கடந்த மாதம் 18ம் தேதி மரபணு மாற்று மதிப்பீட்டுக் குழு – GEAC, உணவுப் பயிர்கள் உள்ளிட்டு, 13 மரபணு மாற்றுப் பயிர்களை, பாதுகாப்பானதா என்பது உறுதி செய்திடாத முன்பே, வயல் வெளிகளில் சோதிக்க அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர்கள் உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும், இந்திய வேளண்மையையும் பல வகைகளில் பாதிக்கும் என்பதால் விவசாயிகளான நாங்கள் இந்த வயல் வெளி சோதனைகளை எதிர்க்கிறோம்.

BT brinjal 3401. தொலை நோக்குடன் மரபணு மாற்றுப் பயிர்களுக்கும், மரபணு மாற்றுப் பண்டங்களுக்கும் தமிழகத்தில் தடை விதித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

2. மரபணு மாற்றுப் பயிர்களை வயல் வெளிகளில் சோதிக்க அனுமதிக்கக் கூடாதென ஒற்றைக் குரலில் மத்திய அரசை வலியுறுத்திய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

3. வயல் வெளி சோதனைகள் என்பது திறந்த வெளியில் செய்யப்படும் சோதனைகள் என்பதால் மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத சக்திகளான காற்று, தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவைகள் மூலம் மரபணு மாற்றுப் பயிர்களின் மகரந்தத் தூள்கள் பிற உறவுப் பயிர்கள், செடிகளில் கலப்படம் ஆவதைத் தடுக்க இயலாது.

4. இத்தகு மரபணுக் கலப்படங்கள் திறந்த வெளி வயல் வெளி சோதனைகளின் போது உலகின் பல பகுதிகளிலும் நடந்துள்ளது. அமெரிக்காவில் மரபணு மாற்று நெல் மற்றும் கோதுமை சோதனைகள் நடந்து முடிந்து பல ஆண்டுகள் கழித்து மரபணுக் கலப்படும் நடந்துள்ளதைக் கண்டறிந்ததும் அதனால் அந்தப் பகுதி விவசாயிகள் பெருத்த அளவில் நட்டப்பட்டதும் உலகு அறிந்த செய்தி.

5. இந்தியாவில் வயல் வெளி சோதனைகளுக்காக தற்போது அனுமதிக்கப்படுள்ள பயிர்களும் இனி வரவுள்ளவைகளும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பில்லாதவை என்பது உறுதி செய்யப்படாதவைகள்.

6. உச்ச நீதிமன்றம் தன் முன் உள்ள மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த வழக்கில் தனக்கு ஆலோசனை அளிக்க அமைத்த தொழில் நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையில் இந்தியாவில் மரபணுமாற்றுப் பயிர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்கள் இல்லை, அத்தகு ஆய்வுகளை செய்திடும் அறிவியல் வல்லுனர்களும் இல்லை. அத்தகு ஆய்வகங்களும், வல்லுனர்களும் உருவாக்கிய சோதனைகள் நடத்தி பாதுகாப்பானது என்பதை அறிந்த பின்னரே இத்தகு வயல் வெளி சோதனைகளை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

7. கடந்த நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக் குழுவானது ஒருமித்த குரலில் இந்தியாவிற்கு மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையில்லை என்றும் வயல் வெளி சோதனைகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளது

8. மரபணு மாற்றுப் பயிர்களில் திணிக்கப்பட்டுள்ள மரபணுக்கள் அந்தந்த நிறுவனங்களின் சொத்து என்று காப்புரிமை பெறப்பட்டவைகள். அத்தகு மரபணுக்கள் விவசாயிகளில் பயிர்களுடன் மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் இந்திய விவசாயிகளின் விதைத் சுதந்திரமும், உரிமையும் அந்த விதை வணிக நிறுவனங்களிடம் சிக்கிவிடும். தார்வாட் விவசாயப் பல்கலைக் கழகம் உருவாக்கிய பி.ட்டி, பிகநேரி பருத்திப் பயிரில் மான்சான்டோவின் மரபணு எப்படியோ கலப்படம் ஆனது. இப்படி தனக்குச் சொந்தமான மரபணு பி.ட்டி பிகநேரில் இருப்பதை எதிர்த்து வழக்கும் தொடுத்தது. அந்தத் திட்டம் இறுதியில் நிறுத்தப்பட்டது.

9. ஏற்கெனவே இந்தியாவின் பருத்தி விவசாயத்தில் உள்ள பருத்தி விதையில் 96% மான்சான்டோவின் காப்புரிமை விதைகளாகவே உள்ளது. விவசாயத்தின் ஆணிவேராக இருக்கும் விதைகள் ஒரிரு விதை நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்வது இந்திய விவசாயத்திற்கு ஆபத்தானதாகும். மேலும் இப்படி இந்திய பருத்தி முழுதும் மான்சான்டோவின் பருத்தியாக மாறியதால், சுதேசியத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடி இன்று மான்சான்டோவின் பருத்திக் கொடியாக மாறிவிட்டது.

10. பி.ஜே.பி கட்சி 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கைச் சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதை முழுமையான அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிந்த பின்னரே மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்,’ என்று உறுதியளித்திருந்தது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தார். அவர் தனது வாக்குறுதியை செயல்படத்திக் காட்டியுள்ளார். பி.ஜே,பி. செய்யுமா?

11. ஆனால் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் மாண்புமிகு.பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் ஆழ்கிணற்று மௌனம் மரபணு மாற்றுப் பயிர்கள் வயல் வெளி சோதனைகள் பிரச்சனை குறித்து முந்தைய சுற்றுச் சூழல் அமைச்சர்களான திரு. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திருமிகு. ஜெயந்தி நடராஜன் அறிவு மற்றும் அறிவியல் பூர்வமாக அனுமதி அளிக்க மறுத்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட்ட கதி அவரது வாயை பூட்டிவிட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

12. இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பல்வேறு வயல் வெளி சோதனைகளின் போது அந்தச் சோதனைகளை நடத்திய விதமும் அதில் ஏற்பட்ட பல விதி மீறல்களையும் சுட்டிக் காட்டிய பின்னரும் மரபணு மாற்று அனுமதிக் குழு எவ்வித நடவடிக்கையும் தவறு செய்யதவர்கள் மீது எடுக்கவில்லை.

இது போன்ற பல காரணங்களால், அறிவியல் உண்மைகள் தெரிவிக்கும் அதிர்ச்சியான உண்மைகளால் இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு வயல் வெளி சோதனைகள் நடத்தவும், மரபணு மாற்றுப் பண்டங்களை இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கக் கூடாதென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு.
தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.
பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு
தாளாண்மை உழவர் அமைப்பு,
ஐக்கிய விவசாயகள் சங்கம்,
இந்திய விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி,
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி,
தமிழக விவசாய சங்கங்கள்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
மற்றும் பல அமைப்புகள்.