இப்பெருமழையின் பொருட்டு
சில காதல் கவிதைகள் எழுதுவேன்.
சிலரை சிலவற்றை எள்ளி நகையாடி
கைகொட்டி மகிழ்வேன்.
மூழ்கும் இரு கைகளை
கவனமாய் படம்பிடிப்பேன்
நானிருக்கும் இரண்டாம் தளத்திலிருந்து.
அதே நாளில் இவ்வுலக கவனமீர்த்து
விருப்பக் குறியீடுகளின் மேல்
நிம்மதியாய் உறங்குவேன்.
பிறிதொரு நாளில் வீழ்ந்து கிடக்கும்
இந்த ஈசல்களைப் போல்
நிம்மதியாய் செத்தும் போவேன்.
- தர்மராஜ் பெரியசாமி