மகிந்த அரசின் சர்வாதிகார அரசியல் மற்றும் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளை வீழ்த்தி அதனிடத்தில் ஜனநாயக அரசொன்றை மாற்றீடாக நிறுவுவோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கூறியே மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசு ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதியான ஒரு மேம்பட்ட ஜனநாயக நிர்வாகம் என்பதற்கு போக்குக் காட்டிவிட்டு அரசியலலைப்பு மற்றும் சட்டரீதியான சீர்திருத்தத் திட்டங்கள் என்பதாக மட்டும் அதனை குறுக்கி மேற்கொள்கிறது.

அரசியலமைப்பில் 19ம் திருத்தச் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியதானது ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் தாங்கள் செய்த அளப்பரிய சேவை என அவர்கள் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையில் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அடையப்பெற்றிருப்பது எதுவெனில், தீங்கானது என்ற 18வது திருத்தச் சட்டத்தில் பெரும்பகுதி நீக்கப்பட்டு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மற்றும் சலுகைகளில் பெரும்பகுதியை தக்கவைத்திருக்கின்ற 17 வது திருத்தச்சட்டத்தின் கீழ் நிலவிய ஏறத்தாள அதே அதிகாரங்களே மீண்டும் புகுத்தப்பட்டிருக்கின்றது.

அதன் மறுபுறத்தில் எல்லாவிதமான ஒடுக்குமுறைச் சட்டங்களையும் அவர்கள் தக்க வைத்திருக்கிறார்கள். நீதித்துறை விசாரணைகள் ஏதுமின்றி ஒரு கைதியை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருக்க்கூடிய காலத்தினை 48 மணித்தியாலங்களாக நீடித்தமையினை இங்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற எந்தவொரு மிகவும் நிதர்சனமான வெளிப்படையான மனிதவுரிமை மற்றும் ஜனநாயகப் பிரச்சனைகளைப் பற்றி மைத்திரிபால - ரணில் கூட்டணி ஒருபோதும் பேசியதில்லை. விளைவாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்படுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக இன்றைய நாள் வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

வடக்கு கிழக்கு மக்களுக்காக போராடுவதாக தங்களை பிரகடனப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிராந்திய அரசியல் கட்சிகள் கூட அரசியல் கைதிகள் பற்ற பேச மறந்து போய்விட்டன. அரசியல் கைதிகளுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதென்பது, காணாமலாக்கப்பட்டோர், கடத்தப்பட்டவர்கள் மற்றும் அரசியல் அடிப்படையில் நாடுகடத்தப்பட்டவர்களின் விவகாரத்துடன் மிக நெருக்கமானதாகும்.

ஆட்சியதிகாரத்திலுள்ளவர்கள் முதலாளித்துவ அரசியல் தலைமையாகவும், இந்த எரியும் பிரச்சனைகளை அவர்கள் பின்னரங்கிற்கு தள்ளிச் செல்ல முயலுகின்ற வேளை, மக்கள் இந்த விடயங்களை அரசியல் சம்பாஷணைகளின் முன்னரங்கில் தக்கவைக்க வேண்டும். அரசியல்கைதிகளுக்கான, அரசியல் அடிப்படையில் நாடுகடத்தப்பட்டவர்களுக்கான, கடத்தப்பட்டவர்களுக்கான, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியினை அடைந்து கொள்வதற்காக மக்கள் போராட்டங்களை முனைப்பாக நடாத்தியாக வேண்டும்.

அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக தாமதமின்றி விடுதலை செய் என்ற கோசத்தை முன்வைத்து, சமவுரிமை இயக்கம், 14.06.2015 ஞாயிறுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை Palce Trocaderor-வில் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

- சமவுரிமை இயக்கம் (பிரான்ஸ்), இலங்கை