கல்லூரிக் காலத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டவர். ரிசர்வ் வங்கியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். 69-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தொடர்ந்து 40 வருடங்களாக கட்சிப்பணி ஆற்றி வருகிறார். 23 வருடங்களாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். சி.ஐ.டி.யு.அகில இந்தியச் செயலாளராக பல வருடங்கள் பணியாற்றியவர், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தோம். நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். அதிலிருந்து.......

W.R.Varadharajanநீங்கள் பிறந்த சூழல் குறித்தும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தது குறித்தும் கூற முடியுமா?

வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ரயில்வே ஊழியராக இருந்தார். வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தான் பட்டப்படிப்பு முடித்தேன். 1967-ல் ரிசரவ் வங்கியில் பணியில் சேர்ந்தேன். அடுத்த 17 ஆண்டுகள் அங்குதான் பணி. அந்தக் காலங்களில் வங்கிப் பணியை செய்தேன் என்பதை விட தொழிற்சங்கப் பணியைச் செய்தேன் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அங்குதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது. 1969ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தேன். அதற்கு முன்பே கல்லூரிக் காலங்களில் தமிழரசு இயக்கம் நடத்தி வந்த ம.பொ.சி.யோடு நெருக்கமான தொடர்பு இருந்தது. எனக்கு இருந்த ஆழ்ந்த தமிழ்ப்பற்று தான் இதற்கு காரணம்.

67ல் தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியில் ம.பொ.சி.போட்டியிட்டபோது அவருக்காக வேலை செய்திருக்கிறேன். தமிழரசு இயக்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசு கழகம், தமிழரசு கட்சி என்று இரண்டாகப் பிரிந்த போது நான் தமிழரசு கட்சியில் இணைந்தேன்.

அப்போது காங்கிரஸ் கட்சியும் சிண்டிகேட், இண்டிகேட் என்று இரண்டாக உடைந்தது. தமிழரசு கட்சி சிண்டிகேட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து விலகினேன். என்னுடைய சின்ன வயதிலேயே காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை நான் எடுத்திருந்ததால் இயல்பாகவே நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தேன்.

1984-ல் வங்கிப் பணியை விட்டுவிட்டு கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்தேன். கட்சியில் சென்னை நகர மாவட்டக் குழு உறுப்பினராகத் தொடங்கி இன்றைக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன்.

இனி என்னுடைய வாழ்க்கை மார்க்சியப் பாதையில் தான் செல்ல வேண்டும் என்று நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது இருக்கிறதா?

தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையை எழுப்பியபோது ம.பொ.சி. அதற்கு எதிரான ஒரு நிலையை எடுத்திருந்தார். அதில் எனக்கு உடன்பாடு இருந்தது. அதே நேரத்தில் சுதந்திரத்தின் கொள்கைகள் அத்தனையும் காணாமல் போனதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று உறுதியாக நம்பினேன். அகில இந்திய அளவில் பார்க்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிதான் தேசிய அக்கறையோடு செயல்பட்டு வந்தது. அதனால் தான் என்னை மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்துக் கொண்டேன்.

இந்தியாவில் கம்யூனிசம் பரவத் தொடங்கி ஏறக்குறைய 100 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. நம் தமிழ்ச் சமூகத்திற்கு கம்யூனிஸ்டுகள் எந்த மாதிரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கம்யூனிஸ்டுகள் தான் மொழிவாரி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால் சில விதிவிலக்கான தருணங்களைத் தவிர பெரும்பாலும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கம்யூனிஸ்டு இயக்கம் இருந்து வந்தது. அது சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயகப் பூர்வமான இயக்கம் இந்திய விடுதலைக்குப் பிறகு தொடங்கியது அல்லது முன்னுக்கு வந்தது என்று தான் சொல்ல முடியும்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டு கட்சி தான் காங்கிரசுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. 1952 ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. ஆளுநரைப் பயன்படுத்தி அவர் மூலமாக ராஜாஜியை தமிழக மேலவைக்கு உறுப்பினராக நியமித்து மாணிக்கவேல் நாயக்கர் போன்றவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் மந்திரி சபையை அமைத்தது.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தோழர் பி.ராமமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ராஜாஜி முதலமைச்சராக நீடித்தார். பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் தலைவராக பி.ராமமூர்த்தி இருந்தார். 57-ல் தான் முதன்முதலாக தி.மு.க.தேர்தலில் போட்டியிட்டது.

கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள்ளேயே இருந்த விரும்பத்தகாத மோதல்கள் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் அதன் இடத்தை பிடித்தது. அண்ணா அன்று வைத்த கோஷம் “சந்தா கம்யூனிஸ்டுக்கு, ஓட்டு கழகத்துக்கு” என்பது. தொழிற்சங்க அளவிலே கம்யூனிஸ்டுகள் பெரிய அளவில் வலுப்பெற்றிருந்த போதிலும் கூட அதிலேயிருந்து பிரித்து தொழிலாளர்களின் அரசியலை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக மாற்ற அண்ணாவால் முடிந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னுக்கு வந்து, கம்யூனிஸ்டுகள் பின்னுக்குச் செல்ல காரணமாக இருந்தது.

திராவிடர் கழகம் தமிழகத்தில் தோன்றிய பிறகு அரசியல் சட்டத்தைத் திருத்தியது, இட ஒதுக்கீடு, சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல சமூக சீர்த்திருத்தங்கள் நடைபெற்றது. இதுபோல தமிழகத்திற்கு கம்யூனிஸ்டுகள் செய்த பங்கைப் பற்றி குறிப்பிட்டுக் கூற முடியுமா?

தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களை குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டியது எங்களது முக்கிய பணி. விவசாயத் தொழிலாளர் சங்கத்திலே இன்றைக்கும் நீடிக்கிற சாதீய ஒடுக்குமுறை அன்று மிகக் கடுமையாக இருந்தது. அந்தக் காலத்தில் கீழத் தஞ்சையிலே கம்யூனிஸ்டுகளுக்கு ‘தாழ்த்தப்பட்ட மக்கள் கட்சி’ என்று முத்திரையே குத்தப்பட்டது.

சமூக ஒடுக்குமுறையோடு சேர்த்து விவசாயிகளுக்கான பொருளாதாரக் கொள்கைகளையும் சேர்த்து தொடர்ந்து இயக்கங்களை கம்யூனிஸ்டு கட்சிதான் நடத்தியது. இயல்பாகவே நிலப்புரபுக்கள் காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியமாகியிருந்த சூழ்நிலையிலே காங்கிரஸ் ஆட்சிக்காலம் முழுவதும் கடுமையான அடக்குமுறையை கம்யூனிஸ்டு இயக்கம் சந்தித்தது. இதில் எண்ணற்ற எங்கள் ஊழியர்களை பறிகொடுத்தோம்.

நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட பிறகுதான் திராவிட இயக்கம் தமிழ்நாட்டிலே காலூன்றி வளர முடிந்தது. நீதிக்கட்சி பாரம்பரியத்திலேயே பெரியார் தொடர்ந்திருந்தால் திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டிலே இத்தகைய செல்வாக்கை பெற்றிருக்காது. திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருக்கக்கூடிய பொதுவான அடிப்படை என்பது பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்.

துரதிருஷ்டவசமாக பெரியார் காங்கிரஸ் மீதான கோபத்தின் காரணமாக இந்திய சுதந்திர நாளை துக்கதினமாக அனுசரித்தார். காங்கிரசின் செயல்பாட்டால் இத்தகைய முடிவுக்கு விரட்டப்பட்டார் என்றே சொல்லலாம். அங்கே நாங்கள் பெரியாரோடு மாறுபட்டோம். சுதந்திரத்தைப் பொறுத்தவரை இது அர்த்தமுள்ள சுதந்திரம் தானா என்ற கேள்வி கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள்ளேயே இருந்தது. இன்றைக்கும் நக்ஸலைட்டுகள் இயக்கம் ‘நாம் வாங்கியது உண்மையான சுதந்திரம் அல்ல, மறைமுகமாக காலனி ஆதிக்க நாடாகத் தான் இன்றைக்கும் இந்தியா இருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.

இதே கொள்கைக்குழப்பம் கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்திலும் இருந்தது. இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகப் பாதையில் நடைபோடத் தொடங்கியதை ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கு என்று நாங்கள் கருதினோம். அதன் வழியில் நாங்களும் செயல்படத் தொடங்கினோம். அந்த வழியில் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை அணி திரட்டுகிற பணியில் வேகமாக செயல்பட்டோம். இன்றைக்கும் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கு அதுதான் அடிப்படையாக இருக்கிறது.

பெரியார் பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி. கம்யூனிஸ்டுகளை ஆதரித்து வந்த பெரியார் சாதியா, வர்க்கமா என்ற கேள்வி வந்தபோது ‘முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்’ என்றார். ஆனால் கம்யூனிஸ்டுகள் கடந்த 2000-த்திற்கு பிறகு தான் இந்த நிலைப்பாட்டை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அதுவரை வர்க்கம் என்றே சொல்லி வந்தார்கள். ஏன் இந்த முரண்பாடு?

முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, வர்க்கமா? என்ற கேள்வி கம்யூனிஸ்டு இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் இடையே ஒரு பெரிய விவாதமாக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இதை தமிழ்நாட்டுப் பின்னணியில் மட்டும் பார்க்க முடியாது. இன்றைக்கு கம்யூனிஸ்டுகள் பெரிய செல்வாக்கோடு இருக்கக்கூடிய கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் சமூக இயக்கங்களுக்கு கம்யூனிஸ்டு கட்சி தான் தலைமை தாங்கியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை துரதிருஷ்டவசமாக கம்யூனிஸ்டு இயக்கம் சமூக சீர்த்திருத்தத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. பெரியார் அந்த இடத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சாதியா, வர்க்கமா என்று வரும்போது சாதிதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாகவே அழிந்து விடும் என்பதும் போன்ற எதிரும் புதிருமான வாதங்கள் திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே இருந்தது.

ஆனால் 2000ம் ஆண்டு வாக்கிலே கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, சமூக விடுதலை போன்றவற்றில் பெரியாரோடு ஒன்றுபட்டோம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டேன். கம்யூனிஸ்டு இயக்கம் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்ட காரணத்தினால் சாதி ஒழிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறோம். இப்போது முழுமையாக அதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டு கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு சினிமாவில் இருந்து திராவிடக் கட்சிகளுக்கு வந்த நடிகர்களும், அதனால் ஏற்பட்ட கவர்ச்சி அரசியலும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே, அது சரியா?

திராவிட முன்னேற்றக் கழகமோ, அதற்குப் பின்னால் வந்த அ.தி.மு.க.வோ இந்த அளவுக்கு வளர்ச்சி பெறுவதற்கு கவர்ச்சி அரசியல் தான் காரணம் என்று கூறி அவற்றின் பாத்திரத்தை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. தமிழ், தமிழ்க்கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் கலை உலகத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின்புலமாக இருந்தது திராவிட இயக்கப் பாரம்பரியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இதே நிலை கேரளாவிலும் ஏற்பட்டது. பிரேம் நசீர் போன்ற நடிகர்கள் அரசியல் கட்சிகளைத் தொடங்க முயற்சித்தார்கள். ஆனால் அது அங்கே எடுபடவில்லை. என்.டி.ராமாராவ் வித்தியாசமாக ஆந்திராவில் வெற்றி பெற முடிந்தது. தமிழ்நாட்டில் கலைத்துறையோடு இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மக்களை ஈர்ப்பதற்கு உதவியது. ஆனால் அது மட்டும் அவர்கள் வளர்ச்சிக்குக் காரணம் கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கட்டத் தலைவர்கள் அனைவரும் பத்திரிகை நடத்தினார்கள். தங்களது எழுத்தால், பேச்சால் ஏராளமான தமிழ்மக்களை தங்கள் பால் ஈர்த்தார்கள். அதுதான் அவர்களது வளர்ச்சிக்கு, 67-ல் கிடைத்த தேர்தல் வெற்றிக்கு அடிப்படை. வெறும் சினிமா கவர்ச்சி என்றோ, வெறும் கலையுலக அரிதாரப் பூச்சு தான் வளர்ச்சிக்கு காரணம் என்றோ ஒதுக்கிவிட முடியாது.

திராவிடக் கட்சிகள் மிகக் குறுகிய காலத்தில் அடைந்த வெற்றியை ஏன் கம்யூனிஸ்டு இயக்கத்தால் சாதிக்க முடியவில்லை?

இதற்கு பல காரணங்களை சொல்ல முடியும். ஒன்று கம்யூனிஸ்டு இயக்கத்திலே இடையறாது நடந்து வந்திருக்கிற தத்துவார்த்த சண்டைகள். இதன் விளைவாக நிகழ்ந்த அடுத்தடுத்த பிளவுகள். இதில் ஏதோ ஒரு பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று சொன்னால் அது ஏதோ அந்த மக்களையோ குறிப்பிட்ட பிரிவின் தலைவர்களையோ மட்டும் பாதிக்கவில்லை. செங்கொடி இயக்கத்தையே முழுமையாக பாதித்தது.

உதாரணமாக மும்பையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்டு கட்சி மிகுந்த செல்வாக்கோடு விளங்கியது. மறைந்த தோழர் எஸ்.ஏ.டாங்கே அங்கு தலைவராக இருந்தார். அவரோடு நாங்கள் வேறுபட்டோம். தத்துவார்த்த சண்டையெல்லாம் நடந்தது. இதனால் அங்கு கம்யூனிஸ்டு கட்சி பின்னடைவை சந்தித்தது. அங்கு நடைபெற்ற தவறுகள் டாங்கேவை மட்டுமல்ல செங்கொடி இயக்கத்தையே பாதித்தது.

தொடர்ந்து செங்கொடி இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றியது. நக்சல்பாரி இயக்கத்துக்குள்ளும் பின்னால் பல பிரிவுகள் தோன்றியதன் விளைவாக ஏராளமான சிறு சிறு குழுக்களாக அவர்கள் உடைந்து போனார்கள். இந்தப் பிளவுகளின் காரணமாக கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் தங்களுக்குள்ளேயே பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தார்களே தவிர அதற்கு அப்பாற்பட்ட மக்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்த முடியாத ஊனம் ஏற்பட்டது.

இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி மாநிலத்திற்கு ஒரு கொள்கையை கடைப்பிடிக்கிறதா? சேலம் ரயில்வே கோட்டமாகட்டும், முல்லைப் பெரியாறு விஷயமாகட்டும், கேரள அரசின் முடிவுகளுக்கு எதிராக தமிழக கம்யூனிஸ்டுகள் எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுப்பதில்லையே?

இப்படி குறிப்பிட்ட பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் முரண்பாடுகள் நிலவுவது போலத் தெரியும். ஆனால் பிரச்சனையே சுதந்திரத்திற்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கத் தவறியது தான். காங்கிரஸ் கட்சி தான் ஏற்றுக்கொண்ட மொழிவாரிப் பிரிவினையை அமுல்படுத்தியிருந்தால் ஸ்ரீராமலு ஆந்திராவிலும் சங்கரலிங்கனார் தமிழகத்திலும் உயிரிழக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இருக்கக்கூடிய எல்லைப் பிரச்சனை என்பது ‘பட்டாஷ்கர் கமிஷன்’ தீர்ப்போடு முடிந்து விட்டது. தேவிகுளம், பீர்மேடு கேரளாவிற்குப் போனது நாஞ்சில் நாடு நம்மோடு வந்தது. திருத்தணியோடு எல்லை நின்று போய் திருப்பதி ஆந்திராவிற்கு சொந்தமானது. ஆனால் கர்நாடகாவிற்கும், மகாராஷ்டிராவிற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை இன்னமும் தொடர்கிறது.

சுதந்திரம் கிடைத்த பத்தாண்டுகளில் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். தீர்வு காணப்படாததால் மாநில வாரியான உணர்வுகள் பெருக்கெடுத்து விட்டன. அகில இந்திய அளவிலே செயல்பட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி 67-ல் உடைபட்டபோது பல்வேறு வட்டாரக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தோன்றின.

காங்கிரஸ் உட்பட தேசியக் கட்சியாக செயல்பட வேண்டிய கட்சிகள் இந்த மாநில, வட்டாரக் கட்சிகளை எதிர்கொள்வதற்காக மாநில உணர்வுகளுக்குத் தூபம் போட வேண்டியதாயிற்று. ஒரு காலகட்டம் வரைதான் கம்யூனிஸ்டுகளால் இதை எதிர்த்துப் போராட முடிந்தது. அதற்குப் பிறகு கம்யூனிஸ்டுகளும் இதை சந்திக்க வேண்டியிருந்தது.

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு அகில இந்திய அளவில் தேசிய நோக்கோடு தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும் பிற கட்சிகளும் இதில் குறுகிய கண்ணோட்டத்தோடு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. இதனால் எங்களது முயற்சி பலனளிக்காமல் போனது. அதன் விளைவுதான் நாம் இன்றைக்கு சந்திக்கக் கூடிய பிரச்சனைகள்.

