Rajapakseஉங்களால் முடியும் - ஒரு
உரிமை போராட்டத்தை
ஆயுதப் போராட்டமாக்கலாம்
ஆயுதப் போராட்டத்தை,
தீவிரவாதமாக்கலாம்;
உங்களால் முடியும்.

இப்பொழுது நீங்கள்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
தீவிரவாதத்திற்கு எதிராய்

ஏதோ ஒரு பெயரிட்ட
தேசப்பாதுகாப்பு சட்டத்தின் மூலம்
விசாரணையின்றி கைதியாக்கலாம்.

சுயமரியாதை தேடி
போராளியானவன் இப்பொழுது
உங்கள் வசம் - நீங்கள்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்;

உங்களுக்குத்
தெரிந்த, தெரியாத, கற்பனையான
எத்தகைய குரூரத்தையும்
நீங்கள் அவனிடம்
அல்லது அவளிடம் பயன்படுத்தலாம்;
சத்தியமாய் நீங்கள்
சட்டப்படிதான் நடந்துகொண்டிருக்கிறீர்கள்;

சிக்கியவன்
ஆணோ, பெண்ணோ
அவர்களது தற்கொலைக்குக் கூட
அவர்களை தகுதியற்றவர் ஆக்கலாம்;

உங்களது ஆழ்மனக் குரூரங்களுக்கு
தொடர்ந்து ஆள்கிடைப்பார்கள்,
நீங்கள் அரசியல்வாதியாகவோ,
அரசியலால் அடையாளப்படுத்தப்பட்ட
ஆயுததாரியாகவோ இருக்கலாம்,
கவலைப்படாதீர்கள் - நீங்கள்
சட்டத்தின் காவலர்கள்.

மெத்தப்பெருமை எனனவெனில் -நீங்கள்
பேரினவாதத்தின் அடையாளமாய்
இருக்க வேண்டும்;
இப்பொழுது நீங்கள்
யாரையும் கைதியாக்கலாம்
குற்றவாளியாக்கலாம்,
வன்புணர்ச்சி கொள்ளலாம்,
வகை வகையாய்
சித்திரவதை செய்யலாம்; - ஆனால்
அவனை, அவளை
அவர்களை தீவிரவாதிகளென்று
அடையாளப்படுத்துதல் மிகமுக்கியம்.

சுயஉரிமை கேட்டுப்போராடியவனின்
வாழ்வும், தியாகமும்
எதிர்காலமும்
உங்கள் கையில்
நீங்கள் வேண்டியபடி
விளையாடலாம்,
வேண்டாமெனில் அழிக்கலாம்.

நீங்கள் சின்னதாய்
தொடங்கிய குரூர விளையாட்டுக்கு
தொடர்ந்து ஆள் கிடைப்பார்கள்
பயப்படாதீர்கள் ஆதரவும் கிடைக்கும்;
நீங்கள் செய்ய வேண்டியது
உங்கள் பேரினவாதத்திறகு
ஜனநாயகம் என்று பெயரிடுவதுதான்.

இப்பொழுது நீங்கள்
உங்கள் அத்தனை தவறுகளிலிருந்தும்
புனிதமாக்கப்படுவீர்கள்;
இப்பொழுது அண்டை வீட்டிலிருந்து
உலக நாடுகள் வரை
உங்களுக்கு,
உங்கள் ஜனநாயகத்திற்கு
ஆதரவு வழங்கும்;

இப்பொழுது உரிமைகள்
கேட்டவர்கள் தீவிரவாதிகள்
எண்ணிக்கை பற்றி கவலையில்லை,
அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் -அல்லது
வழிக்கு கொண்டுவரப்பட வேண்டியவர்கள்.

கருவின் சிசுவிலிருந்தே
கணக்கை துவக்க வேண்டும்.

கருக்கலைப்பு,
துப்பாகிக்குண்டுகள்,
அட்டிலெரிகள்,
பல்குழல் பீரங்கி,
விமானம்,கடற்படை -என
எவ்விதம் வேண்டுமானாலும் தாக்கலாம்

யோசியுங்கள் இன்னும்
என்னென்ன செய்யலாம் என்று ;
முடியவில்லை எனில்,
உங்களைப் போலவே
அடையாளப்படுத்தப்பட்ட ஜனநாயகம்தான்
அண்டை நாடுகளில்...
கேளுங்கள் !
ஆயுதங்களாய், அறிவுரைகளாய்
நிதி உதவியாய், நிவாரணப்பொருட்களாய்...
முடித்தவரை தருவார்கள்;

உணவு, உடை, மருந்து
என எதையும்
ஆயுதம் ஆக்கலாம்
அவசியம் அவற்றை
அறிக்கைகளால் நியாயப்படுத்திவிடுங்கள்!

நீங்கள் கொன்று தீர்த்தவர்களில்
எஞ்சியவரை சிறை பிடியுங்கள்;
சீர்திருத்தம், மறுவாழ்வு,
நலன் வாழ்வு என ஏதாவது
பெயரில் சித்திரவதை செய்யலாம்.

அவர்களை அடிமைகளாய்
கைதிகளாய் அப்படியே
வைத்திருங்கள் - உங்கள்
சந்ததியினருக்கு காட்டலாம்,
எஞ்சிய குரூரங்களுக்கும்
தீனியாக்கலாம்.

இத்தனைக்கும் முக்கியம்
உங்கள் பேரினவாதத்தை
ஜனநாயகம் என்று
எண்ணிக்கையால்
சாமர்த்தியப்படுத்துதல்! 

வெ தனஞ்செயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)