எனக்குள் திறந்து கொண்டேயிருக்கும்
மீன் வாய்க்கு
உங்கள் நதியோ உங்கள் குளமோ
உங்கள் கடலோ
ஒருபோதும் போதவில்லை....

*****

என் வனாந்திரம் முழுவதும்
நட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன்...
நீ வந்து கடவுளாக்கப் போகும்
என்னோடு
சில பல சிலுவைகளை...

*****

காத்திருக்கிறேன்.....கடலாகி இருக்கிறேன்...
மீனாகி சாவதைப் போலொரு
கனவு தீர்ந்து கொண்டே இருக்கிறது...

*****

சரி செத்து விடலாம் எனத்
தோன்றிய போதுதான்
சரி வாழ்ந்து விடலாம் என்றும்
தோன்றியது
செத்தவனுக்கும் வாழ்பவனுக்கும்...

******

"பெரிய யானைன்னு நினைப்பு,
காதை ஆட்ற மாதிரி கனவு காணுது
கரும்பாறை"-
புலம்பி நின்றவன் கண்களில்
இரண்டு இரவு...

*****

உள்ளாடை ஓட்டைகளில்
தொங்கிக் கொண்டிருந்தது
கற்பின் வறுமை

*****

உன் ஓவியத்துள் நுழைவது போல
அத்தனை சுலபமல்ல
உன் விரல்களுக்குள் நுழைவது..

*****

நியூட்டனை வீதிக்குள் அடைத்து
வீசி எறிந்தேன்.
அவள் வீட்டு வாசலில்
ஆப்பிள் மரம்....

- கவிஜி