தைரியலெட்சுமி 1040 மதிப்பெண்களை பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். 4 ஆண்டுகளுக்கு முன்னர். தேர்வு முடிவுகளால் உலகளவில் அதிகமான தற்கொலைகள் நடைபெறுவது நம் நாட்டில் தான். அதிலும் முதலிடம் தமிழ்நாடு தான்.

          Appa movieஇதற்கான காரணங்களை தெளிவான கண்ணோட்டத்தில் அலசி நன்கு படமாக்கப்பட்ட அப்பா திரைப்படம் பல உண்மைகளையும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமின்றி தோலுரித்துக் காட்டுகின்றது.

          உறைவிடப் பள்ளிகளின் கொத்தடிமை முறைகளையும், கல்வி அறங்காவலர்களின் அயோக்கியத்தனத்தினையும் வெளிச்சமிட்டு காட்டும் பிற்பகுதி மிகுந்த கவனமான பகுதியாக அமைந்துள்ளது. தன் குழந்தை இறந்த செய்தியை உடனடியாக பெற்றோரிடம் தெரியப்படுத்தாமல் அவர்களை மருத்துவமனை தோறும் அலைய வைப்பது. விடுதி கண்காணிப்பாளராக அடியாட்களை வைத்திருப்பது. ஆடைகளை அவிழ்த்து மன நெருக்கடி தாக்குதல் நடத்திடும் பள்ளி நிர்வாகம் என அழுத்தமான பதிவு!

           இப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படாது என்பதை அப்பள்ளிகளின் சிறப்பாக குறிப்பிடும் எதார்த்த உண்மை நம் சமூகத்தின் பல பெற்றோர்களின் குரலாகவே பார்க்க இயலுகின்றது.

தம் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் இருந்து சில மாணவர்கள் துரத்தப்படும் நிகழ்கால போக்கினை பதிவு செய்தது பாராட்டுக்குரியது. சொந்தமாக மாணவன் செய்து வந்த மாதிரிக்கு very poor போடும் ஆசிரியை, கடையில் வாங்கி வரும் மாதிரிகளுக்கு good போடுவது..என நம்மிடம் உள்ள போலி மதிப்பீட்டு முறைகளை தோலுரிக்கின்றது.

         ஆசிரியர்களை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக  பதிவுத்தாள் வழங்கும் தனியார் பள்ளி, 499 மதிப்பெண் எடுத்த மாணவனின் மனநிலையினை சிதைப்பது, பெற்றோர்களுக்கான கூட்டம் என்னும் பெயரில் பெற்றோர்களை அவமதிப்பது போன்ற  கல்வி வணிகத்தின் கோரத்தினை படம் பிடித்திருப்பதோடு இன்னும் சில அவசியமான செய்திகளும் கூறப்படுகின்றது,

          1. மூன்றாம் பாலினத்தவர் மீதான நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துதல்.

           2. நீச்சல் பயிற்சியாளராக பெண்ணைக் காட்டுவது.

           3. சாதிய ரீதியான பாகுபாடுகளை களைவது,

           4. எளியவர்கள் செய்யாத தவறிற்காக தண்டனை பெறுவது,

           5. எதிர்பாலின ஈர்ப்பினை நேர்மறையாக கையாள்வது,

            6. தனித்திறன்களை வளர்ப்பதில் உள்ள முக்கியத்துவம்..

            7. மத வேறுபாடுகளை கலைந்த நட்பு

            8. புறத்தோற்ற வேறுபாடுகள் - அவர்களை பாகுபடுத்துதல்.

            9. பதினொராம் வகுப்புப் பிரிவு தேர்வு செய்யும் முறை,

            10. சமூகத்தின் மீது ஏற்படும் நன்னம்பிக்கை

              இது போன்று இன்னும் அதிகமான அளவில் நுணங்கி பார்க்கலாம்.

             ஒரு திரைப்படமாக இளையராஜாவின் இசையும்,ஒளிப்பதிவுகளும் அந்த அளவு கவராவிட்டலும் வசனங்களின் வழியே இரத்தமும் சதையுமாக காட்சிகளை நகர்த்தி உள்ளது மிகப்பெரிய பாராட்டை தர வேண்டியத்தாகும்.

            தந்தையிடம் சொல்ல முடியும் என்ற செயல்களை மட்டுமே செய். சொல்லமுடியாது என கருதும் செயல்களை செய்யாதே!

            சாமியா கொண்டாட வேண்டிய விவசாயிகளை எந்த நிலையில் வைத்திருக்கிறோம்..

             முதல் மதிப்பெண் எடுத்த மாணவியின் இட்டலி கடை நடத்தும் தந்தையின் எதார்த்தப் பேச்சு என அனைத்தும் ஆவணப்படமான ஓர் திரைப்படம்...

             இதை சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசுப்பள்ளி ஆசிரியர்களும் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்திட வேண்டியது அவசியமானதாகும்.

             அப்பாக்களுக்கு மட்டுமல்ல கல்வியாளர்களுக்கும் இப்படம் நல்ல நம்பிக்கையினை ஏற்படுத்தி இருக்கும்.     

-            செ.மணிமாறன், அரசுப்பள்ளி ஆசிரியர், திருவாரூர்

Pin It