ஆந்திராவோடு பாலாற்றில் தடுப்பணை கட்டக்கூடிய பிரச்சனை, கர்நாடகாவோடு என்றும் தீராத காவிரிப் பிரச்சனை, கேரளாவோடு முல்லைப் பெரியாறு, சேலம் கோட்டம், நெய்யாறு போன்ற பிரச்சனைகள். இதற்கு எங்களது கட்சியின் அகில இந்தியத் தலைமை இரண்டு மாநிலக் கம்யூனிஸ்டு தலைவர்களோடு பேசி இரண்டு மாநில மக்களிடையே மோதல் வந்துவிடாமல் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

சேலம் கோட்டப் பிரச்சனையை எடுத்துக்கொண்டால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேரள மார்க்சிஸ்ட் எம்.பி.சுரேஷ் தெளிவாகச் சொன்னார். ‘சேலம் கோட்டம் அமைவதிலே எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த முடிவை தன்னிச்சையாக எடுக்காமல் பாலக்காடு கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம், அவர்களது பிரச்சனை என்ன, கோட்டம் பிரிப்பதால் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பது பற்றி பரிசீலனை நடத்திவிட்டு இதைச் செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்’ என்றுதான் குறிப்பிட்டார்.

அந்தப் பரிசீலனை நடத்தப்பட்டிருந்தால் ரயில்வே அமைச்சகத்திலேயே அமைச்சர் ஒரு நிலையும், இணை அமைச்சர் இன்னொரு நிலையும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதுபோன்ற பிரச்சனைகளில் தேசிய நலனை முன்னிறுத்தி இரண்டு மாநில மக்களிடையே இது மோதலாக மாறக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் தான் மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், பி.ஜே.பி. போன்றவை இந்த நோக்கில் செயல்படவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

சேலம் கோட்டம் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கேரள எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரதமரை சந்தித்துப் பேசினார்கள். இதே பிரச்சனை தொடர்பாக தமிழக எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்தனர். ஆனால் இந்தக் குழுவில் தமிழக மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தப் பிரச்சனையில் தமிழக மார்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தபோது எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் கேரள எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரதமரை சந்தித்தது சேலம் கோட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஏற்கனவே இருக்கக்கூடிய கேரளத்தின் கோரிக்கையான, கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு ரயில்வே மண்டலம் ஒன்று அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்காகத்தான்.

இந்த விஷயத்தை கடந்த செப்டம்பர் 4ம் தேதி சென்னை வந்த எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தமிழக முதல்வரை சந்தித்து தெளிவுபடுத்தினார். சேலம் கோட்டம் அமைவதில் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தான் உண்மை.

இலங்கையில் நடைபெறும் ஈழப் போராட்டம், அங்கு ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் பெரும் மௌனம் சாதிக்கிறார்கள். குறைந்தபட்சம் தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களாவது தமிழ் உணர்வோடு இது குறித்துப் பேசியிருக்கலாமே?

தமிழ் உணர்வு என்பது வேறு. இலங்கைப் பிரச்சனை என்பது வேறு. இந்தியாவில் எப்படி நாங்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லையோ, அதே போல் இலங்கை பிளவுபடுவதையும் நாங்கள் விரும்பவில்லை. இதுதான் காலங்காலமாக எங்களின் நிலைப்பாடு.

1980-களிலே இந்தப் பிரச்சனை உச்சத்திலே இருந்தபோது தமிழக மார்க்சிஸ்ட் ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. இலங்கைத் தமிழர்களின் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மாகாணங்கள் அமைவது தான் என்பதை தெளிவாகச் சொன்னோம்.

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலே தமிழக அரசியல் கட்சிகள் ஒரு குழுவாகச் சென்று பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார்கள். இந்தியா தனது ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழத்தை பிரித்து ஈழத்தமிழர்களிடம் கொடுத்து விட்டு இந்தியா வர வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக இருந்தது.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்டுகளுக்கு இந்தக் கோரிக்கையில் உடன்பாடில்லை. எங்கள் இயக்கத் தலைவராக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் இந்திராகாந்தியை தனியாக சந்தித்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினால் தெற்காசிய மண்டலத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகும். இது ஏகாத்திபத்திய தலையீட்டுக்கு வழிவகுக்கும். எனவே இந்தியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக இதற்கு முடிவுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை அதே கொள்கையைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கையில் ஆயுதங்களோடு தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிங்கள அரசோடு சமாதானமாக வாழச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அங்கு அரசியல் தீர்வு எப்படி சாத்தியம்?

தமிழர்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது என்பதும் சிங்கள இனவெறி உச்சத்தில் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் சிங்களர்கள் அனைவரும் இனவெறியர்கள், தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதிலும், தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் என்று சொல்வதிலும் உண்மையில்லை.

இலங்கையில் ஏராளமான ஈழப் பாதுகாப்பு இயக்கங்கள் இருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் அதன் தலைவர்களுக்கு எதிராக வன்முறையைத் தொடுத்தார்கள். சிங்களர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இணையாகவோ கூடுதலாகவோ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் இருக்கும். இதில் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் அடங்குவர்.

W.R.Varadharajanஆகவே பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்பதையோ, ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்டு தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது போன்ற வாதங்களையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கவில்லை. அது தமிழர்களின் நலன்களை பாதிக்கக்கூடிய ஒரு இடத்திற்குத் தான் கொண்டு செல்லும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

தமிழகப் பிரச்சனைக்கே வருவோம். ஏற்கனவே பேசும்போது நாத்திகம், சுயமரியாதை போன்றவற்றில் திராவிடக் கட்சிகளோடு கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடுவதாகக் கூறினீர்கள். திராவிடக் கட்சிகள் அளவிற்கு கம்யூனிஸ மேடைகளில் நாத்திகம் அதிகம் பேசப்படுவதில்லையே ஏன்?

நான் பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவற்றில் பெரியாரோடு ஒன்றுபடுவதாக குறிப்பிட்டேன். நாத்திகம் என்று குறிப்பிடவில்லை. வறட்டுத்தனமான நாத்திகம் சாதாரண மக்களின் உணர்வுகளுக்குப் புரியாத ஒன்று. பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். அவர் ஒரு சிலையை உடைத்ததன் விளைவாக இன்று ஒவ்வொரு தெருவிலும் பிள்ளையார் கோவிலைப் பார்க்கிறோம்.

தமிழகத்தில் முருகன் தான் தமிழ்க்கடவுள். எங்கிருந்தோ வந்த பிள்ளையாருக்கு இங்கு இத்தனை கோவில்கள் வந்தது எப்படி என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பகுத்தறிவு என்பது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். மக்களைத் தெளிவுபடுத்தி அறிவு பெறச் செய்து அதன்பிறகு பகுத்தறிவு கொள்கைகளை சொல்லித் தர வேண்டும்.

திராவிட இயக்கத்தில் இருந்து எங்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள், ‘கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேரலாம் என்கிறீர்களே, இது என்ன கட்சி’ என்று. கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கம்யூனிஸ்டு கட்சிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேரலாம். ஆனால் கட்சியில் சேர்ந்த பிறகு கட்சி அலுவலகத்தையோ அதன் கிளைகளையோ பஜனை மடமாக ஆக்க முடியாது. அவர்கள் படிப்படியாக தங்கள் நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு வர முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம்.

அவர்களிடம் போய் நீ நாத்திகனாய் இருந்தால் தான் அரசியல் இயக்கத்துக்கே வரலாம் என்று முன் நிபந்தனை விதிப்பதை கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகள் தங்கள் வாழ்க்கையில், செயல்பாட்டில் பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது கம்யூனிஸ்டு கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்துத்துவத்திற்கு அடிப்படையாக உள்ள இந்துமதத்தை அழிக்காமல் இந்துத்துவத்தை எதிர்ப்பது எப்படி சாத்தியம்?

இந்து மதம் என்பது வேறு. இந்து மதத்தை பயன்படுத்தி வகுப்புவாதத்தை ஊக்குவிப்பது என்பது வேறு. இஸ்லாமிய நம்பிக்கை என்பது வேறு. முஸ்லிம் பயங்கரவாத குழுக்களின் செயல்பாடு என்பது வேறு. அல்கொய்தா தான் இஸ்லாமியம் என்று நினைத்தால் இஸ்லாம் இந்த மண்ணில் இருந்தே அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு நாம் போய்விடுவோம்.

அதுபோல் தான் ஆர்.எஸ்.எஸ். தான் இந்துமதம் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் போலி இந்துத்துவா பேசுகிறார்கள். மக்களின் மத உணர்வுகளை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். அதை எதிர்த்து நாங்கள் உறுதியாக போராடுகிறோம். அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் தங்கள் மதத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதிலே எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

கம்யூனிஸ்டு கட்சிக்குள் இருப்பவர்கள் நிலைப்பாடு வேறு. ஆனால் வெளியில் உள்ள பொதுமக்களைப் பற்றி பேசும்போது அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறோம். இதில் உறுதியான நிலைப்பாடு எடுக்க முடியாததற்கு சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அரசியல் கட்சிகள், மதச்சார்பின்மை என்ற நிலைப்பாட்டிற்குப் பதிலாக சர்வ மத ஒற்றுமை என்ற நிலைப்பாட்டை எடுத்தது தான் காரணம்.

காந்தி ‘ரகுபதி ராகவ ராஜாராம் ஈஸ்வர அல்லா தேரேநாம்’ என்ற பாடலை சர்வமத ஒற்றுமைக்காக பயன்படுத்துவார். எல்லா வானொலி, தொலைக்காட்சியிலும் ஒரு இந்துப்பாடல், கிறிஸ்தவ பாடல், இஸ்லாமியப் பாடலோடு நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். அப்படி அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டிய இடத்திலே மதத்தை கொண்டு வந்து நிறுத்தியது தான் ஆர்.எஸ்.எஸ்.க்கு விதைநெல்லாகப் பயன்பட்டது. அதை வைத்து அவர்கள் மதவெறியை ஊட்டி, வகுப்புவாதத்தைத் தூண்டினார்கள்.

அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை எதிர்க்கும் நாங்கள் இந்துமத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் எழுதுவதோ, பேசுவதோ, செயல்படுவதோ இல்லை.

இந்துமதம் தன்னளவிலேயே ஏராளமான பிற்போக்குத்தனங்களையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் தானே கொண்டுள்ளது. நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டது தானே இந்துமதம்?

மகாத்மா காந்தி வருணாசிரமத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். இதில் நாங்கள் காந்தியுடன் வேறுபட்டோம். அதை நாங்கள் இன்னமும் தொடர்கிறோம். வருணாசிரமம் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலை சாத்தியமில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை.

வருணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பது வேறு, இந்துமத நம்பிக்கைகளையே கேள்வி கேட்பது என்பது வேறு. துரதிருஷ்டவசமாக இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா கட்சிகள் அவர்களின் வர்ணாசிரம தர்மத்தை திரை போட்டு மறைத்து விட்டு இந்துக்கள் அனைவரையும் ஒரே அணியில் திரட்ட முடியும், வாக்குகளை வாங்க முடியும் என்ற நோக்கிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் நிலைப்பாடு மனு தர்மத்தின் அடிப்படையிலானது. மனு தர்மம், வருணாசிரம தர்மத்தை நிராகரிக்கும் நாங்கள், இந்துமதம் தான் மனுதர்மம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் என்பது பார்ப்பனீயத்திற்கு எதிரானது. ஆனால் அந்த இயக்கங்களையும் வழிநடத்தும் தலைவர்களாக பார்ப்பனர்களே இருக்கின்றனர். கம்யூனிஸ்டு இயக்கங்களிலும் அது தொடர்கிறது. எங்கே போனாலும் பார்ப்பனர்கள் தான் மேலே இருக்க வேண்டும் என்ற மனுதர்ம விதிதான் இங்கும் செயல்படுகிறதா?

கம்யூனிஸ்டு இயக்கத்தின் மீது நீங்கள் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். ஒரு காலத்தில் சென்னையில் இது பார்ப்பான் கட்சி, மலையாளத்தான் கட்சி. கீழத் தஞ்சைக்குப் போனால் இது பள்ளன், பறையன் கட்சி. கம்யூனிஸ்டு கட்சி உருவானதின் பின்னணியிலே தான் இந்த இயக்கத்தின் தலைவர்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. காங்கிரஸ் தேசிய இயக்கத்திலும் தலைவர்களாக சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள்.

நாங்கள் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கிச் செல்ல வேண்டும், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தலைமைப் பதவிகளைத் தரவேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். அதை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கும்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோர் பெரும்பாலும் கல்வி, கலாச்சார குறியீடுகளில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது சுலபத்தில் நடந்து விடுவதில்லை. ஏற்கனவே முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு நெருக்கமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தலைமைப் பதவிகளுக்கு சீக்கிரம் வந்துவிடுவது பொதுவாக நடக்கக் கூடிய ஒன்றுதான். இதை வைத்துக் கொண்டு கம்யூனிஸ்டு இயக்கத்தில் சனாதனிகள் தான் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல.

எங்கள் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை சாதி அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் தமிழகத்து சாதி விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் இங்கும் இருப்பார்கள் என்பது தெரியும்.

நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள். இதை உங்கள் கட்சி உறுப்பினர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். ஆனால் ‘நாம் ஏன் எதிர்க்கிறோம்’ என்கிற தெளிவான அறிவு அவர்களிடம் இருக்கிறதா? அண்மையில் உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியபோது ‘பி.பி.ஓ. என்றால் என்ன’ என்பதுகூடத் தெரியவில்லை. அது என்னவென்பது கூடத் தெரியாமல்...

(இடைமறித்து) இருக்கலாம். 123 ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். நடிகரும், பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவருமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ‘இது வாஜ்பாயின் அணுகுண்டுக்கு எதிரானது’ என்று கருத்து சொல்லிவிட்டுப் போனார். எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

அடிமட்டத்தில் இருப்பவர்களை அரசியல் கட்சிப் பொறுப்புக்கு உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. அப்படி உயருகிறபோது அவர்கள் எல்லாவிதமான அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதீதமானது. அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது வேறு. தெரிந்த பிறகு தான் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆக முடியும் என்பது வேறு.

பொதுவாகவே இந்த நாட்டில் ஒரு போக்கு தென்படுகிறது. அரசியல்கட்சிகளை, அரசியல்வாதிகளை சிறுமைப்படுத்தி ஈனப்பிறவிகளாக காட்டக்கூடிய ஒரு போக்கு ஊடகத்திலே மலிந்து கிடக்கிறது. அது தவறு. தமிழ்நாட்டில் எங்கள் கட்சி உறுப்பினர்களில் 30 சதவீதம் பேர் கல்வியறிவில்லாதவர்கள். ஐந்தாவது வகுப்பைக் கூடத் தாண்டாதவர்கள்.

அவர்களுக்கு உலக வர்த்தக மைய பாதகங்களையோ, 123 ஒப்பந்தத்தையோ விளக்குவது என்பது சிக்கலான காரியம். மற்றக் கட்சிகளோடு ஒப்பிடும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வரை அரசியல் விழிப்புணர்வில் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை. ஆனாலும் சில குறைகள் இருக்கலாம். அதை உணர்ந்திருக்கிறோம். விரைவில் அது சரிசெய்யப்படும்.

இடஒதுக்கீடு சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனை. இதில் கிரிமிலேயருக்கு இடமில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் தமிழ் மாநில அமைப்புகள் தெளிவாக கூறிவிட்டன. ஆனால் அகில இந்திய அளவில் மார்க்சிஸ்டுகள் இதை ஏற்றுக்கொள்வில்லை. இந்த ஒற்றுமையின்மைக்கு என்ன காரணம்?

இட ஒதுக்கீட்டில் எங்கள் கட்சியின் அகில இந்திய நிலைப்பாட்டை ஒட்டித்தான் நாங்கள் எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். கிரிமிலேயர் என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவுலேயே வசதி படைத்தவர்களை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது. பீகார் முதல்வராக இருந்த கர்பூரி தாக்கூர் தான் இதை முன்மொழிந்தார். பீகாரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைத்தார். ‘இட ஒதுக்கீடு என்பது பொதுவாக இருக்கிறது, இதன் பயனை தலித்துகள் அனுபவித்து விட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்களில் பின் தங்கியவர்களான வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு இன்னமும் கிடைக்கவில்லை’ என்று. தி.மு.க. ஆட்சியிலே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

கிரிமிலேயர் எதிர்ப்பு என்பது எங்களால் விளங்கிக் கொள்ள இயலாத ஒன்றாக இருக்கிறது. நாங்கள் தெளிவாக ஒன்றைச் சொல்கிறோம். கிரிமிலேயர் இருந்தாலும் கூட, தலித்துகளுக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு இந்த கிரிமிலேயர் பாகுபாடு கூடாது. அதற்கு சாதி அடிப்படையில் தான் ஒதுக்கீடு தொடர வேண்டும். பிற்படுத்தப்பட்ட்வர்களுக்கு கிரிமிலேயரை அமுல்படுத்தும்போதும் அது அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதிலே போய் முடியக்கூடாது.

முதலில் பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களில் இல்லையென்றால் பிற்படுத்தப்பட்டவர்களில் கிரிமிலேயர் பிரிவினருக்கு அது போய்ச் சேரட்டும். பிற்படுத்தப்பட்டோர் இடத்தில் இருந்து ஒன்று கூட கிரிமிலேயர் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டோர் அல்லாத பொது பிரிவினருக்கு போகக்கூடாது என்பதிலே உறுதியாக இருக்கிறோம். இதை ஏற்றுக் கொள்வதிலே இட ஒதுக்கீடு ஆதரவாளர்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பது விளங்காத ஒன்றாகத் தான் இருக்கிறது.

விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் தலை இருக்கிறவர்கள் எல்லாம் தலைவர்களாகி விடுகிறார்கள். விஜயகாந்த், சரத்குமாரின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் விஜயகாந்த் தன்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தார். அதனால் மட்டும் வறுமை ஒழிந்து விடுமா? வறுமையை ஒழிப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை வைத்துத்தான் மக்கள் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம், ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் மாநில அரசை பாமக கடுமையாக எதிர்க்கிறது.. ஆனால் அரசுக்கு எதிராக சிபிஎம் எந்தவொரு போராட்டமும் நடத்துவதில்லையே, ஏன்?

பா.ம.க.வைப் பற்றிய உங்களின் மதிப்பீடு அப்படி இருக்கலாம். நாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில்தான் அரசின் கொள்கைகளை நாங்கள் பார்க்கிறோம். இன்னொரு கட்சியைப் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ம.க.தலைவர் ஜி.கே.மணியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தமிழோசையில், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக தலையங்கம் எழுதப்பட்டு வருகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் மூலம் மன்மோகன் சிங் நாட்டை வல்லரசாக்க முயற்சிக்கிறார், கட்டுமானத்தை வலுவாக்க முயற்சி செய்கிறார் என்று அதில் எழுதுகிறார்கள். அதுதான் மன்மோகன் சிங் செய்துகொண்டிருக்கும் காரியமா? 123 ஒப்பந்தத்தை தி.மு.க.கூட அவ்வளவு ஆதரிக்கவில்லையே, ராமதாஸ் செய்வது ஏன்?

மன்மோகன் சிங்கின் கொள்கைகள் எல்லாம் சிறந்தவை என்றால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ராமதாஸ் ஏன் எதிர்க்கிறார்? மன்மோகன் ஆட்சி கொண்டு வந்தது தானே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, அதையும் ஆதரிப்பாரா மருத்துவர் ராமதாஸ்?

மத்தியில் ஆட்சியில் பங்கு இருக்கிறது, அதனால் அனைத்து திட்டங்களையும் ஆதரிக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை, அதனால் அரசை விமர்சித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். அதே அளவுகோலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விவகாரத்தில் ராமதாஸ் எதிர்ப்புக்குரல் எழுப்பிய போது, தமிழக முதல்வர் சொன்ன பதில் இதுதான். ‘இது நீங்களும் நானும் சேர்ந்து டெல்லியில் மத்திய அமைச்சரவையில் கேட்க வேண்டிய கேள்வி’ என்று சொன்னார். கேட்டாரா ராமதாஸ்? அது மட்டுமல்ல மத்திய அரசு எடுக்கும் எல்லா முடிவுகளும் அமைச்சரவை கூடி முடிவு செய்யும் விஷயம் தானே. இதில் எந்த முடிவுகளிலாவது மத்திய அமைச்சர் அன்புமணி தலையிட்டு, ‘வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார் என்று பத்திரிகைகளிலாவது செய்தி படித்ததுண்டா? அல்லது ஏதாவது கிசுகிசுவாவது கசிந்ததுண்டா? ஆகவே அந்த அளவுகோலை வைத்து எங்களை ஏன் மதிப்பிடுகிறீர்கள்?

உங்களை அவர்களோடு ஒப்பிடவில்லை. அரசை நீங்கள் விமர்சிப்பதில்லையே என்பது தான் கேள்வி...

கடுமையாக விமர்சித்திருக்கிறோம். சென்னை மாநகராட்சித் தேர்தலில் எங்கள் அளவுக்கு யாராவது விமர்சித்தார்களா? அதில் பாட்டாளி மக்கள் கட்சி பயனாளியாக இருந்தது, அதனால் வாய்மூடிக்கொண்டு மௌனமாக இருந்தார்கள். கூட்டுறவு தேர்தலில் பயன் கிடைக்கவில்லை. அதனால் வாய் திறந்தார்கள். நாங்கள் தான் எல்லாவற்றையும் சரியாக விமர்சித்தோம்.

கடந்த அ.தி.மு.க.தேர்தலில் பொன்னையனின் நிதிநிலை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக சொன்னீர்களே, அது எங்கே போயிற்று என்ற கேள்வியையும் நாங்கள் தான் கேட்டோம். வீட்டுமனைப் பட்டாவிற்கான இயக்கத்தை நடத்துவதும் நாங்கள் தான். அருந்ததியர் மக்களுக்காக நாங்கள் போராடுகிறோமே, பா.ம.க. வாய் திறந்ததா? அரசியல் ஆதாயங்கள், வாக்கு வங்கி அடிப்படையில் நாங்கள் பிரச்சனையைப் பார்ப்பதில்லை.

இந்த ஆட்சி கடந்த ஆட்சியை விட வேறுபட்ட முறையிலே செயல்படுகிறது என்பதைப் பார்க்கிறோம், பதிவு செய்கிறோம். இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தவறிழைக்கிறபோது கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இட ஒதுக்கீடாகட்டும், இன்னபிற சமூக விஷயங்களாகட்டும் அதற்கு எதிரான ஒரு நிலலயைத் தான் உச்சநீதிமன்றம் தொடச்சியாக எடுத்து வருகிறது. இதனால் தான் பெரியாரும் தனி நாடு கோரிக்கையை முன்வைத்தார். உச்சநீதிமன்றத்தின் இந்தப் போக்கு, தமிழ்த்தேசிய கோரிக்கை இவை இரண்டையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த பொருளாதார தாராளமய உலகில் நீதித்துறையும் அதே போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கவலையளிக்கக் கூடிய விஷயம். நம் நாட்டில் நீதிமன்றங்களின் தலையீடு எல்லா இடத்திலும் வரம்பை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சராக, மாநில ஆளுநராக இருந்த பூட்டாசிங், அரசு வீட்டைக் காலி செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. நீதிபதி ‘தூக்கியெறியுங்கள் அவரை (throw him out)’ என்று பதில் சொல்கிறார். ஒரு நீதிபதியின் கண்ணியமான செயல்பாடா அது?

‘எய்ம்ஸ்’ மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக வழக்கு. பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்துங்கள் என்று சொல்ல நீதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ‘24 மணிநேரத்திற்குள் கையெழுத்திடுங்கள்’ என்று மத்திய அமைச்சருக்கு நீதிமன்றம் தாக்கீது பிறப்பிப்பது என்ன நியாயம்? நீதிமன்றம் தங்கள் உயரத்தை வரையறை செய்துகொண்டு செயல்பட வேண்டும். நீதிமன்றத்தை விட மேலானது மக்கள் மன்றம். அந்த மக்கள் மன்றத்துக்கு நாடாளுமன்றம் எப்படி பணிந்து நடக்க வேண்டுமோ அப்படித்தான் நீதிமன்றமும் நடக்க வேண்டும்.

அதேபோல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை திருத்த முடியும். உதாரணமாக வேலை நிறுத்த உரிமை. நீதிமன்றத்தை எதிர்த்து சட்டம் இயற்ற வேண்டும் என்று 2004 முதல் வலியுறுத்தி வருகிறோம். அரசு சட்டம் இயற்ற மறுத்து வருகிறது.

இந்த தாரளமயச் சூழ்நிலையில் தமிழ்நாடு தனிநாடு ஆகிவிட்டால் மட்டும் நீதிமன்றம் சரியாக இயங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அது ஒரு பிரமை அவ்வளவு தான். இப்படிப்பட்ட நீதிமன்ற தலையீட்டுப் பிரச்சனைகள் கியூபா, சோவியத் யூனியன் போன்ற எந்த நாட்டிலும் எழவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் முதலாளித்துவ அமைப்பு. இந்த முதலாளித்துவ அமைப்பு உலகமய பொருளாதாரத்தை தழுவுவதன் வாயிலாக ஏற்படக் கூடிய சிதைவுகள். அதன் ஒரு பகுதியாகத் தான் நீதிமன்றம் செயல்படுகிறது. இதற்கு தனிநாடு தீர்வாக முடியாது.

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் மீது மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. சீனத்தின் மகத்தான தலைவர் மாவோவின் கோஷங்களை அவர்கள் முன்வைத்தார்கள். சீன கம்யூனிசத் தலைவர்களே நக்சல்பாரி இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, ‘மாவோவின் செயல்பாடுகள் இந்திய நாட்டிற்கு ஒத்துவராது’ என்று சொன்னதாக எங்களுக்கு தகவல் உண்டு.

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லாதது தான் அவர்கள் இப்படி தனித்தனிக் குழுவாக பிரிந்து செயல்படுவதற்குக் காரணம். நாடாளுமன்றங்கள் வெறும் பன்றித் தொழுவங்கள் என்று லெனின் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த இயக்கங்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்தி விட முடியாது.

புரட்சியின் மூலம் சோஷலிசத்தைக் கொண்டு வருவதற்கு புறச்சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறதா, மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மதிப்பீட்டை உணர்ந்த பல நக்சலைட் இயக்கத் தோழர்கள் எங்களோடு இணைந்திருக்கிறார்கள்.

சிபிஎம்க்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரங்களை மக்கள் கலை இலக்கியக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே பரிமாற்றங்களை நடத்திக் கொள்கிறார்கள், அதைத் தாண்டி மக்களிடம் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதே போன்றுதான் ம.க.இ.க. எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துகிற அளவுக்கு, மார்க்சிய சித்தாந்த்தை மக்களிடம் கொண்டு செல்வதில் செலுத்தியிருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகச் சுலபமான வேலை.

உலக சமூக மாமன்றத்தை மும்பையில் நடத்தினோம். உலகமயத்தை எதிர்க்கும் பல்வேறு இயக்கங்கள் அதை நடத்தின. மாற்று உலகம் சாத்தியம் என்ற நம்பிக்கையிலே உலகமயத்தை எதிர்த்து அந்தப் போராட்டத்தை நடத்தினோம். அதை எதிர்த்து ‘ஆப்பக்கடைக்கு எதிர்க்கடை போடுவது போல’, அதிதீவிரம் பேசக்கூடிய நக்சலைட் இயக்கங்கள் எங்களுக்கு எதிராக போட்டி சமூக மாமன்றத்தை நடத்தினார்கள். அதை வேறு நாட்களிலோ, அல்லது வேறு நகரத்திலோ நடத்தியிருக்கலாம். நடத்தவில்லை, அங்கேயே நடத்தினார்கள்.

அந்த மாநாட்டிலே விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடந்தது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது என்பது வேறு விஷயம். ஆனால் அதை வைத்துக் கொண்டு அந்த மாநாட்டையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் எந்தளவிற்குத் தரக்குறைவாக பேசினார்கள் என்பது, நான் திருப்பிச் சொல்லும் அளவுக்கோ, உங்கள் இணையதளத்தில் வெளியிடும் அளவிற்கோ கண்ணியமானதல்ல. மார்க்சிஸ்டுகளைத் தாக்குவதற்கு மட்டும் இவர்கள் இயக்கம் நடத்துவார்களேயானால் அதனால் பாதிக்கப்படுவது இடதுசாரி கருத்தோட்டமும், மார்க்சிய சிந்தனையும் தானே தவிர நாங்கள் அல்ல.

ஆந்திராவில் நிலத்திற்குப் பட்டா கேட்டு போராடிய இடதுசாரிகள் மீது நடந்த தாக்குதலில் பலர் பலியானார்கள். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திலும் பலர் பலியானார்கள். ஆந்திராவில் போராட்டம் நடத்தியது கம்யூனிஸ்டுகள். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பது கம்யூனிஸ்டுகள். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே?

நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பிரச்சனையே எழவில்லை. ரசாயனத் தொழிற்சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை தேர்ந்தெடுத்தது மத்திய அரசு. மத்திய அரசின் குழு நந்திகிராம் சென்று அங்குள்ள பஞ்சாயத்து தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது. இந்த விஷயத்தை அப்படியே திரித்து விட்டார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைய வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதாகவும், அதை மக்கள் எதிர்ப்பதாகவும் சித்தரித்து விட்டார்கள்.

இந்தப் பிரச்சனைகளுக்கு இரண்டு மாதம் முன்பு மேற்கு வங்க முதல்வர் நந்திகிராமுக்கே நேரடியாகச் சென்று இது மத்திய அரசின் ரசாயனத் தொழிற்சாலைத் திட்டம், இதை மக்கள் விரும்பாவிட்டால் இங்கே அமையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் நந்திகிராம் எதிர்ப்பு இயக்கம். உலகம் முழுவதும் கம்யூனிசம் வலியுறுத்துவது விவசாயப் புரட்சிக்கு அடுத்தபடியாக தொழிற்புரட்சி என்பது தான். ஒரு முதலாளித்துவ மத்திய அரசின் கீழ் இருந்து கொண்டு ஒரு மாநில அரசால் எந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இந்தத் தலைமுறையினர் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களையும் விவசாயத்தோடு கட்டிப்போடக் கூடாது, அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற சிறு முயற்சியைக் கூட ஒரு அரசு செய்யக்கூடாதா? இதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர, இதை வைத்துக் கொண்டு மார்சிஸ்ட் அரசை சிறுமைப்படுத்துவது தவறானது.

சங்கர்ராமன் கொலை வழக்கில் தொடர்புடைய விஜயேந்திரனை கர்நாடக எல்லைக்கு போய் அழைத்து வந்தவர் இந்து ராம். அவர் தொடர்ச்சியாக மார்க்சிய மேடைகளில் பங்கு பெறுவது எதனால்?

இந்து ராம் ஒரு பத்திரிகையாளர். அவர் எடுக்கும் நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக இருந்தால் அவரை பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? எங்களை விமர்சிப்பவர்கள், காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள் இறந்தபோது அவருக்கு இரங்கல் செய்தி அனுப்பாத கட்சிகள் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், திராவிடர் கழகமும்தான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். மற்ற எல்லாக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இரங்கற்பா வாசித்தன.

இந்து ராம் காளஹஸ்தியில் போய் விஜயேந்திரரை அழைத்து வந்தது அவரது சொந்த விஷயம். அதற்கும் சிபிஎம் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்து ராம் சிபிஎம் உறுப்பினரா?

நிச்சயமாக இல்லை. அவரை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.

சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் சிலர் சுயசாதியிலேயே திருமணம் செய்துகொள்வது, வரதட்சணை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த பிற்போக்குத்தனங்களைக் களைவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

வரதட்சணை, சாதி போன்ற சமூக சீர்கேட்டுக்கு எதிராக உறுப்பினர்களை வழிப்படுத்த மத்திய நெறிப்படுத்தும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம்.

கட்சிக்குள் வருபவர்கள் இந்த சமுதாயத்தில் உள்ள சீர்கேட்டை சுமந்து கொண்டு தான் வருகிறார்கள். அவர்களை சீர்ப்படுத்தி சிறந்த கம்யூனிஸ்டாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். சிறுபகுதி சிக்குண்டு கிடக்கலாம். அவர்களையும் விடுவிக்க முயற்சி செய்வோம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, பொதுமக்களில் பெரும்பாலோனோர், ‘இவங்களுக்கு வேணும்யா’ என்ற கருத்துநிலையில்தான் இருந்தனர். அந்தளவுக்கு அரசு ஊழியர்களால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டிருந்தனர். இந்த அரசு ஊழியர் சங்கங்களில் பெரும்பாலானவை கம்யூனிஸ்டு கட்சிகளோடு தொடர்புடையவை. தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறும் அரசு ஊழியர்கள் தங்களது கடமைகளைச் செய்கிறார்களா? இதை கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படி சுட்டிக் காட்டுகிறது?

நாங்கள் எங்கள் சங்க ஊழியர்களிடம் சொல்வது இதுதான், ‘அரசுத்துறைகளை தனியார்மயமாக்குவது அரசின் நோக்கம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யாமல் மக்கள் வெறுப்பை சம்பாதித்தால் அரசின் நோக்கம் எளிதில் நிறைவேறுவதற்கு நீங்களே உதவுவதுபோல் ஆகிவிடும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை எதிர்க்கும் உங்களது போராட்டமே உங்களது வேலைக்கலாச்சாரத்தால் ஊனப்படுகிறது’ என்பதைத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

மத்தியில் காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை விலக்கினால் பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதால் காங்கிரஸை ஆதரிக்கிறீர்கள். இந்த இரண்டையும் தவிர்த்து மூன்றாவதாக கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத ஒரு மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நீண்டநாள் கோரிக்கை. இந்த நாடாளுமன்றத்திற்கு உட்பட்டு அப்படி ஒரு ஆட்சியை அமைப்பது இப்போது சாத்தியமில்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். அந்த மூன்றாவது அணி மாற்றுக் கொள்கையின் அடிப்படையில் மக்கள் ஆதரவோடு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இது உடனடியாக நடைபெறாவிட்டாலும் நாட்டு நிகழ்வுகள் அதை நோக்கி தள்ளிக்கொண்டு இருக்கின்றன. நிச்சயம் அப்படி ஒரு மூன்றாவது மாற்று உருவாகும். இந்தியா முழுவதும் மார்க்சிஸ்டுகள் தலைமையிலான ஒரு ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் அது கைகூடவில்லையே என்ற ஏக்கமும் இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிற்கும் மாற்று அரசாக ஒன்று அமையும் வாய்ப்பு இருக்கிறதா?

தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு மாற்றாக இடதுசாரிகளின் ஆட்சி தமிழகத்தில் அமைவது உடனடியாக சாத்தியமில்லை. தமிழகத்தில் எங்களது கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்தே மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். மக்கள் தான் அதை நோக்கி எங்களை அழைத்துச் செல்ல முடியும்.

இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் நீங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறீர்கள். இந்த ஒப்பந்தம் என்னமாதிரியான பாதகங்களைக் கொண்டிருக்கிறது?

சுதந்திர இந்தியாவின் 60 ஆண்டுகால வரலாற்றில் தன்னுடைய நாட்டை மற்றொரு நாட்டின் சட்டத்துக்கு உட்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தை இதுவரை யாரும் செய்ததில்லை.

W.R.Varadharajanஇந்த ஒப்பந்தம் நிறைவேறி விட்டால் அடுத்த ஆண்டே நம்முடைய மின்சாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதும் பொய்யானது. அணுமின் நிலையத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கு 12 முதல் 15 வருடங்கள் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக எத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்கிறோம்? அது செயல்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று செய்திகள் சொல்கின்றன.

இன்றைக்கு மத்தியில் இருக்கக்கூடிய கூட்டணி அரசு ஒரு சிறுபான்மை அரசு. இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடையாது. மன்மோகன் சிங் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது.

அன்றைக்கு பா.ஜ.கவின் அணு ஆயுதச் சோதனையை தடுத்து நிறுத்தும் வலிமை அப்போது எங்களுக்கு இல்லை. ஆனால் இன்றைக்கு எங்கள் ஆதரவு இருந்தால் தான் ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் எங்கள் கருத்தைப் புறந்தள்ளி விட்டு அரசு நிர்வாக ரீதியாக ஒரு முடிவை எடுக்கும், அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.

இன்றைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அணுசக்தி ஒப்பந்தந்தை எதிர்க்கிறார்கள். நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை அரசு ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை.

சர்வதேச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைமை நீடிக்கிறது. உலகின் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச ஒப்பந்தங்களை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற முடியாது. அதை ஏன் இந்தியா ஏற்கக்கூடாது என்பது தான் எங்களது கேள்வி.

அணுசக்தி ஒப்பந்தம் என்பதைத் தாண்டி நீண்டகாலத்திற்கு அமெரிக்காவிற்கு இந்திய ராணுவத்தை அடகுவைக்கும் செயல் இந்த ஒப்பந்தம். கூட்டுசேரா நாடுகளின் ஒப்பந்தத்தை மீறி அமெரிக்காவிற்கு நாட்டை அடகுவைக்கும் ஒரு நிலைக்கு தான் இந்தியாவை கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவுடன் கூட்டு என்பதால் அதை நாங்கள் வெறுமனே எதிர்க்கிறோம் என்று கூறுவது மிகவும் தவறானது.

ஜவஹர்லால் நேரு காலத்திலும், இந்திராகாந்தி காலத்திலும் காங்கிரஸ் எடுத்த முடிவு என்பது இந்தியா அமெரிக்காவின் நேட்டோ ராணுவ ஒப்பந்தத்திலும் சேராது, சோவியத் யூனியனுடன் வார்சா ஒப்பந்தத்திலும் சேராது என்பதுதான். நாங்கள் அதை ஆதரித்தோம். அதே நிலைப்பாட்டை இப்போதும் தொடர்கிறோம். அதிலிருந்து பிறழ்ந்து பாரதீய ஜனதாக் கட்சி ஆரம்பித்து வைத்த இடத்திற்கு இவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

தன்னுடைய சொந்த நாட்டிலேயே மக்களிடம் செல்வாக்கை இழந்து செல்லாக்காசாகி விட்டவர் ஜார்ஜ் புஷ். அவரை நம் பிரதமர் ஆரத் தழுவிக் கொள்வதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா கூட்டுசேரா நாடுகளின் நட்பை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், எந்த நாட்டுடனும் ராணுவக் கூட்டு செய்யக் கூடாது என்பதில் நாங்கள் பிடிவாதமாக இருக்கிறோம்.

இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்று சொல்வதை விட உலகத்தில் எல்லா நாடுகளிலும் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன என்று சொல்வதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். இந்தியா ஒரு வல்லரசாக இருப்பதை விட நல்லரசாக இருப்பது தான் சிறந்தது.

இந்த மாதிரியான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஊடகம் ஒரு வலிமையான ஆயுதம். ஆனால் தமிழகத்தில் இடதுசாரிகள் ஊடகத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. கட்சிப் பத்திரிகையான தீக்கதிர் கூட மிகவும் குறைவாகத்தானே விற்பனை ஆகிறதே?

இடதுசாரிகளின் பலத்துக்கு ஏற்பத் தான் ஊடகங்களில் இடதுசாரிகளின் தலையீடும் இருக்கமுடியும். இப்போது எங்களுக்கு இருக்கும் சக்திக்கு குறைவாக நாங்கள் செயல்படவில்லை. பத்திரிகை, சிறு பிரசுரங்கள், கலைக்குழுக்கள் மூலமாக தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். இதை இன்னும் அதிகப்படுத்தவும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

தீக்கதிர் பத்திரிகையிலும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மலர்கள் வெளிவருகின்றன. ‘மதம் மக்களுக்கு அபின்’ என்ற கருத்துடைய இடதுசாரிகள் இவ்வாறு சமரசம் செய்துகொள்வது சரியா?

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடுவார்கள். அது ஒரு மத நம்பிக்கை என்பதை விட பண்பாட்டுத் திருவிழா என்ற வகையில் அது முக்கியத்துவம் பெறும். அப்படித்தான் இந்த திருவிழாக்களை பார்க்கிறோம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சிறப்பிதழ்களையும் பார்க்கிறோம். அதிலே என்ன கருத்துக்களைச் சொல்கிறோம் என்பது தான் முக்கியம். மதக் கருத்துக்கள் எதையும் நாங்கள் சொல்வதில்லை. அதுமட்டுமல்லாமல் வணிக ரீதியாக எங்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இந்த சிறப்பிதழ்கள் உதவி செய்கின்றன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ‘ஆற்றிலே நின்று அரோகரா என்றாலும் சோற்றிலே இருக்கிறான் சொக்கப்பன்’ என்பது எங்களுக்கு மட்டும் பொருந்தாத பழமொழியா?

கடைசியாக ஒரு கேள்வி. மார்க்சியத் தலைவர்கள் மிக எளிமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் பேசுவது எளிமையானதாக, தொண்டர்களுக்குப் புரிவதாக இருப்பதில்லை. இது ஏன்?

என்ன செய்வது நாடு சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை நாங்கள் பேசித்தானே ஆக வேண்டியிருக்கிறது. இந்த 123 ஒப்பந்தம் கூட நூற்றுக்கு 99 பேருக்குப் புரியவில்லை. அதற்காக அதைப் பேசாமல் இருக்க முடியாது. எளிமையான தொழிலாளர்களுக்காக அவர்களின் பிரச்சனைகளை புரிந்தும் போராட வேண்டியிருக்கிறது, அதே நேரத்தில் சர்வதேச பிரச்சனைகளிலும் தலையிட வேண்டியிருக்கிறது. இந்த இரண்டையும் சரியாக இணைப்பதில் தான் எங்களது வெற்றி இருக்கிறது.

கம்யூனிஸ்டு ஆவதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது. ஒருவன் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்ததால் மட்டும் கம்யூனிஸ்டு ஆக முடியாது. கம்யூனிசத்தை புரிந்து கொண்டு கம்யூனிஸ்டாவதற்கும், வாழ்நாள் முழுவதற்கும் கம்யூனிஸ்டாகவே வாழ்வதற்கும் அவன் மிகப்பெரிய போராட்டத்தை தனக்குள்ளேயே நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டம் நிறைவேறும்போது உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். 

உ.ரா.வரதராஜன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -நேர்காணல்: மினர்வா & நந்தன்

வாசகர் கருத்துக்கள்
Sithiraputhiran
2007-09-24 07:35:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//கடைசியாக ஒரு கேள்வி. மார்க்சியத் தலைவர்கள் மிக எளிமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் பேசுவது எளிமையானதாக, தொண்டர்களுக்குப் புரிவதாக இருப்பதில்லை. இது ஏன்?//

while reading this interview, i felt the same , u correctly asked this in the last :)

i dont know whether i am not inteligent enough to understand CPIM communism or they are still unclear abt what they are doing?

gavaskar
2007-09-24 07:40:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உ.ரா.வரதராஜன் அவர்களின் நேர்காணலில் கூறியுள்ள கருத்துகளில் பலவற்றை ஏற்றுக் கொள்வதாக உள்ளது. குறிப்பாக மகஇக பற்றி அவர் கூறியிருப்பது சாலப்பொருத்தம். அதேபோன்று பாமகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். ஒருபோதும் கம்யூனிஸ்ட்டுகள் குறுகிய சிந்தனையோடு செயல்படமாட்டார்கள் என்பதை உதாரணங்களோடு கூறியுள்ளார்.


சில பிரச்சனைகளில் தவறான சிந்தனையை திராவிட கட்சிகளும், ஓட்டுக்காக தேசிய கட்சிகளும் பரப்பிவிட்டுள்ளன. அவற்றை கம்யூனிஸ்ட்டுகளால் எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டதையும் ஒளிவுமறைவின்றி கூறியிருக்கும் தைரியம் வேறு கட்சி தலைவர்களுக்கு இல்லாத ஒன்று. 


இந்த நேர்கணாலில் கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக அரசால் அரசு ஊழியர்கள் பழிவாங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "பொதுத்துறையை எதிர்க்கும் உங்களது போராட்டமே, உங்களது வேலைக்கலாச்சாரத்தால் ஊனப்படுகிறது" என்று கூறியதாக வந்துள்ளது.


அநேகமாக உ.ரா.வரதராஜன் அவர்கள் "பொதுத்துறை தனியார்மயமாவதை எதிர்க்கம் உங்களது போராட்டம், உங்களது வேலைக்கலாச்சாரத்தால் ஊனப்படுகிறது" என்றுதான் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

editor
2007-09-24 07:57:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கவாஸ்கர், நீங்கள் குறிப்பிட்டிருந்தது எங்களது பிழைதான், அவர் கூறியது அல்ல. அதை திருத்தியுள்ளோம். தங்களது மேலான கருத்துக்கு நன்றி

thiruselvan
2007-09-24 08:22:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Respected sir,
I have read this article. very fine and usefull message.
Thanking you
thiruselvan

S.Kannan
2007-09-25 11:28:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Dear Editor, It is wonderful interview, there are so many concern on left parties especially on CPIM. Though there was some provocations, W.R. Varadharajan took it as casual and serious in his answer it was reflected.
Any way it is covered the whole under standing on Dravidian parties , left parties and ultra left parties.

Vijayan
2007-09-26 09:30:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Excellent Interview!. I must appreciate Keetru first rather than WRVaradharajan, because Keetru has did it well, behaved responsibly but at the same time doses't make any compromise on its questions. It is the time to learn from Keetru's interviewer as how to conduct a interview with a political leader. It is good that the interviewer doen't provoke the interviewee as it is in prarctice in any form of interview or sycophance .

C.Prabakaran, Lucknow
2007-09-26 01:32:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

One of the excellent interview with lot of insight. Amazine foresight. Wonderful historical sense. Keetru did a exordinary job by bringing this interview into limelight.

S.Vijayan
2007-09-26 03:29:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திரு உ.ரா. வரதராஜன் அவர்களுடைய நேர்காணலைப் படித்தவுடன் என்னுடைய கருத்தை பதிவு செய்ய நினைத்தேன். அப்போது தமிழ் தட்டச்சு வசதி இல்லாதால் ஆங்கிலதில் பதிவு செய்தேன். முதலில் ‘கீற்று‘க்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன். ஏனென்றால் அரசியல்வாதி என்றால் ‘பீடை‘ என்ற எண்ணத்தை விதைத்து விட்ட காலத்தில் நல்ல அரசியல்வாதியை அடையாளம் காட்டியதற்கு பாராட்டு. சினிமா என்றால் மோசம் என்ற நிலையில் நாம் தவமாய் தவமிருந்து அவ்வப்போது ‘தவமாய் தவமிருந்து‘ போன்ற படங்கள் ஆயிரத்தில் ஒன்று வருவது போன்று, திரு வரதராஜன் போன்றவர்கள் கொள்கைத் தெளிவுடனும், பிரச்சனைகள் மீது தான் அல்லது தான் சார்ந்த கட்சி எடுக்கும் ஒவ்வொரு முடிவையும், முரண்பாடில்லாமல் விளக்கி, பொதுமக்களை ஏற்றுக் கொள்வதற்கு முயற்சி எடுக்கும் அரசியல் ஆயிரத்தில் ஒன்றாகத்தான் அமைகிறது. எந்த பிரச்சனையையும் அரசியல் தீர்வு இல்லாமல் தீர்க்கப்பட முடியாது என்பது என் கருத்து. அரசியல்வாதி இல்லாமல் அரசியல் இல்லை

gnanaguru
2007-09-27 01:26:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

very much impressive,but onething differ that the cpm has not taken much interest to clinch the struggle anti fudel with anti castism

Sundhar
2007-09-28 05:06:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Very good interview, that I read in recent times. We expect such series of interviews in Keetru. Create a wonderful open fourm for political discussion.
Good work. Keep it up

s_veeramani
2007-09-28 11:35:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Interview is very good. Nowadays, media friends are very eager to be the subservient instruments of MNCs and imperialism. while interviewing Sitaram Yechury,we all saw how did IBN-CNN behave. But, Keetru asked questions in a natural way and published the answers fully. 
Any one can criticize the communists and communist movements. But all cannot become communists and especially a good communist. In India, in one state (West Bengal), the CM is receiving his allowances of Rs.3000 + per mensem only and is living within that allowances. How many of the people know such things?

A R RAJAN
2007-09-28 04:43:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Penetrating questions. Lucid and clear answers. Excellent interview.

s.g.ramesh babu
2007-10-03 09:45:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

முதலில் கீற்றுக்கு நன்றி..
மிகவிரிவான, நிதானமான பேட்டியை அரசியல் கடமையோடு வெளியிட்டதற்காக. தெளிவாக நிலைப்பாடு எடுக்கும் மார்க்சிஸ்டுகளை குழப்பவாதிகள் என்று சிறுமைபடுத்தி நமது ஊடகங்கள் கொச்சை படுத்தும் நிலையில் (உதாரணம்: 123 பாதங்கங்களை கூறினால் மத்திய அரசை கவிழ்க்க இடதுசாரிகள் சதி என்று தலைப்பு செய்தி போடுவது) அரசியல் அக்கறையுடன் இந்த நேர்கானலை வெளியிட்டுள்ளீர்கள். சாதி வர்கம் குறித்த பகுதி மிகவும் பயனுள்ளது. இப்படிபட்ட நேர்கானல்களை கீற்றில் தொடர்ந்து எதிர்ப்பார்கிறோம்.

Unmaiyana Communist
2007-10-06 04:55:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Aiyya yen eppadi poi solreenga. சீதாராம் யெச்சூரி thalamaiyil kerala MP pesiyathu salem division border thane, puthiya thittam patri pesa villai. communistgal kovail-l mullai periyaru visayathil kerala-ku support ta piracharam seithanga. Kovai poruthavarai engu irrupathu
COMMUNIST PARTY OF MALAYALIST (CPM)
Tamil eelam - Pirivinaiya? Che & Ang sang sui na viduthalai porattam tamilan poradinal Piriviniya? Srilanka-la JVP yennum ena veri katchi thane entha communist kalin nanban. TAMILARAI KOLLUM JVP UNGALUKKUM ENNA RELATIONSHIP... SOLLUNGA AIYAA.
Every year they Invite JVP member for communist function.... communist always tamil, tamilargalukku yethirigal thane....
Aiyya pothum ungal poli muga moodiyai kalatti veesungal. eniyum engalai yematra mudiyathu. Ungal seyal padu eppai tamil & TAMIL makkalukku yethira irrunthal seekiram poli communist tamil nattil irrunthu thooki yeriya paduveergal! - Unmaiyana communist

raja
2007-10-06 04:58:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Communist-gal Lenin sonnathai maranthu vittargal ellai yendral eelam patri eppadi pesa mattargal. "Engay irrandu engal ondraga vala mudiya villai yo kandippaga avargal pirinthu than suya nirnaya urimaiyai nilai natta vendum" - Lenin
Poly communist-galay viravil viratta paduveergal. neengal tamil makkalin virothigal

viji
2007-10-06 05:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

"வணிக ரீதியாக எங்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இந்த சிறப்பிதழ்கள் உதவி செய்கின்றன " ada parunga communist party now Communist party LTD., nu mariduchu. Ramzan, deepavali, Christmas malar kuda... eni Rajini pirantha nal malar, Asin kavarchi padam elavasa enaippu nu podunga sir ennum nalla kasu kidaikum. best idea "kavarchi kanni" "ullasam" eppadi oru elavasa enaippu podunga sales pichuttu pogum......

saravanan
2007-10-10 09:48:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

keetru matter

m ravichandran
2007-10-13 01:02:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

The interview with com wrv is notable for the key questions asked and for the comprehensive replies given. The questions appear provocative but need to be asked 
. Com WRV did not let go of a good opportunity to make the cpm position clear.
on the whole some serious stuff to ruminate on , and thank u for the same keep it up.
M Ravichandran 09444 381337

P.Aravind
2007-11-04 06:44:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I joined RBI along with Mr W.R.Varadharajan in late 1969 and we had moved very close. We joined the trade union movement at the same time. But due to various reasons we had gone in opposite directions. But I sdmired him then and admire him now for clarity in his thoughts and conviction in his deeds. He was perhaps the only person who followed what he preached, or rather belived, literally in his life. 

