தள்ளிப்போகும் தன் நிழலை
துரத்தும் மாக்களின்
வியர்வை உறிஞ்சி
சில துளிகளை
மழையாய் வீசும்
கையறு நிலையில்
வெயில்..

நகரக் கட்டமைப்புப் பணிக்கு
சென்று திரும்பாத
தாய் மரங்களை
எதிர் நோக்கி
சிறு செடிகள்..

அகழாய்வில் சிக்கிய
நதிக்கரை நாகரிகமாய்
நீரைத் தொலைத்த
வடுக்களோடு பாறைகள்..

வார்த்த வெம்மையில்
வாடி வதங்கி
தான் பாய்ச்சி வளர்த்த
மரங்களைத் தேடி காலணியின்றி
காடுகளில் அலையும் வெயில்..

- மு.ச.சதீஷ்குமார்