பெரியார் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அமைப்பை நிறுவியதே, பெரியார் கொள்கைகளைப் பரப்புவதற்குத்தான்! ஆனால், அந்த நிறுவனம், இப்போது பெரியார் எழுத்துகள்-பேச்சுகளை வெளியிடும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி, நீதிமன்றம் போய், பெரியாரின் நோக்கத்துக்கு எதிராகவே செயல்படுகிறது!
தனது கருத்துகளைப் பரப்பு வதற்காகவே சொத்துகளை வழங்கி, அதற்காகவே ஒரு நிறுவனத்தை பெரியார் ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்கு தடை வாங்கத் துடிக்கலாமா என்று கேள்வியை எழுப்பினால், இப்படி கேள்வி எழுப்பியவர்களையெல்லாம், பெரி யாரின் எதிரிகளாக சித்தரிக்கிறார்கள்.
பெரியாரைப் பற்றி நூல் எழுதிய எஸ்.வி. ராஜதுரை, உரிமை நூலாசிரி யருக்கு மட்டும் என்று போட்டு இருப்பது ஏன்? ஊருக்கு தான் உபதேசமா என்று, ‘விடுதலையில் கலி. பூங்குன்றன் கேள்வி எழுப்புகிறார். இப்போது பிரச்சினை பெரியாரின் நூல்களைப் பற்றித்தான், பெரியாரைப் பற்றிய நூல்களுக்காக அல்ல.
தனது கருத்துகளைப் பரப்புவதற் காகவே சொத்துகளையும், நிறுவனங் களையும் விட்டுச் சென்ற ஒரு தலைவரின் கருத்தை பரப்புவதற்கு அந்த நிறுவனமே தடை போடலாமா என்பதுதான் கேள்வி?
ஆத்திரத்தின் உச்சிக்குப் போய் - எதையாவது மறுப்பாக எழுத வேண்டும் என்று பேனா பிடிப்பதால், விவரங் களைப் புரிந்து கொண்டுகூட எழுத தயாராக இல்லை.
எஸ்.வி.ஆர். ‘சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார் என்கிறது ‘விடுதலை’ கட்டுரை!
வெளியிட்டது, எஸ்.வி.ஆர். அல்ல, ‘விடியல்’ பதிப்பகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் ‘விடுதலை’ கட்டுரையாளர் கலி. பூங்குன்றன் சாடியிருக்கிறார். “மார்க்சிஸ்டுகள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டாமா? அவர்களுடைய கட்சி நூல்களில் எல்லாம் பதிப்புரிமை என்று போடுவதே இல்லையா? சாமானிய மக்களுக்கே சரித்திரம் படைக்கப் போவதாகக் கூறும் அவர்கள், அத்தகைய நூல்களை யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கதவைத் திறந்துவிட வேண்டியது தானே!” - என்று பொறுப்புணர்ச்சி பற்றி ‘பாடம்’ எடுக்கிறார்.
மார்க்சிய தத்துவத்தின் ஆசான்களான மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் எழுத்து களுக்கு, பதிப்புரிமை கோரி, முடக்கப்பட வில்லை. அதன் காரணமாக உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் அவர்களின் சிந்தனைகள் வெளியிடப் பட்டுள்ளன.
இன்னும் சொல்லப் போனால், ‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ நிறுவனமே மார்க்சின் மூலதனத்தை சிறப்பாக வெளியிட்டுள்ளது. அதற்காக அன்றைய சோவியத் ஒன்றியம் அதை முடக்க முனையவில்லை.
எந்த நூலுக்கும் பதிப்புரிமையே கூடாது என்று பெரியார் திராவிடர் கழகம் கூறுவது போலவும், பதிப்புரிமை சட்டத்தையே ஒழித்து விடலாம் என்று வலியுறுத்துவது போலவும் ஒரு பொய்மையை முன்னிறுத்தப் பார்க்கிறது, ‘விடுதலை’யின் கட்டுரை!
தத்துவத் தலைவர்களின் சிந்தனைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதுவும் காலவரிசைப்படி தொகுக்கப்படும்போதுதான் அந்த சிந்தனைகளைப் பற்றிய புரிதலில் சரியான வெளிச்சம் கிடைக்கும். காரல் மார்க்ஸ், லெனின் பற்றிய அத்தகைய தொகுப்புகள் அப்படி எல்லாம் வெளி வந்த காரணத்தால் தான் இந்த தத்துவங்களின் அடிப்படையில் பல்வேறு ஆய்வுகள், கருத்துகள் நூல்களாக வெளி வந்து, மக்கள் மன்றத்தில் விவாதிக்கப் பட்டு வருகின்றன. அதன் வழியாக தத்துவங்கள் காலத்துக்கேற்ப மேலும் செழுமையாகி வருகின்றன.
இதைப் பற்றி எந்தக் கவலையுமின்றி கல்வி நிறுவனங்களின் வர்த்தகக் கனவுகளிலும் கழகத்துக்குள் குடும்ப வாரிசுகளைக் கொண்டு வருவதிலும் கவலையை செலுத்திக் கொண்டு, பெயருக்கு பெரியாரை நாமவாளியாக்கிக் கொண்டிருப்பவர்கள். ‘பொறுப் புணர்ச்சி’ என்றெல்லாம் பேசுகிறார்கள்.
‘பொறுப்புணர்ச்சி’, ‘உபதேசிகளுக்கு’ ஒரு கேள்வி?
பெரியார் ஒப்புதலோடு - பதிப்புரிமை பெற்று வெளியிடப்பட்ட நூல் சாமி. சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ என்ற பெரியார் வரலாற்று நூல், 1939 ஆம் ஆண்டு ‘பதிப்புரிமை பெற்றது; உரிமை வெளியிடுவோருக்கே’ என்ற அறிவிப்பு டன் ‘தமிழ் நூல் நிலையம்’ பதிப்பகத்தால் 408 ஹைரோடு - திருவல்லிக்கேணி என்ற முகவரியோடு வெளி வந்தது, இந்த நூல். இது மறைந்த கொள்கை வேள் குத்தூசி குருசாமியின் இல்ல முகவரி. இப்படி ஒரு நூல் வெளியிடுவதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டது அவர்தான்.
பதிப்புரிமையோடு தமிழ் நூல் நிலையம் வெளியிட்ட அந்த நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடாக வீரமணி பல பதிப்புகளை வெளியிட்டுக் கொண் டிருக்கிறாரே, இதுதான், இவர்களின் பொறுப்புணர்ச்சியா?
ஊருக்கு உபதேசம் கூறுவோரே! உங்கள் முதுகைப் பாரும்!