அலுவலகம் துறக்கும் நாம்
இந்நகர வாகனங்களின்
சிவப்பு விளக்குகளும் கண்களும்
ஒன்றுக்கொன்று மாறிமாறித் தின்ற
முகத்துடன் வீட்டுக்கு வருகிறோம்
உன்னை நீயும் என்னை நானும்
நாம் வீடு சேரும் முன் உறுதி செய்கிறோம்
நாளின் தோய்ந்த சாயல்களை
காலணிகளில் பாதியையும்
உடைகளில் மீதியையும் விட
இன்னுங்கொஞ்சம் மிச்சமிருக்கிறது
இந்நகர இரவிலிருந்து
நம்மிரவைத் தரும் பாடலொன்றுக்கு
சேனலை மாற்ற நம் சாயலுறுகிறது இரவு
கடந்து வந்து இந்த நாளைக் கொஞ்சம்
கைகளில் வைத்து பேசிக் கழிக்கிறோம்
அன்றைக்குள்ளான செய்தியையும்
அதனுள்ளான வதந்தியையும்
மீள்தலாக மீம்ஸ்களாக நகர்த்துகிறோம்
இடரும் அதன்நேர் இன்பமுமாயிருந்த
பொழுதிலிருந்து எடுத்த மலர்களோடு
நம் வீடுகளுக்கு அலைபேசி
அவர்களை நெருங்கி வாழ்கிறோம்.
அவர்கள் கோர்க்கும் நகர பயங்களுக்கு
தேடினால் கிடைக்கும் நகர நம்பிக்கையினால்
ஒளியூட்டிப் படரச் செய்கிறோம்
பின் கண்ணைக் கட்டும் நம்மிரவு
என்றொவொருநாள் நம்மையுரசி மூண்டு நிற்க
அது கேட்கும் சிலதுளிக்கு ஒரு துளியாகிறோம்.
இதோ இன்றிரவும் அணைக்க முயல
எத்தனையோ பகல் வெளிபடுத்தத் துடிக்க
இரண்டுக்கும் மீறி
பெருகி நிற்கும் இந்நகரத்தில்
கனவுகளுடையாது மிதந்து கடக்கும்
நீயும் நானும் உடையாத ஓர் குமிழி.
- முருகன்.சுந்தரபாண்டியன்