பயணம் போகலாம் வா!
ஓய்ந்து இருக்கையில்
காதோரம் கவிதை பேசு!

கடக்க வேண்டிய
தூரத்தை குறைத்துக் கூறி
கரம் பற்றி இழுத்துச் செல்!

கவனமின்றி சாலை கடக்கையில்
சட்டென உன் புறமிழுத்து
உரிமையோடு கடிந்து கொள்!

என்னை உன்னை பார்க்கச் செய்ய
எப்போதும் எனக்குப் பிடித்த
பாடலை உரக்கப் பாடு!

பிரிகின்ற வேளையில்
கண்களை உற்றுப் பார்
கண்ணீர் கலந்த காதல் தெரியும்!

கரம் அழுத்தி விடைகொடு!
இமை அழுத்தி முத்தமிடு!
இறுக பற்றி விட்டுவிடு!

இது இன்னும்
கொஞ்சம் தாங்கும்
அடுத்த பயணத்திற்கான வேளை வரும் வரை!

- இசைமலர்