ள பகுதியில்தான் மலையப்ப நகர் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் விளிம்பு நிலையில் உள்ள மக்களான நரிக்குறவர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மக்கள் நேயம் மிக்க அதிகாரியால் இங்கு குடிஅமர்த்தப்பட்டவர்கள். இங்கு தவிர இவர்கள் எங்கும் சென்று குடியிருக்க முடியாது. யாரும் இவர்களை அருகே வசிக்கவே விட மாட்டார்கள். இதுதான் சமூக எதார்த்தம்.

பழங்குடி மக்களான இவர்கள் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான விசத்தன்மை உள்ள ஆலை அமைப்பது என்பதும், ஆபத்தான கழிவுகளை வெளிவிடுவது என்பதும் 1989 SC/ST தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் வன்கொடுமைதடுப்பு சட்டப்படி குற்றமாகும். இப்படியான சட்டத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமையை அதிகாரிகளான நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். வனவிலங்குகளுக்கான சரணாலயம் அமைக்க என பல்வேறு முயற்சி செய்யும் நீங்கள், மனிதர்களான இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க உதவ வேண்டும்.

· பத்தாவதாக, அனல்மின் நிலையம் இங்கு அமையுமானால் காற்றின் மூலம் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை நாம் அவசியம் பார்க்க வேண்டும். இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் நிலக்கரியை எரிப்பதால் குறிப்பாக கடும் விசத்தன்மையுள்ள மெர்குரி(பாதரசம்). ஆர்செனிக், காடியம், குரோமியம், ஆண்டிமணி, ஸ்ரோண்டியம், யுரோனியம், ஈயம் என பல்வேறு உலோகங்களான ரசாயனப் பொருட்கள் காற்றின் மூலம் பரவும். இதனால் காற்று, நிலம், நீர், ஆகியவை விசாமாவதுடன் பயிர்கள், நுண்ணுயிர்கள், ஆடு, மாடு, பறவைகள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் கடும் நோய் ஏற்படும்.

இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் நிலக்கரியில் இருந்து வெளியேறும் பல்வேறு நச்சுப்பொருள்களால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், எலும்பு நோய், மூளைக் கோளாறு, ரத்த சோகை, இதய ரத்தக் குழாய் நோய், மூக்கில் புண், சுவாசக் கோளாறு(ஆஸ்துமா), தோல்நோய், பிறவிக் கோளாறு&ஊனம், சிறுநீரகம் பாதிப்பு , ஈரல் பாதிப்பு , கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, குழந்தைகளின் நரம்பு-மூளையை தாக்கி குழந்தைகளின் அறிவு, கவனம் நடவடிக்கை கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரம்பலூரில் ஈரோடு, திருப்பூர் போல் திரும்பும் பக்கம் எல்லாம் மருத்துவமனையை பார்க்க நேரிடும். மகப்பேறு இன்மையால் மலடு நீக்கும் மருத்துவமனை பெருகும். சந்ததி இல்லாமல் பல குடும்பம் அழியும்.

இதில் குறிப்பாக, 40 டன் அனல் மின் நிலையத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமார் நாற்பது கிலோ கிராம் பாதரசம் (மெர்குரி) ஆவியாக வெளியேறும். பாதரசம் அடர்த்தி அதிகம் உள்ள தனிமம். இது உயரமான புகைபோக்கியில் இருந்து வெளியாகும் போது, அது கனமான உலோகமாக இருப்பதால் காற்றில் அதிக காலம் நீடிக்காமல் அதன் எடையின் காரணமாக நிலத்தில் அப்படியே படியும். 1கிராம் பாதரசம் சுமார் 25 ஏக்கர்பரப்பளவு நிலத்தை கடுமையாக பாதிக்கும். அப்படியே நிலத்தில் படியும் பாதரசம் மழை நீரின் மூலம் நீர் நிலைகளுக்கு சென்று கலந்து விடும். அதை உட்கொள்ளும் அனைவருக்கும் (கோழி உட்பட பறவைகள், நுண்ணுயிர்கள், ஆடு, மாடு உட்பட விலங்குகள், மீன், மனிதன் உட்பட) மெர்குரி உடனிலில் படியும். உயிரினங்களுக்கு உள்ளே செல்லும் மெர்குரி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பல சிறிய உயிரினங்களை பெரிய உயிரினம் உட்கொள்ளும். அவ்வாறு உட்கொள்ளும் போது பெரிய உயிரினத்தின் உடலுக்குள் படியும் மெர்குரியின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். இது தொடந்தும் கொண்டே செல்லும் போது உணவுசங்கிலி தொடர்பின் உச்சத்தில் இருக்கும் உயிரினத்தின் உடலில், உயிரையே பறிக்கும் அளவு மெர்குரி படிந்து விடும். மேலும் இதனால் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் சிசுவிற்க்கும் அதிக அபாயத்தை விளைவிக்கும்.

