கனடாவில் உள்ள தமிழ்தோட்டம் என்னும் அமைப்பு, 2007ம் ஆண்டின் சிறந்த கவிதை நூல் விருதுக்கு, கவிஞர் வாசுதேவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பான தொலைவில் நூலினை தெரிவு செய்துள்ளது. இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 18ம் நாள் (18-05-2008) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறொன்ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இந்நூலுக்கான விருதுத் தொகையாக ஐநூறு கனடியன் டொலர்களும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 44 கவிதைகள் கொண்ட இத்தொகுப்புக்கு கி.பி.அரவிந்தன் முன்னுரை வழங்கியுள்ளார். 

பாரிசில் மொழிபெயர்ப்பு பணியகத்தை (தமிழ் - பிரெஞ், பிரெஞ் - தமிழ்) நடாத்திவரும் கவிஞர் வாசுதேவன் ஈழத்தில் வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். பிரெஞ்சு மொழிப் புலமைகொண்ட இவர் புகலிடப்புத்தகம் என்னும் இணையத் தளத்தின் நெறியாளராகவும் இருந்தார். தொலைவில் அவரது முதலாவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.