I have lost contact with him ever since he left RBI. Is it possible to get his email address so that I can re-establish my contact with him. This ofcourse is if he also desires so.

Thanks - P.Aravind

R.Elangovan
2007-11-29 04:24:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I got a lot of information about Communists from the above reading. Their complete understanding with the issues that affect our Nation as a whole. They deserve to rule our country. Thanks a lot.

charathan
2007-12-17 09:57:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

not practical views, rather aristocratic views

விடுதலை
2008-08-22 06:10:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//ம.க.இ.க. எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துகிற அளவுக்கு மார்க்சிய சித்தாந்த்தை மக்களிடம் கொண்டு செல்வதில் செலுத்தியிருக்கிறதா என்றால். இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகச் சுலபமான வேலை. //
சரியான கனிப்பு மகஇக போன்ற அமைப்புகள் .தொடர்ந்து சிபிஎம்யை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் தவறான கருத்துகளை பரப்புவதில் ஆர்வம் காட்டுதன் நோக்கம் அது சீர்குலைவு வாதத்தின் மூலம் யாறுக்கு நன்மை செய்துவருகிறது முழுக்க முதலாளித்துவ கைகூலியாக செயல்படுவதாகவே கருதவேண்டி இருக்கிறது.

sathyamoorthy
2008-08-22 08:18:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

spoke the reality

mani
2008-12-31 05:12:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. sorry pa avangataan communist neenga psudos. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. makkalukku vaal pidikka mudiyaathu. சீனத்தின் மகத்தான தலைவர் மாவோவின் கோஷங்களை அவர்கள் முன்வைத்தார்கள். சீன கம்யூனிசத் தலைவர்களே நக்சல்பாரி இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, ‘மாவோவின் செயல்பாடுகள் இந்திய நாட்டிற்கு ஒத்துவராது’ என்று சொன்னதாக எங்களுக்கு தகவல் உண்டு. ithukku peruthaan avathooru thozaa

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லாதது தான் அவர்கள் இப்படி தனித்தனிக் குழுவாக பிரிந்து செயல்படுவதற்குக் காரணம். if a party divide how you said that they havnt clear about ideology.நாடாளுமன்றங்கள் வெறும் பன்றித் தொழுவங்கள் என்று லெனின் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த இயக்கங்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்தி விட முடியாது. waitmaa..why r u going fast.. is it ok for india or not.. tell ma

புரட்சியின் மூலம் சோஷலிசத்தைக் கொண்டு வருவதற்கு புறச்சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறதா, மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மதிப்பீட்டை உணர்ந்த பல நக்சலைட் இயக்கத் தோழர்கள் எங்களோடு இணைந்திருக்கிறார்கள்.for your information. it is taken fron john reed book. in 25th nov. 1917 lenin spoke in farmer soviet "makkalin unarvu mattam anumathikkail maathiramae puratchi nadatha mudiyumentraal kurainthathu oru 500 aandukalukkaavathu nammaal puratchiai kaana mudiaathu". it is for left socialist revolutionaies in russia.
//

mani
2009-01-09 01:36:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !

Baappu
2009-01-22 02:25:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தோழர் உ.ர.வரதராஜன் அவர்களுடன் கீற்று நடத்திய அருமையான இந்த நேர்காணலை கடந்த 2007 லேயே படித்து விட்டிருந்தாலும் கருத்து எதுவும் பதிய வில்லை.

சிபிஎம்மின் கொள்கைகள் எப்படி இந்தியாவின் எதார்த்த நிலைமையை பிரதிபலிக்கிறது என்பதையும் புரட்சிக்கான போராட்டத்தில் மக்களை அணிதிரட்டுவதன் அவசியத்தையும், அதர்க்காக கட்சி மேர்க்கொள்ளும் நடவடிக்கைகளையும் மிக தெளிவாக விளக்கியுள்ளார். இன்றைய அவசியம் இடது சாரி ஒற்றுமை என்பதை வலியுறுத்துவதன் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சிக்கு கட்சி தொய்வின்றி முயர்சிப்பதை உணர்த்துகிறார்.

நேர்காணலை வெளியிட்ட கீற்று இணையதளத்துக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

//mani
2009-01-09 01:36:00

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !///

மணி அவர்களின் கேள்வியில் உள்ளவாறே நக்சல் தனம் தெரிகிறது, அவரது கேள்விக்கான பதில், 

சி.ஐ.டி.யு வில் உள்ள தோழர்கள் ஆயுதபூஜையை கொண்டாட வேண்டுமென்கிற எந்த கட்டாயமும் இல்லை...

ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ் இந்திய சமூகத்தை பார்ப்பன காவிமயப்படுத்த அனைத்து விழாக்களையும் பயன்படுத்தி சாதாரண மக்களை(மதசார்பற்ற எண்ணம் கொண்ட ஆனால் இந்து கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்களை)தங்கள் இந்துத்துவ பயங்கரவாத திட்டத்திர்க்கு தயார்படுத்தும் முயர்சியை தடுக்கும் நோக்கில் ஆயுதபூஜை விழா நாளன்று தொழிர்சங்கம் சார்பாக நிகழ்சிகள் நடத்தலாம். அதில் பூஜை புனஸ்காரங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும். 

தொழிர்சங்கத்தில் இணையும் ஒரு தோழர் கம்யூனிஸ்டாகத்தான் இணைவார் என்று கூறமுடியாது, அவரது வாழ்வியல் அனுபவங்களிலிருந்தே அவர் கம்யூனிஸ்டாக பரிணமிக்கிறார். 

அவர்பிறந்து வளார்ந்த சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் அவரிடம் இருக்கும், காலப்போக்கில் அது மாறவும், கம்யூனிஸ்டாக வரவும் நிரந்தரம் முயர்சிப்பது அவருடையவும் இயக்கத்தினுடையவும் கடமையாகும்.

கட்சியில் இணைவதர்க்கு மத அடையாளங்களை துறக்கவேண்டும் என்பதோ, மதநம்பிக்கையை விட்டொழித்த பின்பே கட்சி உறுப்பினராக வரமுடியும் என்பதோ ஒரு முன் நிபந்தனை அல்ல. 

கட்சிக்குள் வந்த பின் கட்சி சொல்வதை கட்சியின் அமைப்புசட்டத்திர்க்கும்,கட்சித்திட்டத்திர்க்கும் உட்பட்டு செயல்படுத்துவதை தனது முதல் கடமையாக கொள்ள வேண்டும். 

பூணுலை அவிழ்த்து விட்டுத்தான் கட்சிக்குள் வரவேண்டுமென்பதில்லை. ஆனால் கட்சிக்குள் வந்தபின் தொடர்ந்து நீங்கள் பூணூலை அணிய வேண்டுமா என்பதை கட்சி முடிவு செய்யும். 

தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சீக்கிய மத அடையாளமான தலைபாகை துறக்க வேண்டுமென்று கட்சி கூறவில்லை. மக்களிடம் நெருங்க அது பயன்பட்டதால்.

அதற்க்கு மாறாக நடப்பவர்களுக்கு திரு.சோமநாத் ச(சீ)ட்டர்ஜி, திரு.அப்துள்ளக்குட்டி போன்றவர்களை உதாரண்மாக எடுத்துக்கொள்ளலாம்.

ஏகலைவன்
2009-01-27 10:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

/////////சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் சிலர் சுயசாதியிலேயே திருமணம் செய்துகொள்வது, வரதட்சணை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த பிற்போக்குத்தனங்களைக் களைவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?///// - இது உமது கேள்வி.

இக்கேள்விக்கான போலி கம்யூனிச தலைவரின் பதில்: வரதட்சணை, சாதி போன்ற சமூக சீர்கேட்டுக்கு எதிராக உறுப்பினர்களை வழிப்படுத்த மத்திய நெறிப்படுத்தும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம்.

கட்சிக்குள் வருபவர்கள் இந்த சமுதாயத்தில் உள்ள சீர்கேட்டை சுமந்து கொண்டு தான் வருகிறார்கள். அவர்களை சீர்ப்படுத்தி சிறந்த கம்யூனிஸ்டாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். சிறுபகுதி சிக்குண்டு கிடக்கலாம். அவர்களையும் விடுவிக்க முயற்சி செய்வோம்.///////////

கட்சியின் ஒழுக்கச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினால், ”அவர்கள் கட்சிக்குள் வரும்போது சமூக இழிவுகளைச் சுமந்து வருகிறார்கள் நாங்கள் அதனைச் சரிசெய்து கிழிக்கும் முயற்சியில் இருக்கிறோம்” என்கிற பம்மாத்து வாதத்தை இதுபோன்ற மேல் மட்டத் தலைவர்கள் மந்திரம் போல திரும்பத் திரும்ப உச்சரிப்பதைக் காணலாம். ஆனால் உண்மை வேறாக அல்லவா இருக்கிறது.

மற்ற ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை ஒதுக்கி ஒருவன் சிபிஎம் அல்லது சிபிஐ கட்சியில் இணையலாம் என்று முடிவெடுப்பது ஏதோ எதார்த்தமான முடிவாகவோ, அல்லது சந்தர்ப்பவாத முடிவாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை. கம்யூனிஸ்டு கட்சி என்றால் சமூக அக்கறையோடு பாடுபடும் கட்சி என்கிற எதிர்பார்ப்போடு பல்வேறு சமூகக் கனவுகளோடுதான் அவன் இம்முடிவை எடுக்கிறான். 

இவர்களது தொழிற்சங்கங்களில் இணைபவர்கள் வேண்டுமானால் சுய தேவைக்காக இணையலாம். கட்சிக்குள் புதியதாக இணைபவர்களுக்குள் இருக்கும் சமூக இழிவுகளைத் துடைக்க முயற்சி செய்துவருவ்தாகச் சொல்லும் வரதராசன் அவர்கள், மேற்குவங்க அமைச்சரான சுபாஷ் சக்கரவர்த்தியோ, சோம்நாத் சாட்டர்ஜியோ கட்சிக்குள் எத்தனை நாளைக்கு முன் வந்தார்கள் என்றும், அவர்களுக்குள் இருந்த சமூக இழிவுகளைத் துடைக்காமல் அவர்களை மந்திரிகளாகவும் சபாநாயகர்களாகவும் வளர்த்தெடுத்த மர்மம் என்ன என்றும், பத்துமுறை நாடாளு மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட சோம்நாத் சாட்டஜி கட்சிக்குள் வந்து சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டதையும் வெட்கமின்றி அறிவிப்பது எவ்வாறு என்கிற கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

கட்சியின் தலைமையும், இதுபோன்ற பிழைப்புவாதத் தலைவர்களையும் நாம் கை நீட்டி விமர்சித்தால், அதற்கு நேரடியாகப் பதிலளிக்கத் திராணியற்று கட்சிக்குள் புதியதாக வருபவர்கள் சமூக இழிவுகளோடு வருவதாகக் கதை எழுதுகிறார்கள். இதுபோன்ற அயோக்கியத்தனங்களை வைத்துக் கொண்டு எதிர்வரும் விமர்சனங்களுக்கு எந்த பதில்களையும் தராமல் விமர்சிப்பவரை வசைபாடுவதால் இவர்களது குற்றங்கள் மறைக்கப் பட்டுவிடுவதாகக் கணவு காணும் குருட்டுப் பூணைகளை என் செய்வது?

கீற்று நிர்வாகிகள் அவருக்கு எதிராக வைத்திருக்கின்ற கேள்விகள் கூட ஓரளவு சரிதான் பாராட்டுக்கள். அதே நேரத்தில் உங்களுடைய கேள்விகளுக்கு அவர் அளித்திருக்கும் பதில் போதுமானதாகவோ நேரடியாகவோ இல்லாத பட்சத்தில் அதற்கான விடையை முழுமையாகப் பெறாமல், அடுத்தக் கேள்விக்கு நீங்கள் தாவிவிடுவது சரியில்லை என்பது எனது கருத்து. பரிசீலியுங்கள்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

ஏகலைவன்
2009-01-27 10:34:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//////////நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் மீது மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. சீனத்தின் மகத்தான தலைவர் மாவோவின் கோஷங்களை அவர்கள் முன்வைத்தார்கள். சீன கம்யூனிசத் தலைவர்களே நக்சல்பாரி இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, ‘மாவோவின் செயல்பாடுகள் இந்திய நாட்டிற்கு ஒத்துவராது’ என்று சொன்னதாக எங்களுக்கு தகவல் உண்டு.

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லாதது தான் அவர்கள் இப்படி தனித்தனிக் குழுவாக பிரிந்து செயல்படுவதற்குக் காரணம். நாடாளுமன்றங்கள் வெறும் பன்றித் தொழுவங்கள் என்று லெனின் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த இயக்கங்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்தி விட முடியாது.

புரட்சியின் மூலம் சோஷலிசத்தைக் கொண்டு வருவதற்கு புறச்சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறதா, மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மதிப்பீட்டை உணர்ந்த பல நக்சலைட் இயக்கத் தோழர்கள் எங்களோடு இணைந்திருக்கிறார்கள்.///////////

பிளவு பட்டிருப்பதாலேயே ஒரு இயக்கம் தரக்குறைவாகப் போய்விடுமா? இந்திய மாவோயிசக் குழுக்கள் சிதறுண்டிருப்பது அவர்களுக்குள் இருக்கும் செயல்தந்திர ரீதியிலான முரன்களே தவிர அடிப்படை சித்தாந்தத்தில் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். அப்படி அடிப்படியில் கருத்து மாறுபாடு கொண்டவர்கள்கூட பிரிந்து சென்று ஓட்டுப் பொறுக்கிப் பாதையில் சீரழிந்திருக்கிறார்கள் என்பது கூட உண்மைதான். ஒரு அமைப்பு சிதறுண்டு விடுவதாலேயே அது மோசமான அமைப்பாக சித்தரித்துவிட முடியுமா?

அப்படிப் பார்த்தால், சிபிஎம் கட்சியின் ஒவ்வொரு மாவட்டம், வட்டத்திற்குள்ளும் காங்கிரசு கட்சியினை விடக் கேவலமான கோஷ்டிச் சண்டைகள் நிகழ்ந்து வருகின்றன(சிபிஎம் காரர்கள் விரும்பினால் நான் அறிந்த குழாயடி கேஷ்டி மோதல்களைப் பட்டியலிடமுடியும்). ஒரு கட்சிக்குள் ஆயிரம் கோஷ்டிகள் இருப்பது மட்டும் என்ன கொள்கை சார்ந்த முடிவுகளோ? தான் இங்கு அம்மனமாக நின்று கொண்டு எதிரியின் வேட்டி கிழிந்திருப்பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.

ஆயுதப் புரட்சிக்கு அணிதிரட்டுவதாலேயே மாவோயிஸ்டுகளை எதிர்ப்பதாகக் கூறும் இந்த அகிம்சா மூர்த்திகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சட்டீஸ்கர் அரசின் கைக்கூலி குண்டர் படையான சல்வாஜூடும் அமைப்புக்கும், பீகாரின் ரன்வீர் சேனாவுக்கும் ஆதரவாகப் பேசிவரும் பித்தலாட்டத்தை என்ன வென்பது?

அதுதான் இவர்களது கொள்கைத் தெளிவு போலும்!

ஏகலைவன்
2009-01-27 10:47:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

////////நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே பரிமாற்றங்களை நடத்திக் கொள்கிறார்கள், அதைத் தாண்டி மக்களிடம் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதே போன்றுதான் ம.க.இ.க. எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துகிற அளவுக்கு, மார்க்சிய சித்தாந்த்தை மக்களிடம் கொண்டு செல்வதில் செலுத்தியிருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகச் சுலபமான வேலை./////////

ம.க.இ.க.வின் செயல்பாடுகளை மக்கள் அறிவார்கள். ம.க.இ.க. மக்களிடம் செல்லவில்லை என்று இவர் மதிப்பிடும் அளவிற்கு இவர்களுடைய கட்சிக்குத் தகுதியிருக்கிறதா என்பதைக் கொஞ்சம் உரசிப்பார்க்க வேண்டும்.

உ.ரா. வரதராசனாரே முதலில் ம.க.இ.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட விமர்சனங்களுக்கு மார்க்சிய முறையில் நேர்மையாக மதிப்பிட்டு பதில் சொல்லிவிட்டு, பிறகு தாராளமாக விமர்சிக்க வருங்கள் ஐயா, உங்களுடைய விமர்சனங்களிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் யோக்கியமான பதில்களை அளிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.

‘முட்டுச் சந்தில் தினறும் சி.பி.எம்.’ என்கிற விமர்சன நூல் வெளியாகி பல ஆண்டுகள் கடந்து விட்டன. உங்களுக்கு அந்நூல் இன்னமும் கிடைக்க வில்லையென்றால் என்னிடம் தெரியப்படுத்துங்கள். நானே இலவசமாக உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் ஐயா. அந்நூலில் நீங்கள் இங்கே சொல்லியிருப்பது போல வெற்று வாதங்கள் எதுவும் இருக்காது. 

