'இந்தியப் புரட்சியின் குரல் (1929-2010) - தோழர் கனுசன்யாலுக்குப் புகழஞ்சலி' எனும் நூலை முன்வைத்து.....

கம்யூனிஸ்டு புரட்சியாளர்களுக்கான அகிலஇந்திய ஒருங்கிணைப்புக் குழு கல்கத்தா ஷாகத் மினார் மைதானத்தில் 11.11.1967 ல் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய சாரு மஜும்தார் அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து இப்படி சொன்னாராம்...

"நான்தான் நக்சல்பாரிப் போராட்டத்தின் தலைவன் என நீங்கள் எண்ணுக்கிறீர்கள். அந்தப்போராட்டம் குறித்து என்னிடம் ஏதேனும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அதுபற்றி பேச இயலாதமைக்கு வருந்துகிறேன். ஏனெனில் நான்அல்ல மாறாக அதன் தலைவர்கள் தோழர் கணுசன்பால், தோழர் ஜங்கல் சந்தால், தோழர் கோகன் மஜூம்தார், தோழர் காடம் மாலிக் மற்றும் பல்வேறு விவசாயத் தலைவர்களே அதன் உண்மையான தலைவர்கள் ஆவர். "

voice of indian revolutionதோழர் கணுசன்யால் நக்சல்பாரி இயக்கத்தின் கதாநாயகர்களில் ஒருவர். கணுசன்யால் மரணத்துக்கு பிறகு அவரின் நினைவு பற்றி குறிப்பிட்ட மூத்த நக்சல்பாரி தோழர் சுனிதி குமார் கோஷ் "விவசாயிகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்து கொள்ளவதில் உண்மையில் வெற்றியடைந்த ஒருவர் கணுசன்யால்தான்.அவர் தன்னுடைய இறுதிநாள் வரையில் விவசாயிகளின் சகோதரனாக இருந்தார்.....கணு ஔிமிக்கவராகவும், ஒரு அரிய முன்னுதாரணமாகவும் இருந்தார்" என குறிப்பிடுகிறார். கனுடா என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் கணுசன்யால் மேலே குறிப்பிட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும், பிறகு சி.பி.ஐ.(எம்.எல்)ன் மைய அமைப்புக் குழுவில் இருந்த 11 நபர்களில் ஒருவராகவும் இருந்தவர். நக்சல்பாரி எழுச்சியின் பிரதிநிதியாக பிற தோழர்களோடு மக்கள் சீனத்துக்கு சென்று அங்கு மாவோ உள்ளிட்ட பிற சீனத் தலைவர்களுடன் கலந்துரையாடியவர். நக்சல்பாரி எழுச்சியின் உச்ச காலகட்டங்களில் கணுவை கண்டதும் சுட காவல்துறைக்கு அரசு உத்திரவிடப்பட்டிருந்தது.

தனது வாழ்வில் ஏறத்தாழ 17 ஆண்டுகளை சிறையிலும், ஏனைய காலத்தை உழைக்கும் விவசாயிகளிடத்திலும் கழித்த தோழர் கணுசன்யால் கடந்த 23.03.2010 ல் காலமானார். அவரின் நினைவை போற்றும் வகையிலும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையிலும் மேற்கண்ட புத்தகம் (தாமதமாக)வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் மறைந்த தோழர் கோவை. ஈஸ்வரன் அவர்கள் நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார். அனேகமாக இது அவர் எழுதிய கடைசி முன்னுரையாக இருக்கும் என நினைக்கிறேன். தோழர் கணுசன்யாலோடு களப்பணியாற்றிய பலர் அவரின் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர் மறைவுக்கு பிற்பாடு நடைபெற்ற நினைவுக்கூட்டங்கள் குறித்தும் நூலில் குறிப்பிடப் படுகிறது. அவரின் நடைமுறை தொடர்பான போராட்டங்கள், சாதி சமத்துவம் தொடர்பான வெற்றிகரமான முயற்சிகள் என் பல விஷயங்கள் நூலில் உள்ளன.என்றாலும் நூலின் முக்கியத்துவம் என்பது ' வரலாற்றுப் பக்கங்களில் இருந்து' என தலைப்பிடப்பட்ட கணுவின் படைப்பு மற்றும் நேர்காணல்கள் தான். 'நக்சல்பாரி பற்றி மேலும் கூடுதலாக' மற்றும் '1967முதல் 1972 வரையிலான சி.பி.ஐ. (எம்.எல்) வரலாறு' ஆகிய முக்கிய அறிக்கைகள் இதில் உள்ளன. என்ன காரணத்தாலோ அவரின் மற்றொரு புகழ்மிக்க அவணமான 'டெராய் அறிக்கை' இதில் வெளியிடப்படவில்லை.

நக்சல்பாரி நிகழ்வுக்கான வரலாற்று அடிப்படை, அதன் வரலாற்று நியாயம் ஆகியவற்றை குறிப்பிடும் நூல் அதன் வீச்சையும் சாரமாக தொகுத்தளிக்கிறது. சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் ஆகியவற்றின் திரிபுவாத வரலாற்றை தொட்டுச் செல்லும் நூலானது, எம்.எல் இயக்கத்தின் தோற்றம் பற்றியும் கூடுதலாக குறிப்பிடுகிறது. சாருமஜும்தாரின் தனிநபர் பயங்கரவாத நடைமுறையை விமர்சிக்கும் நூல் நக்சல்பாரியின் தொய்வுக்கு இதுவே பிரதான காரணம் என்று பேசுகிறது.

