ஆறுமாத குழந்தை முதல் 100 வயதைக் கடந்த முதியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு.

ragiநம் முன்னோர் வலுவுடனும், வளமுடனும் நலமுடனும் வாழ்ந்ததற்கு கேழ்வரகு உணவு மிக முதன்மையான காரணம். கால்சிய சத்து இதில் அதிகம். உடல் குளிர்ச்சியடைய உதவும். இரும்பு சத்தும், போலிக் ஆசிட்டும் இதில் அதிகம்.

ஆனால், இடைக்காலத்தில் அவ்வளவு கேவலமாகப் பார்க்கப்பட்டதன் விளைவு இன்று சத்தற்ற உணவுகளை உண்டு நோயாளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இரத்த சோகை வராமல் தடுக்க, வந்தால் போக்க இது பெரிதும் பயன்படும்.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது.

கேழ்வரகை முளைகட்டி உலர்த்தி அதைப் பொடியாக்கி சலித்தால் கிடைப்பது “ராகிமால்ட்’’. இது பல மடங்கு சக்தியுடையது.

கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். 2 வயதுக்குப் பின் பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

கேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிடலாம்.

செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும்.

பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும். பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும்.

- மஞ்சை வசந்தன்