· பதினொன்றாவதாக இங்குள்ள உயரமான புகைபோக்கியில் இருந்து வெளியாகும் புகையில் சல்பர் டையாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் டைஆக்சைடு ஆகியவை இருக்கும். நிலக்கரியில் உள்ள கந்தகம் எரிக்கப்பட்டு சல்பர் டையாக்ஸைடு வாயுவாக வெளியேறுவதால் இப்பகுதியில் முழுக்க அமில மழை பெய்ய சாத்தியம் அதிகம் உள்ளது. சல்பர் டையாக்ஸைடு ஒரு பயங்கர நச்சு ரசாயனம். நைட்ரஸ் ஆக்ஸைடு தாவரங்களையும் , அதன் இலைகளையும் கடுமையாக பாதித்து விளைச்சலை கடுமையாக பாதிக்கும். தினமும் இந்த ஆலையில் இருந்து மட்டும் நாளொன்றுக்கு 2.60டன்கள் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேறும். மேலும் நைட்ரஸ் ஆக்ஸைடு , சல்பர் டையாக்ஸைடு மற்றும் ஓசோனுடன் கலக்கும் போது இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.

நிலக்கரியை எரிப்பதால் காற்று வளி மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்க, அதிகரிக்க உலகின் வெப்பமயமாகுதல் அதிகரிக்கும். தமிழக அரசு ஒருபுறம் வெப்பமயமாகுதலைக் குறைக்க தமிழகமெங்கும் 68 லட்சம் மரங்களை நடுவது என தீவிரமாக இயங்கி வருவதாக சொல்லும் நிலையில் இது போன்ற கார்பன்டை ஆக்சைடு அதிகமாக வெளியிடும் ஆலைகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது. வெப்பமயமாகுதல் அதிகரித்தால் மழை,புயல்,வறட்சி போன்றவைகளில் அதீத காலநிலைகள் தீவிரமாகும். பருவநிலை மாற்றத்தால் கடல் நீரோட்டம் மாறும். உலக வெப்பநிலை அதிகரிப்பால் பனிமலைகள் உருகத் தொடங்கும். வரும் 2100 ஆம் ஆண்டில் இமயமலையில் உள்ள 70% பனிஉருகி விடும் என்ற செய்திகள் வந்துள்ளன. இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து பல நாடுகள் அழியவும், எண்ணற்ற பாதிப்புகளும் ஏற்படும்.

வெப்ப காற்றை, ஆலை வான்வெளியில் 85 மீட்டர் (சுமார் 300 அடி) உயரமான புகைபோக்கி(சிம்னி) மூலம் ஆலை வெளியிடும். இதனால் இப்பகுதியில் மேகங்கள் ஒன்றுகூட முடியாமல் மழை பொழிவது என்பது மிகவும் குறையும். ஏற்கனவே மழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாவட்டம் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். விவசாய மாவட்டத்தில் விவசாயம் அழிந்தும், மக்கள் அகதியாக தனது நிலங்களை இழந்து வெளியேற வேண்டிய கொடுமை ஏற்படும். .

· பனிரண்டாவதாக, அனல்மின் நிலையத்தை எதிர்ப்பதால் நாங்கள் மின்சாரத்துக்கு எதிரியல்ல உலகம் முழுக்க அனல்மின்சாரம், அணுமின்சாரம் ஆகியன தவிர்த்து சூரிய மின்சாரம், காற்றாலை, கடலலை, இயற்கை கழிவுகளைக் கொண்டு மின்சாரம் என தனது நிலையை பல நாடுகள் மாற்றிக் கொண்டுள்ளது.

எனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையானது தனது மின் உற்பத்தி தேவையை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே நிறைவு செய்து கொள்ள வேண்டும். மக்களுக்காக, தமிழக அரசு 3000 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய தீவிரமாக பல்வேறு முயற்சி செய்வதாக சொல்லி வருகிறது. மேலும் குஜராத்தை சேர்ந்த அதானி குழுமம் சூரிய மின்சாரம் உற்பத்தி நிலையம் அமைக்க என தமிழகத்தின் சங்கரன் கோவில் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலத்தை அரசு விவசாயிகளிடம் பிடுங்கி கொடுக்க முயற்சித்து வருகிறது. மேலும் நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சூரிய மின்சாரம் தயாரிக்க சிப்காட் விரிவாக்கம் என அரசு நிலத்தை எடுக்க முயற்சித்து வருகிறது. எனவே ஆண்டு முழுக்க நன்கு வெயில் கொளுத்தும் எம்.ஆர்.எப். ஆலையின் நிலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் இப்பகுதியில் பயன்பாடு இன்றி சும்மா இருப்பதாக ஆலை நிர்வாகமே கூறியுள்ளது. நாங்களும் நேரில் பார்த்தோம். இப்பகுதியில் சூரியமின்சாரம் வேண்டும் அளவு ஆலை தயாரிக்கட்டும். எனவே ஆலை தனது மின் தேவையை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே மின்சாரம் தயாரித்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். எம்.ஆர்.எப். ஆலை இயங்கும் கேரளா கோட்டயம் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க வேண்டும் என ஆலையால் முதலில் பேச கூட முடியுமா? இளித்தவாயர்கள் தமிழர்கள்தானா?

· பதிமூன்றாவதாவதாக, ஆலையை வைத்து உலகம் முழுக்க 65 நாடுகளுக்கு டயர் ஏற்றுமதி செய்து பல்லாயிரம் கோடி ருபாயை லாபம் ஈட்டியுள்ள இந்த எம்.ஆர்.எப்.நிறுவனம், ஏற்கனவே 5 ஆண்டுகளாக டயர் ஆலை இயங்கி வரும் இப்பகுதியில் மக்களுக்கு செய்த நன்மை என்ன? எண்ணற்ற அழிவுகள்தான் மிச்சம். மக்களுக்கு எண்ணற்ற புதிய நோய்களை, சூழல் பாதிப்புக்களை, ஏற்படுத்தி உள்ள கடுமையான மாசுபடுத்தலை, இனிமேலாவது ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் மிகுந்த கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை ஊர் வாரியாக ஆய்வு செய்து, தகுந்த சிகிச்சையை ஆலையின் மூலம் அரசு செய்ய வைக்க வேண்டும்.

மேலும் டயர் ஆலையின் இருந்து வெளியேற்றப்படும் 4 லட்சம் லிட்டருக்கு மேலான கழிவு நீர் சுத்திகரிப்பில், வெளியேறும் ஆபத்து விளைவிக்கும் பல்வேறு வாயுக்களை கையாள்வதில், ஆலையில் வெளிவரும் திடக்கழிவுகளை கையாள்வதில் விதிப்படி இல்லாமல் பல்வேறு குளறுபடிகளும், அதனால் பல்வேறு பாதிப்புகளும் மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் ஏற்பட்டு உள்ளது. டயர் ஆலையால் இப்பகுதியில் ஏற்கனவே காற்று, நீர், மண், ஆகியவை பாழ்பட்டு, மாசுபட்டு வருகிறது.

· பதினான்காவதாவதாக, இந்த மக்கள் விரோதமான, சட்ட விரோத அனல்மின் திட்டத்தை இங்கு கொண்டு வந்து, இங்கு அறிக்கையில் கூறி உள்ளது போல் சுற்றுசூழல் பாதிப்பின்றி இந்த ஆலை செயல்படும் என ஆலை நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் கூறுகின்றனர். இங்குள்ள மக்களுக்கு இந்த அனல்மின் திட்ட பாதிப்பு தெரியாது. எங்களுக்கு நன்கு தெரியும். இந்த பகுதி மக்களை தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் இயங்கும் சுமார் 30 இடங்களில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று இதோ பாதிப்பில்லாமல் ஆலை இயங்குகிறது பாருங்கள்... நாங்கள் இப்படிதான் இங்கு செயல்படப் போகிறோம் என சொல்லத் தயாரா? உங்களால் முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. அப்படிக் நீங்கள் காட்டத் தயார் என்றால் நாங்கள் உங்களை ஆதரித்து இப்போதே கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம்.