அது சரி ம.க.இ.க. மார்க்சிய சித்தாந்தத்தை மக்களுக்கு கொண்டு செல்லவில்லை என்று வருத்தப்படுகிறீர்களே, உங்கள் கட்சி தனது அணிகளுக்காவது மார்க்சியத்தை முழுமையாகக் கற்றுக் கொடுத்திருக்கிறதா? கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மாறி மாறி ஆதரித்துத் தொழுது ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்திவரும் உங்கள் கட்சியின் தலைமை என்ன மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையிலா அம்முடிவுகளை எடுத்திருக்கிறது?

Baappu
2009-01-28 11:30:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடன் ஏகலைவன் அவர்களுக்கு,

"சமுதாய சீர்கேட்டை" சாமற்தியமாக "ஒழுக்கசீர்கேடாக" சித்தரிக்கும் ம.க.இ.க வின் இன்ஸ்டன்ட் ரெடி மிக்ஸ் புரட்சிதலைவராகிய நீங்கள் தோழர் உ.ரா.வரதராஜன் அவர்களின் நேர்மையானதும் தெளிவானதுமான பதிலை பம்மாத்து என்று குறிப்பிடுவதில் குற்றம் காணமுடியாது.

சோமநாத் ச(சீ)ட்டர்ஜியோ அல்லது வேறு யாரேனுமோ அவர்களின் மதஜாதி உணர்வுகளை இந்த தேதிக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று சட்டமிடுவது இந்தியாவில் நடக்குமா? பன்றித்தொழுவம் என்று முதலாளித்துவ நாடாளுமன்றத்தை கூறும் நீங்கள் அதனை நிற்வகிப்பவர்கள் புனிதமானவர்களாக இருக்க வேண்டுமென்று அக்கறை படுவது நல்ல மாற்றமே வாழ்த்துக்கள்.

சி.பி.எம் உறுப்பினர்களை மிகச்சிறந்த கம்யூனிஸ்டாக வளர்த்தெடுப்பது என்பது கட்சியின் முக்கியமான புரட்சிப்பணிகளில் ஒன்று, தொடர்ந்து அதனை செய்து வருகிற கட்சி இந்தியாவில் மிக பிற்போக்கான சமூக சூழல் நிலவும் ஒரு காலகட்டத்தில் பொதுமக்களைதிரட்டுகிறது. சமூக சீர்கேடுகளை களைவது என்பது புரட்சிகர கட்சியை கட்டும் நீண்ட நெடிய புரட்சிப்பணியின் தொடர்சி.

உங்களுக்கு அதெல்லாம் புரிவதற்க்கு இன்னும் காலம் பிடிக்கும், ஏனென்றால் அடுத்த பத்தாண்டுகளில் (1970 80) இந்திய புரட்சி என்று புரட்சிக்கு நாள்குறித்தவரல்லவா உங்கள் தலைவர் சாருமஜூம்தார் (அவரை தலைவரல்ல என்று மறுத்தாலும் மறுக்கலாம்) அவரின் தொடர்சியாக ம.க.இ.க இருப்பதில் வியப்பில்லை.


கோஷ்டிக‌ளாக‌ பிரிந்து புர‌ட்சி செய்ய‌ புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு சி.பி.எம் மிலும் கோஷ்டிக‌ளுண்டு என்று கூறுவ‌தால் ம‌ன‌சாந்தி கிடைக்கிற‌து எனில் அதில் ம‌கிழ்சிய‌டைகிறோம். சி.பி.எம் ம‌த்திய‌த்துவ‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன‌நாய‌க‌முள்ள‌ புர‌ட்சி இய‌க்க‌ம் கோஷ்டி ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌ட்டால் க‌ட்சியில் தொட‌ர‌முடியாது.

கீற்று நிர்வாகி எப்படி கேள்வி கேட்கவேண்டுமென்று உத்தரவிடுகிறீர்கள் பாருங்கள், அதனை கொஞ்சம் சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி பாருங்கள் புரிவதர்கு வாய்ப்புண்டு, ஏன் மக்கள் இடது அதிதீவிர வாதிகளிடம் நெருங்க மறுக்கிறார்களென்று.

ஆயுதபுரட்சிக்கு அணிதிரட்டுவதாலேயே மாவோயிஸ்டுகளை எதிற்பதாக தோழர்.உ.ரா வரதராஜன் எங்கும் குறிப்பிடவில்லை. மக்களை திரட்டாமல் ஆயுதபோராட்டமென்ற பெயரில் படுகொலைகளை ஈழப்புலிகள் பாணியில் செய்வதை தான் விமர்சிக்கிறார். ரண்வீர் சேனாவையையும், சல்வாஜூடு வையும் எங்கும் ஆதரிக்கவில்லை.

எதிர்தே வந்துள்ளோம்,ஆதரிப்பதாக நீங்கள் கூறுவதுதான் பித்தலாட்டம்.

"முட்டுச்சந்தில் திணறுவது நக்சலிசம்" தானே ஒழிய சி.பி.எம் அல்ல. உங்கள் பிரசுரத்திற்கு பதிலளிக்க வேண்டிய அளவுக்கு எதுவும் அதில் இல்லை, அப்படி சி.பி.எம்மை விமர்சித்து ம.க.இ.க. வின் இருப்பை தெரிய படுத்தலாம் என்று மனப்பால் குடிக்காமல் தேதி முடிவதற்க்குள் புரட்சியை நடத்தப் பாருங்கள்.

ஓட்டுப்பொறுக்குவ‌து கொள்கை அடிப்ப‌டையில் மார்க்சிய‌ சித்தாந்த‌த்தின் வ‌ழிகாட்டுத‌ல் ப‌டிதான்.

தோழ‌மையுட‌ன்
Baappu

ஏகலைவன்
2009-01-29 04:10:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

/////"சமுதாய சீர்கேட்டை" சாமற்தியமாக "ஒழுக்கசீர்கேடாக" சித்தரிக்கும் ம.க.இ.க வின் இன்ஸ்டன்ட் ரெடி மிக்ஸ் புரட்சிதலைவராகிய நீங்கள் தோழர் உ.ரா.வரதராஜன் அவர்களின் நேர்மையானதும் தெளிவானதுமான பதிலை பம்மாத்து என்று குறிப்பிடுவதில் குற்றம் காணமுடியாது.///////

இந்த வரிகளில் என்ன இருக்கிறது நண்பரே, உங்களுடைய வயிற்றெரிச்சலைத்தவிர? சமுதாய சீர்கேடோ ஒழுக்கச் சீர்கேடோ அதுபற்றிக்கூட எனக்குப் பிரச்சினையில்லை. இவற்றைச் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் “கட்சிக்குள் புதியதாக வருபவர்கள் இத்தகைய சமூக இழிவுகளோடுதான் வருகிறார்கள். அவர்களைத் திருத்த முயற்சி செய்துவருகிறோம்” என்று பேசுவது பசப்பல்வாதமன்றி வேறென்ன?

அப்படியானால், கட்சிக்குள் புதியதாக வந்திருப்பவர்களை விட்டுவிடுவோம், கட்சிக்குள் ஐம்பது வருடமாக மாவாட்டிக் கொண்டிருந்த சோம்நாத் மாமா தனது இழிவுகளைப் பாதுகாத்தது எவ்வாறு நிகழ்ந்தது? நேற்றுவரை சாட்டர்ஜி என்று அவருக்காக சப்பைக்கட்டு கட்டிய உமது கைகள் இப்போது சீட்டர்ஜி என்று எழுதுகின்றதே அதன் காரணம் என்ன? நாடாளுமன்ற வாக்களிப்பில் மாற்று நிலைப்பாடு கொண்டிருந்த காரணத்தால் மட்டும்தானே? இதையன்றி உமது கட்சிக்கும் அவருக்கும் என்ன சித்தாந்த ரீதியிலான கொள்கை முரண்பாடுகளா தோன்றியுள்ளது?

//////சோமநாத் ச(சீ)ட்டர்ஜியோ அல்லது வேறு யாரேனுமோ அவர்களின் மதஜாதி உணர்வுகளை இந்த தேதிக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று சட்டமிடுவது இந்தியாவில் நடக்குமா? பன்றித்தொழுவம் என்று முதலாளித்துவ நாடாளுமன்றத்தை கூறும் நீங்கள் அதனை நிற்வகிப்பவர்கள் புனிதமானவர்களாக இருக்க வேண்டுமென்று அக்கறை படுவது நல்ல மாற்றமே வாழ்த்துக்கள்.//////////

அப்படியானால், கட்சியில் புதியதாக இணைபவர்கள்தான் சமூக இழிவுகளோடு இருப்பதாக, புதிய தோழர்களின் மீது பழிசுமத்துவது ஏன்? ”எங்களுடைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சக ஓட்டுக்கட்சி உறுப்பினர்களைப் போன்று நடந்து கொள்வதால் அவர்களைத் திருத்தி முறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்” என்று யோக்கியமாகச் சொல்லவேண்டியதுதானே?!

நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில் உழன்று கொண்டிருக்கும் பன்றிகள்தான் நீஙக்ள் என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் அதை உமது வாயாலேயே உறுதிப்படுத்தச் செய்வது எத்தனை முக்கியம் என்பதை மீண்டுமொருமுறை உங்களுடைய மேற்கண்ட பதிலைப் படித்துப் பாருங்கள் புரியும், நண்பரே!

இதற்கு இணையாக நாங்கள் பிரச்சாரம் செய்ய முடியுமா? ”எங்களது உறுப்பினர்கள் புனிதமாக இருப்பார்கள் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என்கிற கேள்வி உங்களிடமிருந்து வரவழைப்பதற்குத்தான் நாங்கள் இத்தனை பாடுபடுகிறோம். அந்த வகையில் உங்களுடைய பதில் நான் பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை ஒரு வரியில் ஒப்புதல் வாக்குமூலமாக இங்கு பதியப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!

////////கோஷ்டிக‌ளாக‌ பிரிந்து புர‌ட்சி செய்ய‌ புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு சி.பி.எம் மிலும் கோஷ்டிக‌ளுண்டு என்று கூறுவ‌தால் ம‌ன‌சாந்தி கிடைக்கிற‌து எனில் அதில் ம‌கிழ்சிய‌டைகிறோம். சி.பி.எம் ம‌த்திய‌த்துவ‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன‌நாய‌க‌முள்ள‌ புர‌ட்சி இய‌க்க‌ம் கோஷ்டி ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌ட்டால் க‌ட்சியில் தொட‌ர‌முடியாது.///////////

உங்க கம்பேனியில் நடக்கும் கோஷ்டி மோதலுக்கு மட்டும் என்னால் பக்கம்பக்கமாக ஆதாரங்களைத் தரமுடியும். ஒரேயொரு விடயத்தை மட்டும் இங்கே பதிகிறேன். முடிந்தால் பதில் சொல்லுங்கள்.

கேரள மாநில கட்சியில் அச்சுதானந்தனுக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே நடைபெற்ற குடுமிப்புடி சண்டையிருக்கிறதே அது என்ன சித்தாந்த விவாதமா? அதைத் தொடர்ந்து பிரகாஷ்காரத் பேசிய பொதுக்கூட்டத்திலேயே குவாட்டர் பாட்டிலெல்லாம் மேடையைத் துளைத்துப் பறந்ததே அது என்ன சண்டையா, சும்மா விளையாட்டா? அதே மேடையில் விஜயன் ஆவேசமாக மைக்கைப் பிடித்து “இது கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமா அல்லது உஷா உதுப் கச்சேரியா?” என்று கேட்டதை என்ன சொல்ல? இந்த கேலிக்கூத்துக்களை தெகல்கா இதழ் நேரடியாகப் பதிவு செய்திருந்ததே அதற்காவது ஏதாவது பதில் சொல்லியிருக்கிறதா உங்கள் கட்சி?

பாவம் அவையாவற்றுக்கும் சேர்த்து நீங்கள்தான் இங்கே பதில் சொல்லியழவேண்டியுள்ளது. உங்களுக்காக பரிதாப்ப்படுகிறேன்.

///////கீற்று நிர்வாகி எப்படி கேள்வி கேட்கவேண்டுமென்று உத்தரவிடுகிறீர்கள் பாருங்கள், அதனை கொஞ்சம் சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி பாருங்கள் புரிவதர்கு வாய்ப்புண்டு, ஏன் மக்கள் இடது அதிதீவிர வாதிகளிடம் நெருங்க மறுக்கிறார்களென்று./////////

அய்யா நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது நூறு சதவீத உண்மையாகும். எங்களை பொறுக்கித்தனம் கொண்டவர்களும் பித்தலாட்டப் பார்ட்டிகளும் பார்ப்பன பயங்கரவாதிகளும் நெருங்க மறுப்பது குறித்து பெருமைப்படுகிறோம். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக ஆனபிறகும், ஒரு மாநிலத்துக்கு அமைச்சரான பிறகும் பூநூலையும் அத்தோடு பார்ப்பன இழிவுகளையும் சேர்த்தே சுமந்து கொண்டு திரியும் பிழைப்புவாதிகள் எங்களை நெருங்கமுடியாமல் இருப்பதற்கு இதுபோன்ற சமரசமற்ற அரன் தேவைப்படுகிறது. 

மாறாக கீற்று நிர்வாகிக்கு நான் உத்தரவேதும் விடவில்லை நண்பரே. கேள்விகளுக்கு முறையான பதில்களைப் பெறாமல் அடுத்த கேள்விக்குத் தாவிவிடுவது குறித்துதான் எனது கருத்தைப் பதிந்துள்ளேன். அது உத்தரவல்ல...

//////ஆயுதபுரட்சிக்கு அணிதிரட்டுவதாலேயே மாவோயிஸ்டுகளை எதிற்பதாக தோழர்.உ.ரா வரதராஜன் எங்கும் குறிப்பிடவில்லை. மக்களை திரட்டாமல் ஆயுதபோராட்டமென்ற பெயரில் படுகொலைகளை ஈழப்புலிகள் பாணியில் செய்வதை தான் விமர்சிக்கிறார்./////////

சுரண்டல் சமூகத்திற்கு எதிராக உழைக்கும் மக்களை ஆயுதப் புரட்சிக்கு மாவோயிஸ்டுகளும் இன்னபிற புரட்சிகர அமைப்புகளும் அணிதிரட்டட்டும். நீங்கள் உங்கள் அணிகளை வைத்துக் கொண்டு ஆயுதபூசை மட்டும் கொண்டாடிக்கொண்டிருங்கள். வாழ்த்துக்கள் நண்பரே!

Baappu
2009-01-31 04:21:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடன் நணபர் ஏகலைவன் அவர்களுக்கு!!

//இந்த வரிகளில் என்ன இருக்கிறது நண்பரே, உங்களுடைய வயிற்றெரிச்சலைத்தவிர? சமுதாய சீர்கேடோ ஒழுக்கச் சீர்கேடோ அதுபற்றிக்கூட எனக்குப் பிரச்சினையில்லை. இவற்றைச் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் “கட்சிக்குள் புதியதாக வருபவர்கள் இத்தகைய சமூக இழிவுகளோடுதான் வருகிறார்கள். அவர்களைத் திருத்த முயற்சி செய்துவருகிறோம்” என்று பேசுவது பசப்பல்வாதமன்றி வேறென்ன?

அப்படியானால், கட்சிக்குள் புதியதாக வந்திருப்பவர்களை விட்டுவிடுவோம், கட்சிக்குள் ஐம்பது வருடமாக மாவாட்டிக் கொண்டிருந்த சோம்நாத் மாமா தனது இழிவுகளைப் பாதுகாத்தது எவ்வாறு நிகழ்ந்தது? நேற்றுவரை சாட்டர்ஜி என்று அவருக்காக சப்பைக்கட்டு கட்டிய உமது கைகள் இப்போது சீட்டர்ஜி என்று எழுதுகின்றதே அதன் காரணம் என்ன? நாடாளுமன்ற வாக்களிப்பில் மாற்று நிலைப்பாடு கொண்டிருந்த காரணத்தால் மட்டும்தானே? இதையன்றி உமது கட்சிக்கும் அவருக்கும் என்ன சித்தாந்த ரீதியிலான கொள்கை முரண்பாடுகளா தோன்றியுள்ளது?///


என்ன வயிற்றெரிச்சலை கண்டுவிட்டீர் நண்பரே, வரட்டுத்தனமான உங்களின் கேள்விக்கு கூட பதிலளித்ததையா?

கட்சிக்குள் புதியதாக வருபவர்கள் அவர்கள் வாழும் சமூகத்தின் சீர்கேடுகளையும் கூடவே கொண்டுவருகிறார்கள் அவற்றை போக்குவாதற்கு கட்சி முயர்சிக்கிறது என கூறுவதில் என்ன பசப்பல் இருக்கிறது. உங்கள் அமைப்பை போல் வன்மம் நிறைந்த வார்த்தை பிரயோகங்களை எதிர்பார்க்கிறீரா?

நேர்காணலை இன்னும் ஒருமுறைகூட உணர்சிவசப்படாமலும், முன்விதிகளுக்குள்ளாகாமலும் படித்து பாருங்கள், தோழர் உ.ரா.வரதராஜன் என்ன கூறுகிறார்."கம்யூனிஸ்டு ஆவதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது. ஒருவன் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்ததால் மட்டும் கம்யூனிஸ்டு ஆக முடியாது. கம்யூனிசத்தை புரிந்து கொண்டு கம்யூனிஸ்டாவதற்கும், வாழ்நாள் முழுவதற்கும் கம்யூனிஸ்டாகவே வாழ்வதற்கும் அவன் மிகப்பெரிய போராட்டத்தை தனக்குள்ளேயே நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டம் நிறைவேறும்போது உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்." இதையும் பசப்பல் என்பீரோ?

