லொயோலா கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை

மற்றும்

புதிய தமிழ் ஆய்வுகள் 

இணைந்து நடத்தும் கருத்தரங்கம்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் செய்தி ஊடகங்கள், அரசின் கொள்கை முடிவுகளை, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் விவாதத்திற்கு உட்படுத்தும் ஒரு பொது மேடையாக இருக்க வேண்டிய கடப்பாடு கொண்டிருக்கின்றன. சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலன்களை பாதிக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கவனத்திற்கு கொண்டு வந்து எச்சரிக்கை செய்யும் கடமையும் கொண்டிருக்கின்றன. அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கும் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, சமூக நீதி ஆகியவற்றை பொதுமக்களிடையே தொடர்ந்து பரப்பும் கல்வியியல் கடமையை ஆற்ற வேண்டிய பொறுப்பும் கொண்டிருக்கின்றன. 

இம்மூன்று கடமைகளையும் செவ்வனே ஆற்றும் செய்தி ஊடகங்களே ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் பரிணமித்து நிற்கின்றன. இதற்கு, செய்தி ஊடகங்களின் உள் கட்டமைப்புகள் ஜனநாயகப் பூர்வமாக அமைந்திருக்க வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உரிய அளவில் ஊடகங்களில் பங்குபெறுபவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான உள் கட்டமைப்பு அமைந்திருக்கும்போது அனைத்துப் பிரிவினரின் நியாயமான ஜனநாயகப்பூர்வமான கோரிக்கைகளும் நலன்களும் உரிய பிரதிநிதித்துவமும் கவனமும் பெறுவது உறுதி செய்யப்படும். 

கடந்த இருபது ஆண்டுகளில் செய்தி ஊடகங்களின் பெரும் வேக வளர்ச்சியில் இம்மையமான அம்சங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? ஊடகங்கள் தமது அடிப்படை ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதில் எந்த நிலையில் இருக்கின்றன? ஆரோக்கியமான மாற்றங்களுக்கு வித்திடுவது எப்படி? இக்கேள்விகளை பல்வேறு நோக்குகளில் இருந்து அலசி ஆராயும் ஒரு தொடக்கமாக இக்கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் கடமையின் ஆதாரமான இக்கேள்விகளை உற்சாகத்துடன் வரவேற்று விவாதிக்க, பங்கெடுக்க, பங்களிக்க அழைக்கிறோம்.

புதிய தமிழ் ஆய்வுகளுக்காக

வளர்மதி

***

கருத்தரங்க நிகழ்ச்சி நிரல்

துவக்கவுரை: திரு. சுரேஷ் பால், துறைத் தலைவர், காட்சித் தொடர்பியல் துறை, லொயோலா கல்லூரி 

ஊடகங்கள் வரையறுக்கும் சிவில் சமூக வெளி – திரு. வளர்மதி, ஆய்வாளர் 

ஊடகங்கள் வரையும் பெண் உருவங்கள் – திரு. கிருபா முனுசாமி, வழக்குரைஞர் 

ஊடகச் சித்தரிப்பில் திருநங்கைகள் – திரு. கிரேஸ் பானு, களப்பணியாளர் 

தமிழகப் பிரச்சினைகளும் ஊடகங்களின் எதிர்நிலையும் – திரு. பாபு ஜெயக்குமார், மூத்த பத்திரிகையாளர் 

இஸ்லாமியர்கள் குறித்த ஊடக அணுகுமுறைகள் – திரு. ஜவாஹிருல்லாஹ், தலைவர், மனித நேய மக்கள் கட்சி 

தலித்துகள் குறித்த ஊடகச் சித்தரிப்புகள் – திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி   

இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லொயோலா கல்லூரி

நாள்: 20-12-2016  

நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 வரை