உன்மத்தம் சூழ்கொண்ட
இந்நாட்களிலெல்லாம்
மென் புரவியென தலைசுற்றித் திரிகிறேன்!

அசைவற்ற எவ்வேளையையும்
உனதும் எனதுமாக்கி வண்ணத்துப்பூச்சியின்
இறகென
நிசப்தமாகவும் பின்பு சத்தமாகவும்
சிறகடித்துப் பறக்கிறேன்!

இரவின் விகசிப்பு
பனிமலரின் இதமான நெருக்கம்
மென் மலரின் இன் சிரிப்பு
அத்தனையும் உன் உருவாக்கி
பிரகனப்படுத்தி தீண்டுகிறேன்!

விடுதலை பெறத் துடிக்கும்
ஈழத்துக் காதலியென உறைந்திருக்கும்
வாடைக் காற்றிலெல்லாம்
உன் வாசனை முகர்கிறேன்!

என்னதான் காதலின்
ரகசியங்களும் பரிசுத்தங்களும்
தீர்மானமில்லாமல்
அடையாளப்படுத்தப் பட்டாலும்
நான் மட்டும் அஞ்சியே மரிக்கிறேன்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்