work7மந்திரக்கோலுடன்

என் முன்னே நின்றான்

ஒரு மாயாவி

 

வாஞ்சையுடன் 

வரம் வேண்டுமா என்று கேட்டான்

 

குழம்பிய மனதுடன்

ஆம் என்றேன் 

 

ஜாதிகளை ஒழிக்கவா?

சமச்சீர் பொருளாதாரம் படைக்கவா?

சகிப்புத்தன்மையை மேலும் கூட்டவா?

ஒன்றுதான் வரமாகக் கிடைக்கும்

மாற்றுக்கேள்வி கேட்டால்

உடனே மறைந்திடுவேன் 

என்றான் அந்த மாயாவி

 

சகிப்புத்தன்மையால்

விளைந்ததுதானே

இந்த அடிமை வாழ்க்கை

வேண்டாம் அந்த வரம்

 

சம்ச்சீர் பொருளாதாரமெனில்

என்றிலிருந்து அமுல் ஆகும்

எனக்கான வரம்.

பண முதலைகளின் சேமிப்பு

பங்கீட்டிற்கு வருமாவென்பதில்

குழப்பமான சந்தேகம்

ஆதலால் அதுவும் வேண்டாம்

 

கடைசியாக எஞ்சியது ஒன்றுதான்

ஜாதியை ஒழித்துவிடு என்றேன் 

முழு மனதுடன்

 

என் ஜாதியையா?

அல்லது உன் ஜாதியையா?

என்று கேட்ட மாயாவி

மந்திரக்கோலால்

நட்சத்திரங்களை

என் கண்முன்னே தூவியபடி

மறைந்து போனான்.

 

-     பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)