உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நூலாசிரியர் தனது 18 வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். 2012 இல் தான் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 20 வயதிலிருந்தே கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் இலக்கிய உலகத்திற்குள் பிரவேசித்தவர். பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராக கடமை புரியும் இவர், வை.எம்.எம்.ஏ, ஆர்.டீ.எஸ், இளைஞர் சேவைகள் மன்றம், சர்வோதயம் போன்றவற்றிற்கு தலைவராகவும், ஜாவா ஜும்மா மஸ்ஜித், ஸஹீஹுல் முஸ்லிம் சங்கம், வாசகர் வட்டம் போன்றவற்றுக்கு செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய இவர் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டுள்ளார். அந்த ஒன்பது படைப்புக்களுள் ஒன்றுதான் இந்த உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதி. சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், கிராமிய, நாட்டார் பாடல்கள், மாண்புறும் மாநபி ஸலவாத்து புகழ் பாடல், கிண்ணிய முஸ்லீம்களின் கல்விக் கண் திறந்த காசிநாதர், சிறுவர் பாடல் இறுவட்டு, கிராமியக் கவி இறுவட்டு போன்றவை இவரது ஏனைய படைப்புக்களாகும்.

உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியானது 83 பக்கங்களில் சிறியதும், பெரியதுமான 73 கவிதைகளை உள்ளடக்கி பாத்திமா ருஷ்தா பதிப்பகத்தினூடாக வெளிவந்துள்ளது. ஸலவாத்து, ஈமான், ஆட்சிகள் அமைந்திட வழிகள் செய்திடுவோம், இளைஞர் தலைமைத்துவம், மகிழுவோம், உத்தம நபி, தலை குனிந்து போற்றுவோம், அருள் தந்த நபி, அனைத்தும் அறிந்தவன் போன்ற ஆண்மீகம் சார்ந்த பல கவிதைகளையும், மங்கை உன்னை அடைந்திடுவேன், புறந்தள்ளிப் போட்டிடுவேன், ஏக்கம் நீங்கிட, தாங்க மாட்டாய், தவிக்கின்றாய், எகிறிடும் நெஞ்சம், அழித்துவிட நினையாதே, பொழிவாய், நந்தவனம், ஒளி பரவும், தவிப்பு, தாகம், குடும்பத்தைத் தாங்கி நின்றாய், தெவிட்டாத இன்பங்கள், தேன் கொண்ட மங்கை, வந்திடுவாய் போன்ற அகம் சார்ந்த பல கவிதைகளையும் உள்ளடக்கியதாக இத்தொகுதி வெளிவந்திருக்கிறது.

மனிதநேயம் என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் மருவி மக்கள் காழ்ப்புணர்ச்சியோடும், நயவஞ்சக உள்ளத்தோடும் பழகுகின்றனர். வார்த்தைகளினால் அடுத்தவர் மனதை வதைத்து அதில் இன்பம் காணும் இழிகுணம் படைத்தவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். தன்னைவிட எவரும் நல்ல வசதியுடன் வாழக்கூடாது அல்லது எல்லோரையும் விட நானே உயர்ந்தவன் என்ற அகம்பாவத்தில் பலர் காணப்படுகின்றனர். அடுத்தவர் மகிழ்ச்சியாயிருப்பதை ஜீரணிக்கக் கஷ்டப்படுகின்ற பல வஞ்சக நெஞ்சங்கள் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இத்தகையவர்கள் பற்றி நேர்மையில்லா மானிடம் என்ற கவிதையில் (பக்கம் 08) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

வஞ்சனை செய்து
வசை பாடும்
மகிழ்வு
மிஞ்சுகின்ற
காலம்
மிகைத்துப்
போகும் கோலம்..

நெஞ்சில்
வார்த்தை
ஆயுதங்கள்
பாயும்
நஞ்சுப் பகைகள்
பரவி
உடலேறும்
நய வஞ்சக
முக மலரும்..

மனிதர்கள் மதிக்கப்படாத இந்தக் காலத்தில் காலுக்குப் போடும் செருப்பையா யாரும் மதிக்கப் போகின்றார்கள்? மதிப்பு என்ற கவிதையினூடாக செருப்பின் பரிதாபகரமான நிலையைப் பற்றி மாத்திரம் கவிஞர் குறிப்பிடவில்லை. அதனூடாக இன்னொரு தத்துவத்தையும் கூறுகிறார். அதாவது காலம் செல்லச்செல்ல அனைத்து விடயங்களுமே மதிப்பற்றப் போகும் என்பதுதான். (பக்கம் 25)

காலுக்கு இதமளித்து
தினந் தினம்
அழுக்கைத் தள்ளிவிடும்
செருப்பு
ஈற்றில் காலாலேயே
உதைத்து தள்ளப்படுகிறது.

நாட்டார் பாடலாக புனையப்பட்டிருக்கும் சில கவிதைகள் மனதில் ரம்மியமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. வாசிக்கும் போது கிராமிய மணம் கமழ்கின்றது. வந்திடுவாய்; என்ற கவிதையில் (பக்கம் 70) அதை தரசிக்கலாம்.

சேனைக்குப் போகையிலே
சிவந்த புள்ள நெத்தியிலே
முத்தமிட்டுப் போன மச்சான்
முழு ராவும் தூக்கமில்ல

யானைக்குப் பயந்து நான்
சூர மரம் ஏறிவிட்டேன்
தானாக கீழிறங்கி
வீடு வர முடியவில்லை.

இவ்வாறான பல்வேறு கருப் பொருட்களுடன் உள்ளடங்கிய பல அழகிய கவிதைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு பல புத்தங்களைத் தந்துள்ள நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர்; - உணர்வூட்டும் முத்துக்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
தொலைபேசி - 0772902042
மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
விலை – 175/=

- வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmailcom)