கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்கண்ணி. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை ...

                சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

                பொன்னாங்கண்ணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.

                பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

பொன்னாங்கண்ணியின் பயன்கள் :

  • இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  • துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
  • கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
  • சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.
  • உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
  • மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.
  • இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
  • அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.
  • கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.
  • பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
  • பொன்னாங்கண்ணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.
  • பொன்னாங்கண்ணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
  • உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.
  • இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது. குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)

Pin It