இந்த மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள சாயப்பட்டறையால்தான் காவிரியின் துணை நதி நொய்யல் ஆறு செத்த நதியாக மாறியது. வேலூர் தோல் ஆலை கழிவுகளால் பாலாறு பாலானது. தமிழகம் முழுக்க ஆலை இருக்கும் பகுதியெல்லாம் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வரிப் பணத்தில் படித்து, மக்கள் உழைத்துக் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், மக்களுக்கு நேர்மையாக இல்லாமல் ஆலை நிர்வாகத்திற்க்கு விசுவாசமாக இருப்பது அறமா? “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், அய்யோவென்று போவான்” என சொல்வார்கள். பெரும்பாலான அரசு அதிகாரிகளின், ஆலை நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடு அப்படித்தான் உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இன்று இங்கு கூட்டி நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம் என்பது முழுக்க, முழுக்க சட்டவிரோதமானதும், ஜனநாயக விரோதமானது ஆகும். ஆலைக்கு ஒரு பக்க சார்பாக செயல்பட எண்ணியே இக்கூட்டம் முறையற்று கூட்டப்பட்டு உள்ளது. இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எங்கள் மூலம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்., இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்து, கூட்டம் குறித்து அனைத்துப் பகுதி மக்களுக்கும் கலந்து கொள்ளும் வகையில் அறிவிப்புக் கொடுத்து மீண்டும் கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்

எக்காரணம் கொண்டும் அனல்மின் நிலைய ஆலைக்கு அனுமதி அளிக்காமல் இந்த திட்டத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். காவிரியை போர் போட்டு சுரண்டாமல் பாதுகாக்க வேண்டும். ஆலைக்கு அனுமதி அளித்தால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது ஆலையை தடுப்போம்”. எனப் பேசி முடித்தேன்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகு ரமேஷ் கருப்பையா பேசியது:

· இந்தத் திட்டத்தில் தற்போதுதொடங்கப்படும் 50 மெகாவாட் மின்சார உற்பத்தி என்பது படிப்படியாக 500 மெகாவாட் ஆக மாறும். இதனால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டியது இருக்கும். ஆலையின் உற்பத்தியில் ஒரு மெகாவாட் கூட மக்களுக்கு வராது. ஆலைக்கு மட்டுமே பயன்படும்

· இந்த திட்டத்திற்காக இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் இங்கு கொண்டு வரப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு 1,100 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதனை கொண்டுவருவதற்க்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் இரவு பகலாக வரும். நிலக்கரி லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் போதே அதில் உள்ள நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும். இது பற்றி எதுவும் அறிக்கையில் கூறப்படவில்லை.

· நிலக்கரியை எரிக்கும் போது வெளியாகும் கதிர் வீச்சிற்கு மக்கள் தொடர்ந்து ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது.

· ஆலையை சுற்றி 5 கி.மீ தொலைவில் மூன்று காப்புக்காடுகள் (Reserve Forest) உள்ளது. இது கிழக்கு தொடர்சிமலையை சேர்ந்தது. இதில் உற்பத்தியாகும் நீர்தான் மருதையாற்றுக்கு செல்லும். வரும் காலத்தில் இந்த நீர்வழிப் பாதையை ஆலை நிர்வாகம் அழிக்கும். இதுபற்றி எதுவும் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

· ஆலையை சுற்றி எண்ணற்ற ஏரி, குளங்கள் உள்ளது இது எது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இவை அனைத்தும் அழியும்.

· பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்காக 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவது முறையல்ல.

