நண்பர்கள்
நம்பர்களாகிப்
போனார்கள்...
ஒன்றாக இருந்தாலும்
முகம் அறியாதவர்களே
ஒன்றியிருக்கிறார்கள்....
உறவினர்கள்
பக்கத்து வீட்டுக்காரர்கள்
அனைவருமே ஸ்டேடஸ்க்குள்
அடங்கி விட்டார்கள்....
தலை குனிந்தே
நடப்பதில் ஆண் பெண்
சமம் ஊர்ஜிதப்படுத்தப் படுகிறது...
எழுந்ததும் கையில்
மிதக்கும் அலைபேசி
எழுவதற்கு முந்தியும் அலைகிறது
மனதுக்குள்.....
மாற்றங்கள் வேண்டிய
மானுட குலம்
மாற்றத்துள் மாட்டிக் கொண்ட
முக்கோணமாய் தொடுதிரைக்குள்
காணாமலே போகிறது...
முகநூலில் கட்டை விரல்
உயர்த்தலில்
வாழ்தலின் அத்தனை
உணர்வும் சிதைவதாகவே
தோன்றுகிறது...
எண்ணங்கள் அனைத்துக்குமே
எழுத்துருவம் தர
முடியும் என்றே
முரட்டு நம்பிக்கை
விதைக்கிறது....
இனி முகங்கள்
மறக்கும் அகங்களின்
கழுத்தில் எண்களே
அடையாளமாகும்....
- கவிஜி