சொந்தமாக
நாலைந்து வீடு
கட்டியிருக்கிறாள் மகள்
அத்தனை வீடுகளிலும்
பெய்து கொண்டேயிருக்கிறது தொடர்மழை
அந்த முப்பரிமாண வீட்டினை
தன்னோடு சேர்த்து
நாலு பேர்க்கும் பிரித்துத் தந்துவிட்டாள்
நகை அடமானமன்றி
வங்கிக் கடனின்றி
வசதியாய்க் கட்டி
குடியேறுகிறாள்
மகளின் கனவையும்
தந்தையின் கனவையும்
சுமந்து வெக்கையும் புழுக்கமும் வழிய சிரிக்கிறது
இந்த வாடகை வீடு...

- சதீஷ் குமரன்