NRIஅவனேதான்
சிகாகோவிலிருந்து சரவணன் என்று
சிரிக்கிறான் முகநூலில்

அவனேதான்
பெட்ரோல் பங்குகளுக்கு அடியில்தான்
பெட்ரோல் எடுக்கிறார்களென்றான்
ஆரம்பப் பள்ளி நாட்களில்

அவனேதான்
தமிழ் நாடு
இந்தியா என்ற
இன்னொரு நாட்டுக்குள்
எப்படி இருக்கமுடியுமென்றான்
உயர்பள்ளி நாட்களில்

அவனேதான்
தை ஒன்றா
சித்திரை ஒன்றா
தர்க்கம் எதற்கு
தமிழ்ப்புத்தாண்டு
சனவரி ஒன்று
என்பதில் என்ன தவறென்றான்
கல்லூரி நாட்களில்

அவனேதான்
சிகாகோவில்
கோடிங் எழுதுகிறான்
நான் சொந்த மண்ணில்
கவிதை எழுதுகிறேன்

- சேயோன் யாழ்வேந்தன்