ரோட்டோரக் கடையொன்றின்
கடமுடா மரப்பலகையில்,
ரொட்டி தின்னும்
புழுதி உடுத்திய சிறுவனின்
காலாட்டத்தில்,
இரவு ஏற்றிய போதை
முழுவ‌துமிறங்கா அப்பன்
தேநீர் குடித்து வைத்த
காலி டம்ளர்
உருண்டு விழுந்து நொறுங்கிட,
அப்பனின் கோவமெல்லாம்
பிள்ளை முதுகில் இறங்கிற்று...
சிறிது நேர தேம்பலுக்குப்பின்
சாலையில் விசிறியெறியும்
கையிலிருந்த ரொட்டித் துண்டை
பொறுக்கித் தின்னும்
நாய்கள் ஆகிறோம் நாம்..
கண்ணாடி டம்ளர்கள்
உடைந்த படியே இருக்கின்றன.....

- அருணா சுப்ரமணியன்