சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே பாராட்டிய திரைப்படம் என்றதுமே சிடி/டிவிடி யில் வந்தால் இரவல் வாங்கி பார்த்துக்கொள்ளலாம் என்று நான் உஷாராக இருந்திருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களில் சிலர் ஆகா ஓகோ என்று புளகாங்கிதப்பட்டதால் போனேன். பாலாவின் படம் என்பதால் கொஞ்சம் பயத்துடன் தான் போனேன். இந்த படத்தின் யோக்கியதையை அதில் வரும் ஒரே ஒரு வசனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

"கேரளாக்காரன் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டாலும் மூளை நல்லா தான் வேலை செய்யுது"

உடல் ஊனமுற்றவர்களை விலைக்கு வாங்கி அவர்களை பிச்சை எடுக்க வைத்து கொடூரமாகச்சுரண்டி வாழ்கிறது ஒரு கும்பல். அந்தக்கும்பல் தம்மிடம் இருக்கும் மனித சரக்குகளை இன்னொரு கும்பலிடம் பரிவர்த்தனை செய்து கொள்ள பேரத்தில் ஈடுபடுகிறது. இந்த இரண்டு கும்பல்களின் தலைவர்களையும் ஒரு இளம் சாமியார் ஒழித்துக்கட்டுகிறார். கூடவே இந்தக்கும்பலில் இருக்கும் ஒரு கண் தெரியாத பெண்ணுக்கு அவள் செத்த பின்னர் (?) மோட்சம் வேறு கொடுக்கிறார். இந்த சாமியார் வயிற்றுப்பிழைப்புக்காக சாமியார் ஆகும் வழக்கமான தமிழ் நாட்டுச்சாமியார் இல்லையாக்கும். ஹை ஸ்டாண்ட்ர்ட் பெர்சன். அசல் அக்மார்க்/ஐ.எஸ்.ஐ தரம். வட நாட்டிலே அதுவும் புனித கங்கை தூய்மையாக புரண்டோடும் பனாரஸ் நகரத்திலே பிணங்களை எரிக்கும் சுடுகாட்டிலே உருவானவராக்கும் (என்ன பைத்தியக்காரத்தனம்). இந்த சாமியார் தமிழில் பேசுவதை விட இந்தியில் தான் அதிகம் பேசுகிறார் (இந்தியில் டப் செய்தால் வேலை கொஞ்சம் மிச்சமாகலாம். ஒரு வேளை அதற்காகத்தான் இப்படி எடுத்திருக்கிறார்களோ என்னவோ? ). சுற்றி இருப்பவர்கள் புருவத்தை உயர்த்தி வியக்கும் படி அடிக்கடி வட மொழியில் ஸ்லோகம் சொல்கிறார் (பன்ச் டயலாக்). முகத்தில் சாம்பலைப்பூசிக்கொண்டு உடம்பைக்காட்டியபடி தலைக்கீழாக தியானம் செய்கிறார். உலக பந்தத்திலிருந்து விடுபடுவதற்காக அடிக்கடி கஞ்சா வேறு அடிக்கிறார் (கொடுமையடா சாமி). இனி மேல் கஞ்சா முதலிய போதை வஸ்துகளை பயன்படுத்தும் நபர்கள் காவியை அணிந்து சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ரொம்ப வசதி. சட்டமும் போலிசும் ஒன்றும் செய்யாது. மரியாதை வேறு கிடைக்கும்.

இந்தப்படத்தில் பாலாவோடு இணைந்து செயல்பட்டவர் ஜெயமோகன் என்கிற முன்னாள் ஆர்.எஸ்.எஸ் காரர். நினைத்தாலே புல்லரிக்கிறது. இவர் தான் படத்தின் கதைக்கு அடித்தளம் என்றால் இவர் மூளையைக்கொண்டு போய் நிச்சயம் சூளையில் தான் வைக்க வேண்டும். ஜெயமோகன் இதுகாறும் இலக்கியத்துறையில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இப்போது திரைப்படத்துறையில் குதித்துள்ளார். இப்படிப்பட்ட சீடனை பெற்றதற்கு இவருடைய குருநாதர் சு.ராமசாமி நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி மேல் ஜெயமோகன் வழிகாட்டுதலில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வட இந்தியாவில் கஞ்சா அடித்து திரியும் நாக சன்னியாசி/ சன்னியாசினிகளை வைத்து யாராவது ஒரு படம் தயாரிக்கலாம். ஒரு நாக சன்னியாசி தமிழ் நாட்டிற்கு வந்து வில்லனை பின்னிப்பெடலடுக்கும்படி கதையையும் காட்சியையும் வைக்கலாம் (அகத்தியர் தென்பொதிகை வந்து தமிழ் வளர்த்த கப்சா இருக்கவே இருக்கிறது). என்ன அம்மணப்படம் என்று சென்சாரில் பிரச்சினை வரக்கூடும். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் எதற்கும் தயாராகவே இருக்கிறது. இந்தப்படத்தின் இடையில் ஒரு கிறுஸ்த்தவ கன்னியாஸ்திரியைக்காட்டி பைபிள் வேறு படித்திருக்கிறார்கள். இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று தெரியவில்லை. அப்புறம் அளவு கடந்த வன்முறை.

இந்தப்படத்தில் நல்ல அம்சம் என்கிற ஒன்று இருந்தால் அது உடல் ஊனமுற்றவர்கள் மீது கரிசனையை ஏற்படுத்தியது தான். நாம் நம் தினப்படி வாழ்க்கையில் இம்மாதிரியான ஆட்கள் பிச்சை எடுக்கும் நிலையில் காண்கிறோம். இம்மக்களின் பின்புலத்தில் எத்தகைய வேதனை இருக்கிறது, சோகம் இருக்கிறது, கொடூரமான சுரண்டல் இருக்கிறது, அநியாயம் இருக்கிறது என்பதை நாம் நம்முடைய பரபரப்பான வாழ்க்கைச்சூழ்நிலையை தாண்டி உற்று நோக்கி ஆராய்வதில்லை. கண்டும் காணாமல் கடந்து செல்கிறோம். இனிமேல் நாம் கொஞ்சம் நின்று யோசிக்கக்கூடும். இருந்தும் இந்தப்பிரச்சினையை காட்சிப்படுத்தியதில் குறைகள் உண்டு. இம்மக்கள் மனிதர்கள் என்கிற நிலையில் காண்பிக்கப்படாமல் காட்சிப்பொருளாக காண்பிக்கப்பட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்துப்பாடல்களை அங்கங்கே வைத்து தமாஷ் பண்ணியதால் படம் துவண்டு விடுகிறது. மொத்தத்தில் இந்தப்படம் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சினைக்கு தீர்வாக தேசளாவிய இந்து மதவெறித்தனம் அதிகாரம் ஏறுவதை மறைமுகமாக முன் வைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஒரு நல்ல பிரச்சாரப் படம் கிடைத்திருக்கிறது. மூன்றாண்டு காலம் யோசித்து இத்தனை செலவு செய்து உழைப்பை கொட்டி இப்படி ஒரு படத்தை இயக்குனர் பாலா எடுத்திருப்பதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- தமிழ்நெஞ்சம்

Pin It