Space manவியாழனில் நேர்ப்பட்ட
விண்வெளி வீரனொருவன்
எந்த கிரகமென்றான் ஆங்கிலத்தில்
பூமியென்றதும் பொங்கவிட்டான் அன்பை

நாட்டின் பெயரைச் சொன்னதும்
நாமிருவரும்
ஒரே தாயின் புதல்வர்கள்
என்றான் இந்தியில்
பாராயணம்போல் தனக்குள்ளே
முணங்கிக் கொண்டான்
ஸம்ஸ்கிருதத்திலும்

மாநிலத்தை அறிந்ததும்
ஹோ... நானும் பச்சைத்தமிழன் தான்
ஊரெதுவென்று நெருங்கினான் வாஞ்சையோடு

ஒரே ஊர்க்காரர்களாயிருந்தும்
இத்தனைக்காலமும் சந்திக்காததற்கு
அங்கலாய்த்தபடியே
கீழ்ஸ்தாயில்
வீடு ஊரிலா சேரியிலா என்று
அவனிழுத்த முரட்டுக்கோட்டுக்கு அப்புறத்தே
அம்பேத்கர் நகரென்ற
பதிலோடு நானிருக்க
உரையாடும் பொதுவிசயம்
ஒன்றுமில்லாமற் போனது அவனுக்கு
ஊரென்ற ஒன்று
எனக்கும் சொந்தமாய்
இல்லாதிருப்பதைப்போலவே.


ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)