கடந்த மாதம் "The Mars Science Laboratory" (MSL-nicknamed "CURIOSITY") செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்னும் நம்பிக்கை தருகிறது. சூரிய மண்டலத்தில் பூமியைத் தவிர்த்து மனித இனம் வசிக்கக் கூடிய ஒரு சில சாத்தியக் கூறுகளைக் கொண்ட ஒரே ஒரு கிரகம் செவ்வாய் மட்டுமே. ஆனால் மனித இனம் செவ்வாய் கிரகத்தில் குடியேறுதல் என்பது சாத்தியமா? (மனிதன் செவ்வாய் கிரகத்திற்குப் போய் வருவது அல்ல). இதற்குக் கண்டிப்பாக பில்லியன் கணக்கில் செலவுகள் வந்தாலும் அதை அனைத்து நாடுகளும் பங்கிட்டுக் கொள்ளும் என்று வைத்துக் கொண்டு பணத்தை ஒரு தடையாக எடுக்காமல் இக் கட்டுரையை எழுதுகிறேன். செவ்வாயில் மனிதன் குடியேறத் தடையாக இருப்பவற்றில் இரண்டு விஷயத்தை மட்டுமே (ONLY TWO POINTS) இன்று இங்கே பார்ப்போம்.

mars_orbit_400

(1) தூரம்:

பூமிக்கு அடுத்ததாகச் செவ்வாய் உள்ளமை ஒரு சௌகர்யமே. பூமியும் செவ்வாயும் தமக்குரிய நீள் வட்டப் பாதைகளில் (Elliptical Orbits) சூரியனைச் சுற்றி வருவதால் இவையிரண்டும் இப் படத்தில் உள்ளது போன்று குறுகிய இடைவெளியில் அருகருகே வரும் போது (Known as Opposition) பிரயாணம் செய்ய வேண்டிய தூரம் குறையும். ஆனால் அருகருகே வருவது ஒவ்வொரு 26 மாதங்களில் (இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும்) மட்டுமே நிகழும். இதனால் தான் கடந்த சில வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களின் (Missions) ஏவல் (Launch) திகதிகளில் இரண்டு வருட இடைவெளியைக் காணலாம். இச் சமயம் இவ்விரண்டு கோள்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி 54.6 மில்லியன் கி.மீ. ஆனால் இது கணக்கில் மட்டும் தான். நிஜத்தில் கடந்த ஐம்பதினாயிரம் வருடங்களில் 2003-இல் மட்டும் இவையிரண்டும் குறைந்த இடைவெளியில் (56 மில்லியன் கி.மீ.)வந்துள்ளன. ஜூலை 27, 2018-இல் திரும்பவும் ஓரளவு குறைந்த இடைவெளியில் (57.6 மில்லியன் கி.மீ.) வரவுள்ளன.

எரிபொருளின் அளவிற்கேற்பப் பிரயாண நேரம் 8-10 மாதங்கள் வரை செல்லலாம். இக் கால எல்லையில் விண்கலத்தில் பயணிப்போர் இறக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் Bone Loss (எலும்பு பலவீனமாதல்), Cabin Fever (விண்கலத்தினுள் இருப்பதனால் வரும் நோய்), Cosmic Radiation (கதிர் வீச்சு) ஆகியவற்றிலிருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். பிரயாணம் செய்யும் போது 26 மாதங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் அடுத்த விண்கலம் வர இன்னும் 26 மாதங்கள் எடுக்கும். அடுத்த விண்கலத்தில் வருவோர் தங்களுக்குரிய பொருட்களை எடுத்து வருவதால் முதலில் போனவர்களுக்குத் தேவையான பொருட்களை தங்களுடன் எடுத்துப் போக முடியாது. எனவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறினால் தொடர்ந்தும் பூமியின் உதவியை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும்.

(2) எரிபொருள்:

பூமியும் செவ்வாயும் ஒரே திசையில் சுற்றி அருகருகே வந்தாலும் பூமியும் செவ்வாயும் நிலைத்து ஒரே இடத்தில் இருப்பவை அல்ல. தன்னையும் சுற்றி, தனக்குரிய பாதையில் சூரியனையும் சுற்றும் பூமியிலிருந்து தன்னையும் சுற்றி தனக்குரிய வேறு பாதையில் சூரியனைச் சுற்றும் செவ்வாய்க்குக் குறி வைப்பது எவ்வளவு கஷ்டம்? எனவே சரியான தருணம் பார்த்து ஒரு விண்கலத்தை ஏவுதல் என்பது இலகு அல்ல. எனவே விஞ்ஞானிகள் விண்கலத்திற்கு என்று ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். முதலில் பூமியின் சுற்றுப் பாதையில் (Orbit of Earth) தனது பாதையைத் தொடங்கும் ஒரு விண்கலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதையை மாற்றித் தனது பாதையில் பயணித்து செவ்வாய் கிரகத்தின் பாதையுடன் (Orbit of Mars) ஊடறுத்துக் கலந்து செவ்வாய் கிரகம் நெருங்கும் போது அதில் தரை இறக்கப்படுகிறது அல்லது அதைச் சுற்றி வருகிறது.

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை ஏவுதல் நேரடியாக நடைபெறுவதில்லை. ஏனெனில் இதற்கு நிறைய எரிபொருள் விரயமாகும். செவ்வாய் கிரகம் எதிர்காலத்தில் இந்த இடத்துக்கு வரும் என்றதைத் துல்லியமாக் கணக்கிட்டு அந்த இடத்தை நோக்கித் தான் ஒரு விண்கலம் செலுத்தப்படுகிறது. ஒரு விண்கலம் ஒரு கட்டத்தில் பூமியினுடைய ஈர்ப்பை (Earth's Gravity) விட்டு வெளியேறித் தனது பாதையின் ஈர்ப்பை அடைய வேண்டும். எனவே ஒரு விண்கலம் ஏவப்படும் போது பூமியின் சுழற்சிக்கு (Spin of the Earth) ஏற்ப ஏவப்படுகிறது. இதனால் அது பூமியின் ஈர்ப்பைக் கடக்கும் போது அது பூமியின் சுழற்சியை உபயோகித்து வேகத்தை அதிகரித்து குறைந்த அளவு எரிபொருளை உபயோகப்படுத்துகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, கணக்கிட்டு ஒரு விண்கலம் ஏவப்படும் நாள் குறிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாயில் வசிக்கப் போவதானால் மிகப் பெரிதான ஒரு விண்கலம் தேவை. அதற்கு நிறைய எரிபொருள் தேவை.

இப்போது சாத்தியம் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் விஞ்ஞானம் இந்த இரண்டு தடைகளையும் இலகுவாக்கலாம்!!