சாருவிடம் பல பலவீனங்கள் இருந்த போதிலும், நூல் சுட்டிக்காட்டுவதுபோல அது அவ்வளவு குரூரமான முரண்பாடாக வரையறுப்பது தவறான மற்றும் கட்சி நடைமுறையை பின்னுக்கு இழுக்கும் நிலைக்கு கொண்டுபோய்விடுகிறது. "அரசியல் பிழைப்புவாத கும்பல் " "அவசரகதியில் மா.லெ வை உருவாக்கி புரட்சியாளர்களின் அணியில் பிளவை எற்படுத்தினர்" என சாருவையும் அவரின் தோழர்களையும் கணுசன்யால் குற்றம் சுமத்துவது என்பது மாபெரும் தவறான ஒன்றாகும்.

அவர் வெகுமக்கள் போராட்டங்களைக்காட்டிலும் தாக்குதல் குழுக்களுக்கும் அவற்றின் கடமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதும் உண்மைதான் என்றாலும் கணுசன்யால் சொல்வது போல வெகுதிரள் அமைப்பையும், வெகுமக்கள் போராட்டத்தையும் புறக்கணித்தார் என்பதோ, அரசியல் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரகசியக் கொலைகள்மூலமாக அழித்தொழிப்பு நடவடிக்கைகளை முன்நிறுத்தினார் என்பதோ சரியானதாகப் படவில்லை. அதே போல் 'முதல் நக்சல் கணுசன்யால்' போன்ற வரைவுகளையும் நம்மால் அங்கிகரிக்க இயலவில்லை.

நக்சல்பாரி எழுச்சிக்கும் சாருவுக்கும் தொடர்பில்லை என்பது போன்ற புரிதல்களை கணுவின் எழுத்துக்கள் உருவாக்குகின்றன.இது உண்மைக்கு புறம்பான ஒன்று. சாருவின் இந்திய வர்க்க முரண்பாடுகளின் பகுப்பாய்வு ஆகட்டும், வர்க்க அணிசேர்க்கையில் இந்தியச் சூழலுக்கு மார்க்ஸியத்தினைப் பொருத்தியதாகட்டும், இந்தியப் புரட்சிக்கான பாதையின் அடிப்படையை வகுத்தளித்ததாகட்டும் அவரின் பங்கு நக்சல் பாரி எழுச்சிக்கும் மா.லெ இயக்கத்துக்கும் முக்கியத்துவமான ஒன்றாகும். சாருமஹூம்தாரை விட்டு விட்டு நக்சல்பாரியை பார்ப்பது என்பது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.

'சாருவிடம் புரட்சிகர அதிகாரமையம்' எனும் கருத்தாக்கம் மற்றும் நரோத்னிசம் தொடரபான கூறுகள் இருந்த போதிலும் "புதிய விசயங்கள், அவை வளரும்போது எப்போதும் இடர்பாடுகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தே ஆகவேண்டும். எவ்வித இடர்ப்பாடுகளுக்கும், பின்டைவுகளுக்கும், கடன முயற்சிகளுக்கும் இடம் தராமல் சோசலிசப் போராட்டம் சுமூகமாக, எளிதில் வெற்றி பெறும் என்று எண்ணுவது வெறும் கற்பனை" என்ற மாமோவின் புகழ்மிக் குறிப்பினைப்போல தொடக்க கால பலவீனங்களாகவே சாருவின் போக்குகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின்னடைவுகள் குறித்த பரிசீலனைகளுக்கு முன்பாகவே அவரின் கைதும், மரணமும் நேரிட்டு விட்டது.

சாருவின் பங்களிப்பு குறித்து கணுவின் பார்வையில் நமக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும், அவரின் பயங்கரவாத போக்குகளுக்கு எதிரான விமர்சனங்களையும், நக்சல்பாரி இயக்கத்தில் அவரின் பங்களிப்பையும் நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாதது. தற்போதைய சூழல்கள் குறித்த அவரது புரிதல்களுக்கும், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான அவரின் விமர்சனங்களுக்கும் கட்டாயம் நாம் காது கொடுத்தாக வேண்டியது நமது கடமையாகும்.

பொதுவாக எம்.எல் இயக்கங்களில் உள்ள குருங்குழுவாதங்களும், கருத்து முரண்பாடுகளும், பழி சொல்லாடல்களும் நம்மை அயர்வு கொள்ளச் செய்வது இன்றைக்கு எதார்த்த மான ஒன்றாக இருக்கின்றது. எந்த ஒரு குழுவின் தலைவர்களும் மேற்படி இந்தப் பிளவுகள் குறித்த நேர்மையான கருத்தினைக் கொண்டிருப்பவர்களாகவும், இணக்கத்தை விரும்புபவர்களாகவும் இருப்பதாகத் தெரியவில்லை.

நக்சல்பாரி எழுச்சியானது தோல்வியைச் சந்தித்த போதிலும் சி.பி.எம் முகாமுக்குள்ளும், வெளியிலும் சித்தாந்தப்போரை முன்னெடுத்துச் செல்வதில் பெரும்பங்காற்றியது. நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் வெடிப்பதற்கு அது உந்து சக்தியாக அமைந்தது. தற்போதும் அமைந்து வருகிறது. இன்றைய உலகமயச் சூழலிலும், இந்துத்துவ பாசிச ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயல்பாடுகளும் அமில மேகமாய் மக்களைச் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், இடது வலது திரிபுவாதங்கள் பட்டவர்தனமாக அம்பலமாகி நிற்கும் இந்த நிலையில் முன் எப்போதையும் விட நக்சல்பாரிப் பாதைக்கான தேவை அதிகமாகி இருக்கிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சதிவலைகள், பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளின் திசை விலகல்கள், இயக்கங்களில் தேங்கியுள்ள குருங்குழுவாத போக்குகள் என யாவற்றையும் கடந்து நக்கசல்பாரிப் பாதை வெற்றி நாடை போடும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

- பாவெல் இன்பன்