காய்ந்த வயல்களிலே மேயும்
செம்மறிகளைச் சீண்டி
மின்சாரக் கம்பியில்
ஊஞ்சலாடும்
இரட்டைவால் குருவி விரட்டி
துத்திப்பூ பறித்து தும்பி துரத்தி
ஒடை வாராவதி கீழ்
சேறு குழப்பி
சாலையோர நாவல் மரத்தடியில்
வந்து நின்று
காற்றை அழைக்கிறான்
ஆட்டுக்காரச் சிறுவன்
காற்று பழங்களை உலுப்பியதும்
கடைசியாய்ப் பிரியும் நண்பனின் பரபரப்பில்
சேர்க்கிறான் பழங்களை
தூரத்தில் ஒலிக்கின்ற
சாலைபோடும் எந்திரத்தின்
இரைச்சலைக் கேட்டபடி


அழகிய பெரியவன்