எழுந்தவுடன் எதையாவது
தேடச்சொல்கிறது மனம்.

தேடுதலின் ஊடே நகர்கிறது
எல்லாப் பொழுதுகளும்.

எதையும் தொலைக்கவில்லை
சதா காலமும் எதையாவது
தேடியலைகிறதே
விஷமற்ற பாம்புகள்.

காய்ந்த இலைகள்
காற்றில் சுழல்வதில்
இரைக்காக பறவைகள்
சுற்றியலைவதில்
மேகங்கள் ஓரிடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு படர்வதில்
தேடுதல் இன்னும்
விஸ்திரப்படுகின்றன.

சுடுவெய்யிலில்
மழைக்காலங்களில்
முன்பனிக்காலங்களில்
இலையுதிர்க்காலங்களில் என
காலம் கடந்து
கிடைக்கபடா ஒன்றுக்காகவும்
கிடைக்கப்படும் ஒன்றுக்காகவும்
எழுந்தவுடன் எதையாவது
தேடச்சொல்கிறது மனம்.

- இரஞ்சித் பிரேத்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)