· இந்த திட்டத்தின் மூலம் வெளியாகும் சாம்பலால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

· இந்த திட்டத்திற்காக வழங்கும் தண்ணீரை இந்தப் பகுதியைச் சேர்ந்த 20,000 பேருக்கு வழங்க முடியும். பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் பெரம்பலூரில் வாரம் ஒரு முறை தண்ணீர் கிடைக்கும் நிலையில் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக தண்ணீரை எப்படி வழங்கலாம். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

· ஏற்கனவே டயர் ஆலை அமைக்கும் போது, வரும் காலத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் திட்டம் உள்ளது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. இப்போது வரை கோடி கோடியாக வருமானம் ஈட்டும் ஆலை சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதை நடைமுறைபடுத்தாமலேயே உள்ளது. எனவே ஆலை சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்துகிக் கொள்ளட்டும்.

மேலும் அவர்களின் திட்ட அறிக்கையில் இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் 25 மெகாவாட் மின்சாரத்தை எம்.ஆர்.எப். ஆலையின் பிற யூனிட்டுகளான திருவெற்றியூர், அரக்கோணத்திற்கு கொண்டு செல்வோம் என கூறியுள்ளது. எந்த காரணம் கொண்டும் இந்த பகுதி மக்களின் வாழ்க்கையை அழித்து இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை , அவர்களின் திருவெற்றியூர், அரக்கோணத்தில் உள்ள எம்.ஆர்.எப். ஆலைக்கு தரும் முயற்சியை அனுமதிக்கவே கூடாது.

· இந்த டயர் தொழிற்சாலைக்கு தேவையான நிலங்களை வாங்கிய போது, இங்குள்ள விவசாயிகளின் குடும்ப நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை. ஒரு சிலருக்கு கூலி வேலை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதியான மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள்இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் பேசினார்கள்.எங்களுக்கு ஆலையின் எந்த பாதிப்பும் தெரியாது. ராமேசு கருப்பையா போன்றவர்கள் எங்கள் ஊரில் தெரிவித்ததால்தான் இந்தக் கூட்டத்திற்க்கு வந்தோம். இங்கு வந்து எங்களுக்கு முன்னாள் பேசிய முகிலன் போன்றவர்களின் பேச்சால்தான் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டோம். நாங்கள் இதுவரை நோய் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வந்தோம். மருந்து சாப்பிடுவதோ, ஆசுபத்திரிக்கோ போனதில்லை. டயர் கம்பனி வந்ததில் இருந்துதான் எங்களுக்கு நோய் வரத் தொடங்கி விட்டது. பலரும் நோய் வந்து சாகத் தொடங்கி விட்டனர். ஊரூராய் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த நாங்கள் இப்போதுதான் நிலையாக மற்றவர்களைப் போல வாழ்ந்து வருகிறோம். எங்கள் வாழ்க்கையை அழிக்கும் இந்த ஆலை வந்தால் நாங்கள்தான் முதலில் பாதிப்போம். இதை விரட்ட எந்தவகையான போராட்டமும் நடத்துவோம். சாவைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என ஆவேசமாக பேசினர்.

அதன் பின்பு பலரும் பல்வேறு பாதிப்புக்களை முன் வைத்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசினார்கள். பேசிய அனைவரும் ஆலை இங்கு வரக்கூடாது என ஆணித்தரமாக முன் வைத்தனர். ஆலையை ஆதரித்து ஒருவர் கூட பேசவில்லை காலை10,50 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 03.00 மணியளவில் முடிந்தது.

முடிவில் உதவி கலெக்டர் மதுசூதனன் ரெட்டி பேசுகையில், “இந்த அனல்மின் ஆலை திட்டத்தின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் தெரிவித்த கருத்துகள் மத்திய,மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த திட்டம் தொடங்க முடியும். திட்டம் தொடர்பாக மறு கூட்டம் நடத்துவது தொடர்பாக பின்னர் பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்து முடித்தார்.

சட்டவிரோதமான முறையில் கருத்து கேட்புக் கூட்டம் ஒன்று நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அனல் மின் நிலைய பாதிப்புகளை விளக்கியும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்புரை செய்யவும், சட்டரீதியாக ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டரீதியான வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

இயற்கையை பாதுகாப்போம்! மனிதகுலத்தை விடுவிப்போம் !!