மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் இப்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெவ்வேறு விதமான அலங்காரங்களில் மனதை செலுத்தி தங்களின் அழகைக் குறைய விடாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர். அதுபோல முக வசீகரம் என்பது இப்போது மிக முக்கியமாகப் பேணப்படுகிறது. அதில் முக்கியப் பங்கு வகிப்பது சன்ஸ்கிரீன் என்று பேசப்படும் களிம்புகள் ஆகும். இளைஞர்களும் இளைஞிகளும் இப்போது நிறைய சன்ஸ்கிரீன் களிம்புகளைப் பூசுவதில் அக்கறை காட்டுகின்றனர். வெயில் தடுப்பு காரணியாக விளங்கும் இந்த சன்ஸ்கிரீன்களைத் தடவுவதன் மூலம் வெயிலினால் தங்களின் முகத்தோல் சுருக்காமல் பார்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இவர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பற்பல கெமிக்கல் கம்பெனிகள் புதுப்புது விளம்பரங்களைப் போட்டி போட்டு விளம்பரப்படுத்துகின்றனர். இதில் மக்கள் முக்கியமாக ஏமாந்துவிடாமல் எந்த வகையான களிம்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல தங்களின் தோலுக்கேற்ற களிம்புகள் தானா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். பொதுவாக வெயிலினால் சிலருக்கு தோல் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளது. வெயிலினால் போட்டோ சென்சிட்டிவிட்டி என்கின்ற தோல் எரிச்சல் மற்றும் தோல் சுருக்கும் வாய்ப்புள்ளது.

தோலில் ஆறுவகை உண்டு. முதல் 1-2-3 என்ற வகைத் தோல்கள் வெள்ளைக்காரர்களுக்கு இருப்பது. 4-5-6 வகைத் தோல் அமைப்பு இந்தியர்கள், நீக்ரோக்கள் போன்றவர்களுக்கு இருப்பது. இதில் வெள்ளை இனத்துதோல்களை வெயில் எளிதாகத் தாக்கும். இந்தியர்கள் பொதுவாக தமிழர்களின் தோல் அமைப்பு 4-5-6 வகையைச் சேர்ந்ததால் பாதிப்புக் குறைவாக இருக்கும். இருப்பினும் பெண்களுக்கு அதிலும் வெளியில் வெயிலில் செல்லும் பெண்களுக்கு GVR எனப்படும் புற ஊதாக்கதிர்களால் சற்று நிறக்குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணம் V.V. Rays எனப்படும் அல்ட்ரா கதிர்களின் புற ஊதாக்கதிர்களின் தாக்குதல்களே ஆகும்.

பகலில் கிரிக்கெட் போன்ற விளையாட்டை விளையாடும் வீரர்கள் வெள்ளையாக ஒன்றை முகத்தில் பூசிக் கொள்வார்கள். அது சன்ஸ்கிரீன் களிம்புகள் தான். இன்னும் சிலர் முகமூடி அணிந்து விளையாடுவார்கள். காரணம் நமது வெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை.

இதில் வெயில் காலம் என்றில்லாமல் குளிர்காலங்களில் கூட சன்ஸ்கிரீன் தேவைப்படும். பனிமலைகளில் பனிச்சறுக்கு விளையாடுபவர்கள் முகத்தை மறைத்திருப்பார்கள். அதுவே பனிப்பிரதேசம் தானே, அதனாலா தோலுக்கு பாதிப்பு வந்து விடப்போகிறது என்று கேட்கலாம். உண்டு. அதாவது பனிமலைகளில் வெயில் படும்பொழுது அந்த வெயில் பனிக்கட்டிகளில் பட்டுச் சிதறி உடலிலோ, முகத்திலோ படும்பொழுது அதனால் தோல் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