/// அப்படியானால், கட்சியில் புதியதாக இணைபவர்கள்தான் சமூக இழிவுகளோடு இருப்பதாக, புதிய தோழர்களின் மீது பழிசுமத்துவது ஏன்? ”எங்களுடைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சக ஓட்டுக்கட்சி உறுப்பினர்களைப் போன்று நடந்து கொள்வதால் அவர்களைத் திருத்தி முறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்” என்று யோக்கியமாகச் சொல்லவேண்டியதுதானே?!///

எப்ப‌டி கேள்வி கேட்க‌ வேண்டுமென்று கீற்று இணைய‌த‌ள‌த்திற்கு பாட‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர், எப்ப‌டி ப‌தில‌ளிக்க‌ வேண்டுமென்று அடுத்த‌ வ‌குப்பு எடுக்கிறார். கேள்வி என்ன‌வோ அத‌ற்க்கு ச‌ரியான‌ ப‌திலை தோழர் உ.ரா.வரதராஜன் அவர்கள் கொடுத்தாள்ளார். அது நாடாளும‌ன்ற‌, ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கும் பொருந்தும் ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ர்க‌ளுக்கும் பொருந்தும். ச‌க‌ ஓட்டு க‌ட்சியின‌ரை போல‌ ந‌ட‌ந்து கொண்டால் என்ன‌வாகும் என்ப‌த‌ற்கு சோம‌நாத் ச‌(சீ)ட்ட‌ர்ஜியும், அப்துள்ள‌க்குட்டியும் வாழும் உதாரண்ங்கள்.

///நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில் உழன்று கொண்டிருக்கும் பன்றிகள்தான் நீஙக்ள் என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் அதை உமது வாயாலேயே உறுதிப்படுத்தச் செய்வது எத்தனை முக்கியம் என்பதை மீண்டுமொருமுறை உங்களுடைய மேற்கண்ட பதிலைப் படித்துப் பாருங்கள் புரியும், நண்பரே!

இதற்கு இணையாக நாங்கள் பிரச்சாரம் செய்ய முடியுமா? ”எங்களது உறுப்பினர்கள் புனிதமாக இருப்பார்கள் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என்கிற கேள்வி உங்களிடமிருந்து வரவழைப்பதற்குத்தான் நாங்கள் இத்தனை பாடுபடுகிறோம். அந்த வகையில் உங்களுடைய பதில் நான் பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை ஒரு வரியில் ஒப்புதல் வாக்குமூலமாக இங்கு பதியப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!///

உங்க்ள் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிற‌வேறாது ந‌ண்ப‌ரே,எங்க‌ள் உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சியின் கொள்கைக‌ளுக்கும் திட்ட‌த்திற்க்கும் உட்ப‌ட்டே ந‌ட‌ந்து கொள்வார்க‌ள். மீறுப‌வ‌ர்க‌ள் சீட்டர்ஜி, அப்துள்ள குட்டி போன்று அந்த‌ பன்றிக‌ளோடு சேர்ந்து விடவேண்டிய‌து தான்.

ம‌.க‌.இ.க‌ வின் நாடாளும‌ன்ற‌ம் குறித்த‌ புனித‌த‌ன்மையை எதிர்பார்கும் மாற்ற‌ம் நல்ல‌ அறிகுறியே, இனியேனும் சி.பி.எம் குறித்த‌ அவ‌தூறை நிறுத்தி விட்டு ம‌க்க‌ளுக்கு மார்க்சிய‌ம் க‌ற்றுக்கொடுக்க‌வும், அவ‌ர்க‌ளின் நிக‌ழ்கால‌ பிர‌ச்சனைக‌ளை புரிந்து கொண்டு அவ‌ர்க‌ளுக்காக‌ போராடுவ‌த‌ன் மூல‌ம் புர‌ட்சி இய‌க்க‌த்தை வ‌லுப்பெற செய்வ‌த‌ற்கு ப‌ணியாற்றுங்க‌ள்.

///கேரள மாநில கட்சியில் அச்சுதானந்தனுக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே நடைபெற்ற குடுமிப்புடி சண்டையிருக்கிறதே அது என்ன சித்தாந்த விவாதமா? அதைத் தொடர்ந்து பிரகாஷ்காரத் பேசிய பொதுக்கூட்டத்திலேயே குவாட்டர் பாட்டிலெல்லாம் மேடையைத் துளைத்துப் பறந்ததே அது என்ன சண்டையா, சும்மா விளையாட்டா? அதே மேடையில் விஜயன் ஆவேசமாக மைக்கைப் பிடித்து “இது கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமா அல்லது உஷா உதுப் கச்சேரியா?” என்று கேட்டதை என்ன சொல்ல? இந்த கேலிக்கூத்துக்களை தெகல்கா இதழ் நேரடியாகப் பதிவு செய்திருந்ததே அதற்காவது ஏதாவது பதில் சொல்லியிருக்கிறதா உங்கள் கட்சி?

பாவம் அவையாவற்றுக்கும் சேர்த்து நீங்கள்தான் இங்கே பதில் சொல்லியழவேண்டியுள்ளது. உங்களுக்காக பரிதாப்ப்படுகிறேன்.//

முத‌லாளித்துவ‌ ஊட‌க‌ங்க‌ளின் பிர‌சார‌க‌ராக‌ மாறிவிட்ட‌ ந‌ண்ப‌ர் ஏக‌லைவ‌ன் இதை கேட்பார் என்ப‌தை எதிர்பார்த்த‌துதான். ஆட்சி புரியும் மாநில‌த்தில் தொழில்வளர்சிக்கு உல‌க‌வ‌ங்கி ம‌ற்றும் பிற‌ நிதி நிறுவ‌ன‌ங்க‌ளிலிருந்து உத‌விபெறுவ‌து சம்ப‌ந்த‌மாக‌ க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌ விவாத‌த்தை த‌னிந‌ப‌ர் மோத‌லாக‌வும் குடுமிப்பிடி ச‌ண்டையாக‌வும் சித்த‌ரிப்ப‌து நாள்குறித்து புர‌ட்சி ந‌ட‌த்த‌ புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு அழ‌குதான்,

அந்த‌ விவாத‌த்தை ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் ந‌ட‌த்திய‌ போது என்ன‌ நிக‌ழ்ந்த‌து என்ப‌தை உங்க‌ளின் தெக‌ல்காவை பார்த்து தெரிந்து கொள்ள‌ முடிய‌ வில்லையா.
தோழ‌ர்க‌ள் விஜ‌ய‌ன்,வி.எஸ் இருவ‌ருமே க‌ட்சிக‌ட்டுபாட்டை மீறிய‌தாக‌ அர‌சிய‌ல் த‌லைமை குழுவிலிருந்து ச‌ஸ்ப‌ன்ட் செய்ய‌ப‌ட்ட‌தும், த‌ங்க‌ள் த‌வ‌றை திருத்தி க‌ட்சியில் தொட‌ர்வ‌தையும் அறிவீரா?

பேனை பெருமாளாக்கும் ம‌.க‌.இ.க‌ வுக்கு, வெகுஜ‌ன‌ங்க‌ளை திர‌ட்டி ந‌ட‌த்திய‌ ஊர்வ‌ல‌த்தில் சில‌ர் திட்ட‌மிட்டே தோழ‌ர் வி.எஸ் சின் ப‌ட‌த்தை ஏந்திவ‌ந்து போதையில் பிர‌ச்சனை உருவாக்கிய‌தும், அதை மாநில‌ச்செய‌லாள‌ர் ச‌ரியான‌ வித‌த்தில் கையாண்டு செந்தொண்ட‌ர்க‌ளால் அந்த‌ ச‌மூக‌ விரோதிக‌ள் அப்புற‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும் க‌ண்ணில் ப‌டாம‌ல் போன‌தில் ஆச்ச‌ர்ய‌மில்லை.பிணறாயி விஜ‌ய‌னானாலும், வி.எஸ்.அச்சுதான‌ந்த‌ன் ஆனாலும் கட்சி உறுப்பினர் யாராயினும் க‌ட்சி ஏற்றுக் கொண்டுள்ள திட்ட‌த்திற்கும், அமைப்புச‌ட்ட‌த்திர்கும் எதிராக‌ செய‌ல் ப‌ட்டால் க‌ட்சியில் இருக்க‌ முடியாது.
///அய்யா நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது நூறு சதவீத உண்மையாகும். எங்களை பொறுக்கித்தனம் கொண்டவர்களும் பித்தலாட்டப் பார்ட்டிகளும் பார்ப்பன பயங்கரவாதிகளும் நெருங்க மறுப்பது குறித்து பெருமைப்படுகிறோம். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக ஆனபிறகும், ஒரு மாநிலத்துக்கு அமைச்சரான பிறகும் பூநூலையும் அத்தோடு பார்ப்பன இழிவுகளையும் சேர்த்தே சுமந்து கொண்டு திரியும் பிழைப்புவாதிகள் எங்களை நெருங்கமுடியாமல் இருப்பதற்கு இதுபோன்ற சமரசமற்ற அரன் தேவைப்படுகிறது.///

உங்களை ஏழை எளிய பாட்டாளி மக்கள் தான் நெருங்க மறுக்கிறார்கள், மற்றபடி சமூகவிரோதிகளாக இருக்கும் உங்களுடன் மேற்கு வங்கம் நந்திகிராமத்து ஆனந்த மார்க்கத்தினரும், மமதாவும், ஆர்.எஸ்.எஸ் சும், இஸ்லாமிய பிற்போக்கு வாதிகளும் சேர்ந்து புரட்சி நடத்தியதையும் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் போன்றவற்றை நடத்தி பழியை சி.பி.எம் மீது போட்டதும் இப்போது இந்த தேசமே உணர்ந்து கொண்டுள்ளது.தமிழகத்தில் காரப்பட்டு நல்ல உதாரணம். 


ரெடிமெய்டு புரட்சியை நடத்திகாட்ட வாழ்த்துக்கள்,

தோழமையுடன்

Baappu 

mani
2009-02-03 12:37:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கேள்வி சரியா கேட்டாலே நக்சலைட்டா? முடியலப்பா.

பாஸிஸ்டுகள் மூடநம்பிக்கையை பயன்படுத்தி வளர்ந்து விடுவார்கள் என்பதற்காகவா ஆயுதபூசை கொண்டாடுகின்றீர்கள். இதுதான் உங்க கட்சி திட்டமா? அடப்பாவிங்களா உங்கள நம்பியா கம்யூனிசம் லோல்படுது.?

கட்சிககுள்ள வந்தப்புறம் காலம் மாத்துமா கட்சியின் நடைமுறை மாத்துமா? பூணூலும் தலைப்பாகையும் ஒண்ணு கிடையாது. தலைப்பாகை நம்பிக்கை. பூணூல் சாதித்திமிர். உங்க கண்ணுல் பவர் செக் பண்ணுங்க

கட்சி பூணூல் அணிவதைப் பற்றி இதுவரை என்ன முடிவு செய்துள்ளது. நபர்களைப் பொறுத்து மாறுமா?

கட்சி உறுப்பினருக்கு மதநம்பிக்கை இருப்பது தவறில்லை என்றால் மதம் ஒரு அபின் என்று ஏங்கல்ஸ் வேல மெனக்கெட்டு எதுக்கு எழுதுனாரு

பூஜை புனஸ்காரம் நீக்கிய ஆயுதபூஜை கொண்டாடுவது சரியா ? அதை மறுத்து மேதினத்தை போராட்டத்தை விழாவாகக் கொண்டாட மக்களை மாற்றுவது சரியா ?

தயவுசெய்து லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலை முழுதும் படித்து கட்சி உறுப்பினர் எனப்படுபவர் யார் என்பது பற்றி தோழர் லெனின் வரையறை செய்ததை அறிந்து உங்களது மதிப்பீட்டுடன் ஒப்பிட்டுத் திருத்துக

மக்களைச் சென்றடைய தலைப்பாகை அவசியமில்லை. முழத்துணி கட்டக் கூட வழியற்ற நாட்டில், தலைவன் தலைப்பாகையோடு இருந்தது சரி என நியாயப்படுத்துவதற்கு சந்தர்ப்பவாதம் என்ன வடிவம் வேண்டுமானாலும் எடுக்கும் என்பதற்கு தக்க உதாரணம் இது

mani
2009-02-04 04:05:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//At 2:40 PM, Anonymous said... 
if i am belongs to RSS, can i join your CITU.




At 2:41 PM, Anonymous said... 
did you read bharathy




At 2:46 PM, சந்திப்பு said... 
அனானி நன்பரே! நீங்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் சி.ஐ.டி.யூ.வில் இணையலாம். ஒரே விசயம். அந்த அமைப்பின் அமைப்பு விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதற்கு நீங்கள் தயாராக இருந்தால் சி.ஐ.டி.யூ. நிச்சயம் உங்களை வரவேற்கும்.




At 2:46 PM, சந்திப்பு said... 
Yes I read




At 3:41 PM, Anonymous said... 
pls answer the question directly




At 3:47 PM, சந்திப்பு said... 
சேரலாம்



//
CITU ன்னா எனக்கு இதுவரை உங்க ஆளு சந்திப்பு சொல்ற வரைக்கும் புரியலம்மா...ஆர்எஸ்எஸ் ம் நீங்களும் வேற வேற இல்லியா ... அப்போ ஏன் நீங்க அடுத்தவாட்டி பாஜக கூட சேக்காளி போட்டாத தேவலையே ... காங்கிரச ஒழிக்கலாம்பூ

Baappu
2009-02-08 04:05:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடன் மணிஅவர்களுக்கு,

//கேள்வி சரியா கேட்டாலே நக்சலைட்டா? முடியலப்பா.//

ஆமாம்பா உங்களால முடியாதுதான். கேள்விகளை மட்டும் கேட்பதனாலும் அது வறட்டுத்தனமாக இருப்பதனாலும் தான் நக்சல் என்கிற சந்தேகம் வந்தது. அதை மெய்ப்பிக்கும் விதமாக அதையே திரும்பத்திரும்ப கேள்வியாக பதிந்து சித்தாந்த சூன்யதையையும் தத்துவ திரிபையும் வெளிப்படுத்துங்கள்.

//பாஸிஸ்டுகள் மூடநம்பிக்கையை பயன்படுத்தி வளர்ந்து விடுவார்கள் என்பதற்காகவா ஆயுதபூசை கொண்டாடுகின்றீர்கள். இதுதான் உங்க கட்சி திட்டமா? அடப்பாவிங்களா உங்கள நம்பியா கம்யூனிசம் லோல்படுது.?//

வ‌ர்க்க‌ வெகுஜ‌ன‌ அமைப்புக‌ளுக்கும் புர‌ட்சிக‌ர‌ க‌ட்சிக்கும் வித்தியாச‌ம் புரியாத‌ ம‌.க‌.இ.க.(?) ந‌ண்ப‌ரே உங்க‌ள் இற‌க்கும‌தி புர‌ட்சிக்கு இந்தியாவில் எந்த‌ வித‌மான‌ சூழ‌ல் நில‌வுகிற‌து என்ப‌தை ப‌ற்றி ஏதேனும் பார்வை உள்ள‌தா?எல்லாவ‌ற்றையும் த‌ர‌கு என்கிற‌ அடைமொழியை ப‌ய‌ன்ப‌டுத்தி அர்சிப்ப‌தை த‌விர‌?

//கட்சிககுள்ள வந்தப்புறம் காலம் மாத்துமா கட்சியின் நடைமுறை மாத்துமா? பூணூலும் தலைப்பாகையும் ஒண்ணு கிடையாது. தலைப்பாகை நம்பிக்கை. பூணூல் சாதித்திமிர். உங்க கண்ணுல் பவர் செக் பண்ணுங்க//

காலமும் கட்சி நடத்தும் சித்தாந்த கல்வியும் களப்போராட்டமும் சுயமுயர்சியும் மாற்றி காட்டும். தொடர்ந்து மாறாமலே இருப்பவர்கள் கட்சியிலிருந்தே மாற்றப்படுவார்கள். அது நடைமுறையை கண்களையும் காதுகளையும் திறந்து வைத்து அவதானிப்பவர்களுக்கு புரியும். கட்சியில் யாரும் பூணூல் அடையாளத்தோடு அலைய வில்லை.அப்படி ஜாதி அடையாளங்களை துறக்க மறுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை எந்த நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பது கட்சிக்கு நன்கு தெரியும்.

உங்களிடம் பூணூல் பட்டியல் இருந்தால் இதே பக்கத்தில் வெளியிடவும் பரிசீலிக்கலாம்.

//கட்சி உறுப்பினருக்கு மதநம்பிக்கை இருப்பது தவறில்லை என்றால் மதம் ஒரு அபின் என்று ஏங்கல்ஸ் வேல மெனக்கெட்டு எதுக்கு எழுதுனாரு//

மதம் மக்களை மயக்கும் அபின் என்கிற உண‌மயை இந்த உலகுக்கு எடுத்துரைத்த மார்க்சீய பேராசான்கள் ம.க.இ.க என்கிற ரெடிமிக்ஸ் புரட்சிக்காரர்கள் உருவகலாம் என்பதை கருத்தில் கொண்டிருந்தார்கள். அதனால் தான் லெனின் இடதுசாரி இளம்பிள்ளை வாதம் பற்றி எழுதினார்.

