நீ உறங்கும் அறையில்தான்
தொலைந்துபோனது
என் தூக்கம்.

பறக்கத் தராத உன் சிறகுகளுக்கடியில்
சிறைபட்டுக் கிடக்கின்றன
அடங்கத் தெரியாத
என் வண்ணக் கனவுகள்.

உன் தூக்கம் கலைத்த காற்றுதான்
திறந்திருக்க வேண்டும்
என் அறைக் கதவினையும்.

கதவினூடே
என் மொத்தக் கனவும்
சிறகு விரித்துப் பறக்கத் துணிகையில்
அங்கே காணாமல் போயிருந்தது
அதற்கான வானம்.

- வான்மதி செந்தில்வாணன்