அவள் : உச்சி வெய்யில் கருக்குய்யா
உழவைக் கொஞ்சம் நிறுத்து! - சோறு
உண்டிடவே வந்திடுவாய்
உரைக்க வேண்டாம் மறுத்து.
அவன் : மேழி பிடித்து உழுபவர் நாம்
நாழி பார்க்கலாமா ? - கிணற்று
மேட்டினிலே குந்திச் சோற்றை
உண்டு எழுவோம் வாம்மா.
அவள் : ஏறு தாங்கி நிற்கும் அந்த
எளச்ச ரெட்டை மாடு - போல
இன்னும் எதனை நாளைக்கய்யா
நமக்கு இந்தப் பாடு ?
அவன் : வஞ்சமில்லாப் பாடுபட்டா
வளத்தக் கொடுக்கும் காடு - உன்
வாட்டத்த நான் கண்டுகிட்டேன்
வாங்கித் தாரேன் தோடு.
அவள் : அடகு வச்ச நகையை நீயும்
மீட்கும் வழியைத் தேடு - உன்
அச்சு வெல்லப் பேச்சு என்றும்
நீரில் கிழிச்ச கோடு!
அவன் : நெஞ்சினிலே துணிவு கொண்டு
நாளும் படுவோம் பாடு - நமக்கு
நேரங்காலம் பொருந்தி விட்டால்
வாழ்வில் அடைவோம் மேடு
அவள் : நினைப்பினிலே கட்டிடுவாய்
நித்தம் மணலில் வீடு - நாம்
நேற்றுவரை கண்ட பலன்
இந்த எலும்புக் கூடு!
அவன் : அந்திக்குள்ளே மூய்க்கவேணும்
அகண்டிருக்குது காடு - (இ)ராவில்
ஆர அமர பேசிக்கலாம்
வந்து சாலப் போடு !
- செந்தேவன்