சிக்குன்குனியா: ஆப்பிரிக்காவில் தோன்றிய ‘ஸ்வாஹிலி’ என்கின்ற வார்த்தைக்கு ‘வளைதல்’, ‘முடக்கம்’ என்று பொருள். இதைத்தான் இன்று நாம் சிக்குன்குனியா அதாவது மூட்டுகளின் முழுமையான முடக்கம் என்கிறோம். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இந்த நோயால் இறந்துள்ளார்கள். 

கொசுக்கள் : நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆகும், பல்கிப் பெரும் ‘ஏடிஸ் எஜிப்டை’ என்கின்ற பகல் நேரத்தில் கடிக்கின்ற புலிக்கொசுக்களால் பரவக்கூடிய ‘ஆல்பா’ வகை வைரஸ் தொற்று தான் இந்த சிக்குன்குனியா. நோய்த் தொற்றுள்ளவரை கடிக்கும் கொசு, இயல்பாக இருப்பவரை கடித்தால் அவருக்கு மூன்று முதல் ஏழுநாட்களில் இந்நோய் வந்துவிடும். 

அறிகுறிகள் : தலைவலி, கடுமையான காய்ச்சல், மயக்கம், வாந்தி, உடல் குளிர்ச்சி, முக்கியமாக உடம்பின் எல்லா மூட்டுகளிலும் கடுமையான வலி, வீக்கம் தோல் சிவந்து போதல், அரிப்பு ஆகியவை முக்கியமாக அறிகுறிகள், மூன்று நாட்கள் இருக்கும் மூட்டுவலியும் கடும் காய்ச்சலும் ஆளைக் கொன்றுவிடும். இதன் பாதிப்பு மூன்று முதல் ஆறுமாதம் வரை கூட இருக்கலாம். நீண்ட நாளைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை, இரத்தக்கொதிப்பு, அல்சர், மூட்டுவலி, இதய, நுரையீரல், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிர் இழக்க வாய்ப்புண்டு. இது ஆட்கொல்லி நோயல்ல என்றாலும் ஆள்முடக்கி நோய். 

சித்த மருந்துகள் :

1. நிலவேம்புத் துகள்கள் : இதனை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, சுண்ட வைத்தால் கால் டம்ளர் அளவுக்கு வரும். இதனை காலை, மதியம், இரவு மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் ஒரு வாரம் குடிக்கலாம். உணவிற்கு முன் குடிக்கவும். இது முக்கியம். 

2. பிரம்மானந்த பைரவ மாத்திரை : மாத்திரை வடிவில் கிடைக்கும் இதனை ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரை வீதம் தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு ஒரு வாரம் உணவிற்கு பின் சாப்பிடலாம். 

3. அமுக்கரா தூள் : காலை, இரவு என்று ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு இந்த தூளை தேனிலோ, பாலிலோ கலந்து உணவிற்கு பின் ஒரு வாரம் சாப்பிடலாம். 

4. வெளிப்பூச்சுகள் : கற்பூராதித் தைலம், பிண்டத்தைலம், மயனத்தைலம் போன்றவை மூட்டுவலியையும், வீக்கத்தையும் தடுப்பவை. மூட்டுகளில் இதனைத் தடவிக் கொள்ளலாம். 

ஹோமியோபதி மருந்துகள் : RHUSTOX 200 (ரஸ்டாக்ஸ் 200), யூப்படோரியம் 30 ஆகிய இரண்டு மருந்துகளை மூன்று வேளை சாப்பிடலாம். இது சிக்குன்குனியாவின் எல்லா அறிகுறிகளுக்கும் ஏற்றது. 

இயற்கை மருந்துகள்: நிறைய நீரூட்டமுள்ள கீரைகள், காய்கறிகள், பழவகைகள் நிறைய சேர்த்துக் கொள்ளலாம். கிழங்குகள் தவிர்க்க வேண்டும். நல்ல சத்தான உணவும், நிறைய தண்ணீரும் குடிக்கலாம். 

மண் மருத்துவம்: களிமண்ணோ, புற்றுமண்ணோ எடுத்து நல்ல தண்ணீரில் குழைத்து மூட்டுகளில் தடவ வைரஸின் நச்சுகள் மண்ணோடு, மண்ணாக வெளியேறிவிடும். 

ஆயூர்வேதம் / யுனானி : நிறைய மாத்திரைகள் / கேப்ஸ்யூல்கள் நோயின் தன்மைக்கும், நோயாள ரின் எதிர்ப்பு சக்திக்கும் ஏற்றவாறு தரப்படுகின்றன. 

மருத்துவ ஆலோசனை: எந்த முறை மருத்துவத்தில் மருந்துகளை சாப்பிடுபவராக இருந்தாலும், எந்த நோயினாலும், இம்மருந்துகளை மருத்துவரின் உறுதியான ஆலோசனையுடன் பேரில் மட்டும் சாப்பிட வேண்டும். இம்மருந்துகளை நோய் வரும் முன்னர் தடுக்கவும், வந்த பிறகு குணப்படுத்தவும் கொடுக்கலாம். உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவ முறையை தேர்ந்தெடுப்பார் மருத்துவநிபுணர். 

- டாக்டர். ப.உ.லெனின்

ஆலோசகர் மற்றும் உறுப்பினர் 

இந்திய அரசு ஹோமியோபதி கவுன்சில் 

163, அம்பலத்தாடையர் வீதி, 

புதுச்சேரி - 1. கைப்பேசி: 93454 56056.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2009ல் வெளியான கட்டுரை)