அது ஒரு பெரிய கிராமம். அய்நூறு வீடுகளுக்கு மேல் அந்தக் கிராமத்தில் உள்ளது.

ஆரம்பகாலத்தில் ஏழெட்டு வீடுகளே தோன்றிய கிராமம் வேகமாக வளர்ந்தது. அய்நூறு வீடுகள்வரை பெருகி அதன்பின் அந்த வளர்ச்சி சட்டென நின்று விட்டது. அதாவது 1930ல் உருவான அந்த ஊர் 1950ஆம் வருடத்துடன் வளர்ச்சியை நிறுத்திக்கொண்டது.    

அந்த ஊரை ஒட்டி ஒரு நெடுஞ்சாலை போகிறது. அதில் அந்த ஊருக்கு தொடர்பாக பல பேருந்துகள் வந்து போகின்றன. 

தற்போது ஒரு அய்ந்தாறு நாளாய் ஏதோ கலவரத்தால் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. பேருந்து  போக்குவரத்து இல்லை என்றதும் அந்த ஊர் மனிதரெல்லாம் ஏதோ கை கால் இழந்தது மாதிரி எந்த செயலையும் செய்ய முடியாமல் நிலைகுலைந்து போய் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  

நல்லமுத்து என்ற அந்த ஊர்க்காரர். அவர் தெருவழியே நடந்து வரும்பொழுது பேருந்து போக்குவரத்து பாதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனித்தார். இன்னும் சிலநாள் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் அனேகம் பேருக்கு சுவாசமே நின்றுவிடும் போல் அவருக்குத் தோண்றியது. 

நல்லமுத்துவுக்கு எதிரே வீரபாண்டி என்ற இளைஞன் சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சைக்கிளை சற்று நிறுத்தி "என்ன தாத்தா நலமா?" என்று நல்லமுத்துவை விசாரித்தான்.   

"என் நலத்திற்கு என்ன குறை? நம்ம ஊருக்குத்தான் நலமில்லை போலிருக்கிறது. பேருந்தெல்லாம் இன்னும் சிலநாள் ஓடலீன்னா அவ்வளவு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கே" என்றார் நல்லமுத்து.     

"ஆமாம் தாத்தா !  அந்தக் காலம் மாதிரியா? அப்போ யாரும் அதிகம் வெளியூரே போகமாட்டாங்க.. இப்ப எல்லாரும் நாகரீகத்தை படிச்சிட்டாங்க.. எது வேணும்னாலும் பக்கத்து நகரத்துக்கு போற மாதிரி பழகிட்டாங்க... இனி பேருந்து இல்லாம வாழ முடியுமா" என்றான். 

இதைக் கேட்ட நல்லமுத்துவுக்கு மனதில் எரிச்சலாக இருந்தது.

 "எதுப்பா நாகரீகம்? முன்பெல்லாம் வயலுக்குத் தேவையான உரம் உள்ளூரிளேயே சாணம் குப்பை தழையின்னு நாமே உரக்குழியில் சேர்த்து வச்சிருப்போம். உழ வேண்டிய ஏருக்கு கொலு வேணுமின்னா உள்ளூர்லயே கொல்லுப்பட்டரை இருக்கும். அரிசி, காய்கறி எல்லாம் உள்ளூரிலேயே வெளஞ்சிது. சுக்கு காபி சாப்பிடறதுக்கு கருப்பட்டியோ, கரும்பு வெள்ளமோ உள்ளூர்லயே கிடைக்கும்.  

தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் உள்ளூர் செக்கிலயே ஆட்டுவாங்க. விளக்கெண்ணெய வீட்டுலயே காச்சிக்குவாங்க. வேட்டி துண்டு சேலை வேணுமின்னா.. உள்ளூர்லயே நெசவு போட்டிருப்பாங்க... ஆக ஒவ்வொரு தேவையும் உள்ளூர்லயே கிடைக்கிற மாதிரி இருக்கும்... அதுனால நகரம் அது இதுன்னு அலைய வேண்டிய அவசியம் வரலை. 

இப்போ நாகரீகம் வந்துட்டு... பேருந்து வந்திட்டுதுன்னு.. நகரம் போயி வெளிநாட்டு உரத்த வாங்க ஆரம்பிச்சீங்க.. சின்ன  ஊசி, ஆணி வேணும்னாலும் நகரத்துக்கு ஓட ஆரம்பிச்சி உள்ளூர் கொல்லுப்பட்டறையை ஒழிச்சீங்க... கிராமத்துல விளையற பொருளையெல்லாம் பஸ்ல நகரத்துக்கு அனுப்பிட்டு.. மறுபடி டவுனுக்கு பஸ்ல போயி அந்த சாமான வாங்கீட்டு வர்றதை பெருமையா நெனக்கறீங்க... 

ஊர்ல விளைஞ்ச கரும்பு, எள் எல்லாத்தையும் மூட்டைகட்டி நகர ஆலைக்கு அனுப்பிவிட்டு.. எண்ணெய் வாங்க டவுனுக்கு ஓடுரீங்க... பருத்திய வெளியூர் மில்லுக்கு அனுப்பிட்டு.. துணி வாங்க பெருமையா டவுனுக்கு பஸ்ல போறீங்க... 

இப்படி நம்மகிட்ட உள்ள பொருளையெல்லாம் டவுனுக்கு அனுப்பிட்டு.. டவுன எதிர்பார்த்து பொழைக்கிற மானங்கெட்ட பொழைப்புக்கு நாகரீகம்னு பேசரீங்க... இதை யார் கிட்ட போயி சொல்லி அழுவேன்.!" என்று சொல்லியபடியே நல்லமுத்து அவ்விடத்தை விட்டு நகன்றார் 

(நன்றி - வசந்தம் தினகரன் ஞாயிறு மலர்) 

அன்றைக்கு டவுனுக்கு நகர்ந்த பொருள்கள்.. இன்று நாட்டை விட்டே செல்கின்றன.. மீண்டும் அவைகளை அன்னிய நாட்டுப் பொருள் என்ற பெருமையுடன் வாங்கிக்கொள்கிறோம்... நல்ல முன்னேற்றம்... நாசமாய்ப் போய்க்கொண்டு……         

- அ.இளஞாயிறு / 9443761307 / வெங்காயம் குறுஞ்செய்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)