சன்ஸ்கிரீன் களிம்புகளில் இரண்டு வகை உண்டு. கெமிக்கல் மற்றம் பிசிக்கல் என்பவை அவை. கெமிக்கல் சன்ஸ்கிரீன் என்றால் தோலுக்குள் சென்று சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கிறது. பிசிக்கல் சன்ச்கிரீன் என்றால் அது தோலுக்கு மேல் படர்ந்து அதன் மூலம் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. பெரும்பாலும் சன்ஸ்கீன்களில் இரண்டுதன்மையும் கலந்திருக்கிறது. சன்ஸ்கிரீன்களில் சக்தியை SPF (skin protection factor) என்னும் அளவு கோலால் மதிப்பிடுகின்றனர். நல்ல சன்ஸ்கிரீன்களில் SPF என்பது 15 லிருந்து 30 வரையில் உள்ளது. இந்திய மக்களுக்கு SPE 15 அளவே போதுமானது.

சூரிய திரைக் களிம்புகள்(சன்ஸ்கிரீன்) யாருக்கு அதிகம் தேவைப்படும் என்றால் அதிகமாக வெயிலில் அலைந்து திரியும் வியாபார அலுவலர்கள், விளம்பரம் வேலைக்கு செல்லும் பெண்கள் போன்றவர்கள் பயன்படுத்துவதன் மூலம் நிறக்குறைபாடுகளைத் தவிர்க்கலாம். சிலர் சன்ஸ்கிரீன்களைத் தடவிக்கொண்டு அதன் மேலே உடனே பவுடர் பூசிக்கொள்வார்கள். அப்படி செய்தால் எண்ணெய் பிசுபிசுப்பு போகாது. சன்ஸ்கிரீன் தடவிய அரை மணி நேரம் கழித்து பவுடர் பூசிக்கொள்ளலாம்.

காலையில் வீட்டிலிருந்து பணிக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் சன்ஸ்கிரீன் களிம்புகளைத் தடவிக் கொள்ளலாம். ஒரு முறை தடவிய சன்ஸ்கிரீன் 3-4 மணி நேரம் வேலை செய்யும். ஒரு சில சன்ஸ்கிரீன் களிம்புகள் எண்ணெய் பசையாக இருக்கும். சிலவற்றில் குறைவாக இருக்கும். எந்த கிரீம் உங்கள் தோலுக்கு ஏற்றதென்று நீங்கள் முடிவு செய்யாமல் அதை நல்ல தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வாங்கித் தடவி வெயிலின் கொடுமையிலிருந்து உங்கள் தோல் அழகைக் காப்பாற்றுங்கள். ஏனென்றால் நிறைய விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில் எல்லாம் SPF 15 அளவு இருக்குமா என்பது சந்தேகமே. SPF 15 அளவு உள்ள சன்ஸ்கிரீன் தான் உகந்தது. அந்த அளவு இல்லாத களிம்புகளைத் தடவினால் மேலும் தொந்தரவுதான். அதற்காகத்தான் மருத்துவர் ஆலோசனை அவசியம் என்கிறோம்.

வெளிநாடுகளில் தொப்பி அணிவது, ஜப்பான் போன்ற நாடுகளில் அகலமான தொப்பி அணிவதும், விளையாட்டு வீரர்கள் முன்பகுதி நீண்ட தொப்பி அணிவதெல்லாம் அழகுக்கல்ல. சூரிய ஒளித்தாக்குதலின்றி காக்கத்தான். அதற்காக சூரிய ஒளி மோசமானதல்ல. மரங்கள் பச்சயம் பெறுவது, வேர்கள், சேர்க்கை நடத்துவது, நமது சருமம் வனப்பும் வலிவும் பெறுவது உலகச் செழுமைகளின் ஆதாரமாக இருப்பது சூரிய ஒளிதான். நாம் இங்கு குறிப்பிடுவது போட்டோ சென்சிட்டிவிட்டி என்ற தோல் அலர்ஜியினின்று காக்கும் பொருட்டுத்தானே அன்றி சூரிய ஒளி கெடுதல் என்று கூற அல்ல.

வைட்டமின்- டி யை அள்ளிக்கொடுக்கும் சூரியனை வேண்டாம் என்றா சொல்வோம்!

Pin It