bird_300யுகங்களின்  ரகசியங்களை
தற்காலிகமாகப் பாதுகாக்க
பசுமையை தன்னில்
போர்த்திக்கொண்டிருந்தது
பாழடைந்த
ஒரு கிராமத்துக்குளம்

குளக்கரை மரங்களிலிருந்து
உதிர்ந்த சருகுகள்
ரகசியங்களைத்தேடி
கரைகளில் ஒதுங்கும்

சில குளத்தில் மூழ்கி
ஆழ் மனற்சிறையில்
மாய்ந்தும் போகும்

தாழ்வாய்த் தரையிறங்கும்
பாவனையில் ஓரிரு பறவைகள்
நகக்கீற‌லில்
குளத்தினை ஆழ்ந்தெடுத்து
குழம்பித்தவிக்கும்
இருப்பின் துளி படர்த்தி

யாருமறியா
ஒரு பின் இரவுக் காலத்தில்
குளத்தின் பிடிவாதம்
சற்றே தளர
யுகங்களின் ரகசியங்களை
தன் முத்தத்தால்
காண்பதும் கலைப்பதுமாக
முதல் மழைத்துளிகள்

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)