நுனா செடியின் நுனியில்
ஒன்றின் மேலேறி
ஒன்றாய்ப் புணர்ந்தாடும்
பச்சை வெட்டுக்கிளிகளின்
இடையில் நுழைய முடியாமல்
முகத்தை மூடிக் கொண்டது வெயில்.
சிணுங்கத் தொடங்கிற்று மேகம்
நிலம் முழுதும்
வைரத் துளிகளை உதிர்க்கிறது வானம்
துளிர்த்த மோகத் தளிர்களில்
திரண்டு நிற்கும் துளிகளுக்கு
மின்னும் உன் மூக்குத்தியின் சாயலடி

- சதீஷ் குமரன்