தாங்கள் நம்பும் மதம் ஒரு அபின் என்பதை அதை நம்புபவர்கள் உணர வேண்டும் நண்பரே, அதற்கு மதமில்லாமலும் இம்மண்ணில் வாழ்ந்து முடிக்க முடியும் என்பதை அவர்கள் உணரும்படியான ஒரு சமூக சூழல் உருவாக வேண்டும், அதற்க்காக போராடியே ஆகவேண்டும், அல்லாமல் கட்சி உறுப்பினராவதற்கு கட்சியின் திட்டமும், அமைப்புச்சட்டமும் ஏற்றுக்கொள்வது ஒன்றைதவிர வேறு முன்விதிகளை நிச்சயிப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல மண்ணுக்கேற்ற மார்க்சீயம் அமுல்படுத்த போராடும் எந்த நாட்டிலுள்ள புரட்சி இயக்கங்களுக்கும் முடியாது. 

ஆனால் இர‌த்த‌ம் குடிப்ப‌து, கெட்ட‌வார்த்தைக‌ளால் அர்சிப்ப‌து, குத‌ற்க‌மாக‌ கேள்விக‌ளை ம‌ட்டும் முன்வைப்ப‌து, ஆன்லைன் பதிவுகள் மூலம் புர‌ட்சி ந‌ட‌த்துவ‌து, பிண‌ங்க‌ளையும் த‌ற்கொலைகளையும் முன்வைத்து உயர்த்திகாட்டி முன்னுக்கு பின் முரணாக பேசி புரட்சிக்கு புறப்பட்டவர்களுக்கு இதெல்லாம் புரியாது, 

அவர்களும் சி.பி.எம் நடத்தும் போராட்டத்தின் பயன்களை காணும் போது இயல்பு நிலைக்கு வரலாம் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

தோழர் சந்திப்பின் வலைப்பூவிலிருந்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கும் இதுவே பதில். 

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்களை இந்தியாவிலிருந்து தான் தேட முடியும் அதர்காக இறக்குமதி செய்ய முடியாது.

mani
2009-02-12 02:42:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நண்பர் பப்பு

நான் கேள்விகள் 3 மட்டுமே கேட்டேன். நேர்மையானவர்கள் பதிலை நேர்மறையாக சொல்வார்கள். கேள்வி எவற்றிலும் வறட்சி இருப்பதாக நான் இது வரை எங்குமே கேள்விப்பட்டதில்லை. ஆனால் தங்களது அனைத்து பதிலிலும் பதில் சொல்ல வேண்டிய கம்யூனிச கடமையை மறந்து கேள்வி கேட்டவரை வசைபாடுகினற் ஜனநாயக மறுப்புதான் நிலவுகின்றது. அதற்கு உங்களை சொல்லி குற்றமில்லை. 30 லட்சம் ஈழமக்களிடம் என்ன விரும்புகிறார்கள் என்பதை எந்த தேர்தல் மூலமாகவும் கூட அங்கீகரித்து கேட்காமல் மாநில சுயாட்சிக்கு அவர்களை சம்மதிக்க வைக்க இந்தியா முயல வேண்டும் எனக் கோரும் தங்களது கட்சியில் தனிநபரான எனக்கு எப்படி உரிமை தருவீர்கள் என எதிர்பார்ப்பது.?

சித்தாந்த சூன்யம் நிலவும் எவரேனும் ஒருவர் த்த்துவ திரிபுவாதியாகவும் இருக்க முடியுமா? மார்க்சிய விளக்கம் தர முயற்சிக்கவும்.

வெகுஜன அமைப்புக்கும் கட்சிக்கும் உள்ள உறவு என்ன என விளக்குங்கள் அதன்பிறகு யார் இறக்குமதி புரட்சியாளர்கள் என கண்டறியலாம். இந்திய சூழல் என்ன நிலவுகிறது எனக் கருதுகிறீர்கள். தரகு முதலாளிகள் என்ற வரையறையை தவறு என நீங்கள் கருதினால் நமது நாட்டின் நிலவும் உற்பத்திமுறையை எப்படி வரையறை செய்வது என விளக்கமாக சொல்லுங்கள். அதாவது உற்பத்தி உறவுகள் எப்படி அணி சேரும் என்பதையும் விளக்கவும்.

இயக்கவியலின் விதிகளை வைத்து கட்சி மற்றும் தனிநபர் மீதான மாற்றங்களை உங்களது கட்சியின் நடைமுறையில் வைத்து ஒரு வைதீக பிராமணர் எப்படி உயர்சாதி மனோபாவத்தை களைய முடியும் என விளக்கவும். குறிப்பாக பூணூல் அணிவது அல்லது தனது சாதியை (உயர்சாதி) விமர்சித்தால் அதற்காக கோபப்பட்டு மற்றவர்களை அறிக்கை விட வைப்பது (மு.க விற்கு கடந்த ஆண்டு டி.கே. ஆர் மீது அவாள் என அழைத்ததற்காக வந்த தோழர்களின் விமர்சனங்கள்) ...என நடைமுறை உள்ளதுதானே. கட்சியின் வெகுஜன அமைப்பில் ஆர்எஸ்எஸ் உறுப்பினரும் இணையலாம் என்றால் வெகுஜன அமைப்பு என ஏன் ஆரம்பிக்கின்றோம். கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிரிகள் அதுவும் பாசிச தன்மையுள்ள எதிரியுடன் ஜனநாயகமாக இருப்பதாக இருப்பது சரியா... பூணூலை துறக்க மறுத்தவர்களா...வெட்கமாக இல்லையா ... நான் முதலில் பிராமணன் அடுத்து வங்காளி அடுத்துதான் கம்யூனிஸ்டு எனச் சொன்னவர் இன்றும்தானே உங்களது மே வங்க அமைச்சர், தனது பேரனுக்கு பூணூல் கல்யாணம் நடத்தியவர்தானே சோம்நாத் சட்டர்ஜி அதற்காக இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இதெல்லாம நாங்க சொன்ன விமர்சனம் இல்ல மக்கள் சொன்னது... அவ்வளவு ஏன் பச்ச சட்ட போட்டா ஜெ. ராசிகக்கு நல்லதுன்னு சொல்லி பச்ச சட்ட போட்டது மக.இக காரங்க இல்லப்பா ? உங்களது நடைமுறை மேல்சாதி மனோபாவத்தை மாற்றும் என நிரூபித்தால் நான் நீங்கள் சொல்லும் எதற்கும் கட்டுப்படுகிறேன். சித்தாந்த கல்வி என்பது மார்க்சு ஏங்கல்ஸ் மற்றும் லெனினைப் படிப்பது மாத்திரமல்ல...ஒருவேளை மக.இக காரர்கள் திரிபுவாதிகள் என நீங்கள் கருதினால் அவர்களது எழுத்துக்களையும் உங்களது அணிகளைப் படிக்க வைத்து அது ஏன் தவறு என்பதையும் லாஜிக் உடன் விளக்க வேண்டும். 
// கட்சி உறுப்பினருக்கு மதநம்பிக்கை இருப்பது தவறில்லை என்றால் மதம் ஒரு அபின் என்று ஏங்கல்ஸ் வேல மெனக்கெட்டு எதுக்கு எழுதுனாரு//

மதம் மக்களை மயக்கும் அபின் என்கிற உண‌மயை இந்த உலகுக்கு எடுத்துரைத்த மார்க்சீய பராசான்கள் ம.க.இ.க என்கிற ரெடிமிக்ஸ் புரட்சிக்காரர்கள் உருவகலாம் என்பதை கருத்தில் கொண்டிருந்தார்கள். அதனால் தான் லெனின் இடதுசாரி இளம்பிள்ளை வாதம் பற்றி எழுதினார்.

தாங்கள் நம்பும் மதம் ஒரு அபின் என்பதை அதை நம்புபவர்கள் உணர வேண்டும் நண்பரே, அதற்கு மதமில்லாமலும் இம்மண்ணில் வாழ்ந்து முடிக்க முடியும் என்பதை அவர்கள் உணரும்படியான ஒரு சமூக சூழல் உருவாக வேண்டும், அதற்க்காக போராடியே ஆகவேண்டும், அல்லாமல் கட்சி உறுப்பினராவதற்கு கட்சியின் திட்டமும், அமைப்புச்சட்டமும் ஏற்றுக்கொள்வது ஒன்றைதவிர வேறு முன்விதிகளை நிச்சயிப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல மண்ணுக்கேற்ற மார்க்சீயம் அமுல்படுத்த போராடும் எந்த நாட்டிலுள்ள புரட்சி இயக்கங்களுக்கும் முடியாது. 

ஆனால் இர‌த்த‌ம் குடிப்ப‌து, கெட்ட‌வார்த்தைக‌ளால் அர்சிப்ப‌து, குத‌ற்க‌மாக‌ கேள்விக‌ளை ம‌ட்டும் முன்வைப்ப‌து, ஆன்லைன் பதிவுகள் மூலம் புர‌ட்சி ந‌ட‌த்துவ‌து, பிண‌ங்க‌ளையும் த‌ற்கொலைகளையும் முன்வைத்து உயர்த்திகாட்டி முன்னுக்கு பின் முரணாக பேசி புரட்சிக்கு புறப்பட்டவர்களுக்கு இதெல்லாம் புரியாது, 

அவர்களும் சி.பி.எம் நடத்தும் போராட்டத்தின் பயன்களை காணும் போது இயல்பு நிலைக்கு வரலாம் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

தோழர் சந்திப்பின் வலைப்பூவிலிருந்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கும் இதுவே பதில். 

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்களை இந்தியாவிலிருந்து தான் தேட முடியும் அதர்காக இறக்குமதி செய்ய முடியாது.//
தோழரே உங்களுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டிருக்குகம் எனக் கருதுகிறேன். கட்சி உறுப்பினர் என்பவர் சமூக மாற்றத்துக்காக நிற்பவர் அவருக்கு கடவுள் நமபிக்கை இருப்பது என்பது சமூக மாற்றத்துக்கு எதிரானது. இதை மார்க்சியம் தெரியாதவர்கள் கூட சொல்ல முடியும். இது ஏன் தங்களுக்குப் புரியவில்லை. இந்த லச்சணத்தில் கட்சி நடத்தினால் கட்சி மாநாட்டுக்கு சென்னை வருபவர் திருப்பதி போவதும் தவிர்க்க முடியாதுதானே. மதம் ஒரு அபின் என்பதன் வீச்சு உங்களை விட பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்கு நன்கு விளங்கியுள்ளது. உண்மையில் நீங்கள் இடதுசாரி இளம்பிள்ளை வாத்ம் புத்தகத்தை போல்ஷவிக் கட்சி வரலாற்றுடன் சேர்த்து படித்தால் அது மக.இக விற்காக எழுதப்படவில்லை என்பதையும் உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அமைப்புச்சட்டம், கட்சித்திட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள கூட உறுப்பினர் என ஒரடி முன்னால் ஈரடி பின்னால் நூலில் லெனின் குறிப்பிட்டுள்ளாரா தோழர் ஒரு வேளை நான் சரியாகப் படிக்கவில்லையா?
மண்ணுக்கேறற் மார்க்சியம் என்பதுதான் அன்றைய நரோத்னியம் அதன்பிறகு அதன் கள்ளக்குழந்தைகள் இடது சாரிப் புரட்சிகர சோசலிஸடுகாளாக அறியப்பட்டனர். அவர்களது வரலாற்றுப் பாத்திரத்தை அறிய ஜான் ரீடின் உலகைக் குலுக்கிய பத்தி நாட்களை படியுங்கள். அதன் பின்பகுதியில் அவர்களுக்கு லெனின் புரட்சி வென்ற பிறகு நவம்பர் 25, 1917 ல் விவசாயிகள் காங்கிரசில் சரியான பதில் ஒன்றைத் தருவார். நிச்சயமாக அது உங்களுக்கு சால்ப் பொருந்தும். படியுங்கள்.
எதிரிகளின் ரத்தத்தைதானே குடித்தோம்....டாடாவுக்காக மக்களது ரத்தத்தை குடிக்கவில்லையே....கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிப்பது என யாரைச் செய்தோம்...நிரூபித்தால சுயபரிசீலனை செய்வோம். குதர்க்கமான கேள்வியாக எதுவும் வைத்துள்ளதாக ஒரு பொதுவான நபரை வைத்தே கேட்கலாம். பதில் சொல்ல முடியாமல் சிக்கிக் கொண்டால் கேள்வியை குறை சொல்வது இரண்டு பேரால்தான் இந்தியாவில் சாத்தியம் ஒன்று பார்ப்பனர்கள் இரண்டு நீங்கள்.......பதில் சொல்ல மறுப்பதாக புரிவது உங்களது பார்வை கோளாறு.... கேள்விகள் மூலமான சிந்தாந்த வலைப்பூ விவாதம் என்ற ஆரோக்யமான சூழலை உருவாக்க முனைகிறோம். பல அரசியலற்ற வாதத்தால் நிரம்பிய மனிதர்கள் மார்க்சியத்தை அறிய வாய்ப்பளிக்கலாம் என கருதுகிறோம். ஆனால லாஜிக் இல்லாமல் பேசியோ, சம்பந்தமில்லாமல் திட்டியோ பேசி அவர்களை விரட்டி வருவது தாங்கள்தான். அந்த சிந்தாந்த வறட்சிக்கு எனன செய்ய.....
ஆன்லைன் மூல்ம புரட்சி நடக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. அதுபோலவே அரசியலற்ற பொருளாதார போராட்டங்கள் மூலமாகவும் நடக்காது என்பதை என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் லெனின் விளக்கி விட்டார். இந்த புத்தகத்தையெல்லாம் உங்ஙளது கட்சியில் விவாதிக்க மாட்டீர்களே....இதுதானே போராட்டத்தின் உடனடி பலன்...அதவது போனஸ், சம்பள உயர்வு இதெல்லாம் சிஐடியு வாங்கித்தரும். ஏசி சண்முகம் என்ற ரவுடி கல்லூரில இருந்து வெளியேறி நல்ல தரமான கல்லூரிககு மாணவர்கள வழியனுப்பி வைக்கும் எஸ.எப்.ஐ இதனால் பயனடைந்த வர்கள் தோழர்கள்ட கேட்டு சித்தாந்த புஸதகம் வாங்கிப் படிப்பாங்களா அல்லாட்டி அந்த பொருளாதார பிரச்சினையை அரசியல் திசைவழி முழக்கத்தின் கீழ் நடத்திவிங்களா

Baappu
2009-02-14 06:51:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நண்பர் மாணி!

வரட்டுத்தனமே உங்கள் கொள்கை என்றாகி விட்ட சூழலில் விவாதம் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லும் கீற‌ல்ரிக்கார்டாக மாறிவிட்டது. மமதாவோடு சேர்ந்து அப்பாவிகளை கொன்று புரட்சி நடத்தியவர்களாயிற்றே புதுமையில்லை.

அரசியல் பித்தலாட்டம் ஆடுவதும் சி.பி.எம் மீது அவதூறு பரப்புவதும் உங்களின் ஜனநாயகதன்மையின்மையை சி.பி.எம்மீது திருப்புவதும் மட்டும் உங்கள் இருப்புக்கான ஆதாரமாகி போனதில் வருத்தம்.

போனஸுக்கான போராட்டம் கூலிஉயர்வு போராட்டம் போன்றவை இன்றைய தேவை. மக்கள் ஜனநாயக புரட்சிக்கு முன் வர்க்க அணிசேர்க்கை என்பது இடதுசாரி மதசார்பற்ற ஜனநாயக அணியாக இருக்கும் அதர்கான பணிகள் நிறைய இருக்கின்றன. அவ்வணியில் தேசிய முதலாளிகள் உட்பட கடவுள் மத நம்பிக்கையாளர்களும் உழைப்பாளி மக்களுடன் இருப்பார்கள். சொஷலிசத்துக்கான பாதை மிகவும் எளிதான ஒன்றாக கருதவில்லை. தளைகள் நிறைய தாண்ட வேண்டியுள்ளது.


தோழர் W.R.வரதராஜன் பதிலை மீண்டும் பதிகிறேன்.
நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் மீது மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. சீனத்தின் மகத்தான தலைவர் மாவோவின் கோஷங்களை அவர்கள் முன்வைத்தார்கள். சீன கம்யூனிசத் தலைவர்களே நக்சல்பாரி இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, ‘மாவோவின் செயல்பாடுகள் இந்திய நாட்டிற்கு ஒத்துவராது’ என்று சொன்னதாக எங்களுக்கு தகவல் உண்டு.

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லாதது தான் அவர்கள் இப்படி தனித்தனிக் குழுவாக பிரிந்து செயல்படுவதற்குக் காரணம். நாடாளுமன்றங்கள் வெறும் பன்றித் தொழுவங்கள் என்று லெனின் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த இயக்கங்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்தி விட முடியாது.

புரட்சியின் மூலம் சோஷலிசத்தைக் கொண்டு வருவதற்கு புறச்சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறதா, மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மதிப்பீட்டை உணர்ந்த பல நக்சலைட் இயக்கத் தோழர்கள் எங்களோடு இணைந்திருக்கிறார்கள்.