2011 திரைப்படங்களில் போதுமான அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்திருக்கும் படம் "நடுநிசி நாய்கள்" எதிர்பார்ப்புகளுக்கு பதில் உரைக்கிறதா? கண்டுபிடிக்கவே இரண்டு மூன்று நாட்களாக மிகவும் சிரமப்பட்டு நேரம் ஒதுக்கி இன்று காலை சென்றிருந்தேன். "வாரணம் ஆயிரம்", "விண்ணைத் தாண்டி வருவாயா" திரைப்படங்களைப் பார்த்து எவராவது கெளதம் வாசுதேவ் மேனனிடம் வித்தியாசமாக முயற்சியுங்களேன் என்று கூறியிருப்பார்கள் போல. 'ரொம்பவே வித்தியாசமாக' முயன்றிருக்கிறார்.
திரைப்படத்தின் கதைக்களம் ஒரு தந்தை மகனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதனால் மகன் எப்படி மன நோயாளியாக மாறுகிறான் என்பதுதான். மன நோயாளியாக மாறிய பின் அவன் செய்யும் பாலியல் வன்முறைகள் அளவுக்கு மீறியே காட்சிகளில் பார்வையாளர்கள் மீது அமிலங்களைத் தெளிக்கின்றன. இவ்வளவு வன்மம் தமிழ் திரைப்படங்களில் வரவில்லையா என்றால் கண்டிப்பாகக் கண்டிருக்கிறோம் அநேக படங்களில். அவ்வன்மங்கள் யாவுமே கதைவளத்துடன் நிறைந்திருக்கும். நான் நடப்பதை யதார்த்தமாக சொல்லுகிறேன் என்பதெல்லாம் வெறும் பேச்சு தான், தேவையற்ற பல வன்மங்கள் இப்படத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. படத்தின் கதாப்பாத்திரங்கள் யாவுமே யதார்த்தமன்றி ரொம்பவே செயற்கையாக நடமாடுகின்றன - குறிப்பிட்ட எவரையும் உதாரணமாகக் கூற இயலவில்லை அவ்வளவு செயற்கை பாத்திரங்கள் மத்தியில். இவ்வளவு பெண்களைக் கடத்தியும் காவல் துறையிடம் சிக்கிக்கொள்ளாமல் சாமர்த்தியத்துடன் செயல்பட்டவன் இப்படி எளிதாக சிக்கிக் கொள்வதற்கான எந்த ஒரு காரணமும் சொல்லப்பட்டதாகவும் தெரியவில்லை.
படத்தின் ஒரே நல்ல விஷயம் ஒளிப்பதிவு, அதுவும் பல இடங்களில் இயக்குநரால் ஒழுங்காக உபயோகிக்கப்படவில்லை என்று அவ்வப்போது நம் முகத்துக்கு நேராகக் கைகாட்டி கொக்கரிக்கிறது. ஏதோ பல காட்சிகளை கோர்வையே அன்றி ஒன்று திரட்டி வெளியிட்டிருப்பதாகவும் ஒரு எண்ணம் தலை தூக்கிக் கொண்டே இருக்கிறது. தாய், தந்தை, காதலி என அனைத்து உறவுகளையுமே தாக்கிச் சின்னாபின்னமாக்கியிருப்பது வருத்தத்திற்கும் எதிர்ப்பிற்கும் உரிய விஷயம்தான்.
பாலியல் கொடுமைகள் ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கும் என்பது இறுதியாகக் காட்டப்பட்டு நிறைவுறுகிறது படம். தந்தையால் பாதிக்கப்படும் ஒரு ஆண் பிள்ளையின் கோபம் (சற்றாவது) ஆண்கள் மீது திரும்பியிருக்க வேண்டும். ஆனால் படத்தில் வரும் எந்த வன்முறையும் ஆண்களை எதிர்த்து இல்லாதது இயக்குநரை உறுத்தவே இல்லையோ? இதனாலோ என்னவோ அந்த மன நோயாளி மீது ஒரு துளி கூட பரிதாபம் காட்ட மறுத்து விடுகிறது மனம்.
படத்தைக் கண்டதிலிருந்து எவ்வளவு முறை முயன்று அலசினாலும் இந்நொடி வரை படம் எதற்காக எடுக்கப்பட்டது என்று புரிபடவே மாட்டேன் என்கிறது. மொத்தத்தில் நடுநிசி நாய்கள் தன்னந்தனியாக ஏதோ ஒரு இருளில் அமர்ந்து குரைத்துக் கொண்டிருக்கட்டும்.
இப்படிக்கு,
கெளதம் மேனனை ரொம்பவே நம்பி ஏமாற்றப்பட்ட ஒரு அபலை ரசிகன்.
RSS feed for comments to this post